Thursday 12 October 2017


வாட்சப் குப்பைகள் -1

ஒவ்வொரு நாளும் வாட்சப்பை திறந்தால் குறைந்தது ஒரு முன்னோர் புராணமாவது இருக்கும். அந்த காலத்தில் "ஆட்டுக்கல்லில் மாவு அரைத்தோம்", "சாம்பலில் பல் விளக்கினோம்", "கோமணம் கட்டினோம்", "மாட்டு வண்டியில் போனோம்", "விவசாயிகள் பணக்காரர்களாக இருந்தார்கள்" என இந்த பிளாஸ் பேக் நீளும்.
இது போன்ற செய்திகளை படிக்கும் இன்றைய இளைஞர்கள் கொஞ்சம் கிலேசமடைவது உறுதி.
உண்மையில் 1981-85 ஆம் ஆண்டுகளை ஒப்பிடும் போது மனிதர்களின் எதிர்பார்ப்பு ஆயுளானது (life expediency) இன்றைய நவீன அறிவியல் மருத்துவத்தின் உதவியால் எவ்வாறு 2006- 2010 ஆம் ஆண்டுகளில் அதிகரித்து தந்துள்ளது என்ற உண்மையினை கொஞ்சம் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.
குறிப்பாக உலக இறப்பு விகிதத்தில் (global mortality rate) ஒரு லட்சம் பேரில் இதய வியாதிகளால் இறப்பவர்களின் எண்ணிக்கையினை 53% ஆக குறைத்திருக்கிறோம். புற்று நோய்களின் தாக்கத்தால் இறப்பவர்களை 17% ஆக குறைத்திருக்கிறோம். இதர வியாதிகளை 23% குறைத்திருக்கிறோம்.
30 வருடங்களுக்கு முன்பு இருந்த சூழலை விட கடந்த பத்து வருடத்தில் நவீன மருத்துவம், அறுவை சிகிச்சை நுட்பங்கள், இதய நோயினால் இறப்பவர்களை பெருமளவு கட்டுப்படுத்தி உள்ளது.
இவை எப்படி சாத்தியமானது என்பதை உங்கள் அம்மா, அப்பா குடும்பத்தில் எத்தனை பேர் பிறந்தனர், எத்தனை பேர் தப்பி பிழைத்தனர் என்று கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். நவீன அறிவியல் மருத்துவத்தில் ஏற்பட்ட வியத்தகு முன்னேற்றமே நம் ஆயுளை கூட்டித் தந்துள்ளது.
அதே நேரம் இன்னும் நமக்கு பெரிய சவாலாக‌ இருப்பது புற்று நோய் தான். இதனையும் எளிதாக கட்டுக் கொண்டுக்குள் கொண்டு வர வேண்டுமானால் முன் கூட்டியே கேன்சர் கிருமிகளின் தாக்குதலை கண்டறியும் (prostate cancer) நுணர்விகள் (sensors) கண்டறியப்பட வேண்டும்.
குறிப்பாக‌, நுரையிரல் புற்று நோய், இரத்தப் புற்று நோய், மார்பக புற்று நோய் இவற்றின் தாக்குதலை முதல் நிலையிலே கண்டறிவதன் மூலம் முறையான சிகிச்சை தருவதன் முலம் கேன்சர் தாக்குதலில் இருந்து அவர்களை காப்பாற்ற இயலும்.
முறையான உடல் மற்றும் இரத்தப் பரிசோதனையின் ஒவ்வொரு குறிப்பிட்ட கால இடைவெளியிலும் கண்டறிவதன் மூலம் உலகிற்கு சவாலாக இருக்கும் கேன்சர் நோயை முன் கூட்டியே கண்டறிந்து குணப்படுத்த இயலும்.
பெரும்பாலானவர்கள் போலி மருத்துவ கும்பல்களிடம் சென்று கேன்சர் முற்றிய பிறகே மருத்துவர்களை நாடுகிறார்கள். இந்த சிக்கலைத்தான் வாட்சப்பில் முன்னோர் பெருமை பாடும் முட்டாள்கள் ஏற்படுத்துகிறார்கள்.
நவீன மருத்துவத்தில் எல்லா நோய்களுக்கும் தீர்வு உண்டு என்று வாதிடுவது என் நோக்கமல்ல, குறைந்த பட்சம் நோயை முன் கூட்டியே கண்டுணர்ந்து அதனைக் கட்டுக்குள் வைத்திருப்பதன் மூலம் மனிதர்களின் ஆயுட் காலத்தை நிச்சயம் அதிகரிக்க முடியும்.
ஆகவே வாட்சப்பில் வரும் மருத்துவம் சார்ந்த புரளிகளை அடுத்தவருக்கு பார்த்த மாத்திரத்தில் பகிராதீர்கள்.
- முனைவர் சுதாகர் பிச்சைமுத்து
சுவான்சி பல்கலைக் கழகம்
12-10-2017







Reference: Cao et al, BMJ 2017;357:j2765




No comments:

Post a Comment