Sunday 13 September 2015

இதைவிடவும் அரிய நிதி உண்டோ


ஜப்பானில் தற்போது அறுவடை காலம் தொடங்கி விட்டதுசரி ஒரு நடை வயல் வெளி பகுதி போய் வரலாம் என ஒரு நடை கிளம்பினேன்.

நெற்பயிர்கள் கதிர் முற்றி தலை சாய்ந்து கிடந்திருந்தன. போன வார கடும் மழையின் தாக்கம் போலும். மற்றொரு புறத்தில் நெல் அறுக்கும் எந்திரத்தின் மூலம் ஒருவர் அங்கிருந்த காணி நெல்லை அறுத்து அவற்றை நெல் மணியாய் மாற்றி மற்ற ஒரு சிறு வண்டியில் சேமித்து கொண்டு இருந்தார்.


இங்கு அரசு எல்லா வயலுக்கும்  தனித் தனியாக நீர் பாயும் விதத்தில் நீரேற்று பம்பினை அமைத்து கொடுத்திருக்கிறது. வழிந்தோடும் நீர் மீண்டும் அருகில் உள்ள சிறு கால்வாயில் சேகரிக்கப்பட்டு அந்த பகுதியில் பெரிய கால்வாயில் கலந்துவிடுகிறது. அந்த பகுதி முழுவது சேகரிக்கப்படும் கால்வாய் நீர் பிரதான கால்வாயில் கலந்து மீண்டும் நீரேற்றும் முறை மூலம் வாய்க்காலுக்கு பாய்ச்சப் படுகிறது. இம்முறையில் வயலுக்கு தொடர்ச்சியாக நீர் பாய்ச்சப் படுவதோடு அல்லாமல் எஞ்சிய நீர் வீணாகமல் சேகரிக்கப்பட்டு மீள் சுழற்சியில் பயன்படுத்தப்படுகிறது.




நெல் அறுவடை, உங்கா கிராமம், நோதா நகரம், ஜப்பான்


ஒவ்வொரு காணியிலும் நெல் அறுத்து முடிந்தவுடன் சிந்திய சூடான நெல் மணிகளை கொத்தி தின்ன கூட்டம் கூட்டமாய் காட்டு புறாக்கள் படை எடுத்துக் கொண்டு இருந்தன. அருகில் போனால் போக்கு காட்டு பறந்து கொண்டு திரிந்தன.


வயல் வெளிகளில் சிந்திய நெல் மணிகளை கொத்தி தின்னும் காட்டு புறாக்கள்

வயலில் திரியும் பச்சை தவளை


பச்சை நிற தவளைகள் வண்டி போன சகதியில் இருந்து வெளி வந்து பூச்சிகளை பிடித்து தின்ன ஆரபித்து விட்டன. வயல் நண்டுகள் ஆரஞ்சு நிறத்தில் பெரிய கொடுக்குகளோடு பயமுறுத்தி கொண்டு இருந்தன. புகைப்படம் எடுக்க சென்றால் பொந்துக்குள் ஓடி கண்ணா மூச்சி காட்ட ஆரம்பித்து விட்டன.

வயலில் இருந்து வெளி வரும் உபரி நீர் சேகரிக்கும் கால்வாய். மற்றும் நீர்  ஏற்று நிலையம்

வயலில் இருந்து வெளி வரும் உபரி நீர் சேகரிக்கும் கால்வாய்

எங்கள் உங்கா கிராமம் சிபா (chiba) மாவட்டத்தின் வடகிழக்கு எல்லையில் உள்ளது. எங்கள் கிராமத்தின் இந்த வயல் வெளிக்கு பின்னால்  எதோ நதி ஓடுகிறது. இந்த நதிக்கு அக்கரையில் சைதாமா (Saidama) மாவட்டம் ஆரம்பிக்கின்றது. இந்த வயல் வெளிகளுக்கு நடுவே நோதா நகரில் இருந்து நகரியாமா நகருக்கு செல்லும் பெரிய சாலை செல்கிறது. இது வயல் வெளிகளுக்கு இடையில் செல்வதால் இந்த இடம் பார்க்கவே கொள்ளை கொள்ளும்
நோதா‍- நகரியாமா விரைவு சாலை

சாலையினை கடந்து அந்தப்புறம் உள்ள காட்டு புத்தர் கோவிலுக்கு செல்ல முடிவெடுத்து அப்படியே சைக்கிளை ஓட்டினேன்.

செல்லும் வழியில் மிகப் பெரிய சமாதிகள் அடங்கிய வளாகம் ஒன்று தென்பட்டது. ஜப்பானில் முன்னோர்களின் சமாதிகள் ஊரின் நடுவில் குடியிருப்பு பகுதிகளிலேயே இருக்கும். நம் ஊரை போல் ஊருக்கு வெளியில் மட்டும் இருக்கும் எனச் சொல்ல முடியாது. இறந்த முன்னோர்கள் கடவுளர்களாக தங்களை காக்கிறார்கள் என ஜப்பானியர்கள் இன்றளவும் நம்புவதால் ஊரின் நடுவில் குடியிருப்புகளோடு இந்த சமாதி பகுதிகளை காணலாம்


Memorial Park Nagareyama  (top view from Unga river)

Holy Memorial Park Nagareyama 

காட்டு புத்தர் கோவிலுக்கு (ரொகுய்சா கோவில்-Rokusha Shrine), செல்லும் வழியில் ஆமை ஒன்று சாலையினை கடக்க முயன்று அடிப்பட்ட நிலையில் பார்த்தேன். இதன் வழியே கடந்த கார் ஒன்றில் அடிப்பட்டு இருக்கலாம். தற்போது அறுவடை காலம் ஆதலாம் பல வயல் வெளிகள் காலியாகும் சூழலில் இவைகள் வேறிடம் பெயரும். அப்படிப்பட்ட சூழலில் நிறைய உயிரினங்கள் இறக்க நேரிடுகிறது

ஆனால் வயலில் திரியும் காட்டு வாத்துகளை மக்கள் எதையும் செய்வதில்லை. ஆதலால் அவைகள் ஓய்வு நேரத்தில் வயலில் இருந்து சேகரமாகும் சிறிய கால்வாய்களில் ஒய்யாரமாகநீந்தி விளையாடுகின்றன

வழிந்தோடும் வயல் நீர் போகும் கால்வாயில் நீச்சலடிக்கும் காட்டு வாத்துகள்
ரொகுய்சா கோவிலின் முன் புறம் வரவேற்பு விதானம் போல் ஒன்று உள்ளது. நுழைவாயின் இடது புறம் மூன்று சிலைகள் உள்ளது. அவர்களின் கையில் பெரிய சூலமும், அவர்களின் கால் அடியில் மிதி பட்ட நிலையில் ஒரு சூரனை போல் ஒருவனும் கிடக்கிறான்.

ரொகுய்சா கோவில் (Rokusha Shrine), நகரியமா, சிபா (Chiba)  மாவட்டம், ஜப்பான் 

ரொகுய்சா கோவில் (Rokusha Shrine), நகரியமா, சிபா (Chiba)  மாவட்டம், ஜப்பான் 

ரொகுய்சா கோவில் (Rokusha Shrine), நகரியமா, சிபா (Chiba)  மாவட்டம், ஜப்பான் 

ரொகுய்சா கோவில் (Rokusha Shrine), நகரியமா, சிபா (Chiba)  மாவட்டம், ஜப்பான் 

ரொகுய்சா கோவில் (Rokusha Shrine), நகரியமா, சிபா (Chiba)  மாவட்டம், ஜப்பான் 

ஜப்பானில் கோடை காலத்திலும் (ஜீலை), குளிர் கால தொடக்கத்திலும் (நவம்பர்)  தேர் திருவிழாக்கள் பிரசித்தம். அந்தந்த பகுதிகளில் உள்ள கோவில்களில் சப்பரங்கள் செய்யப்பட்டு வீதிகள் வழியாக நடனமாடிக் கொன்டே வருவர். அந்த விழா முடிந்த உடன் கால் கோல்களை கோவிலில் கூரை செய்து அதில் போட்டு வைத்து விடுகிறார்கள். அத்தையக கழிகளை அங்கே காண முடிந்தது. பிரதான தெய்வமாகிய போதி சத்துவருக்கு இடது புறத்தில் மற்றொரு கூரையில் தனி தெய்வம் ஒன்று உள்ளது அவருக்கு நேர் எதிரே கை கால் கழுவும் நீர் தொட்டியும் குவளையும் வைக்கப்பட்டிருந்தது. இங்கே கோவிலின் உள்ளே செல்லும் முன் அந்நீர் தொட்டியில் கை, முகம், வாய் ஆகியவற்றினை சுத்தம் செய்து விட்டு அந்த குவளையினையும் கழுவி வைத்து விட்டுதான் கோவிலுக்குள் செல்ல வேண்டும்

நம் ஊரில் மாவிலையில் தோரணம் கட்டி கோவிலின் வாசலில் காப்பு கட்டுவது போல் வைக்கோலினால் செய்யப்பட்ட விளக்குமாறு போன்ற அமைப்புடன் காப்பு கட்டி பிராதன கடவுளின் மர ஆலயத்தின் முன்னால் தொங்க விட்டுள்ளனர். அதன் பின்னர் நடு நாயகமாக உத்திரத்தில் இருந்து கட்டப்பட்ட நீன்ட கயிற்றில் மணி ஒன்று தொங்குகிறது

 நான் போய் இருந்த கதவுகள் மூடி இருந்தன. ஆகையால் தரிசனம் செய்ய இயலவில்லை. புத்தம் சரணம் கச்சாமி என கன்னத்தில் போட்டு கொண்டு விட்டு திரும்பி விட்டேன்

அப்படியே எதோ (Edo) நதிக்கரைக்கு போய் திரும்பலாம் என மீண்டும் வயல்களை கடந்து நடக்க ஆரம்பித்தேன். தற்போது பெயத மழையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு எதோ நதியில் வழக்காம ஓடும் நீரை விட அதிகமாக கரை புரண்டு ஓடுகிறது. வழியும் நீர் உங்கா சிற்றாறு வழியாக திருப்பி போகிறது

கரையெங்கும் தற்போது பைரித்ரம் பூக்கள் மலர்ந்து குலுங்குகின்றன. வண்ணத்து பூச்சிகளும், வண்டுகளும் தேனை பருக கூட்டம் கூட்டமாய் திரிகிறது. வாய்க்காலின் பாதி மூழ்கிய செடிகளிலும், புதர்களிலும் நாரைகள் கூட்டம் கூட்டமாய் வரத் தொடங்கி விட்டது. எங்கள் பகுதி மக்கள் இதுதான் சமயம் என்று தூண்டிலை தூக்கி கொண்டு வந்து அமர்ந்து விட்டார்கள்

கால்வாய் கரையில் பூத்திருக்கும் பைரித்ரம் பூக்களில் தேன் மது அருந்தும் வண்ணத்து பூச்சிகள்
கால்வாய் கரையில் பூத்திருக்கும் பைரித்ரம் பூ


வைணவத்தில் பிரச்சித்தி பெற்ற மணக்கால் நம்பி ஆச்சாரியர் உலக பற்றில் திளைத்திருந்த ஆளவந்தான் மகாராஜாவை மிகப் பெரும் நிதி உனக்கு தருகிறேன் என திருவரங்கம் அழைத்து செல்கிறார். அங்கு பள்ளி கொண்ட கோலத்தில் ஒய்யாரமாக படுத்திருக்கும் திருவரங்க பெருமானை காட்டி இதை விடவும் பெரிய நிதி உண்டோ என சொன்ன போது ஆளவந்தார் திருவரங்கனின் அழகில் மெய் மறந்து நின்றதை போல் இன்றைய மருத நிலக் காட்சிகள் என்னை கட்டி போட்டு விட்டது. உண்மையில் இதனை விடவும் அரிய நிதி உண்டோ என திகைத்திருக்கிறேன்..

  இன்னும் ஒரு மாதத்தில் இங்கு இலையுதிர் காலம் துவங்கி விட்டால் மீண்டும் பசுமையினை பார்க்க ஐந்து மாதங்கள் காத்திருக்க வேண்டும்.





1 comment: