Sunday 23 April 2017


 பறவைகள் பல விதம்

 கடந்த‌ வாரம் ஈஸ்டர் விடுமுறையில் பிரிஸ்டல் நகரில் இருந்து 20 மைல் தள்ளி மேய்ச்சல் நிலம் நிறைந்த ஒரு பள்ளத்தாக்கு கிராமத்தில் தங்கி இருந்தோம். 

காலையில் எழுந்து 2 மைல் அந்த கிராமத்தின் ஒற்றையடி தடத்தில் வெகு தூரம் நடந்து வந்தேன். அந்த பாதைகள் எங்கும் பறவைகளின் ஓசையால் நிறைந்து இருந்தது அங்கு நான் பார்த்த பல பறவைகள் என் வாழ்வில் இதற்கு முன் பார்த்ததில்லை.

குறிப்பாக இரண்டு பொடிக் குருவிகள். ஒன்று கிளி பச்சை நிறம் மற்றொன்று பழுப்பு வண்ணம். 

என் காமிராவில் மரத்தை போட்டோ எடுக்கலாம் என வியூ பைண்டரில் பார்த்த போது இலையோடு இலையாய் அந்த பச்சை நிற குருவி அமர்ந்திருந்தது. தலை மட்டும் நீல வண்ணத்தில் இருந்தது. அதன் பெயர் தெரியவில்லை. இலை போலவே இருந்ததால் அப்படி ஒரு ஆச்சரியம். நான் மெல்ல நெருங்கி மரத்தின் அருகில் போகையில் அது சட்டென‌ அதே மரத்தின் உள் பகுதி கிளை ஒன்றில் சென்று அமர்ந்து விட்டது. 

என் கண்ணால் அது எங்கிருந்து அமர்ந்திருந்தது என மீண்டும் கண்டுபிடிக்க முடியவில்லை. வியூ பைண்டரில் ஜீம் செய்து மறுபடியும் தேடி பிடித்தேன். ஒரு வழியாக அதே மரத்தின் நுனியில் அதிகம் இலைகள் இல்லாத இடத்தில் அமர்ந்த போதுதான் போட்டோ எடுக்க முடிந்தது. இன்னும் கொஞ்சம் நெருங்கி குளோசப் ஷாட் எடுக்கலாம் என எத்தனித்த போது பொடிப்பயல் பறந்து விட்டான். 






இன்னொரு ஆச்சரியம் மீண்டும் அந்தக் குருவி நல்ல இலைகள் நிறைந்து இருந்த மற்றொரு பச்சை பசேல் மரத்திற்குள் நுழைந்து விட்டது. மறந்தும் கூட அருகில் சற்றே காய்ந்து பழுப்பு இலைகள் இருந்த மரத்தில் அது அமரவில்லை.
இந்த வண்ண தகவமைப்பு கழுகு போன்ற பெரிய எதிரிகளிடம் இருந்து தற்காத்து கொள்ள இயற்கையே அவற்றை படைத்துள்ளதா எனத் தெரியவில்லை.

அந்த பகுதியில் காட்டுக் கோழிகள் பன்றியின் உருமலைப் போல தொண்டை கிழிய கத்திக் கொண்டு இருந்தது.  அதி அற்புதம் நிறைந்த அந்த பள்ளதாக்கில் சிறிய ஓடை ஒன்று மெல்லிய இரைச்சலோடு பறவைகளின் ஓசையினை கிழித்தவாறு போய்க் கொண்டு இருந்தது. 

பறவைகள் உலகமே தனி போல.


காட்டுக் கோழி





ஆர்வ மிகுதியும் அபத்த புரிதல்களும்  - பாலிஸ்டைரீன் மிதவை அட்டைகள்- வைகை அணை

கடும் கோடை வறட்சியினால் மழை பொய்வின்றி நீர் தட்டுப்பாடு ஏற்படும் என பருவநிலை ஆராய்ச்சியாளர்கள் பல மாதங்களுக்கு முன்பே எச்சரித்து இருந்தார்கள்.

வழமையினை மீறிய சூரிய வெப்பத்தால் நீர் நிலைகளில் இருந்து அதிகமாகவே நீர் ஆவியாகும் அடிப்படை அபாய சிக்கல் நீர் மேலாண்மை பணியில் ஈடுபட்டு இருக்கும் பொறியாளர்கள், அதிகாரிகளுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். ஆனால் முன் கூட்டியே என்ன மாதிரியான நடவடிக்கையினை இந்த ஆண்டு எடுத்துள்ளார்கள் என்பதுதான் இப்போதைய நம் கவலை.

ஆகையால் ஏரி, குளம், அணையில் உள்ள நீர் பிடிப்பு பகுதிகளில் உள்ள நீரை ஆவியாகாமல் இருக்க நவீன நுட்ப வழிமுறைகளை பற்றி தற்போது சிந்தித்தே ஆக வேண்டும். இந்த சூழலில்தான் வைகை அணையில் கையிருப்பில் இருக்கும் அணை நீரை கோடை வெப்பத்தில் ஆவியாகமல் இருக்க அதன் மேல் பரப்பில் பாலி ஸ்டைரீன் (Polystyrene) என்னும் பாலிமர் வேதிப் பொருளால் செய்யப்பட்ட நுரைப் பொருளாகிய தெர்மோகோல்  நிறுவனத்தின் அட்டைகளை, வெப்ப தடுப்பு மிதவை களாக‌   நீரின் மேல் மிதக்க விடும் திட்டத்தை  சோதனைக்கு முன்பாகவே பத்திரிக்கையாளர்களுக்கு  காட்டுகிறேன் பேர்வழி என‌   சங்கடப்பட்டு நிற்கிறார். 

வைகை அணையில் நீர் ஆவியாகமல் இருக்க தெர்மோகோல் அட்டைகளை மிதக்க விடும் திட்டத்தைனை அமைச்சர் செல்லூர் ராஜீ துவங்கி வைத்த போது எடுத்தபடம். 
திட்டம் துவக்கிய சில மணி நேரத்தில் தெர்மோகோல் அட்டைகள் கரை ஒதுங்கிய போது எடுத்த படம்


தெர்மோகோல் அட்டைகள் மூலம் நீர் ஆவியாகாமல் தடுக்கும் திட்டத்தினை நீர்த் தேக்கங்களில் சோதித்து வெற்றி கண்டுள்ளனர் ஆராய்ச்சியாளர்கள். 

நீரின் மேல் பரப்பில் மிதக்கும்  பாலிஸ்டைரீன் மென் அட்டைகளை பயன்படுத்தும் போது திட்டத்திற்கான செலவு, காற்றில் அடித்துச் செல்லாமல் இருக்குமா, நீரில் கடுமையாக அலைகள் ஏற்படும் போது அவை தாக்குப் பிடித்து நிற்குமா, மீன் போன்ற உயிரினங்கள் இதனை தின்னுமா,
நீர் நிலைகளின் அருகில் வாழும் வன விலங்குகள் நீர் அருந்த இந்த திட்டம் இடையூறாக இருக்குமா  என பல காரணிகளை சோதனை ஆய்வின் மூலம் முதல் செய்து பார்க்க வேண்டும். 

சூரிய‌ வெப்பத்தினால் நீர் ஆவியாதலை தடுப்பதன் மூலம் ஏரி, அணை, குளம் போன்ற நீர் நிலைகளில் உள்ள சேமிப்பை அதிகரிக்க முடியும் என்ற ஆராய்ச்சி 1960 களின் பின்பகுதியில் உலகம் முழுவதும் மிகப் பரவலான கவனத்தை பெற்றுள்ளது. பல்வேறு முறைகளில் முயன்று சாதக, பாதக அம்சங்களை ஆராய்ச்சி கட்டுரைகளாக பலரும் பிரசுரித்துள்ளார்கள். 

அவற்றில் நீரின் மேற்பரப்பில் மிதவைகளை ஏற்படுத்தி நிழல் தருதல் (Shading the Water Surface), சூரிய ஒளியினை எதிரொளிப்பு மூலம் நீருக்கு உள்ளே செல்லாமல் தடுத்தல் (Floating Reflective Covers), நீரின் மேற்பரப்பை தற்காலிக பாலிமர் போன்ற பொருட்களைக் கொண்டு மூடுதல் (Floating Vapor Barriers) என சூழலுக்கு ஏற்றவாறு பயன்படுத்தலாம். ஆனால் ஒவ்வொரு முறையிலும் சாதகமும், பாதகமும் கலந்தே உள்ளது. 

நம் தேவைக்கேற்ப சாதகங்கள் அதிகமுள்ள முறையினை நாம் பயன்படுத்தலாம். 

சமீபத்தில் 2015 ஆம் ஆண்டு நாசிக் நகரில் உள்ள இரண்டு பொறியியல் கல்லூரியில் இருந்து ஆராய்ச்சி கட்டுரை ஒன்றை ஐ.ஐ.டி யில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் சமர்பித்துள்ளார்கள் (https://www.researchgate.net/publication/288003519_Use_of_thermocol_sheet_as_floating_cover_to_reduce_evaporation_loss_in_farm_pond). நீர் நிலைகளில் தெர்மோகோல் அட்டைகளை மிதக்க விடுவதன் மூலம் எவ்வாறு சூரிய வெப்பத்தில் இருந்து ஆவியாவதை தடுக்கலாம் என்பதே அவ்வாராய்ச்சியின் நோக்கம் ஆகும்.

 
இரண்டு ஒரே மாதிரியான நீர் குட்டையினை ஆராய்ச்சிக்காக எடுத்துக் கொண்டதில் தெர்மோகோல் அட்டைகள் மிதக்கவிடப்பட்ட நீர்க் குட்டையானது திறந்த வெளியில் உள்ள நீர் குட்டையினை விட 64 மி.மீ நீரை ஆவியாகாமல் சேமித்து வைத்துள்ளது. இந்த ஆய்வினை 3 மாதத்திற்கு மார்ச் ‍முதல் ஜீன் 2015 ஆம் ஆண்டில் பரிசோதித்து பார்த்துள்ளார்கள். எளிமையாக  சொல்வதென்றால் 93 நாட்களில் 32% நீரை ஆவியாகாமல் தடுத்துள்ளார்கள். இந்த ஆய்வுக் காலத்தில் எதிர்பாரா விதமாக இடி இடித்தல் போன்ற இயற்கை நிகழ்வினால் தெர்மோகோல் அட்டைகள் சுக்கு நூறாக உடைந்து சிதறியுள்ளது. அந்த சூழலிலும் தெர்மோகோல் அட்டைகள் சிறப்பாக செயலாற்றி உள்ளது.

இப்படி ஒரு திட்டத்தினைத்தான் அமைச்சர் செல்லூர் ராஜீ நேரடியாக களத்தில் இறங்கி தொடங்கி வைத்துள்ளார். நான் மேலே சொன்னது போல் ஒவ்வொரு முறையில் சாதக, பாதகம் உள்ளது. அதே போல் மேற் சொன்ன ஆய்வானது சிறிய நீர் குட்டையில் அலைகள் அதிகம் இல்லாத சூழலில் செய்து பார்க்கப்பட்டது. ஆனால் மிகப்பெரிய ஏரி, அணை நீர்ப் பிடிப்பு பகுதியில் குறைந்தது 3ல் இருந்து 6 மாத காலம் 1 சதுர கி,மீ பகுதியில் பரிசோதித்து அதில் உள்ள சிக்கல்களை ஆராய்ச்சி செய்திருக்க வேண்டும். அது வெற்றியடையும் முன்பே பத்திரிக்கையாளர்களை கூட்டி பெரிய அளவில் விளம்பரம் செய்ய போய் இப்படி சங்கடப்பட்டு நின்று இருக்க வேண்டிய சூழல் அமைச்சருக்கும அவரது குழுவிற்கும் வந்திருக்காது.

இந்த ஒட்டு மொத்த திட்டத்தில் அமைச்சருக்குத்தான் நுட்பவியல் தெரியாது  ஆனால் இந்த குழுவில் இருந்த‌ மாவட்ட ஆட்சியர், மூத்த நீர் மேலாண்மை அதிகாரிகளுக்குக் கூடவா தெரியாது.

இதுதான் சாக்கு என ஒரு கூட்டம் பார்த்தாயா திராவிடர்களின் அறிவற்ற செயலை என்று மீம்ஸ் போட்டுக் கொண்டு திரிகிறது. உண்மையில் இந்த தேசத்தில் பரவி இருக்கும் மூடநம்பிக்கைகளை ஒப்பிடும் போது அமைச்சரின்  ஆர்வ மிகுதி செயல்  ஒன்றுமே இல்லை. 

ஏனெனில் சமூக வலைதளங்களில் நீங்கள் எப்படி சிரிக்கிறீர்களோ அப்படித்தான் ஒவ்வொரு நாளும் வாட்சப், முகநூலில் உள்ள எனது நட்பு வட்டத்தில் உள்ளவர்கள் "நம் முன்னோர்கள் முட்டாள்கள் அல்ல" என்று அனுப்பும் உட்டாலக்கடி பார்வேர்டுகளை வயிறு வலிக்க சிரித்துக் கொண்டே கடக்கிறேன். ஆகையால் அமைச்சரின் செயலை நக்கலடிக்கும் அளவிற்கு இந்த சமூகம் ஆகச் சிறந்த அறிவியல் நுட்பங்களை தரம் பிரித்து கொண்டாடும் தகுதியே இல்லை என்றுதான் சொல்வேன். 

இன்னொரு விசயத்தையும் சொல்லி விடுகிறேன். இது போன்று சிறிய அளவில் கள ஆய்வு செய்ய மத்தியில் இருந்து தமிழகத்தில் உள்ள பல்கலைக் கழகம், கல்லூரிகளுக்கு எவ்வளவு ஆய்வு நிதி கிடைத்துள்ளது, அதே நேரம் வட இந்திய கல்வி நிறுவனங்களுக்கு எவ்வளவு ஆய்வு நிதி கிடைக்கிறது என்ற பட்டியலை ஒப்பிட்டு பாருங்கள். உண்மையில் தமிழகத்தை இந்த நிலையில் வைத்திருக்கும் வட இந்திய அறிவியல் அரசியலுக்கென்று தனி மீம்ஸ் போட்டு நாம் தனியே சிரிக்க வேண்டி இருக்கும்.

தமிழகத்தில் உள்ள முது நிலை மாணவர்கள் தங்கள் பயிலும் காலத்தில் சிறிய அளவில் தங்கள் ஆய்வு திட்டத்தினை செய்து பார்க்க 10,000 ரூபாயை தமிழ்நாடு அறிவியல் மற்றும் நுட்ப மன்றம் உதவித் தொகையாக தருகிறது. இதனை கண்காட்சியாக தமிழக அளவில் நடத்தி சிறந்த திட்டத்திற்கு பரிசளிக்கிறார்கள். இந்த கண்காட்சியில் சிறந்த திட்டத்திற்கு பரிசும் அளிக்கிறார்கள்.  இக்கண்காட்சியில் கலந்து கொள்ள மாணவர்களுக்கு பயண உதவித் தொகை, தங்கும் வசதி, உணவு என்று எல்லா வசதியையும் தமிழக அரசு செய்து தருகிறது. முது நிலை பயிலும் மாணவர்கள் இரண்டாம் ஆண்டில் துவக்கத்தில் இந்த வாய்ப்பினை தவற விடாதீர்கள்.http://www.tanscst.nic.in/student.html

முகநூலில், வாட்சப்பில் நக்கல் அடிக்கும் கூட்டம் இது போன்ற கண்காட்சிக்கு உங்கள் குழந்தைகளை அழைத்துச் சென்று நேரில் காட்டுங்கள். 

சிறந்த மாணவர் ஆய்வு திட்டத்திற்கு தனியார் நிறுவங்கள் சிறிய அளவில் முதலீடு செய்து ஊக்குவிக்கலாம். தெர்மோகோல் மிதக்க விடும் திட்டங்கள் எல்லாம் இது போன்ற மாணவர்களின் எண்ணத்தில் உதித்தவைதான். இவர்களின் புதிய சிந்தனைகளை அலட்சியப்படுத்தாமல் ஊக்குவியுங்கள்.

வாட்சப் பார்வேர்டுகளை நம்பி ஒரு பெரும் கூட்டமே குட்டையில் விழுந்து கொண்டு இருக்கிறது. முதலில் இந்த குப்பையில் இருந்து வெளியே வாருங்கள். அமைச்சர் செல்லூர் ராஜீ வேண்டுமானால் ஆர்வ மிகுதியால் பிழை செய்திருக்கலாம். தமிழகத்தில் அடிப்படை ஆராய்ச்சிக்கென்று நேர்த்தியான திட்டம் பல உள்ளது. பெரும்பாலும் அவை மாநில நிதியில் இருந்தே செயல்படுத்த வேண்டிய அவல நிலையில் உள்ளோம் என்பதையும் இந்த நேரத்தில் சிந்திக்க வேண்டுகிறேன்.

கோடை காலத்தில் தாமதமாக செயல்பட்டு இருந்தாலும் நீர்பிடிப்புபகுதிகளில் உள்ள நீரை ஆவியாகாமல் தடுக்க வேண்டும் என்ற செயலாற்றிய தமிழக அரசுக்கு நன்றி. 

இனியாவது காலாம் தாழ்த்தாமல் முன் கூட்டியே விரைந்து செயல்பட்டு மக்களை காத்தருளுங்கள்.






Saturday 8 April 2017

பர்மிய பாரம்பரிய உணவு - லாபெட்

இன்று பர்மிய (Bharma) நண்பர் அவர்களது பாரம்பரிய உணவான லாபட் (Laphat) செய்து எடுத்து வந்திருந்தார்.

இந்த லாபட் உணவின் சிறப்பம்சமே இதில் கலக்கப்படும் தேநீர் இலை ஊறுகாய்தான் (fermented tea leaves).

என்னது தேநீர் இலை ஊறுகாயா என வியக்கிறீர்களா? ஆம் உலகிலேயே தேநீர் இலைகளை உணவாக சாப்பிடுபவர்கள் பர்மியர்கள் மட்டுமே.

தேநீர் இலைகளை காய வைத்து மூங்கில் குழாய்களில் வைத்து பக்குவமாக நீராவியில் வேக வைத்து பதப்படுத்தி விடுகிறார்கள். தேவைப்படும் போது எடுத்து மீண்டும் கொஞ்சம் சூடு செய்து பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

லாபட் உணவில் பல வகை உண்டு.

பெரும்பாலும் பாரம்பரிய "லாபட் ஓக்" எனப்படும் உணவில் பதப்படுத்தப்பட்ட இறால், வறுத்த நிலக்கடலை பருப்பு, மீன் எண்ணெய், பட்டு பூச்சி லார்வா அல்லது குளவியின் லார்வா (தேவைப்பட்டால் சேர்த்துக் கொள்ளலாம்), வறுத்த பீன்ஸ், தக்காளி, அரைத்த இஞ்சி பேஸ்ட், பச்சை மிளகாய், வறுத்த கடுகு, முள்ளங்கி இலை, கொஞ்சம் எலுமிச்சை சாறு, இதனுடன் தேவைப்படும் காய் கறிகளை சேர்துக் கொள்ளலாம்.

இந்த கூட்டுக் கலவையில் பதப்படுத்தபட்ட தேநீர் இலைகளை கீரை போல குறிப்பிட்ட அளவு சேர்த்துக் கொள்ளலாம். ஏறத்தாழ இது சேலட் போல இருக்கும்.

இதில் நார் சத்து, விட்டமின், புரோட்டீன், என எல்லாமும் கலந்த சரிவிகித உணவாகும். மேலே சொன்னதில் தேவைப்படுவதை சேர்த்துக் கொள்ளலாம்.

சந்தையில் பர்மிய லாபட், பதப்படுத்தபட்ட தேநீர் இலை பாக்கெட்களில் கிடைக்கிறது. வாங்கி வீட்டில் தயார் செய்து கொள்ளலாம்.

பெரும்பாலான நாடுகளில் உள்ள பர்மிய மளிகைக் கடைகளில் லாபெட் கிடைக்கிறது.

அருமையான உணவு, வாய்ப்பு கிடைத்தால் செய்து பாருங்கள்.
நண்பர் சாங் செய்து கொண்டு வந்திருந்த லாபெட் உணவு

பாரம்பரிய லாபெட் உணவுக்கான மூலப் பொருட்கள்






Tuesday 4 April 2017



மொழி என்னும் பெருவரம் -2 (இந்தி என்னும் மாய விளக்கு)

தமிழ்நாட்டுல இந்தி மொழிய நுழையவே கூடாதுன்னு திராவிடக் கட்சிகள் நினைச்சிருந்தா இந்தி பிரச்சார சபாக்கள் எல்லாம் தமிழகத்தில் இயங்கி இருக்க முடியாது.

சும்மா ஒரு கூட்டம் தேவையில்லாமல் பினாத்திக் கொண்டுள்ளது.

மொழிகளின் தேவை, அவசியத்தை உணர்ந்த தமிழகம் ஒரு கட்டத்தில் எல்லா மொழிகளையும் கற்பதை அரவணைத்தே சென்றுள்ளது. அண்டை மாநிலங்களை ஒப்பிடும் போது இங்கே மாநில எல்லையோர அரசுப் பள்ளிகளில் மலையாளம், கன்னடம், தெலுங்கு, அரபி, இந்தி என எல்லா மொழிகளையும் அனுமதித்துள்ளோம்.

இங்கே யாரையும் இந்தி படிக்க கூடாதுன்னு கையப் பிடிச்சு தடுத்து நிறுத்தவில்லை. இந்தி வேண்டும் என்றால் படித்துக் கொள்ளுங்கள். ஏன் அதற்கு தமிழக அரசு செலவு செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள் எனப் புரியவில்லை.

அரசுப் பள்ளிகளில் தமிழ், ஆங்கிலம் இரண்டையும் படித்துத்தான் உலக அளவில் பணியாற்றும் வாய்ப்பினை தமிழர்கள் பெற்றுள்ளார்கள். மீண்டும் மீண்டும் வட இந்தியாவிற்கு போக முடியாமல் தமிழர்கள் ஏதோ வங்காள விரிகுடாவில் படுத்துக் கொண்டு கதறுவது போல் ஒரு மாயையினை கட்டமைக்க வேண்டாம்.

ஏன் உலக மொழியினை படிக்கிறீர்கள்? இந்தியாவின் ஆட்சி மொழிகளில் ஒன்றாகிய இந்தியைப் படிக்க என்ன தடை என்ற லாஜிக் கேள்விகளுக்கு பின்னால் ஒளிந்திருக்கும் தந்திரங்களை நாங்கள் நன்கு அறிவோம்.

உங்கள் லாஜிக் படியே எங்கள் தரப்பில் இருக்கும் கோரிக்கையினை வைக்கிறோம்.

தமிழகத்தில் இருக்கும் ஒருவர் ஆராய்ச்சி மாணவர் ஆய்வு நிதி விருதுகளுக்கான நேர்முகத் தேர்விற்கு இன்றைக்கும் டெல்லிக்குதான் போக வேண்டி உள்ளது.

ரயிலில் இரண்டு இரவு, ஒரு பகல் என உலகின் நீண்ட ரயில் பயணங்களில் ஒன்றை இத்து போன கம்பி வாசத்துடன் கடந்துதான் போக வேண்டும்.
அங்கே சென்றாலும் தென்னிந்தியர்களை எந்த அளவிற்கு மதிப்பார்கள் என்று சொல்லித் தெரிய வேண்டாம்.

நேர்முகத் தேர்வினை ஆங்கிலம், இந்தியில் நடத்தலாம் என்ற விதி உள்ளது. அதாவது ஒரு குறிப்பிட்ட மொழி பேசுபவனுக்கு தாய் மொழியிலேயே தேர்வில் பேசிக் கொள்ளலாம். இதர மொழிக்காரன் கடினப்பட்டுத்தான் ஆங்கிலத்தில் பேசி விருதை வாங்க வேண்டும்.

நீங்கள் என்னதான் இந்தி கற்றுக் கொண்டாலும், அவர்கள் அளவிற்கு உங்களால் நுட்ப வார்த்தைகளை ப்ரொபசனலாக பேச முடியாது. பிறகு எதற்கு இந்த ஓர வஞ்சனை.

விருது தேர்வில் இருக்கும் பேராசிரியர்கள் பலரும் ஆங்கிலத்தில் பேசிக் கொண்டு இருக்கும் போதே நடுவில் ரெண்டு இந்தி வார்த்தையோடுதான் பேசுவார். நீங்கள் கேள்வி புரியாமல் தடுமாறும் போதே மதராசிகளே இப்படித்தான் என்று நக்கலை வேறு சமாளிக்க வேண்டும்.

நீங்கள் உண்மையிலேயே நாட்டின் எல்லாக் குடிமகன்களுக்கும் பாரபட்சமற்ற ஒரு நிலைப்பாடுடன் நடத்துவதென்றால், தென்னிந்திய பல்கலைக் கழக மாணவர்களுக்கான (ஆந்திரா, தெலுங்கானா, தமிழகம், கேரளா, கர்நாடகம்) நேர் முகத் தேர்வினை இங்கேயே பிராந்திய ரீதியில் எங்கள் பகுதியிலேயே நடத்துங்கள்.

சுழற்சி முறையில் ஐந்து மாநிலங்களுக்குள் ஒன்றை நாங்கள் நடத்திக் கொள்கிறோம். எத்தனை நாளைக்குத்தான் நாங்கள் மூட்டையில் புளிச்சோற்றைக் கட்டிக் கொண்டு உங்களைப் பார்க்க வருவது.

மிகப்பெரிய எல்லைப் பரப்பில் இருக்கும் வெளிநாட்டு தூதரகங்கள், புவிசார் சூழலுக்கு தகுந்தவாறு ஒரே நாட்டின் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட இடங்களில் தங்கள் துணைத் தூதரகங்களை அமைப்பது போல் இதற்கும் அமைத்து விட்டு போங்களேன். எப்படியும் எங்கள் வரிப்பணத்தில்தானே இயங்கப் போகிறது.

இது போன்று ஒவ்வொரு தேர்வும் தென்னிந்திய அளவிலேயே இங்கேயே நடத்தலாம். மாணவர்களுக்கும் அலைச்சல் குறைவு, அரசுக்கும் செலவுக் குறைவு. இப்படி உட்கட்டமைப்பை கொண்டு வாருங்கள், மக்கள் தானாகவே இந்தி மொழியின் தேவையின்மையை உணர்ந்து கொள்வார்கள்.

எங்களுக்கான தேவையினை ஏழு கடல், மலை தாண்டி ஓளித்துவைத்துக் கொண்டு ஏன் எங்களுக்கு மட்டும் நீச்சல், பறத்தல், தாண்டுதல், ஓடுதல் என ஆயக் கலைகளும் தெரிந்திருக்க வேண்டும் என்று நிர்பந்தம் செய்கிறீர்கள்.

சமூக நீதி என்பது எல்லோருக்கும் பாரபட்சம் இன்றி தரப்படுவது. தமிழகத்தில் நாங்கள் அதனைத் தருகிறோம். வேண்டுமென்றால் சொல்லுங்கள் எங்கள் மாடலை இந்தியா முழுக்க அமல்படுத்தித் தருகிறோம்.