Sunday 21 August 2016

 ஒலிம்பிக் பாடங்கள் - தென் கொரியா ‍‍- 1


ஆசியாவின் துணைக் கண்டம் என்று அழைக்கப்படும் இந்தியா ஒலிம்பிக் பதக்க பட்டியலில் ஒன்று, இரண்டு என திணறும் சூழலில், கிழக்கு ஆசியாவின் சிறிய‌ நாடான தென் கொரியா பதக்க பட்டியலில் (தங்கம் 9, வெள்ளி 3, வெண்கலம் 9) கோலோச்சுவது சமகால‌ ஆச்சரியங்களில் ஒன்று. நாம் எதிர் காலத்தில் முன்னேறிச் செல்ல‌ அவர்களிடம் இருந்து கற்றுக் கொள்வதற்கு நிறைய பாடங்களும் கொஞ்சம் எச்சரிக்கைகளும் உள்ளது.

இப்போது தொழில் நுட்பம், விளையாட்டு ஆகியவற்றில் பரவலாக அறியப்படும் தென் கொரியா 1988 ஆம் ஆண்டு கோடை ஒலிம்பிக் (1988 Summer Olymic) அங்கு நடக்கும் வரை உலகத்தின் அதிக கவனத்தை பெறாத ஏழை நாடுகளில் அதுவும் ஒன்று. ஆனால் இப்போது வளர்ந்த நாடுகளில் வரிசையில் ஒலிம்பிக்கின் பதக்க‌ வேட்டையாடும்  பத்து இடத்திற்குள் வந்துள்ளது  என்ற பெருமிதத்தை சுமந்து நிற்கிறது.

இந்தியா தொடர்ந்து ஒலிம்பிக்கில் பலவீனமான ஒரு நோஞ்சான் குழந்தையாக இருக்க பல காரணங்கள் உண்டு. அதில் வீரர்கள் தேர்வில் நடைபெறும் புவிசார் அரசியலும் ஒரு தவிர்க்க முடியாத காரணிகளில் ஒன்று என்பது கசப்பான உண்மை. வழமையாக நம் தேசத்தில் நடைபெறும் தெற்கு வடக்கு பஞ்சாயத்துகளில் வட கிழக்கு பகுதியின் குட்டி மாநிலங்களான  மணிப்பூர், மேகாலயா, அருணாச்சல பிரதேசங்களின் நிலைமை சொல்லி தெரிய வேண்டாம்.

தென் கொரியாவில், இந்தியாவைப் போலவே வலுவான புவி சார் பிரச்சினை மக்களின் மன ஓட்டங்களில் இன்றும் உள்ளது.   இந்த நுண் அரசியலையும் தாண்டி, எவ்வாறு தென் கொரியா ஒலிம்பிக்கில் தன் கரங்களை வலுவாக பதிக்கிறது  என்பதே நாம் அவரிடம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள்

கொஞ்சம் வரலாற்றில் பின்னோக்கி போவோம்.

தென்கொரியாவின் புவி நிலப் பரப்பு அடையாளங்களை தற்போது Province என்றே அழைக்கின்றனர். தற்போது தென் கொரியாவில் ஒன்பது பிராவின்ஸ் உள்ளது.

ஆனால் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாக மன்னர்கள் ஆட்சி காலத்தில் (நம் ஊர் சேர சோழ பாண்டியர் போல) கொரியா என்ற ஒற்றை நிலப்பரப்பு ஆட்சி கிடையாது. அது எப்போதும் பூசல் நிறைந்த மூன்று தனித்த பேரரசின் எல்லைகளாக இருந்தது.  இதனை “தோ” என்று அழைப்பர். சில்லா தோ (தற்போதைய தென்கொரியாவின் மத்திய மற்றும் வடக்கு பகுதி), கொகுரியோ தோ (தற்போதைய வட கொரியா),பெக்சே தோ (தென் கொரியாவின் தென் கிழக்கு பகுதி) என மூன்று முக்கிய நிலப்பரப்புகள் ஒரே மொழியுடன் வேறு வேறு கலாச்சார பின்னனியினை கொண்டிருந்தது.



கொரியா வரை படம் (Historiographer at the English language Wikipedia, History of Korea-576, CC BY-SA 3.0)

கி.பி 668 ஆம் ஆண்டு கால கட்டத்தில் “சில்லா” பேரரசு மற்ற இரு பேரரசுகளையும் வென்று தன் காலடியில் கொண்டு வந்தது. இதன் தொடர்ச்சியாக ஆட்சிக்கு வந்த கொர்யா பேரரசு  (918-1332) தமது கால கட்டத்தில் இந்த மூன்று நிலப்பரப்பும் ஒன்றிணைக்கப்பட்டு ஒரே நாடாக நிறுவப்பட்டது  (இந்த பேரரசிற்கு பின்னர்தான் கொரியா என்ற பெயர் வந்தது).

இந்த கால கட்டம் வரை மூன்று நிலப்பரப்பிற்கான மொழி உச்சரிப்பு, நாட்டார் வழக்கு, கலாச்சார அடையாளங்கள் யாவும் தனித்தே இருந்தது. இதன் பின்னர் வந்த சோசன் பேரரசு (1392-1910) இதனை வலுவாக்கி ஒருங்கிணைந்த கலாச்சார முறைகளை கொண்டு வந்தது. இந்த கால கட்டத்தில் கொரியா முழுவதும் ஒரே கலாச்சார முறை நிலவியதால் பெண் கொடுப்பு, பெண் எடுப்பு என பரவலான  ஒரு ஒருங்கிணைந்த‌ சமூகம் நிறுவப்பட்டது.

ஆனால் துரதிஸ்டவசமாக வடக்கு பிராந்தியமான‌ கொகுரியோ எல்லை பரப்பு இரண்டாம் உலகப் போரில் வட கொரியாவாக பிரிக்கப்பட்டது. மற்ற இரண்டு நிலப்பரப்புகளும் தென் கொரியாவின் கீழ் வந்தது.

இங்குதான் சிக்கலே தொடங்கியது. தென் கொரியாவின் சுதந்திர ஜனநாயக‌ ஆட்சி அதிகார அமைப்பில் இந்தியாவைப் போன்றே வடக்கு, தெற்கு என புவிசார் எல்லை சார்ந்து அரசியல் பதவிகளில் கோலோச்சும் அதிகார பஞ்சாயத்து நீறு பூத்த நெருப்பாக ஓட ஆரம்பித்தது.

தற்போதைய தலை நகரமான சியோல் கொரியாவின் பழைய தலை நகரம் அல்ல. சில்லா பேரரசின் தெற்கு எல்லையில் இருந்த ஜியோஞ்சு (Gyeongju) நகரமே அப்போதைய கால கட்டத்தில் தலைநகராக இருந்தது. தற்போது இது கலாச்சார நகரம் என அழைக்கப்படுகிறது.

பிறகு நவீன கொரியாவில் சில்லா-தோ வின் கை ஓங்க வேண்டும் என்பதற்காக வடக்கு பகுதியில் அமைக்கப்பட்ட புதிய தலைநகரமே சியோல் ஆகும். சியோலின் (Seoul) சரியான உச்சரிப்பு ச-‍ உல் ()அதாவது புதிய தலைநகரம் என்று கொரிய மொழியில் அர்த்தம். இதனால் மற்றொரு பகுதியான பெக்சே நிலப்பரப்பு மக்கள் மகா காண்டாகி விட்டனர்.

இன்றும் கொரிய அதிபர், அமைச்சர்கள் தேர்வு, விளையாட்டு வீரர்கள் தேர்வு, பிராந்திய வளர்ச்சி ஆகியவற்றில் சியோலை மையமாக கொண்ட சில்லாதோவின் கையே ஓங்கியே இருக்கும். 

ஆனாலும் அவர்கள் எப்படி ஒலிம்பிக்கில் பதக்க வேட்டையாடுகிறார்கள் என்ற சூட்சுமத்தை தேடி கற்க வேண்டும். இதற்கு அப்பால் ஒருங்கிணைந்த தேசிய அளவிலான வளர்ச்சி என்பது கொரியாவிடம் நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய பெரிய பாடம்.

முக்கியமாக‌ ஒவ்வொரு கால கட்டத்திலும்  விளையாட்டு துறையில் தங்களிடம்  உள்ள‌ பிரச்சினைகளை தீர அலசி அதற்கான முடிவுகளை தேட துவங்கியதுதான். இதுவே சர்வதேச அளவிலான விளையாட்டு போட்டிகளில் தென் கொரியாவின் பலமான முன்னெடுப்பிற்கு காரணம். குறிப்பாக‌ கொள்கை மற்றும் செயலாக்க குழுக்களை (policy and implementation) ஒவ்வொரு குறிப்பிட்ட கால கட்டத்திலும் நியமித்தார்கள். நம் தேசம் இங்கேதான் சறுக்குகிறது.

இந்தியாவின் கிரிக்கெட்டை போலவே தடகளம், வில் வித்தை, பேஸ் பால் மூன்றும் தென் கொரியாவில் அதிகமாக‌ ஸ்பான்சர் செய்யப்படும் உயரடுக்கு விளையாட்டுகள். அதையும் மீறி கவனத்தில் வராத சிறிய விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் தர தனித்த கொள்கை முடிவுகளை எடுத்தனர். அதன் விளைவாக சிறிய நிறுவனங்களின் ஸ்பான்சர்களை அரசே ஒருங்கிணைப்பு செய்தது.


சியோல் ஒலிம்பிக் பூங்கா

மேலும் இந்த குழுக்கள், சிறந்த விளையாட்டு வீரர்களை இனம் காணுதல் ,விளையாட்டு அறிவியல், பயிற்சியாளர், விளையாட்டு வசதி ஆகியவற்றின் முன்னேற்றம் இவற்றில் அதீத கவனம் எடுத்துக் கொண்டார்கள். இதன் மூலம் நன்கு கட்டமைப்பு செய்யப்பட்ட தேசிய அளவிலான போட்டிகளை முன்னெடுத்தது. கடந்த சமீப காலமாக‌, சர்வதேச போட்டிகளில் எப்படி தயார் செய்து கொள்வது என்று சொல்லும் SPLISS (Sport policy factors leading to international sporting success)  மாடலை கொரியா மிகத் தீவிரமாக பின் பற்றி வருகிறது.

ஒலிம்பிக், காமன்வெல்த், ஆசிய விளையாட்டு போட்டி போன்ற சர்வதேச அளவிலான பங்கேற்பிற்கு இந்தியாவின்  புவி சார் அரசியலில் "தமிழகம்" எங்கு நிறுத்தப்பட்டு இருக்கிறது என்ற பரவலான புள்ளி விபரம் தேவைப்படுகிறது.

இன்னும் பல கேள்விகள் தொங்கி நிற்கிறது, நம் பிரதிநித்துவம், தேசிய அளவிலான விளையாட்டு மைதானங்கள், வீரர்கள் தேர்வு மற்றும் பயிற்ச்சிக்கான நிதி ஒதுக்கீடு என நம் இருப்பின் அவசியத்தை நாம் தீர அலச வேண்டிய கட்டத்தில் உள்ளோம். இந்த இடத்தில் தான் நாம் மீண்டும் மீண்டும் இந்தி என்னும் ஒரு மாயைக்குள் சிக்க வைக்கப்படுகிறோம்.

நமக்கான இருப்பை கேட்கும் முன் “தென் இந்தியா” என்ற ஒரு லாவகமான லாஜிக்கிற்குள் ஒளிந்து கொண்டு நிதியை தெற்கே கொண்டு வருவதுதான் சாமர்தியமானது. பின்னர் தமிழகத்திற்கான தேவையினை நம் மாநில அரசின் நிதியின் பங்களிப்போடு கிராம அளவில் விளையாட்டிற்கான உட் கட்டமைப்பினை கொண்டு செல்ல முடியும். பள்ளி அளவில் விளையாட்டு வீரர்கள் பங்களிப்பில் சோர்வாக இருக்கும் பள்ளிகளை இனம் கண்டு சரி செய்ய வேண்டும். கிராம அளவிலான விளையாட்டு மன்றங்களை முன்னெடுக்க வேண்டும். இங்கே சாதி ஒரு சகடை சனியாக நின்று கொல்லும் என்பது இன்னொரு பிரச்சினை.

இவை தவிர்த்து பார்த்தால், தென் இந்திய அளவில் தமிழகம் செயல்படலாம் என்றால் துரதிஸ்ட வசமாக அண்டை மாநிலங்களுடன் தமிழகத்தின் உறவு என்பது படு சிக்கலாக மோசமாக உள்ளது. காரணம் நதிநீர் பங்கீட்டு பிரச்சினை. ஒரு வேளை, தென்னிந்திய அளவில் விளையாட்டு பிரதிநித்துவ முன்னெடுப்புகள் நம்மிடையே உள்ள சின்ன கசப்புகளை நீக்க ஒரு காரணியாக அமையலாம்.

இன்னும் பேசுவோம்.

சுதாகர் பிச்சைமுத்து,
வேல்ஸ், பிரித்தானியா


No comments:

Post a Comment