Wednesday 21 December 2016

கேட்டுக் கொண்டே இருக்கத் தூண்டும் நாட்டுப் புற பாடல்

சோகம் ததும்பிய ஒரு கிராமத்து பெண்ணின் காதலை
நாட்டுப்புற பாடலில் கேட்டுக் கொண்டே இருக்கலாம்.
இப்பாடலின் சில பகுதி "களவாணி" படத்தில் வரும்.

இந்த நாட்டுப்புற‌ பாடலை எழுதியவர் பிரளயன். பாடியவர் கிருஸ்ணசாமி

*********************************

ஊரடங்கும் சாமத்துல‌
நான் ஒருத்தி மட்டும் விழிச்சிருந்தேன்

ஊர்கோடி ஓரத்துல உன்
நினைப்புல படுத்திருந்தேன்
காத்தடிச்சு சல சலக்கும்
ஓலெயெல்லாம் உன் சிரிப்பு
புரண்டு படுத்தாலும்
பாவி உன் மக நினப்பு

வெள்ளியில தீப்பெட்டியாம்
மச்சானுக்கு விதவிதமாம் பீடிக் கட்டாம்
வாங்கி தர ஆச வெச்சேன்
காச சுள்ளி வித்து சேத்து வச்சேன்

சண்முகனார் கோவிலுக்கு
 சூடம் கொளுத்தி வச்சேன்
போறவங்க வர்ரவங்க பேச்சை எல்லாம் நான் கேட்டு வச்சேன்

ஒரு பாக்கு போட்டாலே
உள் நாக்கு செவந்திடுமே
உன் மேல ஏக்கம் வந்து
என் தூக்கம் எல்லாம் போச்சு மச்சான்

கழனி சேத்துக்குள்ள‌
களை எடுத்து நிக்கையில்ல‌
உன் சொத்தப் பல்லப் போல
ஒரு சோழிய நான் கண்டெடுத்தேன்
கண்டெடுத்த சோழி ரெண்டு கலங்கி நிக்கயில்லெ
களையெடுப்பு பிந்துதுன்னு பண்ணையாரு ஏசினாரே

கள்ளிச் செடியிலெல்லாம்
கருவேல முள்ளெடுத்து
உன்பேர என்பேர‌
ஒரு சேர எழுதினோமோ

ஊணிக் கரையோரம்
உக்கார்ந்து பேசினமோ
ஊருக்காரன் தலையக் கண்டு
ஓடி நாம ஒளிஞ்சோமே

சும்மா கிடந்த போதே
துள்ளுகிற சாதிக்காரன்
சங்கமா சேர்ந்திருக்கான்
வம்பு பண்ண காத்திருக்கான்

என்ன பண்ண போறானோ
ஏது செய்ய போறானோ
நம் கதிய நினச்சு மச்சான்
என் மனசு பதை பதைக்கு

சாதி சொல்லி பிரிச்சாலும்
யாரும் வந்து தடுத்தாலும்
உன்னயே சேருவன்னு
துண்டு போட்டு தாண்டினியே
அந்த வார்த்தையில
நான் இருக்கேன்
வாக்கப் பட காத்திருக்கேன்

ஊரடங்கும் சாமத்துல‌
நான் ஒருத்தி மட்டும் விழிச்சிருந்தேன்




No comments:

Post a Comment