Monday 1 May 2017

ஜப்பான் பயணம் 2017

என் மதிப்பிற்கும், போற்றுதற்குரிய என் பேராசான் பேராசிரியர் அகிரா புஜிசிமா (Prof. Akira Fujishima) அவர்களுடன் இன்று இரவு விருந்து உண்டேன்.

ஏறத்தாழ 60,000 மாணவர்கள் பயிலும் தோக்கியோ பல்கலைக் கழகத்தின் தலைவர் (President, Tokyo University of Science). ஜப்பானில் உள்ள பல்வேறு ஆராய்ச்சிக் கழக‌ங்களின் சிறப்பு தலைவர் அந்தஸ்தும், இடையறாது ஓய்வின்றி உழைக்கும் பெருந்தகையுமான பேரா. அகிரா புஜிசிமா இந்த அடியவனின் வருகைக்கு விருந்தோம்பல் கொடுப்பதென்பது நான் பெற்ற பேறு என்றுதான் சொல்ல வேண்டும்.

பேரா. புஜிசிமாவுக்கு வயது 74. ஆனால் இளைஞர்களை காட்டிலும் பன் மடங்கு உத்வேகத்துடன் உழைப்பவர். அதிகாலை 4 மணிக்கே எழுந்து அலுவல்களை தொடங்கி விடுவார். உலகின் தலைசிறந்த மின் வேதியியல் ஆராய்ச்சியாளர்களில் முன்னோடி ஆனால் இந்த வயதிலும் சமீபத்தில் மூன்று அடிப்படை அறிவியல் புத்தகங்களை எழுதி முடித்துள்ளார் என்று அறியும் போது வியக்காமல் இருக்க முடியவில்லை.

இன்றைய இரவு விருந்தில் என்னுடன் தோக்கியோ அறிவியல் பல்கலைக் கழகத்தின் “சர்வதேச போட்டோ கேட்டலிஸ்ட் மையத்தின்” இளம் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். அதே துடுக்குத் தனம் நிறைந்த அவரது கேள்விகள் குறையவே இல்லை.

என் பிரித்தானிய வாழ்க்கை, நான் கண்ட அனுபவங்களை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அவருடன் பகிர்ந்து கொண்டேன். எல்லாவற்றையும் பொறுமையாக கேட்டார். எங்கள் பல்கலைக் கழகத்தில் உள்ள மிகச் சிறந்த பேராசிரியர்களை சந்திந்து பேட்டி கேட்க அனுமதி கேட்டேன். உனக்கு எதற்கு அனுமதி. எந்த நேரம் வேண்டுமானாலும் அவர்களை சந்தித்து அவர்களிடம் உரையாடு எனச் சொல்லி விட்டார்.

எப்போதும் போல் அடிப்படை வேதியியலில் கேள்விகள் கேட்டு சொல்பவருக்கு ஒரு ரவுண்ட் ஜப்பானிய சக்கே வாங்கி தருவதாக சொன்னார்.
மின் கலங்களை முன் முதலில் கண்டறிந்தவர் யார்? முதலில் வடிவமைக்கப்பட்ட மின் கலத்தில் எத்தனை மின் கலங்களை தொடர் இணைப்பில் இணைத்து சோதித்து பார்த்தனர்? அவ்வாறு சோதனை செய்த வேதியியல் ஆராய்ச்சியாளர் யார்? என்று கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனார்.

என்னால் மைக்கேல் பாரடேவைத் தவிர அந்தக் கேள்விக்கு பதில் தர இயலவில்லை.

பின்னர் சிரித்துக் கொண்டே வெகுநேரம் மின்கலங்கள் பற்றிய அடிப்படை கண்டுபிடிப்புகளை பகிர்ந்து கொண்டார்.

கால்வெனிக் (Galvenic) என்னும் அறிவியலாளர் 1780 களில் இரண்டு வெவ்வெறு உலோக மின் தகடுகளை (தாமிரம், துத்தநாகம்) தனித்து வைக்கப்பட்ட மின் கலத்தின் வைத்து அவற்றிற்கிடையே வேதியியல் ஏற்ற இறக்க வினைகள் (Redox reaction) நிகழ்வதன் மூலம் சுற்றில் மின் அழுத்தம் உருவாவததை கண்டறிந்தார். பின்னாளில் வோல்ட்டா (Alessandro Volta) என்னும் அறிவியலாளர் இதனை சற்றே மாற்றியமைத்தார்.

பெரும்பாலும் அவர் ஜப்பானிய மொழியில் பேசியதால் நிறைய விளங்கி கொள்ள இயலவில்லை.

பிரித்தானியாவின் ராயல் கழகத்தின் மிகச்சிறந்த அறிவியலாளர் சர் ஹம்ப்ரி (Sir Humphry Davy) கால்வெனிக், வொல்ட்டா அறிவியலாளர்களின் கண்டுபிடிப்பிற்கு பிறகு  மின்வேதிக் கலன்கள் பற்றி   அவர் செய்த ஆராய்ச்சிகளைப் பற்றி விளக்கி சொன்னார். டேவி பற்றி அவர் சொன்ன தகவல்கள் யாவும் இதுவரை நான் அறிந்திராதது.

முக்கியமாக‌, வோல்ட்டாவிற்கு பிறகு டேவி (1812 1813) புதிய பரிமாணத்தில் மின்வேதிக் கலன்களை வடிவமைத்தார்.  பொட்டாசியம், சோடியம் போன்ற உருகு உப்புகளை (molten salts) மின்பகு பொருளாகக் கொண்டு மின் வேதிக் கலன்களை முதன் முதலில் கட்டமைத்தார். ஒரே நேரத்தில் ஏறத்தாழ இரண்டாயிரம் மின் வேதிக் கலன்களை தொடர்ச்சியாக இணைத்து அதிக வோல்ட்டினை வெளியீடாக பெறும் வண்ணம் வடிவமைத்தார். இன்றளவும் அதிக மின் அழுத்த வேதி கலன்களை வடிவமைப்பதில் டேவி நினைவுக் கூறப்படுகிறார். வோல்ட்டாவிற்கு பிறகு டேவி (1812 1813) புதிய பரிமாணத்தில் மின்வேதிக் கலன்களை வடிவமைத்தார்.  பொட்டாசியம், சோடியம் போன்ற உருகு உப்புகளை (molten salts) மின்பகு பொருளாகக் கொண்டு மின் வேதிக் கலன்களை முதன் முதலில் கட்டமைத்தார். ஒரே நேரத்தில் ஏறத்தாழ இரண்டாயிரம் மின் வேதிக் கலன்களை தொடர்ச்சியாக இணைத்து அதிக வோல்ட்டினை வெளியீடாக பெறும் வண்ணம் வடிவமைத்தார். இன்றளவும் அதிக மின் அழுத்த வேதி கலன்களை வடிவமைப்பதில் டேவி நினைவுக் கூறப்படுகிறார்.


இந்த தகவலை எல்லாம் அவர் சொல்லி விட்டு அடிப்படை அறிவியலில் இளைய சமூகம் மிகவும் பின் தங்கியுள்ளது என வருத்தப்பட்டார். கண்டுபிடிப்புகளுக்கான உத்வேகத்தை வரலாற்றில் பின் நோக்கி சென்று முக்கியமான அறிவியலாளர்களை நிச்சயம் நாம் படிக்க வேண்டும் என்றார். 

இப்படி அரிய தகவல்களை இந்த வயதிலும் ஓயாது அள்ளித் தந்தபடியே இருக்கும் இவரோடு நம் ஊர் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர்களை ஒப்பிடுவது சற்று சிரமமே.

குறைந்த பட்சம் மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை அடிப்படை அறிவியலில் புதிய புத்தகங்களை வருங்கால மாணவர்களுக்கு பேராசிரியர்கள் எழுத வேண்டும் என்று வற்புறுத்தினார்.

எங்களிடம் விடைபெற்ற பின் உங்கா ரயில் நிலையத்தில் தொடர் வண்டி பிடித்து தோக்கியோ நகரம் நோக்கி சென்று விட்டார். பல்கலைக் கழகம் மிக விலை உயர்ந்த வாகனம் அவருக்கென்று தனியாக கொடுத்திருந்தாலும் எளிமையாக தொடர் வண்டியை பிடித்து சென்றதை பார்த்த போது எனக்குள் எந்த ஆச்சரியமும் எழவில்லை. ஏனெனில் ஜப்பானியர்கள் தேவைக்கதிகமாக சலுகைகளை அனுபவிப்பதில்லை.

 எப்போதும் என் ஆசான்களிடம் இருந்து கற்றுக் கொள்ள தீராத பாடங்கள் இருப்பதாகவே உணர்கிறேன்.


Dinner with Prof. Fujishima-sensei, Dr. Terashima, Dr. Nakata, Dr.Katsumada, Dr. Suzuki, and Tsunoda-San,

Dinner with Prof. Fujishima-sensei, Dr. Terashima, Dr. Nakata, Dr.Katsumada, Dr. Suzuki, and Tsunoda-San,

குறிப்பு:
இரவு உணவிற்கு உங்கா ரயில் நிலையம் அருகில் உள்ள உணவு விடுதியில் அருமையான ஜப்பானிய உணவு கிடைத்தது. ஈல் எனப்படும் பாம்பு போன்ற மீனின் குஞ்சுகளாகிய‌ லோச் (ドジョウ) ஜப்பானில் அரிதாக கிடைக்கும் உணவு. அதனோடு, இன்னும் பல ஜப்பானிய உணவு வகைகளை ஒரு பிடி பிடித்தோம். இதனோடு தொட்டுக் கொள்ள சூடான ஜப்பானிய சாக்கேவை சில ரவுண்டுகள் உள்ளே தள்ளினோம்.








No comments:

Post a Comment