Wednesday 4 October 2017


நோபல் பரிசு 2017 வேதியியல் பிரிவு

2017 ஆம் ஆண்டு வேதியில் பிரிவிற்கான‌ நோபல் விருது "கிரையோ எலக்ட்ரான் மைக்ரோஸ்கோபி மூலம் திரவத்தில்  (solution) இருக்கும் உயிரி மூலக்கூறுகளின் கட்டமைப்பினை தெளிவாக படம் பிடித்து விளக்கியமைக்கு  தரப்படுகிறது. நுண்ணோக்கியில் பெறப்பட்ட மூலக்கூறுகளின் அதிதெளிவான வடிவமைப்பு  படமானது புரோட்டீன்களின் கட்டமைப்பு எவ்வாறு உள்ளது என்பதை எளிதாக தெளிந்து கொள்ள உதவுகிறது.

இத்தகவல் உயிரி மூலக்கூறு நுட்பத்தில் பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக மூலக்கூறுகளின் (molecule) மீநுண் அளவிற்கும் (nano) கீழே, அணுக்களின் (atom) ஆம்ஸ்ட்ராங் (angstrom) அளவில் உள்ள‌ உயிரி மூலக்கூறுகளின் வடிவமைப்பினை முப்பரிமாண‌ (3-D) முறையில் தெளிவாக‌ அறிந்து கொள்வதன் மூலம் நோய்களை குணப்படுத்த புதிய மருந்துகளை வடிவமைக்கும் பணி எளிதாகிறது. உயிரிமருத்துவ துறையில் மிகப்பெரும் பங்கு வகிக்கும் இந்த ஆய்வினை கெளரவிக்கும் பொருட்டு இவ்விருது வழங்கப்படுகிறது.

பேராசிரியர். ஜேக்கஸ் டியுபொசெட் (லாசேன் பல்கலைக் கழகம், சுவிட்சர்லாந்து), பேராசிரியர் ஜோசிம் பிராங் (கொலம்பியா பல்கலைக் கழகம், அமெரிக்கா), பேராசிரியர் ரிச்சர்ட் ஹென்டர்சன் (கேம்ப்பிரிட்ஜ் பல்கலைக் கழகம், பிரித்தானியா) ஆகிய மூவரும் கூட்டாக இவ்வருட நோபல் விருதைப் பெறுகின்றனர்.

எலக்ரான் நுண்ணோக்கி 1931 ஆம் ஆண்டு முதன் முதலாக வடிவமைக்கப்பட்டது. இதனை ஒப்பிடும் போது ஏன் இந்த கிரையோ எலக்ரான் அதிநுண்ணோக்கி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது?

சாதாரண‌ எலக்ரான் நுண்ணோக்கியின் மூலம் உயிரி மூலக்கூறுகளை படம் பிடிப்பதில் பெரிய சவாலே அதில் உள்ள நீர் மூலக்கூறுகள்தான். ஆனால் திரவத்தில் இருக்கும் உயிரிகளின் கட்டமைப்பினை கிரையோ எலக்ரான் நுண்ணோக்கி (Cryo-electron microscopy)  மூலம் தெளிவாக‌ முப்பரிமாண‌ முறையில்  அறிய முடிவதால்   மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. மேலும் எதிர் வரும் காலத்தில் மூலக்கூறுகளின் அளவினையும் தாண்டி அதற்கும் கீழே உள்ள உயிரிகளை இனம் கண்டு கொள்ள இந்த நுண்னோக்கிகள் நவீனத்துடன் வடிவமைக்கப்படலாம். 

அப்படி நடக்குமானால் இதற்கு வானமே எல்லையாக அமையும்.

முனைவர் சுதாகர் பிச்சைமுத்து
சுவான்சி பல்கலைக் கழகம்

04/10/2017


No comments:

Post a Comment