Thursday 11 June 2015

கொசு -விரட்ட முடியா மனித குல விரோதி 


உலக சுகாதார நிறுவனத்தின் (World Health Organization - WHO) ஆய்வறிக்கையின் படி கொசுக்களின் மூலம் பரவும் நோய்களான மலேரியா, டைபாய்டு, டெங்கு காய்ச்சல், சிக்கன் குனியா  போன்றவைகள் மூலம் உலக அளவில் 1 பில்லியன் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். இதில் ஒரு மில்லியன் மக்களுக்கு  மரணத்தினை பரிசாக கொசுக்கள் அளிக்கிறது.  இவை ஒருபுறம் இருக்க தொற்று நோயினை பரப்பும் (vector-borne diseases) விச பூச்சிகளும் மனித குலத்திற்கு எமனாக நின்று அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றது.



தற்போது  WHO அமைப்பு மேற்கொண்ட ஆய்வின் படி 1.3 மில்லியன் மக்கள்
Leishmaniasis என்னும் தோல் அரிப்பு நோய்  பாதிக்கப்பட்டுள்ளார்கள்

சரி கொசுத் தொல்லையினை எப்படித்தான் ஒழிப்பது? நடைமுறையில் ஒன்று  கொசுக்களை   விரட்டுகிறோம் (repelling) அல்லது நேரடியாக கொல்கிறோம் (destroy).   நடைமுறையில் கொசுவினை விரட்டுகிறோம் என்று சொல்லித்தான் எல்லா கொசு விரட்டிகளும் சந்தையில் விற்பனைக்கு வந்தது. ஆனால் உண்மையில்  இந்த கொசுக்களின் தொல்லையினை விட இவைகளை விரட்ட தற்போது நாம் பயன்படுத்தப்படும் கொசுவர்த்தி சுருள் (mosquito coil), அட்டைகள் (mosquito mat), இரசாயன நீர்மங்கள் (mosquito liquidator)  ஆகியவை கொசு ஏற்படுத்தும் நோய்களுக்கு நிகரான  வியாதிகளை மனிதர்களுக்கு ஏற்படுத்துபவை. அதிலும் குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.


கொசுக்கள் எப்படி இந்த கொசு விரட்டிகளை கண்டு விலகி ஓடுகிறது என முதலில் புரிந்து கொள்வோம்.

 கிரிசாந்திமம் (Chrysanthemum) எனப்படும் தாவரவியல் பெயர்  கொண்ட அழகான மலர்கள் பைரித்ரம் ( Pyrethrum) என்று பொதுவாக அழைக்கப்படுகிறது. நம்ம ஊரில் கிடைக்கும் சாமந்தி பூக்களும் இந்த குடும்பத்தில் அடங்கும். மேலும், கிரிசாந்திமம் சினரோபோலியம் (Chrysanthemum Pyrethrum) எனப்படும் இவ்வகை செடிகளின்  பூக்களில்  எடுக்கப்படும் கரிம இரசாயனம் பைரித்ரம் என்றும் அழைக்கப்படுகிறது. இது இயற்கையில் கிடைக்கும் மிகச் சிறந்த பூச்சிக் கொல்லி ஆகும். இது மனித உயிர்களுக்கு தீங்கு விளைவிக்காதவை.மேலும் பூச்சிகளை விரட்டும் தன்மையும் உடையது. இந்த பைரித்ரம்தான் தற்போது கொசு விரட்டி சுருள்களில் இருக்கும் பிரதான இரசாயன பொருள் ஆகும். 


பைரித்ரம் மலர்கள்


பைரித்ரம் வண்ண மலர்கள்

முதன் முதலில் பைரித்ரத்தினை 1863 ஆம் ஆண்டு வணிகப் பொருளாக சந்தையில் அறிமுகப் படுத்திவர்  ஜெர்மனியில் பிறந்த ஜோகன் ஜேக்கல் (Johann Zacherl  ). சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள் முதலில் இந்த பைரித்ரம் பயன்படுத்தப்பட்டது தலையில் உள்ள பேனை ஒழிக்கவே.    ஆஸ்திரியாவில் உள்ள வியன்னாவில் (Vienna)  இதனை தயாரிப்பதற்கான தொழிற்சாலை துவங்கப்பட்டது. இத்தொழிற்சாலையில் பைரித்ரம் மலர்களினை காய வைத்து பொடி செய்து ஜாக்ரிலின்  (Zacherlin) என்ற பெயரில் மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கும் விற்கப்பட்டது.

அதே காலகட்டத்தில் அமெரிக்காவிற்கும் அறிமுகப்படுத்தப்பட்டது. இவரது மறைவிற்கு பிறகு இவரது மகனால் (Evangelist Zacherl ,1857-1954)) பைரித்ரம் பொடி பிராண்டட் செய்யப்பட்டு,  குளிக்கப் பயன்படும் சோப்புகளிலும், காயங்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும் டின்சராகவும் ஜரோப்பாவின் பெரும்பாலான பகுதிகளில்   அமோக விற்பனை செய்யப்பட்டது.   இன்றும் இந்த புராதன தொழிற்சாலை வியன்னாவில் உள்ளது. அங்கு ஜோகன் ஜேக்கல்க்கு வைக்கப்பட்டுள்ள சிலையினை காணலாம்


ஜோகன் ஜேக்கல் அவர்களால் தொடங்கப்பட்ட தொழிற்சாலை


 ஜோகன் ஜேக்கல் அவர்களால் தொடங்கப்பட்ட தொழிற்சாலை


ஜோகன் ஜேக்கல்  


 இதே பைரித்ரம் பொடி பல நூற்றாண்டுகளுக்கு முன்பே  சீனாவிலும் (Chou Dynasty), மத்திய கிழக்கில் (middle east) 'பெர்சியன் பொடி' என்றும் புழக்கத்தில் இருந்ததாக   சொல்கிறார்கள். பின்னர் இது சீனாவில் இருந்து சில்க் பாதை (silk route) வழியாக 1881 ல் ஜப்பானுக்கு அறிமுகம் ஆனதாகவும் சொல்லப்படுகிறது. இன்று உலக அளவில் பைரித்ரம் விளைவித்து சந்தையில் ஏற்றுமதி செய்வதில் ஜப்பானும், ஆப்ரிக்காவில் உள்ள கென்யாவும் முன்னனி வகிக்கிறது. இது மட்டுமில்லாமல் பிரேசில் மற்றும் ஆஸ்திரேலியாவும் இதில் ஆர்வம் காட்டி வருகின்றது.


இப்பொழுது விசயத்திற்கு வருவோம். இந்த அற்புத பூச்சி விரட்டி மற்றும் பூச்சி கொல்லியான பைரித்ரம் இரசாயனத்தினை கொசுவிரட்டிகளில் முதன் முதலில் பயன்படுத்தி சந்தைப்படுத்தியது ஜப்பான் நாடுதான். அதிலும் கொசு விரட்டி எப்படி சுருள் (coil) வடிவிற்கு வந்தது என்பது  மற்றொரு வியப்பான  கதை. 

முதலில் பைரித்ரம் பொடியினை மரத்தூளில் கலந்து கனப்பு அடுப்பு அல்லது தூப அடுப்பில் எரிய வைத்து கொசுக்களை ஜப்பானியர்கள் விரட்டிக் கொண்டிருந்த போது  எசிரோ உயேமா (Eiichiro Ueyama) என்பவர்  1890 ல் மரத்தூளுக்கு பதிலாக ஸ்டார்ச் மாவு, உலர்ந்த ஆரஞ்சு பழத்தின் தோலில் செய்த பொடி ஆகியவற்றோடு கலந்து கட்டிகளாக செய்து பத்திகள் போல எரிய செய்யும் வகையில் விற்பனைக்கு கொண்டு வந்தார். 

ஆனால் இந்த கட்டிகள் குறைந்த நேரத்தில் (40 நிமிடங்கள்)   எரிந்து விடுவதால் அதிக நேரம் கொசுக்களை விரட்ட முடியவில்லை. பிற்பாடு இவரது மனைவி யுகி உயேமா- சன் தான் (Yuki Ueyama)  நீளமான குச்சிகளாக செய்து அவற்றினை வட்டமான சுருளாக சுற்றி செய்தால் நீண்ட நேரம் எரியும் கொசு விரட்டிகள் (Kimutoriko) செய்யலாம் என்ற யோசனையினை சொன்னார். 

ஏறத்தாழ 120 வருடங்கள் கழித்து  திருமதி உயேமா அவர்களுக்கு இதற்கான அங்கீகாரமாக சிறந்த வடிவமைப்பு விருதினை (Good Design Award 2011) ஜப்பான் வடிவமைப்பு ஊக்குவிப்பு நிறுவனம் (Japan Institute of Design Promotion) வழங்கி அவரை கெளரவப்படுத்தியது. ஆகையால் இனி கொசு விரட்டி சுருளை பார்க்கும் போதெல்லாம் யுகி உயேமா  என்னும் ஜப்பானிய பெண்மணியினை நீங்கள் நினைவு கூறுங்கள். 




 கொசு விரட்டிகளை அறிமுகப்படுத்திய எசிரோ உயோமா- சன் (Eichiro Ueyama-san)

அலெக்சாந்தர் மன்னரால் பரிசாக வழங்கப்பட்ட பரிசு தொங்கும் மணி


முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட கொசு விரட்டி சுருள்


முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட கொசு விரட்டி சுருள்

முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட கொசு விரட்டி சுருள்


ஒரு வழியாக நிறைய சோதனை முயற்சிகளுக்கு பிறகு 1902 ஆம் ஆண்டு நீண்ட நேரம் எரியக்கூடிய சுருள் வடிவிலான (Spiral) கொசு விரட்டிகள் சந்தைக்கு வந்தன. ஆரம்பத்தில் கைகளினால் சுற்றப்பட்ட இந்த சுருள் வளையங்கள் பின்னர் எந்திரத்தின் உதவியுடன் தயாரிக்கப்பட்டது.  இரண்டாம் உலக்ப் போருக்கு பின்னர் எசிரோ உயேமா தனது நிறுவனத்தினை (Dainihon Jochugiku)  சீனா மற்றும் தாய்லாந்தில் கூட்டு நிறுவனமாக மாற்றி கொசு விரட்டி சுருள்களை விற்பனை செய்தார். இந்நிறுவனத்தின் பிராண்டட் பெயர் 'கின்சோ'  (Kincho, தங்கப் பறவை).  அப்போது ஜப்பானிய பைரித்ரம் ஏற்றுமதி சங்கத்தின் தலைவராகவும் இருந்து வந்தார். இவரது சேவையினை பாராட்டி 1929ஆம் ஆண்டு யுகோசுலோவியாவின் மன்னர் அலெக்சாந்தர் (Aleksandar Karadjordjevic) பெரிய மணி ஒன்றினை வழங்கி அவரை ஒசாகாவிற்கான யுகோசுலோவிய கவுன்சிலராக நியமித்து கவுரப்படுத்தினார். 


கொசு விரட்டிகளில் பயன்படுத்தப்படும் பிரதான இரசாயனம் இயற்கையில் கிடைக்கும், மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்காத பைரித்ரம் என்னும்போது   ஆபத்து எங்கு இருந்து வருகிறது என்பதுதானே உங்கள் கேள்வி.

விடை அடுத்த பதிவில் தொடரும் ..


No comments:

Post a Comment