Thursday 30 July 2015


ஒரு பேராசானின் இறுதிப் பயணம் - The last journey of a great teacher  

நோபல் அறிவியளார்கள்,உலகின் தலை சிறந்த பொருளாதார மேதைகள், மிகச் சிறந்த நுட்ப வல்லுநர்கள் ஆகியோருக்கு வளர்ந்த நாடுகளில் உள்ள பல்கலைக் கழகங்கள் தங்கள் எல்லைகளை கடந்து  சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறது. அவர்களுக்கு கோடிக் கணக்கில் சம்பளமும், வாழ்வியல் அடிப்படைத் தேவைகளும் மிகச் சிறப்பாக கொடுத்து அவர்களை கெளரவிக்கின்றது. 

சரி இவர்களுக்கு கொடுக்கப்படும் மிகப் பெரிய‌ சம்பளத்திற்கு என்னதான் பணி? மாணவர்களுக்கு பாடம் எடுக்க வேண்டுமா, அவர்களது தேர்வுத் தாளை திருத்த வேண்டுமா. எதுவுமே கிடையாது. வேறு என்னதான் செய்ய வேண்டும்? மாணவர்களோடு உரையாட வேண்டும், அவர்களது அனுபவங்களை பகிர வேண்டும். இதன் மூலம் அந்நாட்டின் மனித வள மேம்பாடு வளர்ச்சியடையும் என அவர்கள் கருதுகிறார்கள். மேதமை தாங்கிய இந்த முதிர்ந்தவர்களிடம் கிடைக்கப்பெறும் அறிவாயுதத்திற்கே அவர்கள் பெரும் தொகையினை செலவிடுகிறார்கள். 

இப்படிப்பட்ட சூழலில்தான் மேதகு அப்துல் கலாம் ஐயாவிற்கு பல்வேறு நாடுகளில் இருந்து வருகைதரு பேராசிரியர் பதவிகள் அவரை தேடி வந்தன. அவற்றினை எல்லாம் நம் தாய் நாட்டிற்காக புறந்தள்ளி விட்டு நம் மண்ணிலேயே தங்கி, தன் 84 வயதிலும் இடையறாது இந்தியா முழுக்க பயணித்து பல லட்சம் மாணவர்களை பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், பல்கலைக் கழகங்களிலும், தேசிய ஆராய்ச்சி கூடங்களிலும் நேரில் சந்தித்து உரையாடினார். அதன் சாட்சியே இந்த இரண்டு நாட்களில் சமூக தளங்களிலும், பொது வெளிகளிலும் பகிரப்படும் புகைப்படங்கள்.  ஒரு எளிமையான பேராசானின் பயணத்திற்க்கு இதுவே சாட்சி

மக்களை வசீகரிக்கும் நுனி நாக்கு ஆங்கிலம் அவரிடம் இல்லை. கேட்பவர்களை கிண்டலடிக்கும் பெரிய நகைச்சுவை துணுக்குகள் இல்லை. பிறகு எப்படி இத்தனை லட்சம் மாணவர்கள் அவரது பேச்சில் கட்டுண்டார்கள்.  அதற்குக் காரணம், தேசமுன்னேற்றத்திற்காக அவரிடம் இருந்த அக்கறை.   அந்த தகுதிதான் மாணவர்களிடம் அவரை கொண்டு சென்றது.

இல்லறத் துணை இல்லாமல் தன் முதுமை காலத்திலும்  சுய ஒழுக்கம் தவறாது இந்த நாட்டையே சுற்றி வந்த ஒரே ஆன்மா கலாம் அவர்கள்.  கலாம் ஐயா மறைந்த பிறகு இந்த இரண்டு நாட்களில் அவர் மீது வைக்கப்படும் குற்றசாட்டுகளை காணும் போது எதார்த்தத்தில் இந்த தேசம் எவ்வளவு பலவீனமாக இருக்கிறது என்பதை நன்கு உணர முடிகிறது. இதே வயதில் இத்துணை செயல்பாடுகளை கடந்து வருவீர்களாயின் நீங்கள் அவரை விமர்சிக்க கட‌வீர்களாக. 

மிகச் சிறந்த போராளிகள், இலக்கியவாதிகள், மனித உரிமை ஆர்வலர்கள், பத்திரிக்கையாளர்கள் என பொது வெளியில் அறியப்பட்டவர்களிடம் அவர் போய்ச் சேரவே இல்லை என்பதனை என்னால் உணர முடிகிறது. ஒரு வேளை நான் இப்படி புரிந்து கொள்கிறேன். புல்லாங்குழலின் வழியே பயணிக்கும் காற்று முழுமையும் அதனை நிரப்ப இயலாது, ஆனால் அதன் துளைகளே அதனை இசைக்கிறது. அதைப் போலவே, உங்களின் விமர்சனங்கள் வழியே அவர் இன்னும் அதிகமாய் மக்களிடம் போய் சேருவார், என நம்புகிறேன்.

இச்சமூகத்திற்கு அவரது பங்களிப்பினை தனிக் கட்டுரையாக எழுதலாம், ஒரு ஆராய்ச்சியாளனாக இந்தியாவின் தற்போதய அறிவியல் வளர்ச்சியில் அவரது பங்கினை நானறிந்த வகையில் ஓரிரண்டு விசயங்களை பகிர விரும்புகிறேன். 

ஐஐடிகளும், தேசிய அறிவியல் ஆய்வகங்களிம் மட்டும்தான் மிகப் பெரிய ஆய்வு திட்டங்களை செயல்படுத்த முடியும் என நம்பிக் கொண்டிருந்த கால கட்டம் அது. அப்போதுதான், கலாம் அவர்கள் இராணுவ ஆராய்ச்சி அபிவிருத்தி கழகத்தின் செயலராக இருந்த போது, இந்த நாட்டில் உள்ள எல்லா கல்லூரி, பல்கலைக் கழகங்களிலும் உள்ள பேராசிரியர்களுக்கு அடிப்படை அறிவியல் மற்றும் நுட்ப ஆராய்ச்சிக்கான உதவித் தொகை வழங்கவும், புதிய பல திட்டங்களையும் கொண்டு வந்தார். இதனால் இன்று பல ஆயிரம் மாணவர்கள் பயனடைந்தனர்.  இந்தியாவிற்கென பிரத்யோக நுட்பங்கள் இந்த மண்ணிலேயே வடிவமைக்கப்படும் என நம்பியவர். 

பத்து ஆண்டுகளுக்கு பின்னர் எந்த மாதிரியான ஆராய்ச்சி இந்தியாவிற்கு தேவை என்பதனை மிக நுட்பமாக ஊகிக்கும் வல்லமை பெற்றவர். அதனை மாணவர்களிடமும் வலியுறுத்தினார். என் நினைவில் தெரிந்த வரை 2005ல் இருந்து 2007 ஆம் ஆண்டிற்குள்  தஞ்சாவூர் சாஸ்திரா பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கின் ஆய்வு சுருக்கம் புத்த‌கத்தில் முகவுரை எழுதியிருந்தார். அதில் அவர் நம் தேசத்தின் எதிர்கால ஆராய்ச்சி என வலியுறுத்தியது " விண்ணில் இருந்து சூரிய ஒளியில் மின்சக்தியினை உற்பத்தி செய்து கம்பியில்லா தொழில்நுட்பம் மூலம் பூமிக்கு மைக்ரோவேவ் நுட்பம் மூலம் எப்படி கொண்டு வருவது" என்பதே. இந்த நுட்பம் உண்மையில் சாத்தியம் ஆகுமா என்று நான் ஆச்சரியப் பட்டேன். 

ஏறத்தாழ 8 ஆண்டுகளுக்கு பிறகு ஜப்பானில் கடந்த மார்ச் மாதம் ஜப்பான் விண்வெளி கழகமும் (JAXA), மிட்சுபுசி நிறுவனமும் இணைந்து உலகின் முதல் முறையாக மைக்ரோவேவ் நுட்பத்தின் மூலம் 1.8 கி.மீ தொலைவில் இருந்து மின்சாரத்தினை கம்பியில்லாமல் மைக்ரோவேவ் நுட்பத்தின் அடிப்படையில் 10 கிலோவாட் மின்சாரத்தினை கடத்தி சாதித்து காட்டியுள்ளனர். ஜப்பான் அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் இத்துறையில் வெகு தூரம் முன்னேறி இருக்கும் என்பது உறுதி. அப்போதும் நம்ம ஊர் உளுந்த பருப்புகள் விமர்சனம் என்ற பெயரால் வேகாத பருப்பை நசுக்கி கொண்டு இருப்பார்கள்.  தமிழ்ப் பிள்ளைகளே இவர்களை உதறித் தள்ளி விட்டு மக்களுக்கு தேவையான அறிவியலை முன்னெடுத்து செல்லுங்கள்.

கலாம் அடிப்படையில் பறப்பியல் நுட்ப வல்லுநர், ஆயினும் தான் கடந்து வந்த பாதையில் இந்தியாவின் ஆற்றல் தேவை எதிர் காலத்தில் தீர்க்க இயலாத சிக்கலாக இருக்கும் என்று கணித்திருந்தார். புதிய ஆற்றல் உற்பத்திக்கான‌ மூலங்களை இந்தியா உருவாக்க வேண்டிய கட்டாயத்தினை  தொடந்து வலியுறுத்தினார். இந்தியாவின் பரந்து பட்ட மக்கள் தொகையினை சமாளிக்க தேவைப்படும் மிகையான மின் ஆற்றல் உற்பத்தியினை அணு மின் உலை மூலம் பெற முடியும் என நம்பினார். அவரிடம் இருந்து கருத்தளவில் நான் நிறைய வேறுபடுகிறேன். ஆனால் ஒரு போதும் கலாம் இந்தியாவில் சூரிய மின் ஆற்றல் தொடர்பான எந்த ஆராய்ச்சி திட்டத்தினையும் குறை கூறியதோ, தடுத்ததோ இல்லை.   

இன்னும் பல ஆண்டுகாலம் இந்த மாமேதை வாழ்ந்திருந்தால் பல லட்சம் மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் தந்திருப்பார். அவரை சந்திக்க வேண்டி காத்திருக்கும் பல லட்சம் மாணவர்களது கேள்விகளுக்கு அவரின் வாழ்க்கையே விடையாக கிடைக்கும் என எண்ணுகிறேன். 

எங்களுக்கு சிந்திக்க தெரிந்த காலத்தில் நாங்கள் நம்பிக்கையற்று இருந்தோம். தாய் மொழியில் படித்த எங்களுக்கு எதிர்காலம் சூன்யமாய் தெரிந்தது. நீங்கள் எங்களிடையே வந்தீர்கள், நாங்கள் தலை நிமிர்ந்து நடக்கத் தொடங்கினோம். எதிர்கால இந்தியாவில் எம் மாணவர்கள் உன் பெயரால் பெரும் எழுச்சி மிகுந்த தேசத்தினை கட்டி எழுப்புவார்கள் என்பது உறுதி.

எங்கள் ஆசானின் இறுதி யாத்திரைக்கு மாணவர்களாகிய எங்கள் இதய கமலங்களில் இருந்து பூக்கள் தந்து வழி அனுப்புகிறோம். 

உமது ஆன்மா வல்ல பரம்பொருளின் மடியில் உறங்கட்டும்.





(மேதகு கலாம் ஐயா  அஞ்சலி செலுத்தும் வகையில் எங்களது மூத்த சகோதரரின்   இளைய புதல்வன் ஆதித்தன் (15 வயது) வரைந்த கோட்டோவியம் )


Monday 27 July 2015


இறுதி வரை
அறிவியலுக்காகவே வாழ்ந்தாய்

ஒரு ஆசானாய்
உயிர் பிரிந்தாய்

ஒரு வார்த்தை அணு மின் உலை
கெட்டதென உரைத்திருந்தால்
எம்மவருக்கு ஞானம் வாய்த்திருக்குமே!

இனி யாரை கொண்டு
இப்பேருண்மையினை நிறுவுவது.

உன் பாத கமலங்களில்
எம் கண்ணீரே சரணம்.

-



முன்னாள் குடியரசு தலைவர் மேதகு அப்துல் கலாம் ஐயாவின் மறைவு சொல்லனா துயரை தருகிறது. 

இராமேஸ்வரத்தில் ஏற்றிய விளக்கு இந்தியாவின் வடக்கில் சில்லாங்கில் மறைந்து விட்டது.

சூரிய  மின்சக்தியின் மூலம் இயங்கும் குப்பைத் தொட்டிகள் - Solar powered trash bin


தற்போது மக்கள் கூடும் இடங்கள், தெருக்கள் என எல்லா இடங்களிலும் ஒழுங்கின்றி வெளியில் வீசப்படும் குப்பைகள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இது  மக்களுக்கு அருவருக்கத்தக்க சூழலை ஏற்படுவதோடு   மோசமான‌ தொற்று நோய்களின் பிறப்பிடமாக குப்பைத் தொட்டிகள் விளங்குகிறது.

நம் மக்கள் குப்பைகளை தெருக்களில் வீச முக்கியமான காரணங்கள். அ) சுகாதாரம் பற்றிய அக்கறையின்மை அல்லது அலட்சியம்   ஆ) போதிய குப்பைத் தொட்டிகள் இல்லாமை இ) குப்பைத் தொட்டிகளில் கொட்டப்படும் கழிவுகளை சரியான நேரத்தில் சேகரித்து செல்ல இயலாதது.

இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகம் உள்ள நாடுகளில் குப்பை மேலாண்மை மேற்கண்ட காரணிகளால் மிகவும் பலவீனமான நிலையிலேயே உள்ளது. இக்காரணங்களை தவிர்த்து, இன்னும் நம் நாட்டில் சரி வர மேம்படுத்தப்படாத‌  குப்பை கழிவு மேலாண்மை திட்டம்மும் ஒரு முக்கிய காரணாமாக உள்ளது.

இதில் அரசினை குறை சொல்வதை விட பொதுசனமாகிய நாம்தான் நிறைய மாற வேண்டும். சொல்லப் போனால் இனி வரும் காலங்களில் அரசு, பொதுசனம் இருவருமே சேர்ந்து கூட்டாக இயங்கினால் மட்டுமே சுத்தமான தேசத்தினை உருவாக்க முடியும்

சுற்றுலா பயணிகள் அதிகம் வருகை தரும் நகரங்களில் குப்பைத் தொட்டிகள் இயல்பான நகரங்களை ஒப்பிடும் போது மிக வேகமாக நிரம்பி விடும். அவ்வாறு குப்பைகள் நிரம்பிய பின் சரியான நேரத்திற்கு அக்குப்பைகள் அகற்றப்படாமல் விட்டால் பெரும் சுகாதார கேட்டினை உருவாக்கும்.

இது போன்ற பிரச்சினைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க‌, அமெரிக்காவில் உள்ள பிக் பெல்லி (BigBelly Solar) நிறுவனம் நியூயார்க், பிலிடெல்பியா உள்ளிட்ட சில நகரங்களில் வொய்பை (Wifi) நுட்பத்தினை அடிப்படையாக கொண்டு சூரிய மின் சக்தியில் இயங்கும் குப்பைத் தொட்டிகளை மக்கள் கூடும் பொது இடங்களில் அறிமுகப் படுத்தி உள்ளனர்.

இந்த குப்பைத் தொட்டிகளில் அப்படி என்ன விசேசம் என்கிறீர்களா.


வழக்காமான குப்பைத் தொட்டிகளைப் போல் அல்லாமல், இந்த குப்பை தொட்டியில் மக்கள் போடும் குப்பை நிரம்பியவுடனோ அல்லது தாங்க முடியாத துர்நாற்றம் வீசும் போது இதனுடன் இணைக்கப்பட்டுள்ள வொய்பை நுட்பத்தின் மூலம் துப்புரவு பணியாளர்களுக்கு தகவல் சென்று விடும். அவர்கள் உடனடியாக அந்த குப்பைத் தொட்டியினை காலி செய்து விடுவார்கள். இதன் மூலம் குப்பைகள் பெருகி தெருக்களில் துர்நாற்றம் வீசப்படுவடு தடுக்கப்படுகிறது.  இதன் விலை 3000 அமெரிக்க டாலர். இதனை இந்திய தொழில் நுட்பத்தில் வடிவமைத்தால் பல மடங்கு விலை குறைய வாய்ப்புள்ளது.

சோலார் பேனல்கள் குப்பைத் தொட்டியின் மீது உள்ள மூடிப் பகுதியில் சூரிய ஒளி படும் படி இணைக்கப்பட்டுள்ளது (சிலிக்கான் சோலார் பேனல்களுக்கு பதில் மென் ஏடுகள் பூசப்பட்ட சோலார் பேனல்களை பயன்படுத்துவது பல வகைகளில் சிறப்பு). மேலும் குப்பையிலிருந்து மிக மோசமான வாயு வெளிப்படும் பொழுது மூடியின் அடிப்பகுதியில் இணைக்கப்பட்டுள்ள வொய்பை பலகையில் வாயுவினை அறியும் நுணர்விகளும் (gas sensors) பொருத்தப்பட்டிருக்கும். எளிமையான இந்த வடிவமைப்பு நிச்சயம் நமது நாட்டில் மக்கள் தொகை பெருக்கம் நிறைந்த பெரு நகரங்கள், சுற்றுலா பயணிகள் அதிகம் வருகை தரும் இடங்களில் இதனை சோதனை முயற்சியாக பரிசோதித்து பார்க்கலாம்.

இந்த நுட்பத்தினை வெளிநாடுகளில் இருந்துதான் பெற வேண்டும் என்பதில்லை. தற்போது நம் பொறியியல் மாணவர்களைக் கொண்டே இந்த திட்டத்தினை வடிவமைக்கலாம்.




இன்னும் சில நிறுவனங்கள் சோலார் பேனல்கள் மூலம் இயங்கும் வண்ணத் திரைகளை (LED) கொண்டு விளம்பர பலகைகளை குப்பைத் தொட்டிகள் மீது வைத்து புதிய வகையில் வாடிக்கையாளர்களை கவந்து வருகிறார்கள்.


Advertisement flash board on solar powered garbage cans


விளம்பர பலகை வைக்கும் அளவிற்கு கூட வேண்டாம், குறைந்த பட்சம் நம்மால்   சூரிய மின் சக்தியினை கொண்டு குப்பைத் தொட்டியினை சரியான நேரத்திற்கு காலி செய்ய முடியுமா என்று முயற்சிக்கலாம். இதனால் நகராட்சி வண்டி தேவையில்லாமல் ஊரைச் சுற்றத் தேவை இருக்காது. பொதுசனமும் குப்பை நிரம்பிய தொட்டியினால் அவதியுறவும் தேவை இருக்காது.


(குப்பைதானே என்று அலட்சியப் படுத்தி வெளியே வீசாதீர்கள். இந்த கேவலமான குப்பைகளை மறுசுழற்சி செய்வதன் மூலம் ஒரு கிராமத்திற்கு தேவையான‌ மின் சக்தி, எரிவாயு போன்ற ஆற்றலை பெற முடியும். ஆனால அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது, குப்பைகளை குப்பை, மட்காத குப்பை என பிரித்து போட வேண்டும் அதனைப் பற்றி விரிவாக அடுத்த பதிவில் எழுதுகிறேன்)


Wednesday 22 July 2015


சூரிய மின் சக்தியில் இயங்கும் கண்காணிப்பு விளக்குகள் - Solar powered motion lights


நமது வீட்டின் வராந்தா, கொல்லைப் புறம், மொட்டைமாடி, அல்லது ஆள் அதிகம் நடமாட்டம் இல்லாத ஆனால் பாதுகாப்பு கருதி இரவு முழுவதும் விளக்குகள் எரிவதால் மின்சாரம் வெகுவாக விரயம் ஆக வாய்ப்புள்ளது. சரி பணத்தினை சேமிக்காலாம் என விளக்கை அணைத்து விட்டால் அந்நியர்கள் யாரேனும் வீட்டினுள் பிரவேச்சிப்பது தெரியாது. 

சரி, மின்சாரமும் சிக்கனம் ஆக வேண்டும், பாதுகாப்பும் இருக்க வேண்டும். இப்படி இரண்டு அனுகூலங்களையும் பெற  ஒரே வழி  நடமாட்ட நுணர்வினைக் கொண்டு இயங்கும் தானியங்கி விளக்குகள் (motion controlled lighting) அமைப்பதுதான். இவ்விளக்குகள் சிறிய அசைவுகளை நுணர்விகள் மூலம் அறிந்து, ஆள் நடமாட்டத்தின் போது தானாகவே எரியும் வகையில் நுணர்விகள் (sensors) மூலம் மின் சுற்றில் மாற்றிகளை (switch) கொண்டு இயங்குகிறது.

இவ்வகையில்  அமைக்கப்படும் மின்சார விளக்குகள் வெளிநாடுகளில் மிகப் பிரசித்தம். அதுவும் பொதுக் கழிவறைகள், மக்கள் அதிகம் புழங்காத தெருக்களில் இவைகளை நிறுவுவதன் மூலம் தொடர்ந்து விளக்கு எரியாமல் , தேவைப்படும் போது அல்லது மனித நடமாட்டத்தின் போது மட்டும் எரிய வைக்கப் படுகிறது. இதன் மூலம் பெரும் மின் சக்தி சேமிக்கப்படுகிறது. 

தற்போது இதே நுட்பத்தினை பயன்படுத்தி, சோலார் பேனல்கள் மூலம் சூரிய மின் சக்தியினை பெறப்பட்டு நடமாட்ட‌ நுணர்விகள் மூலம் எரியும் தானியங்கள் எல் ஈ டி விளக்குகள் சந்தைக்கு வந்துள்ளது. சொல்லப் போனால் வீட்டின் வெளிப்புறங்களில் பயன்படுத்தப்படும் தானியங்கி விளக்குகளுக்கு இது மிகச் சிறந்த தீர்வாகும். 

தற்போது சந்தையில் (Sunforce Products, Japan) வந்துள்ள இந்த சூரிய மின் சக்தியில் இயங்கும்  நடமாட்ட நுணர்வு விளக்குகளில் உள்ள மேம்பட்ட பயன்களைக் கொஞ்சம் பார்ப்போம். 

வழமையான சிலிக்கான் சோலார் பேனல்களுக்கு பதில்,  காப்பர் இன்டியம் கேலியம் சல்பைடு (CIGS) மென் ஏடுகள் பூசப்பட்ட சூரிய மின் கலங்கள் (CIGS amorphous thin film solar cells, 1 W, 6 Volts)  நல்ல தேர்வு.  ஏனெனில் சிலிக்கான் சோலார் பேனல்கள் சூரிய வெளிச்சம் நேரடியாக படும் இடத்தில் குறிப்பிட்ட கோணத்தில் சாய்வாக வைக்க வேண்டும். ஆனால் மென் ஏடுகள் மூலம் தயாரிக்கப்படும் சூரிய மின்கலங்கள்  அவ்வாறான கட்டுபாடுகள் இல்லாமால் ஓரளவிற்கு சூரிய வெளிச்சம் படும் எல்லா கோணங்களிலும் மின் சக்தியினை உற்பத்தி செய்ய வல்லது. 

எனவே வீட்டின் வெளியே எல்லா இடங்களிலும் இவ்விளக்குகளை எளிமையாக பொருத்திக் கொள்ளலாம். மேலும் சிலிக்கான் சோலார் பேனல்களை ஒப்பிடும் போது இதன் எடையும் குறைவு. இதனுடன் இணைக்கப்பட்ட நேர் மின்னோட்டத்தில் (DC) இயங்கும் 80 SMD எல் ஈ டி (Light Emitting Diodes) விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. இது 60 வாட் குண்டு பல்பின் வெளிச்சத்திற்கு இணையானது (800 Lumens). 

Solar powered motion lights


CIGS amorphous solar panel


இந்த மென் ஏடுகள் பூசப்பட்ட சோலார் பேனல்கள் 10 வருடத்திற்கு சிறப்பாக இயங்க வல்லது. DC யில் இயங்கும் எல் ஈ டி விளக்குகள் குறைந்த பட்சம் 50,000 த்தில் இருந்து ஒரு லட்சம் மணி வரை இயங்க வல்லது. அப்படியானால் நீங்கள் ஒரு பத்து வருடத்திற்கு விளக்குகளை மாற்றத் தேவையில்லை. குறைந்த எடையில் அதிக சிக்கல் இல்லாத வடிவமைப்பு. ஆகையால் உங்கள் வீட்டில் நாட்காட்டிகளை மாட்டுவது போல் தேவைப்படும் இடங்களில் எளிதாக மாட்டிக் கொள்ளலாம்.

விலை என்னன்னு தெரிஞ்சுக்க ஆர்வமா இருக்கீங்களா பாஸ். 

இதோட விலை இங்க ஜப்பான்ல 4500 யென் (இந்திய மதிப்பில் 2300 ரூபாய்). தரமான எல் ஈ டி விளக்குகள், சூரிய மின் கலங்கள், பாட்டரிகள் கொண்டு வழங்கப்படும் இந்த விளக்குகளை இன்னும் கொஞ்சம் பிரயத்தனப் பட்டால் நம் பொறியியல் கல்லூரி மாணவர்கள் அருமையாக வடிவமைத்து எளிமையான வடிவில் சந்தைப் படுத்தலாம். 


அப்படியே உங்கள் இல்லங்களிலும் இந்த விளக்குகளை பயன்படுத்தி ஆற்றல் வளத்தினை எதிர்கால சந்ததியினருக்கு சேமியுங்கள். 

சுய தொழில் முனையும் ஆர்வம் உள்ள பொறியியல் பட்டதாரிகள் இது போன்ற சூரிய மின் சக்தியில் இயங்கும் தானியங்கி, பாதுகாப்பு விளக்குகளை குறைந்த விலையில் உற்பத்தி செய்யும் வகையில்  வடிவமைப்பில் இறங்கினால் வெற்றி நிச்சயம். 

(சுத்தமாக மின்சார வசதியே இல்லாத ஆப்ரிக்கா நாட்டில் இது போன்ற நடமாட்ட நுணர்விகளை கொண்டு வடிவமைக்கப்பட்ட எல் ஈ டி விளக்குகள் மூலம் தனது கால்நடைகளையும், சிங்கங்களையும் ஒரு சிறுவன் காப்பாற்றியுள்ளான். அவனது கதையினை கீழே படியுங்கள்)


 கொசுறு செய்தி:

ஆப்ரிக்கா சமவெளியில்  வசிக்கும் (கென்யா, நைரோபி) பழங்குடிகளுக்கு கால் நடை மேய்ப்புதான் பிரதான தொழில். நைரோபி தேசிய வனவிலங்கு பூங்காவின் அருகில் உள்ள சிறு கிராமம் கிடென்செலா  (Kitengela). இங்குள்ள மசாய் (maasai) மக்களுக்கு பெரிய தலைவலியே இரவு நேரத்தில் வன விலங்குகள் குறிப்பாக சிங்கங்கள் இந்த கால் நடைகளை அடிக்கடி வேட்டையாடுவதுதான். 

அதனால் சில நேரங்களில் இந்த மக்கள் சினம் கொண்டு கூட்டமாக சென்று அந்த சிங்கங்களை சில நேரங்களில் கொல்வதும் உண்டு. இதனை கண்ட  கிராமத்து பள்ளி மாணவன் ரிச்சர்ட்டு (Richard Turere) மக்களிடம் இருந்து சிங்கங்கள் கொல்லப்படுவதையும், அதே நேரம் சிங்கங்கள் ஆடு மாடுகளை கொல்வதையும் தடுக்க பல வழிகளை முயற்சித்துப் பார்த்தான்.   

முதலில் மாட்டின் சாணங்களை கொண்டு சோளக் கொல்லை பொம்மை போல செய்து பார்த்தான், சிங்கங்கள் அச்சப்படுவதாக தெரியவில்லை. ஒரு நாள் தன் வீட்டு தொலைக் காட்சி பெட்டியினை உடைத்து எப்படி வெளிச்சம் வருகிறது விட்டு விட்டு வருகிறது என தெரிந்து கொள்ள முயற்சி செய்துள்ளான். இத்தனைக்கும் அவன் வயது பதினொன்று மட்டுமே. ஆனால் அவன் தந்தை கோபப் படாமல் அவனது அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு பக்க பலமாக நின்றுள்ளார். 

இறுதியாக‌ ஒரு உத்தியினை கையாண்டான்.  தன் கிராமத்தில் கிடைத்த பழைய பொருட்களை கொண்டு (இரு சக்கர வாகனத்தில் இருந்து கிடைத்த பாட்டரி, வயர்) சிறிய வடிவிலான சோலார் பேனல் (அவன் தந்தையிடம் சொல்லி வெளியில் இருந்து வாங்கியது) ஆகியவற்றினை கொண்டு நடமாட்ட நுணர்விகள் மூலம் இயங்கும் மின்னும் எல் ஈ டி விளக்குகளை (flashing LED lights) இரவில் அமைத்தான். ஆச்சரியம் சிங்கங்கள் இந்த விளக்குகளை கண்டு அச்சப்பட்டு கால் நடை பட்டிகளை இரவு நேரத்தில் தாக்கவில்லை. பிறகு அருகில் உள்ள பட்டிகளுக்கும் இதே உத்தியினை கையாண்டு சோலார் பேனல்களை கொண்டு இயங்கும் மின்னும் எல் ஈ டிகளை இயக்கி அவர்களது கால்நடைகளையும் பாதுகாத்துள்ளான். இந்த நுட்பம் சிறிதுதான் ஆனால் இதனை கொண்டு வனவிலங்குகளை துன்புறுத்தாமல் அவைகளை விரட்ட இந்த‌ எளிமையான வழியினை இதற்கு முன் யாரும் அங்கு முயற்ச்சிக்கவில்லை என்பதுதான் சிறப்பே.  இந்த விளக்குகளுக்கு ரிச்சர்டு சூட்டிய பெயர் சிங்க விளக்குகள் (Lion Lights).

கிராமத்து பள்ளியில் பயிலும் இந்த மாணவனுக்கு இந்த அறிவியல் நுட்பங்களை யார் சொல்லிக் கொடுத்தது என வியப்பாக உள்ளதா? ரிச்சர்டு தனது பள்ளியில் உள்ள  சிறிய‌ நூலகத்தில் உள்ள புத்தகங்களை படித்தே தனது கண்டுபிடிப்பிற்கான அடிப்படை வழிகளை பெற்றுள்ளான். இந்த பரிசோதனையின் வெற்றிக்கு பிறகு கென்யா முழுவதும் தற்போது ரிச்சர்டின் இந்த சிறு கண்டுபிடிப்பானது பயன்படுத்தப்படுகிறது. 

பிறகு  இந்த விளக்குகளை ஆராய்ந்த விஞ்ஞானிகள் விட்டு விட்டு எரியும் விளக்கு சமிக்ஞைகளால் (flashing lights) சிங்கங்கள் பயப்படுகின்றன, அதே சமயம் அணையாமல் எரியும் விளக்குகளை  கண்டு அவை ஒரு போதும் அச்சப் படுவதில்லை என்ற உண்மையினை கண்டு பிடித்தனர். 

இனது  நுட்பத் திறமையினை மேலும் வளர்க்கும் பொருட்டு அங்குள்ள சர்வதேச பள்ளி ஒன்று அவனை தற்போது தத்து எடுத்து படிக்க  வைத்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், இவனது திறமை உலக அளவில் பாராட்டப்படும் வகையில் மிகச் சிறந்த ஆளுமையாளர்களை வரவழைத்து பேச வைக்கும் TED மேடை ரிச்சர்டினை பேச வைத்து கெளரவம் செய்தது. 

சொன்னால் ஆச்சரியப் படுவீர்கள் அன்று இதே மேடையில் இவனுடன் பேசிய ஆளுமைகள் யார் தெரியுமா. அமெரிக்காவின் மிகச் சிறந்த கணிப்பொறி நிபுணர் Sergey Brin, இவர் வேறு யாருமல்ல கூகுள் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஆவார். ஒரு சிறுவனின் கண்டுபிடிப்பு அவனை உலகின் மிகச் சிறந்த ஆளுமைகளோடு மேடையினை பகிரும் வகையில் உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது. மதிப்பெண்கள் மட்டும் பெறுகின்ற வெறும் ஏட்டுக் கல்வி ஒரு போதும் உயர்த்தாது என்பதனை பெற்றோர்கள் நினைவில் கொள்ள வேண்டும். 




எந்த அடிப்படை வசதியும் இல்லாத ஆப்ரிக்க கிராமத்தில் இருக்கும் ஒரு சிறுவனால் சூரிய மின் சக்தியினை கொண்டு விளக்குகளை அமைக்கும் போது நம் ஊரில் ஏன் இந்த விளக்குகளை எளிய முறையில் வடிவமைக்க முடியாது. 

மற்றொன்று பள்ளிக் குழந்தைகள் எதையாவது கண்டுபிடிக்கிறேன் என முயற்சிக்கும் போது தயவு செய்து அவர்களது கற்பனைத் திறனுக்கு தடுக்காதீர்கள். ஏனெனில் அப்படி ஒரு ரிச்சர்டு தடுக்கப்பட்டிருந்தால் இன்றைக்கு ஆப்ரிக்காவில் குறைந்தது ஆயிரம் சிங்கங்களும் பல்லாயிரக் கணக்கான கால்நடைகளும் இறந்திருக்கும். 

ரிச்சர்டின் இந்த கண்டுபிடிப்பு நமக்கு சொல்லும் மற்றொரு பாடம், நம் குழந்தைகள் பயிலும் பள்ளிகளில் நூலக வசதி உள்ளதா, அங்கு தினமும் நம் குழந்தைகள் படிக்க புத்தகங்கள் கொடுக்கிறார்களா என நம்மை கேட்க வைத்திருக்கிறது. நூலகத்தினை பயன்படுத்தும் குழந்தைகள்தான் பிற்காலத்தில் மிகச் சிறந்த கண்டுபிடிப்பாளராக, பண்பட்டவராக வர முடியும் என்பதற்கு ரிச்சர்டு ஒரு நல்ல உதாரணம். 

அரசியல்வாதிகளை விளித்து ஊர் சுவற்றினை நாசம் செய்யும் பக்தர்கள், ரோட்டில் நடிகர்களை வாழ்த்தி பிளக்ஸ் வைக்கும் புண்ணியவான்கள், பால் அபிசேகம் செய்யும் ரசிக குஞ்சுகள் உங்கள்  அருகில் உள்ள பள்ளிகளுக்கு சென்று அறிவியல் திறனை வளர்க்கும் பத்து புத்தகங்களை அங்குள்ள நூலகத்திற்கு வாங்கி கொடுங்கள். எதிர் கால சந்ததியினர் நம் சமூகத்திற்கு நிறைய கண்டுபிடிப்புகளை கொண்டு வர அது மிகப் பெரிய உந்து சக்தியாக இருக்கும். 

மாணவன் ரிச்சர்டு மேடையில் பேசிய காணொளியினை காண கீழ்கண்ட இணைப்பில் பார்க்கவும். எளிய ஆங்கிலத்தில் அவன் பேசும் அழகே தனி. முடிந்தால் உங்கள் வீட்டில் இருக்கும் அல்லது அருகில் உள்ள குழந்தைகளுக்கு இந்த காணொளியினை காண்பிக்கவும். அவனது கதையினை அவர்களுக்கு சொல்லுங்கள்.

https://www.youtube.com/watch?v=RAoo--SeUIk

மேலும் சூரிய மின் சக்தியின் பயன்பாடுகளை நம் பிள்ளைகளுக்கும் சொல்லிக் கொடுப்போம்.







Tuesday 21 July 2015



டிரான்சிஸ்டர் (transistor) வடிவமைக்கப்பட்டது முதல் தற்காலத்திய நானோ கருவிகளில் எவ்வாறு அது செயலாற்றுகிறது என்பதை பற்றிய எனது முந்தைய‌ கட்டுரை பிபாசிடிவ் (bepositivetamil) இணைய இதழில் பிரசுரமாகியுள்ளது. கட்டுரையினை படிக்க‌

http://bepositivetamil.com/?p=1130

நன்றி
ஆசிரியர் குழு பிபாசிடிவ் இதழ்



Impedance School  - ISSchool-J15


NanoGe Foundation is one of the world renowned scientific platforms to conduct/organize the symposium in diverse topics. Among the Nanoge events, the “HOPV” is well known sparkling scientific event in energy conversion devices field around the globe. Another notable, successive series of NanoGe foundation  is “impedance school” which primarily introduced in Spain.  Later this school was introduced to Asian countries (South Korea, Japan, Taiwan and China) as “Asia edition” and has received profound attention in the last few years.

I am glad to share that we have organized this year's ISSchool-J15 (International Workshop on Impedance Spectroscopy of Energy Materials and Devices 2015) on 14th to 15th July 2015 at Tokyo University of Science, Kagurazaka Campus, Tokyo, Japan. First of all, We thank Prof. Akira Fujishima, President, Tokyo University of Science for his support and guidance.

We have received overwhelming response from the participants around the globe. A two days intensive training on impedance spectroscopy was given by Prof. Germán García and Prof. Sixto Gimenez, Institute of Advanced Materials, University of Jaume I, Spain, on different topics including perovskite, organic solar cells, photoelectrochemical fuel production, and Li-ion batteries. Prof. Takaya Kubo (University of Tokyo) has delivered excellent lecture on Quantum Dots Solar Cells. 

This course introduced the whole experimental process of Electrochemical Impedance spectroscopy: from the design of experiments, set-up requirements, to data analysis with special attention to computer-controlled instrumentation and use of software packages for data fitting and visualization. The key factor of this workshop is one-to-one interaction module, which brought effective hands on experience to the participants. 

On behalf of organizing committee, let me express our special gratitude to all the participants of this school for their enthusiastic attendance and cooperation. Also I would like to convey my hearty thanks to Prof. Terashima Co-Chair of this School for his everlasting support and providing all necessary arrangements to make this event successful one. 

I personally thank the NanoGe foundation for giving me this opportunity to chair this school. 

(For more information about NanoGe events, please visit http://www.nanoge.org/)

Best wishes
Sudhagar, Ph.D
(Co-Organizing Chair, ISSchool-J15)

Photocatalysis International Research Center
Tokyo University of Science, Japan


Participants and Key Speakers at ISSchool-15, Japan.

Group Photo- ISSchool-15

Prof. Germa delivering the lecture on impedance analysis for batteries









Prof. Sixto delivering the lecture on impedance analysis for solar fuel cells



Friday 17 July 2015


ஒரு சந்திப்பும் எனது அனுபவமும்

ஏறத்தாழ 15 ஆண்டுகளுக்கு முன்னால் நானோ நுட்பவியல் (Nanotechnology) இந்தியாவில் பரவலாக அறிமுகப்படுத்தப்பட்ட தருணம் ஒரு புதிய மயக்கத்தினை ஏற்படுத்தி இருந்தது என்றே சொல்லலாம். ஆனாலும் வெகு சில ஆராய்ச்சி கூடங்களில் (IISC, IIT, C.S.I.R, NCL) மட்டும் நானோ பருப் பொருள் பற்றிய‌ ஆராய்ச்சியினை முன்னெடுத்திருந்தனர். 


எனது எம்.பில் பட்ட ஆராய்ச்சி (சூரிய மின் கலங்களுக்கான டைட்டானியம் டை ஆக்சைடு மென் ஏடுகள்) முடித்து 2003 ஆம் ஆண்டு வாக்கில் முனைவர் பட்ட ஆராய்ச்சியினை செய்வதற்கான ஆய்வு தலைப்பினை தேடிக் கொண்டிருந்த போது, எனது ஆய்வு வழிகாட்டி பேராசிரியர் இரா. சத்திய மூர்த்தியும், எங்களது ஆய்வுக் குழுவில் இருந்த மூத்த ஆராய்ச்சியாளர் அண்ணன் முனைவர் செந்தில் அரசுவும் என்னை நானோ நுட்பவியல் பக்கம் கவனத்தினை செலுத்த சொன்னார்கள். ஏனெனில் அப்போது வழமையான மென் ஏடுகளில் (thin films technology) எல்லோரும் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த காலகட்டம் அது. 



எமது ஆய்வகத்தில் முனைவர் செந்தில் அரசு அண்ணா, மற்றும் முனைவர் சந்திரமோகன் மாம்ஸ் (middle) உடன்

நானோ நுட்பவியல் ஆராய்ச்சிக்கு தேவையான புதுமுக‌ புத்தகங்களோ, ஆய்வுக் கட்டுரைகளோ கிடைக்காத  சூழலில் எங்கு இருந்து ஆய்வினை துவக்குவது, எந்த புத்தகத்தினை படித்தால் புரிந்து கொள்ளலாம் என நான் அலையாத இடம் இல்லை. அப்போதைய சூழலில் எனக்கு பெரிதும் உதவியாக இருந்தது பெங்களூரில் இருக்கும் இந்திய அறிவியல் கழகம் மற்றும் சென்னையில் இருக்கும் இந்திய தொழில் நுட்ப கழகத்தில் உள்ள நூலகங்கள்தான். 

அப்போது கிடைத்த புத்தகங்கள்  
1. Encyclopedia of Nanoscience and Nanotechnology. Editor Hari Nalwa Singh.
2.Introduction to Nanoscience and Nanotechnology, Chris Binns, Wiley Publishers.
இன்னும் சில புத்தகங்களின் பெயர் நினைவில் இல்லை


தற்போது உலகின் எந்த மூலையில் இருந்து கொண்டு ஆராய்ச்சி கட்டுரைகளை இணையத்துல் தரவிறக்கம் செய்து கொள்ளும் வசதி எல்லாம் அப்போது கிடையாது. ஆகையால் இன்டர்நெட் கடைகளுக்கு சென்று ஆய்வு சுருக்கத்தினை இணையத்தில் தேடி ஆய்விதழின் தகவல்களை எடுத்துக் கொண்டு பெங்களூருவிற்கு புறப்பட்டு விடுவோம். ஏறத்தாழ வேட்டைக்கு செல்லும் மனோ நிலையில்தான் மனசு இருக்கும்.  

காலையில் நூலகத்திற்குள் சென்று அந்த குறிப்பிட்ட ஆய்விதழ் இருக்கும் அறை, மற்றும் அலமாரியினை கண்டுபிடிக்க மதியம் ஆகி விடும். ஒரு வழியாய் குறிப்பிட்ட வருடத்திற்கான ஆய்விதழில் நமக்கு தேவைப்படும் ஆய்வுத்தாள் உள்ள பக்கங்களை நமக்கு முன்பே வந்திருக்கும் சில பிரகஸ்பதி ஆராய்ச்சிளார்களை கையோடு கிழித்து எடுத்துக் கொண்டு போயிருப்பார்கள். 
இன்னும் சில புல்லட் பாண்டிகள் வருடத்தினை மாற்றி ஒளிய வைத்துவிடுவார்கள். பல லட்சம் ஆராய்ச்சியாளர்கள் பொக்கிசமாக தேடி அலையும் ஆராய்ச்சிக் கட்டுரைககளின் பக்கங்களை  ஒரு சில குறுகிய மனம் படைத்தவர்கள் செய்யும் வேலையால் அதன் மூலத்தினை தேடி பல வருடங்கள் அலைந்த அனுபவமும் உண்டு. 

தற்போது 100 வருடங்கள் பழமையான ஆய்விதழின் கட்டுரைகளை கூட எல்லா ஆய்வு இதழ் பதிப்பக நிறுவனங்கள் ஒளி நகல் எடுத்து இணையத்தில் பாதுகாத்து வைத்திருக்கிறார்கள்.  

2003-2005 ஆண்டு வாக்கில் நானோ அளவிலான‌ குறைகடத்திகள் பற்றிய எனது ஆராய்ச்சியினை தொடங்கிய போது நிறைய ஆய்வு கட்டுரைகள் உலக அளவில் வரத் தொடங்கி இருந்தன. ஆனால்  நானோ குறைகடத்திகள் மூலம் செறிவூட்டப்பட்ட டைட்டானியம் ஆக்சைடுகளை கொண்ட சூரிய மின் கலங்கள்  (Quantum Dot sensitized Solar Cells) தயாரிப்பதற்கான ஆய்வுக் கட்டுரைகள் விரல் விட்டு எண்ணி விடும் அளவிலேயே இருந்தது. 

அப்போது எனக்கு கிடைத்த மிக முக்கியமான கட்டுரைகளில் ஒன்று ஜப்பானில் உள்ள பேராசிரியர் தரோ தோயாத்தா (Prof. Taro Tayota,The University of Electro-Communications in Tokyo, Japan)  அவர்களுடையது.  என் ஆய்விற்குத் தேவையான அடிப்படை வேதி வினை தரவுகளை அவரது கட்டுரையில் இருந்தே கையாள ஆரம்பித்தேன்.  முக்கியமாக‌, உலோக ஆக்சைடு சுவர்களில் பூசப்பட்ட நானோ குறைகடத்திகளின்  மீது வெளிச்சத்தினை கொண்டு செறிவூட்டப்படும்போது உருவாகும் எலக்ட்ரான் மற்றும் துளைகளின் நீடித்த வாழ்நாள் திறன் பற்றிய அவரது ஆய்வு முடிவுகள் இத்துறையில் மிகவும் முக்கியமான ஒன்று எனச் சொல்லலாம். 


பேராசிரியர் தொயோத்தா தற்போது ஒய்வு பெற்ற பின் அதே ஆராய்ச்சி மையத்தில் கொளரவ பேராசிரியராக பணியாற்றுகிறார்.  நேற்று அவரை தனிப்பட்ட முறையில் ஒரு கூட்டு ஆராய்ச்சிக்காக அவரை சந்திக்க கிடைத்தது என் பாக்கியம் என்றுதான் சொல்ல வேண்டும். 

 மனிதர் 70 வயதிலும் சுறு சுறுப்பாக ஆராய்ச்சி செய்து கொண்டு இருக்கிறார். நெடு நேரம் அவரோடு உரையாடிய போது,  அவரது ஆய்வுக் கட்டுரைகள் எந்த அளவிற்கு எனது ஆய்விற்கு உதவின என சொன்னபோது மிகவும் நெகிழ்ந்து போனார். தன் ஆய்வுக் கட்டுரையினை நினைவு கூர்ந்தமைக்கு பல முறை நன்றி கூறினார். 

தன் அனுபத்தில் இருந்து நிறைய தரவுகளை, நுணுக்கங்களை என்னிடம் பகிர்ந்து கொண்டார். ஒரு ஆல விருட்சத்தின் அடியில் சிதறிக் கிடக்கும் பழங்களை கொத்தி தின்னும் சிறு கிளியானேன் நான். 

உங்களோடு ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ளலாமா எனக் கேட்டபோது என்னை நாற்காலியில் உட்கார வைத்து விட்டு அவர் என் பின்னால் நின்று கொண்டார். வயதில் என் தந்தையினை விட மூத்தவர். அவரிடம் நான் கற்பதற்கு இன்னும் நிறைய இருப்பதாகவே தோன்றியது. 


Me with Prof. Taro Tayota (left), Prof. Qing Shen (right) and Prof. Sixto Gimenez (sitting right) at The University of Electro-Communications in Tokyo, Japan

உலகின் எங்கோ ஒரு மூலையில் இருந்த என்னை, நான் அதிகம் நேசித்த ஒரு பேராசிரியரின் கட்டுரை இன்று அவரின் அருகிலேயே நிற்க‌  வைத்திருக்கிறது. 

வள்ளுவப் பெருந்தகை சொன்னது போல் கல்விதான் எவ்வளவு மகத்துவம் வாய்ந்தது.


யாதானு நாடாமா லூராமா லென்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு.

Sunday 12 July 2015



நீந்தும் ஓவிய மீன்கள் -  Digital Fish Tank


நம்ம வீட்டு குட்டீசுகளுக்கு வண்ண ஓவியம் தீட்டுதல் என்றால் கொள்ளை ஆசை. சில வேலைகளில் வீட்டு சுவர்களிலும் கூட தங்கள் கைவண்ணத்தினை காட்டி நம் இரத்த அழுத்தத்தினை அதிகரித்து விடுவார்க‌ள்.

இனி குழந்தைகள் சுவற்றில் கிறுக்கி உங்களை கோபப் பட வைக்க மாட்டார்கள். அதற்கு ஒரு வழியினை ஜப்பானிய பொம்மை நிறுவனமாகிய  டகாரா டோமி ஆர்ட்சு (Takara Tomi Arts Inc.) கண்டுபிடித்துள்ளது.

 குழந்தைகள்  வரையும் வண்ண மீன் ஓவியங்கள் நீரில் நீந்த தொடங்கினால் எப்படி இருக்கும் என்ற கற்பனையினை இந்நிறுவனம் நிஜமாக்கியுள்ளனர். இப்படி ஒரு நிழல் மீன் தொட்டியினை ஆப்பிள் திறன் கைபேசியில் உள்ள செயலாக்கிகள் (Picturerium Application)மூலம் வடிவமைத்துள்ளனர். 


இன்று நோதா நகரத்தில் டாய்சரசு (Toysarus) பொம்மை கடைக்கு சென்ற போது இந்த மாத புது வரவாக இதனை விற்பனைக்கு வைத்திருந்தனர்.










அப்படி இதில் என்ன விசேசம் என்கிறீர்களா?

இந்நிறுவனம் வழங்கும் சிறு பிரத்யோக அட்டைகளில் நம் குழந்தைகள் மீன்களை அவர்கள் விருப்பம் போல் வரைந்து வண்ணம் தீட்டி வைத்து கொள்ள வேண்டும். 

பிறகு அவர்கள் கொடுக்கும் சிறு மீன் தொட்டி ஒன்றின் மீது உங்கள் ஆப்பிள் திறன் பேசியினை (காமிரா வெளிப்புறம் தெரியும் படி) வைத்து விட்டு, குழந்தைகள் வரைந்த வண்ண மீன்களை காமிராவின் மீது காட்டி ஸ்கேன் எடுத்து விட்டால் போதும். இந்த பொம்மை மீன்கள் சிறிது நேரத்தில் இந்த நிழல் மீன் தொட்டிக்குள் அங்கும் இங்கும் நீந்த ஆரம்பித்து விடும். இது பார்ப்பதற்கு அசல் உண்மையான மீன் தொட்டியினைப் போலவே இருப்பதால் குழந்தைகளின் உற்சாகத்திற்கு கேட்க அளவே இருக்காது.

இந்த மீன்கள் நீந்துவதோடு மட்டுமில்லாமல் இரையும் தின்னும். அதற்கான உண்ணும் பொருட்களையும் குழந்தைகள் வரைந்து விட்டால் இதே போன்று அவற்றினையும் தொட்டிக்குள் செலுத்தி விடலாம். இதன் மூலம் குழந்தைகளின் கற்பனைத் திறன் நிச்சயம் அதிகரிக்கும். வண்ண ஓவியங்கள் அவர்கள் கண் எதிரே உயிர் பெற்று ஓடுவதால் அவர்களின் உலகம் இன்னும் விரிவடையும்.   











இவை எல்லாம் முப்பரிமாண (3D) படங்களை உருவாக்கும் தற்போதைய ஓளி உமிழ் விளக்குக  (LED) நுட்பத்தில்  ஏற்பட்ட புரட்சி என்றுதான் சொல்ல வேண்டும்.   

ஒரு வேளை இந்த வண்ண மீன்கள் வரையும் பிரத்யோக அட்டைகள் தீர்ந்து விட்டால் பிரச்சினை இல்லை. இந்த ஆப்பிள் செயலிகளில் இருந்து தரவிறக்கம் செய்து வேண்டும் அளவிற்கு அச்சிட்டு கொள்ளலாம்.  



இதில் உள்ள பிரச்சினை நம் கைபேசியினை இனி அவர்கள் எடுத்துக் கொள்ள வாய்ப்பு உள்ளது. நம் கைபேசியினை கொடுக்க விருப்பமில்லை எனில் நம் வீட்டில் உள்ள கணிப்பொறி திரையினையே மீன் தொட்டியாக மாற்றி அவர்கள் விளையாடலாம்.


இதற்கான காணொளி விளக்கத்தினை கீழ் காணும் சுட்டியில் காணலாம்.
https://www.youtube.com/watch?t=95&v=LDPHWz9UADQ


ஆப்பிள் செயலிகள் தரவிறக்கம் செய்ய‌
 https://itunes.apple.com/us/app/picturerium/id965771489?mt=8

இதன் விலை ஜப்பானில் 1834 யென் (~946 ரூபாய்). வெளி நாட்டு இணைய சந்தைகளில் 45 டாலர் (~3000 ரூபாய்). மூன்று மடங்கு விலை அதிகம். இன்னும் கொஞ்சம் நாளைக்கு இந்த டிஜிட்டல் மீன் தொட்டிகள் குட்டீசுகள் மத்தியில் பெரும் கிராக்கியினை ஏற்படுத்தினால் ஆச்சரியப்படுவதிற்கில்லை.

Wednesday 8 July 2015


Inviting Manuscript for the Special Issue in Advances in Chemistry Journal (Hindawi Publishers)


We are inviting the regular research articles, review and short communications for the special issue on "Fabrication of graphene-based nanocomposites for energy and environmental applications" to be published in Advances in Chemistry Journal (Hindwai Publishers)

Carbon nanomaterials have attracted huge interest among the communities of materials science, chemical engineering, chemistry, and biology due to their excellent properties. Among them, graphene has attracted increasing interest because of its unique physical and chemical properties, such as its high surface area, good chemical resistance, excellent electrical conductivity, extraordinary mechanical properties, high charge mobility, and thermal conductivity. These peculiar properties have highlighted the potential of this material in a variety of applications. However, despite their excellent properties, pure graphene sheets are limited for many applications. 

To overcome this issue, an ideal solution will involve combining the graphene with functional nanomaterials. In this special issue, we focus on fabrication of graphene-based hybrid nanocomposites for hydrogen production, electrochemical energy devices (eg., supercapacitor, fuel cell, Lithium ion battery), solar energy conversion (eg., photovoltaic and photoelectrochemical devices), and environmental applications (photocatalytic degradation of organic and inorganic pollutants, adsorption of heavy metals, and organic pollutants). To promote communication between scientists of graphene-based composites, we invite researchers to contribute original research articles as well as review articles that will stimulate the continuing efforts to understand the fabrication and application of the graphene-based nanocomposites for energy and environmental applications. I have experience in supercapacitor, fuel cell, Lithium ion battery, hydrogen production, adsorption of metal ion and dyes, and photocatalytic degradation of organic and inorganic pollutants, which is evident from my publications and conference presentations. 




Guest editors have very good experience in photocatalysis, photovoltaic, solar cell, and photoelectrochemical devices.

Manuscript Due
January 22, 2016
First Round of Reviews
April 15, 2016
Publication Date
June 10, 2016





Lead Guest Editor
Yuvaraj Haldorai, Department of Energy and Materials Engineering, Dongguk University, Seoul, South Korea; yuvraj_pd@yahoo.co.in

Guest Editors
Sundaram Senthilarasu, Environment and Sustainability Institute, University of Exeter,
Penryn, Cornwall TR10 9EZ, UK; s.sundaram@exeter.ac.uk

Pitchaimuthu Sudhagar, Photocatalysis International Research Center, Tokyo University of Science, 2641 Yamazaki, Noda, Chiba 278-8510, Japan; vedichi@gmail.com


For further details visit 
http://www.hindawi.com/journals/ac/guidelines/

Tuesday 7 July 2015


 ஜப்பான் கல்வியில் ஏன் முன்னேறிய நாடாக உள்ளது - 3


எமது தோக்கியோ அறிவியல் பல்கலைக் கழகத்தின்   தலைவரும், எமது சர்வதேச போட்டோகேட்டலிஸ்ட் மையத்தின் இயக்குநருமான பேராசிரியர் அகிரா புசுசிமா (Akira Fujishima) அவர்களது நேர்காணல் அமெரிக்க வேதியியல் கழகத்தின் (American Chemical Society) செய்தி இதழான சி&என் (C&En) பத்திரிக்கையில் வந்துள்ளது.



பேராசிரியர் புசுசிமாவின் நேர்காணல் கட்டுரை


பேராசிரியர் புசுசிமாவின் நேர்காணல் கட்டுரை

கடுமையான பணிகளுக்கு இடையில்  எவ்வாறு தனது நேரத்தினை சரியான முறையில் திட்டமிட்டு உழைக்கிறார்  என இந்த நேர்காணலில் சொல்லப் பட்டிருக்கும். 

இந்த நேர்காணலில் கவனிக்கப்படவேண்டிய ஒன்று ஜப்பானின் அறிவியல் வளர்ச்சிக்கு  பேராசிரியர்கள், விஞ்ஞானிகள் பள்ளிக்கு சென்று குழந்தைகளிடம் அறிவியலை வளர்ப்பது ஒன்றுதான் தங்களது தேசத்தினை எதிர்காலத்தில் வளப்படுத்தும் என திடமாக கூறியுள்ளார். இதற்கு ஜப்பானில் பெற்றோரின் ஒத்துழைப்பும் நன்கு உள்ளது. 

வார இறுதியில் நான் இங்குள்ள அறிவியல் அருங்காட்சியகங்களுக்கு செல்லும்போது அநேக பெற்றோர் தங்கள் குழந்தைகளை அருங்காட்சியகத்திற்கு அழைத்து வந்து பொறுமையுடன் அவர்களுக்கு சுற்றிக் காண்பிக்கின்றனர். குழந்தைகளின் அறிவியல் திறனை வளர்ப்பதில் பெற்றோரின் பங்கும் இன்றியமையாதது. 

இன்றைக்கு சீனாவில் இருந்து பள்ளி மாணவர்கள் அவருடன் உரையாட வந்திருந்தனர். அப்போது அவர்களோடு பேசுகையில் பேராசிரிய புசுசிமா பகிந்து கொண்ட மற்றொரு விடயம் ஆச்சரியம் அளித்தது. தனது கண்டுபிடிப்பான போட்டோகேட்டலிஸ்ட்கள் பற்றிய  கண்டுபிடிப்புகள்   மற்றும் அடிப்படை அறிவியலை ஜப்பானின் நடு நிலைப் பள்ளிகளில் பாடத்திட்டமாக வைத்துள்ளார். இதற்கான வாய்ப்பினை ஜப்பான் அரசு இவருக்கு வழங்கி கவுரவித்துள்ளது. கனகாவா  (Kanagawa) மாவட்டத்தில் போட்டோகேட்டலிஸ்ட் அருங்காட்சியகத்தினை அரசின் உதவியுடன் உருவாக்கி உள்ளார் (http://kanagawa-travel-info.com/english/special_report/1475). பள்ளிக் குழந்தைகளுக்கு  சூரியனைப் பற்றியும் அதன் பயன்பாடுகளையும் எளிய முறையில் புரியும் படி கார்ட்டூன் வடிவில் ஒரு புத்தகம் எழுதி உள்ளார். இப்புத்தகம் தற்போது ஆங்கிலம், சீனம், ரஸ்ய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. 


Clean and Green: Know about the Sun. The book written by Prof. Fujishima (For middle school students)

 From the book "Clean and Green: Know about the Sun". The book written by Prof. Fujishima (For middle school students)


 From the book "Clean and Green: Know about the Sun". The book written by Prof. Fujishima (For middle school students)

மேலும் உயர்கல்வி மாணவர்களுக்கு போட்டோ கேட்டலிஸ் பற்றிய அறிவியல் மற்றும் நுட்பங்களை ஜப்பானிய மொழியில் புத்தகமாகவும் எழுதி உள்ளார். எங்கள் மையத்திற்கு குறுகிய கால ஆய்வு செய்ய வரும் ஜப்பானிய இளம் அறிவியல் மாணவர்கள் ஒரு வாரத்திற்குள் இந்த புத்த்கத்தினை படித்து விட்டு அடிப்ப்டை ஆராய்ச்சியில் களம் இறங்கி விடுகிறார்கள். இதுதான் தாய்மொழி வழி கல்வியின் பலம். இது போல் தமிழில் அறிவியல் நுட்பங்களுக்கு பல புத்தகங்களை பேராசிரியர் பெருமக்கள் எளிய நடையில் எழுத வேண்டும்.


 Photocatalyst Book written by Prof. Fujishima (for higher education students)

  Photocatalyst Book written by Prof. Fujishima (for higher education students)

 Photocatalyst Book written by Prof. Fujishima (for higher education students)


இனி வரும் காலங்களில் நமது பாடப் புத்த்கங்களில் உலக அளவில் பிரசித்தி பெற்ற நமது விஞ்ஞானிகளது படைப்புகளை பாடத் திட்டத்தில் கொண்டு வரலாம். குறிப்பாக கடந்த பத்து ஆண்டுகளில் நோபல் பரிசு பெறும் அறிவியல் துறைகளின் சுருக்கங்களையும் நமது நடுநிலைப் பள்ளிகளில் பாடத்திட்டத்தில் கொண்டு வரலாம்.

சமச்சீர் பாடத்திட்டமாகட்டும், சிபிஎஸ்சி பாடத்திட்டமாக இருந்தாலும் குழந்தைகளின் கற்பனைத் திறனை விளையாட்டுடன் ஊக்குவிக்க வில்லை எனில் மீண்டும் மீண்டும் நாம் கைதேர்ந்த அடிமைகளை பன்னாட்டு நிறுவனங்களுக்கு அனுப்ப முடியுமே தவிர நம்மால் பிற்காலத்தில் நோபல் அறிவியலாளர்களை ஒரு போதும் உருவாக்க முடியாது. 

மக்கள் தொகையில் 10 மடங்கு சிறிய நாடான ஜப்பான் ஒவ்வொரு வருடமும் சராசரியாக நோபல் பரிசில் ஏதாவது  துறையில் குறைந்த பட்சம் ஒரு விருதாவது பெற்று விடும். ஜப்பானில் நோபல் பரிசு பெறும் அறிவியலாளருக்கு கோடிக்கணக்கில் அரசு பரிசாக வழங்கி சிறப்பிக்கிறது. இவர்கள் அந்த பணத்தினை கூட சொந்த விசயங்களுக்கு செலவிடாமல் மீண்டும் ஆராய்ச்சி திட்டத்திற்கு கொடுக்கிறார்கள். அதனைக் கொண்டு அந்த நோபல் அறிவியலாளர் தனது துறையினை ஜப்பான் முழுவதும் வியாபிக்கும் வகையில் பல பேராசிரியர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு நிதி உதவி அளிக்கிறார்கள். இதனால் நோபல் பரிசு பெற்ற துறையோடு அவரது அறிவும் பரவலாக எல்லோருக்கும் செல்கிறது. 

இந்தியா தனது நோபல் வரலாற்றில் அறிவியல் துறையில் பேராசிரியர் சர் சி வி இராமன் (1930) மற்றும் பேராசிரியர் சுப்ரமணியன் சந்திரசேகர் (1983) ஆகியோர் மட்டும் பெற்றிருக்கிறார்கள். இவர்களைத் தவிர இந்தியாவினை பூர்விகமாக கொண்ட பிரித்தானிய பேராசிரியர் வெங்கட்ராமன் ராமகிருஸ்ணன் (2009) பெற்றுள்ளார். இவர்களுக்கு பின்னர் பெரிய வெற்றிடம் இன்னும் நிலவுகிறது. 

இந்த லட்சணத்தில் நாம் ஜப்பானியர்களுக்கு ஆங்கிலம் தெரியாது  என கிண்டல் வேறு. 

ஆங்கிலம் அல்லாத பிற மொழிகளை, தாய்மொழியாய் கொண்ட இன்ன பிற நாடுகளான ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஆஸ்திரியா, ரஸ்யா போன்றவை மிக அதிகமான நோபல் பரிசுகளை வென்று தர வரிசையில் முதல் பத்து இடங்களுக்குள் உள்ளது. 





தாய்மொழி வழிக் கல்வியினை உதாசினப் படுத்தி போலி வேடம் போட்ட எந்த இனமும் உருப்பட்டதில்லை என்பதே இதில் இருந்து நமக்கு கிடைக்கும் பெரும் பாடம்.

எது எப்படியோ தாய்மொழி வழிக் கல்வியினை ஆதரிக்கிறீர்களோ இல்லையோ பள்ளிக் குழந்தைகளுக்கான கல்வி பாடத்திட்டத்தில்  எதிர்கால நுட்பங்களை பற்றி அறியும் வகையில் இருக்க வேண்டும் என இனியாவது அரசினை வலியுறுத்துவோம்.

சமீபத்தில் சமச்சீர் புத்தகங்களை இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்து படித்து பார்த்தேன். நல்ல பல தகவல்கள் இருப்பினும் பல முரண்கள் உள்ளது. உதாரணத்திற்கு  இந்தியாவின் ஒப்பற்ற கணித மேதை  இராமானுஜத்தின் எண்களியலில் அவர் செய்த மாய விளையாட்டுகளை (முடிவுறா எண் , பை  எண் உட்பட), அவை எவ்வாறு உலக அளவில் பல்வேறு பொறியியல் துறைகளில் பயன்படுத்தப்படுகிறது என்பதனை விளையாட்டு கணக்குகளாக கணித பாடப்பிரிவில் வைக்கலாம். அதை விடுத்து தற்போதைய ஏழாம் வகுப்பு தமிழ் பாடத்தில் இராமானுஜன் பற்றிய வரலாற்று ரீதியிலான சில தகவல்களை மட்டும் வைத்திருக்கின்றார்கள். நம்மவர்களின் அறிவினை கண்டு  வியப்பின் எல்லைக்கே சென்று விட்டேன். இங்கே ஜப்பான் நாட்டுக்காரன் இராமானுஜத்தினை தலையில் வைத்துக் கொண்டாடுகிறான். அவரது எண்ணியல் கோட்பாடுகளை விளையாட்டுகளாக குழந்தைகளுக்கு செய்து காண்பிக்கிறார்கள் (தோக்கியோ அறிவியல் பல்கலைக்கழகத்தில் உள்ள கணித அருங்காட்சிய ம் ).

 முக்கியமாக அரசியல்வாதிகளை குளிர்விக்கிறேன் பேர் வழி என அவர்களை பற்றிய செய்திகளை பாடப் புத்தகத்தில்  வருந்தி திணிப்பதும் பின்னர் ஆட்சி மாற்றத்தின் போது அவைகளை நீக்குகிறேன் என கோடிக்கணக்கில் பணத்தினை விரயம் செய்யும் கூத்துகளை உடனடியாக நிறுத்தவேண்டும். 

பள்ளிக் குழந்தைகளுக்கான பாடத் திட்ட விளக்கங்களுக்கு தேவையான மாதிரி வடிவங்களுக்கு நாம் இன்னும் மெனக் கெட வேண்டி உள்ளது. அரசு அதற்காக இன்னும் கூடுதல் பணம் செலவு செய்யலாம். இந்த விசயத்தில் ஆசிரியர்களின் ஒத்துழைப்பும் மிக அவசியம். 

முக்கியமாக கவலைக் கிடமாக இருக்கும் அறிவியல் அருங்காட்சியகங்களை  (Science Museum) போர்க்கால அடிப்படையில் புணரமைக்க வேண்டும். இதை சரி செய்தால்தான் ஏன் என்ற கேள்விகளை கேட்டு சிந்திக்கும் தலைமுறையினை உருவாக்க முடியும். 

அதனைப் பற்றி விரிவாக எழுதுகிறேன். 

Monday 6 July 2015

மரத்தினை வாழ விடுங்கள் - Save Trees


சமீப காலமாக சாலையோரத்தில் உள்ள மரங்கள் மிக வேகமாக வெட்டி அழிக்கப்படுகின்றன. இவற்றிற்கு நாம் சொல்லும் காரணம் நகரமயமாக்கல். 

கடந்த பத்து ஆண்டுகளுக்குள் சாலை விரிவாக்கம் என்ற பெயரில் நூற்றாண்டுகள் கடந்த மரங்கள் உட்பட பழமையான மரங்கள் யாவும் வெட்டி அழிக்கப்படுகின்றன. இந்நிகழ்வுகளை பொதுமக்களாகிய நாம் வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டே நகர்ந்து விடுகிறோம்.

சாலையோரத்தில் வெட்டப்படும் மரங்களின்  இலை சிறியதுதான் ஆனால் அது என்ன செய்யும் என்று தெரிந்து கொண்டால் அடுத்த முறை  சாலையோர மரங்களை வெட்டும் போது நிச்சயம் நீங்கள் தடுத்து நிறுத்துவீர்கள்.

கடந்த பத்து ஆண்டுகளில் பன்மடங்கு பெருகி விட்ட இரு சக்கர வாகனங்கள், கனரக வாகனங்கள் ஆகியவற்றில் இருந்து வெளிப்படும் நைட்ரஜன் ஆக்சைடு, கார்பன் டை ஆக்சைடு நச்சு புகையின் அளவும் சரிநிகராக அதிகரித்து விட்டது. இங்குதான் மரத்தின் இலைகள் தங்களது அற்புதமான புனித பணியினை மேற்கொள்கிறது. வாகனங்களில் இருந்து வெளி வரும் நச்சு புகையினை தான் எடுத்துக் கொண்டு ஒளிச்சேர்க்கை என்னும் வேதி வினை மூலம் கார்பன் டை ஆக்சைடு வாய்வினை  நாம் சுவாசிக்கும் ஆக்சிசன் வாய்வினை பரிசாக வழங்குகிறது.இதன் மூலம் மக்களுக்கு ஏற்படும் நுரையீரல் சம்பந்தமான நோய்கள் மட்டுமல்ல தோல் நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களில் இருந்து நம்மை காக்கிறது.

ஒளிச்சேர்க்கை நிகழ்ச்சியின் மூலம் கார்பன் டை ஆக்சைடு நச்சு வாயுக்கள் மனிதர்களுக்கு சுவாசிக்க பயன்படும் ஆக்சிசன் வாயுவினை தருகிறது


 வாகனம் மற்றும் தொழிற்சாலை கழிவு நச்சுகளில் கலந்துள்ள வாயுக்களையும் இந்த மரங்கள்தான் சுத்தகரிக்கின்றன. இது இல்லாவிட்டால் என்ன ஆகும்? ஒன்றும் ஆகாது இந்த நச்சு காற்று வளிமண்டலத்தில் உள்ள இதர கரிம நச்சுகளுடன் சேர்ந்து தரைமட்ட அளவிலான ஓசோன் படலத்தினை (Ground level ozone) உருவாக்கி விடும் ( இது நமது வளி மண்டலத்தின் மீது இருந்து நம்மை காக்கு ஒசோன் படலம் அல்ல).

தரைமட்ட அளவிலான ஓசோன் படலம் என்னவென்று விளக்கமாக சொல்கிறேன்.

வாகனங்களில் இருந்து வெளி வரும் நைட்ரஜன் ஆக்சைடு நச்சு வாயு மற்றும் இதர கரிம நச்சு வாயுக்களுடன் இணைந்து சூரிய ஒளியில் வளிமண்டலத்தில் உள்ள ஆக்சிஜன் (O2) மூலக்கூறுகளை உடைக்க முடியாத O3 மூலக்கூறுககளாக மாறுவதே தரைமட்ட ஓசோன் படலம் எனப்படும். இதனை நம் நுரையீரலால் உடைக்க இயலாது. சொல்லப் போனால் மென்மையான நுரையீரல் கொண்ட நமது குழந்தைகளையும், பெரியவர்களையும் வெகுவாக பாதிக்கும்.


Ground level ozone layer formation


நம் தரை மட்ட அளவில் உருவாகும் இந்த நச்சு ஓசோன் படலம் நமக்கு தீராத நுரையீரல் நோய்களை தரும் மேலும் பயிர்களின் வளர்ச்சியினையும் கெடுக்கும். இதனால் ஆண்டு ஒன்றிற்கு பல இலட்சம் மரணங்களை  இந்த மோசமான வேதிவினை விளைவிக்க்கிறது.அதுமட்டுமல்ல அளவுக்கு அதிகமான சுற்றுப்புற சூழல் சீர் கேட்டினால் வளி மண்டலம் பாதிக்கப்படு அமில மழை பொழியும். இதெல்லாம் நம் நாட்டில் பெரு நகரங்களில் ஏற்கனவே நடக்கும் கொடுமைதான்.


சரி இந்த மரத்தின் இலைகள் செய்யும் வேலையினை நம்மால் செயற்கையாக விஞ்ஞானத்தின் மூலம் செய்ய முடியாதா என கேட்போருக்கு எமது ஆய்வின் மூலம் ஒரு தகவலை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். 

சாலையோர மரங்களில் உள்ள ஒரு இலையினை செயற்கையாக (artificial leaf) டைட்டானியம் டை ஆக்சைடு (TiO2) நானோ பூச்சுகள் மூலம்  1 செமீ அளவிற்கு செய்ய  குறைந்தது 100 ரூபாய் ஆகும்.  அப்படியே செய்தாலும் இலையின் அளவிற்கு திறனுடன் இந்த செயற்கை பூச்சுகள்  செயலாற்றுமா என்பதும் கேள்விக்குறியே. அப்படியென்றால் ஒரு மரத்தில் உள்ள இலைகளை கணக்கில் கொண்டால்  ஒவ்வொரு மரமும் சுத்திகரிப்பு பணியில் கோடிக்கணக்கில்   மதிப்பிட முடியாத பொக்கிசம்.


Photo courtesy: Salem Citizen Forum

இப்பொழுது சொல்லுங்கள் உங்கள் பகுதியில் சாலையோரங்கள் மரங்கள் வெட்டப்படும்போது நீங்கள் வேடிக்கை பார்த்துகொண்டே சென்றால் பின்னாளில் உங்கள் குழந்தைகளோ அல்லது நீங்களோ நேரடியாகவும், மறைமுகமுகாவும் இந்த நச்சு காற்றினால் பாதிக்கப்படுவீர்கள்தானே.

இந்த மரங்கள் நம் சுற்றுப்புற சூழலில் நம்மைப் போலவே சம உரிமை படைத்த பறவைகளும் தங்கும் வீடுகள் ஆகும். அவர்கள் உரிமையின்றி அவர்களது வீடுகளை பறிக்கவும், இடிக்கவும் நமக்கு எந்த அதிகாரமும் இல்லை.

தயவு செய்து பள்ளிக் குழந்தைகளுக்கு இந்த கட்டுரையினை காண்பிக்கவும். எனக்கு அவர்களைப் பற்றிய அக்கறைதான் அதிகம்.


நன்றி:
இக்கட்டுரை எழுத காரணமாக இருந்த Salem Citizen's Forum மற்றும் நாணல் நண்பர்கள் குழுவினருக்கு நன்றி.