Wednesday 11 October 2017

தடுப்பூசி போடுவதால் ஏற்படும் நன்மை யாவை? முக்கியமாக மந்தை எதிர்ப்பு சக்தி எனப்படும் ஹெர்டு இமினியூட்டி என்பதை எளிமையாக விளக்க முடியுமா?

ஒரு ஊரில் கோவில் திருவிழா நடைபெற்றது. அந்த கோவிலில் உள்ள கடவுளுக்கு பால் அபிசேகம் செய்ய அந்த கோவிலின் முன்பு பெரிய தொட்டி வைக்கப்பட்டது. அந்த தொட்டியில் ஊரில் உள்ள எல்லா வீடுகளிலும் இருந்து கண்டிப்பாக ஒரு குடம் பால் ஊற்ற வேண்டும் என்று ஊர்ப் பெரியவர்கள் கட்டளையிட்டனர்.
அத்தொட்டியினை வாய் பகுதி மட்டும் திறந்து இருக்கும்படி செய்து ஊர்க் கோவிலின் முன்பு வைத்தனர்.
அனைவரும் ஒற்றுமையாக கூடி எடுத்த முடிவு என்பதால் ஊர் மக்கள் அனைவரும் அடுத்த நாள் பய பக்தியோடு கடவுளை வேண்டி அத்தொட்டியில் தங்கள் பங்கிற்கான‌ பாலை ஊற்றி வந்தனர்.
அடுத்த நாள் காலையில் அத்தொட்டியில் இருந்த பாலை எடுத்து கடவுளுக்கு மகிழ்ச்சியாக‌ அபிசேகம் செய்தனர்.
இதற்கு இடையில் அவ்வூரில் இருந்த முரட்டு குசும்பன் ஒருவன், அந்த தொட்டியில் பாலுக்கு பதில் நீரை ஊற்றி விட்டேன். எதற்கு நான் செலவு செய்ய வேண்டும்? ஊரே பால் ஊற்றும் போது நான் ஒருவன் தண்ணீர் ஊற்றினால் தெரியவா போகிறது என்று தன் வீர தீர பெருமையினை அண்டை வீட்டாரிடம் சொன்னான்.
இது அப்படியே பரவலாக ஒவ்வொருவரின் வீட்டுக்கும் போனது.
அடுத்த வருடம் கோவில் திருவிழா வந்தது. ஊர் கோவிலின் முன்பு வழக்கம் போல் பால் தொட்டி வைக்கப்பட்டது.
மக்கள் அனைவரும் தங்கள் காணிக்கையினை அத்தொட்டியில் ஊற்றினர்.
அடுத்த நாள் தொட்டியினை திறந்து பார்த்தால் பாலுக்கு பதில் தொட்டி நிறைய தண்ணீர் இருந்தது. எல்லோருக்கும் அதிர்ச்சி. எப்படி தொட்டி முழுவதும் உள்ள பால் தன்ணீராக மாறும் என ஆச்சரியப்படுவதற்கு பதில் ஒவ்வொருவரும் நெளிய ஆரம்பித்தார்கள்.
ஏனெனில் கடந்த வருடம் முரட்டு குசும்பன் கொடுத்த கெட்ட அறிவுரையால் இவ்வருடம் எல்லா மக்களுக்கும் பாலுக்கு பதில் தண்ணீரை ஒவ்வொருவரும் தங்கள் பங்காக ஊற்றி ஏமாற்ற நினைத்து அசிங்கப்பட்டு நின்றனர்.
நண்பர்களே இக்கதை தடுப்பூசி போடாமல் என் குழந்தைக்கு ஒன்றும் ஆகவில்லை என்று கதை கட்டி விடுபவர்களுக்கு நன்கு பொருந்தும்.
இதற்கு "ஹெர்டு இமினியுட்டி" (herd immunity ) என்று பெயர். அதாவது ஊரே பால் ஊற்றும் போது ஒருவர் தண்ணீர் ஊற்றினால் கண்டறிய முடியாது. அதே போல் ஊரில் உள்ள 100 குழந்தைகளில் 1 குழந்தை தடுப்பூசி போடாவிட்டால் நோய் தொற்று ஏற்படும் ஆபத்தில் இருந்து பாதுகாப்பை 99 குழந்தைகளும் நன்கு பெற்று இருப்பதால் அந்த 1 குழந்தைக்கு நோய் வரும் வாய்ப்பினை தடுத்து நிறுத்தி விடும்.
ஆனால் அந்த 1 குழந்தை தடுப்பூசி போடாமல் நன்றாக இருக்கிறதே என எண்ணி 99 குழந்தைகளும் போடாவிட்டால் ஊர் முழுக்க பாலுக்கு பதில் தண்ணீரை தொட்டியில் ஊற்றியது போல் உயிர்க் கொல்லி தொற்று நோய் 100 குழந்தைகளையும் பாதித்து கொடிய விளைவுகளை ஏற்படுத்தும்.
ஆகவே தடுப்பூசி என்பது ஒவ்வொரு குழந்தைக்கும் தவறாமல் போடப் பட வேண்டும். விசமிகளின் பேச்சை புறந்தள்ளுங்கள்.
நம் தேசத்தின் குழந்தைகளே எதிர்கால தூண்கள். இதனை உங்கள் நண்பர்களுக்கு பகிர்ந்து நம் எதிர்கால சந்ததியினரை நோயின் கோரப் பிடியில் காப்பாற்ற உதவுங்கள்.
***விசமிகளின் வதந்திகளை ஒரு போதும் நம்பாதீர்கள்




No comments:

Post a Comment