Thursday 13 August 2015


தென்கொரியா ‍- ஆராய்ச்சியாளர்களுக்கான தேசம்


சமீபத்தில் தமிழக பல்கலைக் கழகங்களில் முனைவர் ஆய்வு பட்டம் முடித்த மாணவ நண்பர்கள் முகநூல் வழியே எங்கு முது முனைவர் பட்ட ஆய்வு மேற்கொள்ளலாம் என நட்பு ஆலோசனை கேட்டு தொடர்பு கொள்கிறார்கள். என் பணிச் சூழல் சிரமத்தில் அவர்களுக்கு தனிப்பட்ட பதிலுரைக்க இயலாமைக்கு வருந்துகிறேன். இக்கட்டுரை அவர்களுக்கு ஓரளவு உதவும் என கருதுகிறேன்.

என் அனுபவத்தில், இந்தியாவில் முனைவர் பட்ட ஆராய்ச்சி முடித்த ஆய்வாளர்கள்  முது முனைவர் ஆய்விற்கு தென் கொரியாவினை  தாராளமாக‌ தேர்ந்தெடுக்கலாம்.  

குறைந்த பட்சம் முதல் இரண்டு வருடங்கள் தென் கொரியாவில் மிகச் சிறந்த ஆய்வகங்களில் பணி புரிந்தால் தரமான ஒரு ஆய்வுக் கட்டுரையினை நேட்சர் ஆய்விதழில் பிரசுரிக்கலாம். ஏனெனில், கடந்த 5 வருடங்களில் தென் கொரியாவின் ஆராய்ச்சி கட்டமைப்பு வியக்க வைக்கிறது. குறிப்பாக நானோ நுட்பவியலில் பருப்பொருள் அறிவியல் (Material Science), ஆற்றல், சுற்றுச் சூழல், உயிரி மருத்துவம், எலக்ரானியல் என தொழிற்சார் ஆராய்ச்சிகள் மிகச் சிறப்பான முறையில் முன்னெடுக்கப்படுவதால் தனியார் நிறுவனங்கள் ஆய்வு நிதியினை அள்ளிக் கொடுக்கின்றன. 

ஆங்கிலம் தாய் மொழியாக இல்லாத முன்னேறிய நாடுகளில் ஆசியாவினைப் பொறுத்த வரை தென்கொரியா, சீனா, ஜப்பான், சிங்கப்பூர் ஆகியவை தற்போது கோலோச்சுகிறது. இவற்றில் ஆய்வுப் பணிக்கான‌    தென் கொரியாவின் கட்டமைப்பினை நேட்சர் இதழ் மிகச் சிறப்பாக அவதானித்துள்ளது.

http://www.nature.com/nature/journal/v524/n7564/full/524S26a.html

மேற் சொன்ன ஆங்கிலம் தாய் மொழியாக அல்லாத முன்னேறிய நாடுகளில் தென்கொரியாவில் ஆய்வு நிதி எப்போதும் வளமுடன் இருப்பதற்கு காரணம் தொழில் நிறுவனங்களும், பல்கலைக் கழகங்களின் ஆராய்ச்சி கூடங்களுக்கும் இடையே உள்ள நெருங்கிய பிணைப்பு. எல்லா நாடுகளிலும் காணப்படும் சராசரி ஆய்வு அரசியல் (Scientific Politics) இங்கு அதிகம் உண்டு. அதனால் எப்போதும் ஆராய்ச்சி தகவமைப்பிற்கான‌ போட்டி சூழல் என்பது தென் கொரியாவில் மிகச் சாதாரணமாக காண இயலும். ஆனால் இந்த சூழல்தான் இங்குள்ள பேராசிரியர்களை தொடந்து இயங்கச் செய்கிறது. கொரியாவின் தேசிய பல்கலைக் கழகங்களின் தலைவர் பதவியில் இருப்பவர் அந்நாட்டின் பாராளுமன்றத்தின் பிரதிநிதிக்கு ஒப்பாவார். இத்தகு அரசியல் வசதிகள், தேசிய பல்கலைக் கழகங்களின் முன்னேறிய‌ கட்டமைப்பிற்கு ஒரு பின் கதவினை எப்போதும் திறந்து வைக்கிறது. 





Chart represent the research output included in the 2014 Nature Index for ten of South Korea’s leading institutions, and the contributions of different subjects, measured by weighted fractional count (WFC), adopted from Nature 524 (2015) S26–S27. 


Figures shows the expenditure spend on research and development (R&D) in the past decade. Adopted from Nature 524 (2015) S26–S27. 


சியோல் மாநகரைப் பொறுத்த வரை தனியார் பல்கலைக் கழகங்களான யோன்சே பல்கலைக் கழகம், கொரியா பல்கலைக் கழகம், சங்யுங்வான் பல்கலைக் கழகம், ஹன்யாங் பல்கலைக் கழகம் ஆகியவை இந்த தேசத்தின் முதன்மை பல்கலைக் கழகமான சியோல் தேசிய பல்கலைக் கழகத்திற்கு நிகராக ஆய்வில் போட்டி போடுகிறது. என்றால் எந்த அளவிற்கு இதன் உட்கட்டமைப்பு இருக்கும் என்று கணித்து கொள்ளுங்கள். 

நான் சியோலில் ஹன்யாங் பல்கலைக் கழகத்தில் 5 ஆண்டு காலம் பணி புரிந்த போது அதன் வளர்ச்சி முன்னோக்கிய திசையில் இருந்ததை என்னால் உணர முடிந்தது. உலகின் பல நாடுகளில் இருந்து பிரசித்தி பெற்ற ஆய்வாளர்களையும், பேராசிரியர்களையும் வரவழைத்தனர். உதவி பேராசிரியர் பணிக்கு குறைந்த பட்ச தகுதியாக நேட்சர் அல்லது சயின்ஸ் ஆய்விதழில் கட்டுரைகள் வெளியிட்டு இருக்க வேண்டும், உலகின் முன்னோடி பல்கலைக் கழகங்களில் ஆய்வுப் பணி செய்தவருக்கு மட்டுமே பணி முன்னுரிமை என ஒவ்வொரு அடியினையும் கவனமாக எடுத்து வைத்ததின் விளைவு இன்று தனியார் பல்கலைக் கழகங்களில் நான்காவதாக இருக்கிறது. இன்னும் பத்து வருடங்களில் ஹன்யாங் பல்கலைக் கழகத்தின் வளர்ச்சி இன்னும் விசுவரூபம் எடுக்கும் என்றே எண்ணுகிறேன்.


 Hanyang University, Main entrance.


Old administrative building of Hanyang University at winter. 


தமிழ‌கத்தினை பொறுத்த வரை இன்னும் பத்து வருடங்களில் அரசுப் பல்கலைக் கழகங்களை விட தனியார் நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களில் ஆராய்ச்சி வெகு தீவிரமாக முன்னெடுக்கப்படும் என்றே கருதுகிறேன். மத்திய அரசின் ஆய்வு நிதிக்கான திட்டங்களை (Research Proposal) சமர்ப்பிப்பதில் தனியார் பல்கலைக் கழகங்கள் வெகு சிரத்தை காட்டுகின்றன. இதன் வழியே அங்கு பணி புரியும் உதவி மற்றும் இணை பேராசிரியர்களின் சம்பளம் மற்றும் பதவி உயர்வு நிர்ணயிக்கப்படுவதால் ஆய்விற்கான ஒரு அடிப்படை உந்துசக்தி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தின் அரசு பல்கலைக் கழகங்களை பொறுத்த வரை சூழல் முற்றிலும் வித்தியாசமாக உள்ளது. எல்லா அரசு பல்கலைக் கழகங்களிலும்  புதிய இளைஞர் பட்டாளம் உத்வேகத்தோடு ஆய்வு கட்டமைப்பில் களம்  இறங்கி பணியாற்றினாலும்,  பாழாய் போன சாதிய அரசியல், மற்றும் அரசியல்வாதிகளின் லாவணி  வேலைகள்  இதன் வளர்ச்சியினை தடுக்கும் முட்டுக்கட்டைகளாக‌ உள்ளது.   பத்து வருடங்களுக்கு முன்னால் இருந்த தமிழக பல்கலைக் கழகங்களின் சூழலோடு ஒப்பிடுகையில், துணைவேந்தர் தேர்வு முதல் ஆசிரியர் தேர்வு வரை எல்லா நிலைகளிலும் மாற்றத்திற்கான வழிகள் அடைக்கப்பட்டு விட்டன. வழமையான பழைய சாம்பிராணி தொடந்து சென்ற தலைமுறை ஆட்களால் தொடந்து போடப்படுவதால் இந்த புகையில் இளைஞர்கள் தேறி வந்து வெற்றி பெறுவது என்பது மிகக் கடினம் தான்.  

இந்த வரிசையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் ஆய்வு செய்வோரின் நிலைமை படு மோசம். அவர்கள் இந்திய தொழில்நுட்ப கழகங்கள் அல்லது ஆய்வு மையங்கள், பல்கலைக் கழகங்கள் என்ற சமூக வரிசைக் கிரமத்தில் மூன்றாம்தர அடிமைகளாகவே நடத்தப்படும் அவலம் இன்றும் தொடர்கிறது. பெரும்பாலும் தமிழகத்தில் உள்ள‌ கல்லூரிகள் இள நிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கான பாடங்களை பயிற்றுவிக்கும் கூடங்களாகவே பாவிக்கப்படுகிறது. இங்கு ஆராய்ச்சி என்பது இரண்டாம் கட்டம்தான். இப்படி ஒரு மோசமான கட்டமைப்பினை கொண்ட ஒரே தேசம் இந்தியாவாகத்தான் இருக்கும். சொல்லப்போனால் இங்கு பயிலும் மாணவர்களுக்குத்தான் ஆய்வு பற்றிய அடிப்படை புரிதலும், பிற்காலத்தில் முனைவர் பட்ட ஆய்வுக்கான விழிப்புணர்வும் அதிகம் தரப்பட வேண்டும். ஆனால் பல்கலைக் கழகங்கள் தொடர்ந்து கல்லூரிகளுக்கு சொல்லும் ஒரே மந்திரம் "நீங்கள் ஒரு ஆணியும் பிடுங்க வேண்டாம்" என்பதே. முடிவில் பாதிக்கபடுவது மாணவர்களே. இந்த நிலை நிச்சயம் வரும் காலத்தில் மாற்றப்பட வேண்டும். 

தொடந்து தமிழை முன்னிறுத்தி ஓட்டு வேட்டையாடும் ஆட்சியாளர்கள் தமிழக பல்கலைக் கழகங்களை முன்னேற்ற கொஞ்சாமது சிந்திக்கின்றனரா என ஐயமுற தோன்றுகிறது. இனியாவது போர்க்கால அடிப்படையில் தமிழகத்தின் பல்கலைக் கழகங்கள் புதுப்பிக்க பட வேண்டும்.  பொருளாதார ரீதியில் பின் தங்கிய மாணவர்களே அதிக எண்ணிக்கையில் ஆராய்ச்சி கல்வியில் சேருகிறார்கள். ஆகையால் ஆய்வு மாணவர்களுக்கான விடுதிகள் புணரமைக்கப்பட்டு அவர்களுக்கான வாழ்வியல் சூழல் நவீனப் படுத்தப்பட வேண்டும். உலகின் முன்னனி ஆய்விதழ்களை இணையத்தின் வழியே பெற தமிழக பல்கலைக் கழகங்களின் ஒருங்கிணைந்த மையம் வழியே பெற ஆவண செய்யலாம். இன்னும் அறிவியல் ஆராய்ச்சிக்கான இதழ்களை பிற நாடுகளில் பணிபுரியும் நண்பர்கள் வழியே தான் பெறக் கூடிய அவல‌ சூழல் உள்ளது. 

மத்திய அரசின் ஆய்வு  நிதி எப்போதும் தென்னிந்திய பல்கலைக் கழகங்களுக்கு பாரா முகமாகவே இருக்கும் சூழலில் தமிழக அரசு பாராளுமன்ற நடவடிக்கைக்கள் மூலம் தமிழக அரசிற்கான ஆய்வு நிதியின் விகிதாச்சாரத்தினை தெளிவு படுத்தி அதனை உயர்த்த நடவடிக்கை எடுக்க‌ வேண்டும். தமிழக பல்கலைக் கழகங்களில் ஆய்வகங்கள், நூலகங்கள் ஆகியவை 24 மணி நேரமும் இயங்கும் வகையில் வசதிகள் செய்து தரப்பட வேண்டும். பல்கலைக் கழக ஆராய்ச்சியில் தனியார் தொழில் நிறுவனங்களின் நிதி முதலீட்டை ஊக்குவிக்கும் பொருட்டு ஆய்வு பூங்காக்கள் பல்கலைக் கழக வளாகங்களில் அமைத்து இளம் பேராசிரியர்களை ஊக்குவிக்கலாம். 

தற்போதைய இரண்டாண்டு முது முனைவர் பாடத்திட்டத்தில் (M.Sc.) மேற்கொண்டு முனைவர் பட்ட ஆராய்ச்சி (Ph.D) படிப்பினை தொடர விரும்புபவர்களுக்கு கடைசி பருவ தேர்வுக்கான (semester) தாள்களை விலக்கி கொண்டு அதற்கு பதிலாக ஒரு சர்வதேச ஆய்விதழில் குறைந்தபட்சம் ஒரு கட்டுரையாவது வெளியிடும் நிபந்தனையோடு அவர்களை நேரடியாக ஆய்வுக் கூடத்தில் கடைசி ஆறு மாத காலத்திற்கு பயிற்சி அளிக்கலாம். இதன் மூலம் ஆய்வு மாணவர்களின் எண்ணிக்கை சற்றே கூடும்.

தமிழக‌ பல்கலைக் கழகங்களை உலகின் முதல் 100 வரிசை பட்டியலில் எப்போது பார்ப்போம் என்ற  என் ஏக்கம் நீடித்துக் கொண்டே இருக்கிறது. 


(குறிப்பு: முனைவர் ஆய்வுப் பட்ட மாணவர்கள் வாய் மொழி தேர்வு முடித்த பின்னும்  சான்றிதழ் உடனே கிடைக்கப் பெறாததால் பல மாணவர்கள் வெளிநாடுகளில் கிடைக்கும் நல்ல வாய்ப்புகளை இழக்கிறார்கள். பட்டமளிப்பு விழாவினை வருடம் ஒரு முறை வைத்து அதை சடங்கு போல் பாவித்து வெளி நாடுகளுக்கு செல்லும் மாணவர்களின் வாழ்க்கையில் விளையாடுவதை நிறுத்தி விட்டு, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை முனைவர் பட்ட சான்றிதழினை வழங்க வழி செய்யலாம்)

No comments:

Post a Comment