Wednesday 24 August 2016

மனம் கொத்தி பறவை - 2 (தமிழோசை சிற்றிதழ் -கனவுகளின் விளைவு)


அநேகமா 2004 ஆம் வருசம்னு நினைக்கிறேன்.

கொங்கு நாடு கல்லூரியில் நான் ஆராய்ச்சியாளாரா சுத்திகிட்டு இருந்த நேரம். அப்ப செந்தில் அண்ணாவும், முத்துகுமார் அண்ணாவும் ஒரு சிற்றிதழை கொண்டு வரும் ஆசையில் இருந்தாங்க.

ஆனா அது பல காரணங்களால் தள்ளிப் போய் கிட்டே இருந்துச்சு.

அந்த கால கட்டத்தில்தான் நிறைய சிற்றிதழ்கள் வெகு சன மக்களுக்கான‌ சந்தையினை நோக்கி வரத் துவங்கி இருந்தது. கணையாழி, குமுதம் தீரா நதி அப்புறம் இன்னும் கொஞ்சம் இதழ்கள் கடைகளில் கிடைத்துக் கொண்டிருந்தது. அந்த சூழலில்தான் உயிர்மை பெரிய சவாலோடு களத்தில் புதிதாய் இறங்கி இருந்தது. ஓரிரண்டு இதழ்களை படித்ததாய் ஞாபகம். சென்னையினை ஒப்பிடுகையில் கோவையில் எல்லா அச்சு சிற்றிதழ்களும் கிடைக்கவில்லை. 

ஆனாலும் கோவை இலக்கிய உபாசகர்களின் பிரியத்திற்குரிய கூடாகவே இருந்தது. இங்கே திராவிட இயக்கம், தமிழ் தேசியம், மார்க்சியம் ஆகியவற்றை மையமாக கொண்டு  இலக்கிய கூட்டங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது.

 இந்த சிற்றிதழ் ஆரம்பிப்பதன் பின்னால் இருக்கும் கதை சுவாரசியமானது.

பகல் முழுவதும் ஆய்வு வேலை ஓடிக் கொண்டே இருக்கும். உலக சினிமா, இலக்கியம், நடப்பு அரசியல்  என ஒரு மாசல் வடையின் சுவைக்கு நிகரான ஒரு அரட்டை 9 மணிக்கு மேல் ஆய்வகத்தில் ஓடும். இது மெல்ல நீண்டு பின்னிரவில் இருந்து சில வேளைகளில் அதிகாலை வரை நீளும்.

இந்த இரவு நேர இலக்கிய சம்பாசனையில் நான் வேடிக்கை பார்க்கும் சிறுவனாகவே இருப்பேன். இரண்டு பேரும் பேசி முடித்து சோர்வாகும் தருணத்திற்காகவே உறுமீன் கொக்காக‌ காத்திருப்பேன்.

ஏனெனில் ரெண்டு பேரும் பேசி முடித்து சோர்வடையும் வேளையில் ஜி.என் மில்ஸ் நாலு ரோடு சந்திப்பில் உள்ள‌ அய்யங்கார் பேக்கரியில் டீ குடிக்க போவார்கள். அப்ப கண் முழிச்சு கதை கேட்டு கொண்டிருந்தால் நிச்சயம் எனக்கு டீ, வாழைப்பழம், ரெண்டு பிஸ்கட்டும் கிடைக்கும். அதற்காகவே இவர்கள் ஆற்றும் இலக்கிய, சினிமா உலகின் பிரதாபங்களை கேட்டுக் கொண்டிருப்பேன்.

ஒரு டாப்பிக் பத்து நிமிசத்து மேல் தாங்காது. கிளை கிளையா பிரிஞ்சு ரெக்கை கட்டி பறக்கும். சில நேரம் பேசுன மேட்ட்ரே பேச்சு முசுவுல திருப்பி அரைச்ச மாவு கணக்கா அரைபடும். ஆனா செந்தில் அண்ணா அந்த டாப்பிக்கை திருப்பி சொல்லும் போது அதுல இருக்கிற சுவாரசியத்துக்காகவே கேட்டு கிட்டே இருக்கலாம்.

இந்த ரெண்டு பேருக்கும் இன்னொரு பெரிய வேல இருந்துச்சு, அது கோயம்புத்தூரில் நடக்கும்  எல்லா இலக்கிய நிகழ்வையும் ஒன்னு விடாம  தேடிப் பிடிச்சு போய் கலந்துக்கிறது. அப்படி விழா நடக்கும் நாட்களில் எனக்கு பெரிய கதைகள் கிடைக்கும்.

இதில் இன்னொரு ஜோக்கும் நடக்கும்.

போகும் போது ரெண்டு பேரும் சிரித்து கொண்டே ஒரே வண்டியில் போவார்கள். திருப்பி வரும்போது உர்ரென்று சண்டை போட்டுக் கொண்டு வருவார்கள். விழாவில் பேசியவர்கள் கூட‌ சொந்த ஊர் போய் சேர்ந்திருப்பார்கள். ஆனால் கலந்து கொண்ட இலக்கிய விழாவின் அபிப்ராய பேதங்கள் இருவருக்குள்ளும் ஒரு புது வடிவிலான சண்டையினை உருவாக்கி இருக்கும்.

இந்த சண்டை மேலெழுந்து செல்லும் கூம்பு வடிவிலான காற்று சுழி ஒரே சீராக நகர்ந்து கொண்டே செல்வதை போல் சுற்றி சுற்றி  ஆய்வகத்தின் இலக்கிய ஜமாத்தில்  வெடிக்கும்.

அப்போது டீக் குடிக்க போலாமே, என நான் தான் முதல் பிட்டை வீசுவேன். என் கவலை எல்லாம் இவர்கள் சண்டையில் என் டீ கோட்டாவை மறந்து விடக் கூடாது அல்லவா.

இப்படியே போய்க் கொண்டிருந்த டிராக் ஒரு கட்டத்தில் ஆர்வம் வெறியாகி விட்டது. நாமே ஏன் இலக்கிய எழுத்தாளர்களை ஒருங்கிணைத்து ஒரு சிற்றிதழாக கொண்டு வரலாம் என யோசிக்க துவங்கினர். அது போக நம் சிந்தனைகளையும் ஒரு கட்டுரையாக எழுதலாமே என்ற ஆர்வமும் சேர்ந்து  ராக்கெட்டுக்கு தீ வைத்தது. என்ன செய்வது இலக்கிய ஆர்வம் என்ற சனிக் குட்டி எப்போதும் சைக்கிளில்தானே வரும்.

இந்த விதை விழுந்து ஆறாவது மாதம் சிற்றிதழின் முதல் வடிவம் வந்து விட்டது.
ஆனால் அதற்காக இருவரும் தூக்கம் பகல் பாராமல் இதழுக்கு பெயர் தேர்வு, லோகோ டிசைன், பதிப்புரிமை, சந்தா கட்டணம், இத்யாதி இத்யாதி என தீயாய அலைந்து கொண்டிருந்தார்கள். இத்தனைக்கும் செந்தில் அண்ணன் முழு நேர இயற்பியல் ஆராய்ச்சியாளர். தன் சொந்த ஆராய்ச்சியில் ஒரு சிறு குறை கூட வைக்காமல் இந்த வேலைகளையும் சேர்த்து கொண்டே சுத்தினார்.

ஒருவாராய் எல்லா பிரச்சினைகளும் முடிந்து ராக்கெட் ஏவுவதற்கு தயாராக இருந்தது.

புதிய இதழுக்கு "தமிழோசை" எனப் பெயரிடப்பட்டது.

கோவை ஞானி ஐயா உள்ளிட்ட பலரும் இந்த இதழுக்கு வழிகாட்டிகளாக இருந்தனர். நாட்டார் மரபியல், பின் நவீனத்துவம், கவிதை, சிறுகதை, நவீன அறிவியல் நுட்பம் என ஒரு தமிழ் சிற்றிலக்கியத்திற்கான அத்துனை கல்யாண குணங்களும் புதிய இதழில் இருந்தது.

இதழ் வெளியீட்டு விழாவை விஜயா பதிப்பகத்தில் வைத்துக் கொள்ளலாம் என ஒருவாராய் முடிவெடுத்து இருந்தார்கள். இதற்கான காரணங்களில் ஒன்று, கோவை விஜயா பதிப்பகம் வேலாயுதம் ஐயா அவர்கள், முத்துக்குமார் அண்ணனுக்கு நல்ல‌ நண்பர் என்பதையும் தாண்டி, அவர் பல இளம் எழுத்தாளர்களை அப்போது ஊக்குவித்து புதிய நூல்களை கொண்டு வந்து கொண்டு இருந்தார்.
சரி, இந்த இதழை ஒரு பெரிய தமிழ் ஆளுமை வெளியிட்டால் நன்றாக இருக்கும் என்று யோசித்துக் கொண்டிருந்த போது தான் ஜாக்பாட் போல எழுத்தாளர் ஜே.கே (ஜெயகாந்தன்) விஜயா பதிப்பகத்தின் ஒரு விழாவிற்கு வரவிருக்கிறார் என்ற செய்தியை வேலாயுதம் ஐயா சொன்னார்.

இந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்திக் கொண்டு புதிய இதழை ஜேகே கையாலே வெளியிட்டு விடலாம் என்று  ஒருவாறாய் முடிவெடுத்தார்கள்.

என்னைப் பொறுத்த வரையில் ஒரு புறம் இதழ் வரப் போகிறது, மற்றொன்று தனிப்பட்ட முறையில் என் வாசிப்பு உலகின் ஆதர்சங்களில் ஒருவரான ஜேகேவை நேரில் பார்க்கப் போகிறேன் என்கிற ஆர்வம் என‌ இரட்டிப்பான‌ மகிழ்ச்சியில் இருந்தேன்.

எல்லாமும் நிறைந்த திருநாளில் “தமிழோசை இதழ் ஜேகே கையால் வெளியிடப்பட்டது. இருவரின் முகத்தில் அப்படி ஒரு ஆனந்தம், சாதித்த உணர்வு.
அன்று ஜே.கே விடம் நான் ஆட்டோகிராப் வாங்கி வைத்திருந்த தமிழோசை இதழ்  பல இடங்கள் மாறும் போது எங்கு வைத்தேன் என தெரியவில்லை.

மறைந்து போன ஜேகேவின் இறப்பு நாளில் கூட‌ அவர் போட்டுக் கொடுத்த ஆட்டோகிராப் இப்போது இல்லையே என‌ பெரும் துக்கத்தை எனக்குள் கிளப்பி இருந்தது.

என்னதான் ஜேகேவின் படைப்புகள் அழியா பொக்கிசமாய் நம்மிடம் இருந்தாலும், குழந்தைகள் ஆசையாய் கையில் பிடித்திருக்கும் மரப்பாச்சி பொம்மை போல்  அவரது ஆட்டோகிராப் என்னிடம் இல்லையே  என‌ மனசை இழுத்து கொண்டிருந்தது. இதில் இன்னொரு வருத்தம் என்னவெனில் அந்த நிகழ்வில் எடுத்த புகைப்படத்தின் நகல் ஒன்றை முத்துக்குமார் அண்ணா  கொடுத்திருந்தார் துரதிஸ்டவசமாக அதுவும் எங்கு போனது தெரியவில்லை.

தமிழோசை பல சோதனைகளை கடந்து  நான்கு இதழ்கள் வந்தது என நினைக்கிறேன். இந்த இதழுக்காக இருவரும் நிறையவே உழைத்தார்கள். ஓடினார்கள். இதனை சந்தைப் படுத்துவதில் ஒரு கட்டத்தில் போராடி சோர்ந்தார்கள். பெரும் வேதனையில் இந்த இதழை ஒரு கட்டத்தில் கைவிட்டனர்.

நேரடியாக இலக்கிய வட்டத்தில் இருப்பவர்களே இந்த துறையில் திணறும் போது இவர்களின் உழைப்பும் ஆர்வமும் மெச்சத் தக்கது.

தமிழ் இலக்கியத்திற்கு ஒரு சாபக் கேடு உள்ளது. இங்கே, இலக்கியம் பற்றி பேசுபவனும், அதைப் பற்றி தொடர்ந்து எழுதுபவனும் எவ்வளவு போராடினாலும் அவனுக்கு இங்கே மரியாதை கிடையாது. ஒரு கட்டத்தில் தமிழ் மொழிக்கென்று உழைப்பவன் சோர்ந்து விடுகிறான். காரணம் நம்மிடம் இருக்கும் சுணக்கமான வாசிப்பு உலகம்.சிறு வயதில் இருந்தே எழுதுபவர்களை ஊக்குவிப்பவர்களும் இங்கே மிகக் குறைவு.

ஒரே ஆறுதல், முந்தைய சூழலை ஒப்பிடும் போது பல மடங்கு வாசிப்பவர்களின் எண்ணிக்கை தமிழ் சூழலில் தற்போது அதிகரித்துள்ளது. இதற்கு டிஜிட்டல் புரட்சியும் ஒரு காரணம் என்றால் அது மிகையில்லை.

இணையம் பரவலாக பலருக்கும் புத்தக வாசிப்பை எளிதாக்கி இருக்கிறது. அவ்வளவு ஏன் என் கருத்துகளை, அனுபவங்களை எழுதுவதற்கு கூட ஒரு வெளி கிடைத்திருக்கிறது.

ஆனால் இது போதாது. தமிழ் சூழலக்கு நிறைய புதிய வடிவங்களில் கருத்துமிகு கட்டுரைகள் வர வேண்டும். அறிவியல், பயணக்கட்டுரைகள், சர்வதேச அளவிலான உணவு, கலாச்சாரம், வேலை வாய்ப்பு, பொருளாதார சிக்கல்களை பற்றிய விவாதம் என ஆற்றல் மிகு சூழல் நிறைய வர வேண்டும்.

காலம் பெரும் ஓட்டம் எடுத்து இருக்கிறது. தற்போது செந்தில் அண்ணா, பிரித்தானியாவில் பேராசிரியர் பணியில் உள்ளார். முத்துக்குமார் அண்ணா, எங்கள் கல்லூரியிலேயே தமிழ்த் துறை பேராசிரியராக உள்ளார். ஆனாலும் அன்று இருந்த அதே இலக்கிய ஆர்வம் இன்றும் இவர்களிடம் உள்ளதுதான் ஆச்சரியம்.

நேற்று செந்தில் அண்ணா தேடிப் பிடித்து ஜேகேவோடு நாங்கள் இருக்கும் அந்த புகைப்படத்தினை அனுப்பி இருந்தார். என் பிரியத்திற்குரிய ஜேகேவுடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தி தந்த‌ இருவருக்குமே என் அன்பு நிறை நன்றிகள்.


 இந்தப் புகைப்படத்தின் பின்னால் இவர்களின் வலிகளும், பேசித் தீராத‌ எங்களின் கோவை நாட்களும் உள்ளது.

புகைப்படம். ஜேகேவிற்கு வலது செந்தில் அரசு அண்ணா,  இடது புறம் முத்துக் குமார் அண்ணா (கட்டம் போட்ட சட்டை),  இடையில் கட்டம் போட்ட டீ சர்ட் போட்டுக் கொண்டு நான்

இந்த இதழ் வெளிவர எந்த மாதிரியான சிரத்தைகள் எடுத்துக் கொள்ளப்பட்டது என்பதை செந்தில் அரசு அண்ணன் அவரது வலைப்பூக்கள் பகுதியில் வலியோடு விளக்கியுள்ளார்.

http://sunarasu.blogspot.co.uk/2012/06/10.html?m=1





No comments:

Post a Comment