Tuesday 26 September 2017

தமிழக வீடுகளின் மின் இணைப்பு வசதி ‍ - திராவிடத்தால் வாழ்ந்தோம்


இந்தியாவில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் 2019-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்குள் மின் இணைப்பு வசதியை பெற்றுத் தர‌ "சௌபாக்யா யோஜனா" என்ற திட்டத்தை இன்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
நிற்க!
தமிழகத்தில் 35 ஆண்டுகளுக்கு முன்பு கிராமப்புறகளில் மின் வசதியினை இணைக்கும் பணி தொடங்கப்பட்டது. தொடர்ச்சியாக திராவிட ஆட்சிகளில் முன்னெடுக்கப்பட்ட மின் கட்டமைப்பு மேம்பாட்டு வசதிகளால் தமிழகத்தில் உள்ள வீடுகளுக்கான மின் இணைப்பு விகிதம் புள்ளிவிபரப்படி
2001 ஆம் ஆண்டு - ‍ 78.2%
2007 ஆம் ஆண்டு - 93.4%
2017 ஆம் ஆண்டு - 98.3%
இவை எல்லாம் இந்தியே தெரியாத தமிழக ஆட்சியாளர்களால்தான் சாத்தியமானது என யோசிக்கும் போது மொழியின் பெயரால் சல்லியடிக்கும் பொய்யர்களின் முகத்திரை தற்போது கிழிந்துள்ளது.
பெரியார், அண்ணா பெயரால் சமூக திட்டங்கள் தமிழகத்தில் வரும் போதெல்லாம் இலவசத்தால் தமிழகம் சீரழிகிறது என ஒப்பாரி வைக்கும் கூட்டத்திற்கு இப்போது மோடியின் யோஜனா அறிவிப்புகள் மயிர் கூச்செறிய வைக்கிறது.
இந்தியை தாய்மொழியாக அல்லது அலுவல் மொழியாக‌ கொண்ட மாநிலங்களில் வீடுகளுக்கு தரப்பட்டுள்ள மின் இணைப்பு வசதியின் விகிதம் 2017 ஆம் ஆண்டு புள்ளி விபரப்படி,
பீகார் 58.6%
உத்திர பிரதேசம் 70.9%
மத்திய பிரதேசம் 89.9%
அரியனா 91.7%
ஜார்கண்ட் 80.1%
மகாராஸ்ட்ரா 92.5%
ராஜஸ்தான் 91%
உத்திரகான்ட் 97.5%
2017 ஆம் ஆண்டில் மோடி சொல்வதை 35 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகம் தொடங்கியதன் விளைவு இன்று 98.3% மின் இணைப்பு வசதியினை தமிழகம் பெற்றுள்ளது.
இந்தியை தாய்மொழியாக, அலுவல் மொழியாக கொண்ட மாநிலங்களை விடவும் இந்தி மொழியே தெரியாத‌ தமிழகத்தின் வீடுகள் மின் இணைப்பினைப் பொறுத்த வரை அதிக தன்னிறைவை அடைந்துள்ளது. ஆகையால் இந்தி படித்தால் வடக்கே வேலை கிடைக்கும் என்ற பொய்யுரைகளை வழி மொழியும் கூட்டத்திடம் இருந்து விலகி நில்லுங்கள்.
இந்தியாவின் "செளபாக்யா யோஜனா" போன்ற‌ தன்னிறைவு தேடும் திட்டங்களுக்கு நிரூபணம் செய்யப்பட்ட தமிழகம் எப்போதுமே முன் மாதிரிதான். அந்த வகையில் தமிழர்கள் உங்கள் முதுகில் நீங்களே தட்டிக் கொடுத்துக் கொள்ளுங்கள்.



தமிழ் ஒன் இந்தியா இணைய இதழில் பிரசுரிக்கப்பட்ட இக்கட்டுரையின் சுட்டி


Sunday 17 September 2017

புதிய இந்தியா பிறக்கிறது


இந்தியா ஒளிர்கிறது, புதிய இந்தியா பிறக்கிறது, அடுத்த வல்லரசு நாம்தான் இப்படி ஜிகால்ட்டி வார்த்தைகள் ஒவ்வொரு காலகட்டத்திலும் இந்தியாவில் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகிறது.

விளைவு, பொது வெளியில் எப்படி அற ஒழுக்கத்தோடு நடந்து கொள்வது என்ற அடிப்படை அறிவே இல்லாத மொன்னைச் சமூகத்தை, நாம் எப்படி வளர்த்து வைத்திருக்கிறோம் என்று தெரிகிறது.

ஒவ்வொரு முறை நான் இந்தியா வரும் போதும் இம்சையாய் கருதுவது வரிசையில் நிற்காமல் குறுக்கே போகும் முரட்டு எருமை எப்படி கையாள்வது என்பதே.டில்லி விமான நிலையத்தில் ஒரு உணவக விடுதியில் சாப்பாடு வாங்க பணம் கொடுக்க நின்று கொண்டு இருந்தேன். நான் ஒருவன் மட்டுமே நின்றுக் கொண்டிருக்கிறேன்.

எனக்கு பின்னால் ஒரு நிமிடம் கூட நிற்கும் பொறுமை இல்லாமல், நான் பேசிக்கொண்டு இருக்கும் போதே கல்லாவில் இருப்பவரிடம் நேராக பணத்தை நீட்டி அவருக்கு உணவை கொடுக்கச் சொல்லி கேட்டார். நான் ஒருவன் அங்கு நிற்பதையே அவர் கண்டு கொண்டதாக தெரியவில்லை.

அட எருமை மாடே என காதில் ஒரு அறை விடும் அளவிற்கு கோபம் வந்தது.

அதே போல் லிப்ட் வாசலை அடைத்துக் கொண்டு உள்ளே இருந்து வெளியே வருபவனை தள்ளிக் கொண்டு ஏறுவது, வாகன டோல்கேட்டில் வரிசையாக நிற்கும் வாகனங்களுக்கு இடையில் உள்ளே புகுவது என இந்த எச்சத்தனம் நீண்டு கொண்டே போகும்.

முதலில் நாம் குடிமை ஒழுக்கத்தைச் சொல்லித் தர வேண்டும்.


http://vanakamindia.com/india-to-teach-civic-literacy/

Tuesday 5 September 2017

நீட் யாருக்கான நுழைவுத் தேர்வு ‍-4 (நெருப்பில் வீழந்த மலர்கள்)

இரண்டு மாதங்களுக்கு முன்பு அண்ணன் சிவசங்கர் எஸ்.எஸ்அவர்கள் மூலமாக அரியலூரில் இருந்து வெளி உலகிற்கு தெரியவந்தவர் அனிதா.
அனிதா, கடந்த வருடம் பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 1176 மதிப்பெண்ணும், மருத்துவ படிப்பிற்காக தமிழக அரசின் வரையறைப்படி 196.75 கட் ஆஃப் மதிப்பெண் எடுத்தும் மத்திய, மாநில அரசின் நீட் நுழைவுத் தேர்வால் மருத்துவ கனவு பலிக்க வேண்டும் என்று போராடிக் கொண்டிருந்தார்.
இரண்டு வாரங்களுக்கு முன்பு கூட சிவ சங்கர் அண்ணன் இம்மாணவியின் உயர்கல்விக்கு உதவ வேண்டும் என்ற கோரிக்கையினை நண்பர்களிடையே வைத்திருந்தார். நிச்சயம் அவரை மருத்துவர் ஆக்குவோம் அண்ணா என்று சொல்லி வந்த நிலையில் அனிதாவின் மரணச் செய்தி இன்று வந்தடைந்துள்ளது.
இந்தச் செய்தி பொய்யாய் இருக்க வேண்டும் என்று மனம் ஆற்றாமையால் தவிக்கிறது.
பல்லாயிரக் கணக்கான மக்களை மருத்துவராகி காக்க வேண்டியவள், இன்று நம் அலட்சியத்தால் பலியாகி நிற்கிறாள்.
இப்படி எத்தனை அனிதாக்கள், தங்கள் மருத்துவர் கனவு நிறைவேறுமா என்று கடந்த சில மாதங்களாக நடைபிணமாய் தமிழகத்தை சுற்றி வருகிறார்கள் என்று உங்கள் மனக் கதவை திறந்து பாருங்கள்.
"நீட் நுழைவுத் தேர்வு யாருக்கானது" என்று தொடர்ந்து எனது முகநூல் பக்கத்தில் எழுதி வந்தேன். கடை விரித்தேன் கொள்வாரில்லை என்பது போல எல்லோருமே மெளனம் காத்தனர். இதோ எதிர்பார்த்த அந்த விபரீதம் நிகழ்ந்து விட்டது.
வறுமையிலும் கல்வியில் வெற்றி பெற்ற மாணவர்களை துரத்தி துரத்தி வேட்டையாடிய எல்லா கல்வியாளர்களுக்கும் அனிதா தன் உயிரையே பதிலாய் தந்து விட்டு போய் இருக்கிறாள்.
ஏழை மாணவர்களுக்கு படிப்பெதற்கு என்ற வார்த்தைகள் மலையேறிப் போய், ஏழை மாணவர்கள் ஏன் உயிருடன் இருக்க வேண்டும் என்ற கோசத்தையும் நீட் நுழைவுத் தேர்வுகள் சமூகத்தின் முன் வைத்துள்ளது.
நீட் நுழைவுத் தேர்வு தமிழக மாணவர்களின் மருத்துவ கனவில் மண்ணை அள்ளி மட்டும் போடவில்லை. வறுமையான சூழலிலும் கிராமப்புறத்தில் இருந்து முதல் தலைமுறையாக போராடி அதிக மதிப்பெண்கள் பெற்ற அனிதா போன்ற மாணவக் கண்மனிகளின் உயிரையும் எடுக்கத் துவங்கி விட்டது.
லட்சக் கணக்கில் செலவு செய்து பயிலும் வாய்ப்பை மேட்டுக் குடிகளின் பிள்ளைகளுக்கு வழங்கி விட்டு, ஊருக்கு உபதேசம் செய்கிற எல்லோர் கைகளிலும் அனிதாவின் மரணத்திற்கான கொலைப் பழி விழட்டும்.
உங்களின் கள்ள மெளனம்தான் எல்லா அட்டூழியத்திற்குமான திறவு கோல் என்பதை இனியாவது உணருங்கள்.
தமிழக மாணவர்களின் மருத்துவ கனவிற்கு ஒரு அனிதாவின் உயிரை விலையாய் தந்தது போதும், உடனடியாக நீட் நுழைவுத்தேர்வினை தமிழகத்தில் விலக்க கோரி மத்திய அரசிற்கு தமிழக மக்கள் தங்கள் போராட்டத்தின் மூலம் அழுத்தம் தர வேண்டும்.
எம்மை துயரத்தில் ஆழ்த்திச் சென்ற சகோதரி அனிதாவின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
நம் குழந்தைகளின் உயிரை பறிக்கும் இந்த நுழைவுத் தேர்வுகள் அவசியம்தானா?
இனியாவது உங்கள் மெளனத்தை கலையுங்கள்.

இப்பதிவினை பிரசுரித்த வணக்கம் இந்தியா மின் இதழுக்கு நன்றி.