Friday 21 July 2017

கனவு மெய்ப்படும்

பெரிய போக்குவரத்து வசதி இல்லாத குக்கிராமத்தில் இருந்து நெடிய போராட்டத்திற்கு பிறகே இந்த இடத்திற்கு நான் வந்துள்ளேன்.
தற்போது, பிரித்தானியாவில் உள்ள சுவான்சி பல்கலைக் கழகத்தில் பொறியியல் கல்லூரி புலத்தில் (College of Engineering) "பல் செயல்பாட்டு மீநுண் அளவிலான‌ வினையூக்கிகள் மற்றும் அதன் பூச்சுகள்" (Multifunctional Nanoscale Catalyst & Coatings) என்ற ஆய்வுக் குழுவைத் தொடங்கியுள்ளேன் என்பதை நண்பர்களுடன் மகிழ்ச்சியாக‌ பகிர்ந்து கொள்கிறேன்.
இந்த வருடத்திற்குள் பிஎச்டி மாணவர்கள், வருகை தரு ஆராய்ச்சியாளர்கள் மற்றும் முது முனைவர்களை எனது ஆய்வுக் குழுவிற்கு தெரிவு செய்ய உள்ளேன். வாய்ப்புகள் குறித்த செய்திகளை எனது முகநூல் பக்கத்தில் தொடர்ந்து பகிர்கிறேன்.
நான் கிளம்பி வந்த இடத்தை திரும்பிப் பார்க்கும் போது இன்னும் அங்கேயே தங்கி விட்டவர்களையும்,என் பால் அன்பு காட்டி என் முன்னேற்றத்தினை ஆசிர்வாதித்த அத்தனை உறவுகளையும் நட்பு வட்டத்தையும் நன்றியோடு நினைவு கூறுகிறேன். என் பலமே நண்பர்களும், ஆசிரியர்களும்தான். அவர்களின் வெற்றியாகவே நான் இங்கே நிற்கிறேன்.
எங்கள் கிராமத்திற்கு விவசாயம் தான் ஆதாரப்புள்ளியே. காவிரி நதியில் இருந்து 4 கிமீ தொலைவில் இருந்தாலும் நீர் பாய்வதற்கு ஏதுவாக இல்லாத வாய்க்காலை உடைய கடைமடை பாசானம் பெறும் சூழலில் தான் எங்கள் ஊர் இருந்தது. இருபது ஆண்டுகளில் பயிர்களை காப்பாற்ற இயலாமல் பல குடும்பங்கள் விவசாயத்தில் இருந்து படிப்படியாக எங்கள் கிராமத்தில் இருந்து வெளியேறியது.
அப்படி விவசாயத்தில் இருந்து வெளியேறிய நடுத்தர வர்க்க குடும்பங்களுக்கு அக்குடும்பத்தில் இருந்த பிள்ளைகளின் கல்விதான் கை கொடுத்தது. அப்படி ஒரு சூழலில் இருந்து வெளியே கிடைத்த வாய்ப்பை பிடித்து மேலே ஏறி வந்தவர்களில் நானும் ஒருவன்.
பிற்படுத்தபட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியல் இனத்தவர் வசிக்கும் எங்கள் கிராமத்தில் திராவிட அரசுகள் கொண்டு வந்த இட ஒதுக்கீடுதான் எங்களை கரையேற்றியது. இந்த தருணத்தில் சமூக நீதிக்காக உழைத்த தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா என்ற இரண்டு பேரரக்கர்களுக்கும் இன்ன பிற ஆளுமைகளுக்கும் என் வெற்றியை சமர்பிக்கிறேன்.
எங்கள் கிராமத்தைப் பொறுத்த வரை நாப்பது ஆண்டுகளுக்கு முன்பு கடந்த தலைமுறையினர் பெற்ற கல்வி, வேலை வாய்ப்பை விட அவர்களின் பிள்ளைகளுக்கு வலுவான கல்வியியும், வேலை வாய்ப்பும் தற்போது கிடைக்க துவங்கியுள்ளது. இந்த வாய்ப்பு இல்லாவிட்டால் எங்கள் கிராமத்தின் கதி என்னவாக ஆகி இருக்கும் என தெரியவில்லை.
சொல்ல முடியாத துயரங்களிலும் அவர்களின் பிள்ளைகளுக்கு நம்பி கல்வியை கொடுத்ததால்தான் இன்று நாங்கள் வெளியே வந்துள்ளோம். சிலர் பிச்சை புகினும் கற்கை நன்றே என்று கல்வியை கடினப்பட்டுதான் அடைந்தார்கள்.
எந்த தங்கத் தட்டிலும் எங்களுக்கான வெற்றிக் கனி வைத்து தரப்படவில்லை. ஆனால், இன்றைக்கு எங்கள் கிராமத்தில் பொறியாளர்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், மருத்துவர், வழக்கறிஞர், ஆராய்ச்சியாளர், வெளிநாட்டில் பணி புரிவோர் என முதல் தலைமுறையாக கல்வியைப் பெற்ற கூட்டம் வெளி உலகின் வெளிச்சத்தை பார்த்திருக்கிறது. இவர்களின் உயரத்தையும், வளர்ச்சியையும் கூட எங்கள் கிராமத்தில் உள்ள பெற்றோர்களால் புரிந்து கொள்ள முடியாது. அந்த அளவிற்குத்தான் அவர்களின் கல்வி இருந்தது. ஆனால் அவர்களைப் பொறுத்த வரை அவர்கள் பட்ட துன்பம் இந்த தலைமுறை பிள்ளைகளுக்கு இருக்காது என்ற மகிழ்ச்சியே.
பாட்டனார் ‍ விவசாயி (கைநாட்டு)
தந்தையார் விவசாயி (பியூசி)
மகன் ஆராய்ச்சியாளர் (பி.எச்.டி)
வாழ்க திராவிடம்

எனக்கு பிறகும் எங்கள் கிராமத்தில் இன்னும் பல நூறு ஆராய்ச்சியாளர்கள் இட ஒதுக்கீட்டு வாய்ப்பின் மூலம் மேலே ஏறி வருவார்கள். அவர்களின் நம்பிக்கையாக என் பயணத்தை இங்கே தொடர்கிறேன். இட ஒதுக்கீட்டு வசதி மூலம் கல்வி பெற்று சாதிப்பவர்களுக்கு அறிவு இல்லை என்னும் கூட்டத்தை எங்கள் அறிவாலும், சாதனைகளாலும் திருப்பி அடிப்போம்.
உங்களின் அன்பும், ஆசிர்வாதமும் எப்போதும் எம்மை வழிநடத்தும் என நம்புகிறேன்.
முனைவர் சுதாகர் பிச்சைமுத்து
சுவான்சி பல்கலைக் கழகம்
வேல்ஸ், பிரித்தானியா.

இச்செய்தி குறித்து வணக்கம் இந்தியா மின் இதழில் வெளி வந்த கட்டுரை.


Standing in front of Great Hall, Swansea University (Bay Campus)


Monday 10 July 2017

வெகுசன அறிவியல் -2 

(‍மக்கள் கூடும் சந்தையில் அறிவியல் சோதனைகள்) – Soapbox Science

கடந்த 25 ஆண்டுகளில் பொது மக்களின் அன்றாட வாழ்வில் மருத்துவம், வீட்டு பொருட்கள் உபயோகம், பயணம், சமையல், உணவுப் பொருட்களை பதப்படுத்துதல், விவசாயம், தகவல் தொடர்பு, கற்றல், பருவ நிலை கணிப்பு என ஒவ்வொரு துறையிலும் உள்ள‌ சிரமங்களை அறிவியல் நுட்ப வளர்ச்சியானது பெருமளவு எளிதாக்கியுள்ளது.

ஆனால் இத்தையக நுட்பங்கள் எப்படி கண்டுபிடிக்கப்படுகிறது, குறிப்பாக‌ ஆராய்ச்சி நிறுவனங்களில் இது சார்ந்த ஆய்வுப் பணிகளை எப்படி செய்கிறார்கள்? இவற்றில் உள்ள அடிப்படை அறிவியல் என்ன என்றெல்லாம் பொது மக்களுக்கு தெரிய வாய்ப்பில்லை.

பெரும்பாலும் பொதுமக்களுக்கும் நுட்பங்களுக்கும் உள்ள தொடர்பு என்பது சந்தையில் கிடைக்கும் பொருட்களை பயன்படுத்துதலோடு மட்டுமே உள்ளது. அப்படியானால் வளரும் இளம் தலை முறைக்கு எப்படி இந்த அறிவியல் நுட்ப அறிவை கொண்டு செல்வது? இனி எதிர்காலத்தில் நம்க்கு வரப்போகும் தலைமுறைகள் எதிர் நோக்கும் சவால்கள் என்ன என்றெல்லாம் விவாதிப்பதற்கு பொது மக்களுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்குமான ஒரு தொடர்பு புள்ளி என்பது ஒரு முக்கியமான தேவையாகவே உள்ளது. ஆகவே அது சார்ந்த ஒரு தளத்தினை ஏற்படுத்துவது குறித்து நம் இந்திய சூழலில் நாம் யோசிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

இந்த சிக்கலைத் தீர்க்க பிரித்தானியாவில் ஒவ்வொரு நகரிலும் மக்கள் அதிகமாக‌ கூடும் சந்தைகளில், அந்தந்த நகரில் உள்ள‌ பல்கலைக் கழகத்தில் பணியாற்றும் அறிவியலாளர்களைக் கொண்டு  திறந்த வெளியில் எளிமையாக, செய்முறை விளக்கத்தோடு அறிவியல் நுட்பத்தை விளக்குகிறார்கள். இந்நிகழ்வின் பெயர் சோப்பாக்ஸ் சயின்ஸ் (Soapbox Sceicne). சோப்பு நுரைக் குமிழிகளை காற்றில் ஊதும் போது எப்படி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் அது ஈர்க்கிறதோ அது போல எளிய அறிவியல் சோதனைகள் மூலம் மக்களை ஈர்க்க முயற்ச்சிக்கிறார்கள்.

குறிப்பாக இந்நிகழ்வை முழுக்க முழுக்க‌ பெண் ஆராய்ச்சியாளர்கள் முன்நின்று நடத்துவதுதான் இந்நிகழ்வின் தனிச்சிறப்பே. இதன் மூலம் பாலின பாகுபாட்டில் (Gender inequality) பெண்களுக்கான தடையினை உடைத்து அறிவியல் துறையின் தூதராக‌ ஒரு பெண் ஆற்றல் பெருக்கோடு வருவதை இளம் தலைமுறையினர் ஒரு முன்னுதாரணமாக கொள்வதற்கான வாய்ப்பை இந்நிகழ்வு ஏற்படுத்தி தருகிறது.

இந்நிகழ்வு எப்போது, யாரால், எப்படி துவங்கபப்ட்டது?
இங்கிலாந்தில் உள்ள லண்டன் நகரில் ஹைடு பூங்கா (Hyde park) உள்ளது. இப்பூங்காவில் பொது மக்கள் தங்களுக்கு விருப்பப்படும் துறைகளில் மற்றவர்களோடு திறந்த வெளியில் உரையாட முடியும். இதற்காக அப்பூங்காவில் “ஸ்பீக்கர் கார்னர்” என்னும் பகுதியினை ஏற்படுத்தி வைத்துள்ளனர். வழமையாக கல்வி நிறுவனங்களில் மாணவர்களோடு உரையாடுவதற்கு ஆசிரியர்கள் பயன்படுத்தும் போர்டு, பவர் பாயின்ட், திரை, என எந்த வசதியும் இல்லாமல் செறிவு மிக்க தங்கள் உரையின் மூலம் நேரடியாக மக்களோடு இப்பூங்காவில் உரையாடுகிறார்கள்.

இந்த “ஸ்பீக்கர் கார்னர்” முறையினை கையாண்டு ஏன் அறிவியல் நுட்பத்தை பொது மக்களுக்கு எளிய முறையில் ஏன் விளக்கி சொல்ல முடியாது என்று யோசித்ததன் விளைவே “சோப்பாக்ஸ் சயின்ஸ்” நிகழ்வு.

யுனிவர்சிட்டி காலேஜ் ஆப் லண்டனின் பணிபுரியும் முனைவர் செய்ரியன் சம்மர் (Dr Seirian Sumner) மற்றும் விலங்கியல் நிறுவனத்தில் பணிபுரியும் முனைவர் நாதெல்லி பெட்ரொல்லி (Dr Nathalie Pettorelli) என்ற இரண்டு பெண் அறிவியலாளர்களும் கூட்டாக இணைந்து தங்கள் கண்டுபிடிப்புகளை மக்கள் முன்பு வைத்து திறந்த வெளியில்  உரையாடுவதற்கான தளத்தை “சோப்பாக்ஸ் சயின்ஸ்” என்னும் பெயரில் ஏற்படுத்தினார்கள்.  

இந்நிகழ்ச்சியின் மூலம் STEM என்றழைக்கப்படும் அறிவியல், நுட்பம், பொறியியல் மற்றும் கணிதத் துறைகளில் பணியாற்றும் பெண் ஆராய்ச்சியாளர்கள் தங்களது அறிவியல் கண்டுபிடிப்புகளை பொது மக்கள் முன்பு விளக்குவார்கள். இந்த இருவரது முயற்சியால் இன்று பிரித்தானியாவின் பல முக்கிய நகரங்களில் இந்நிகழ்ச்சியினை ஆராய்ச்சி நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் முன்னின்று நடத்தி வருகின்றனர். இவர்களது பணியை மேனாள் பிரித்தானியாவின் பிரதமர் கேமரூன் இவர்களுக்கு “பாயின்ட் ஆப் லைட்” (Points of Light) என்னும் விருதினை தந்து கெளரவித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமையன்று வேல்சு தேசத்தில் உள்ள சுவான்சி நகரில் உள்ள நகர் மன்ற பகுதியில் சோப்பாக்ஸ் சயின்ஸ் நிகழ்வை சுவான்சி பல்கலைக் கழகத்தில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் நடத்தினார்கள்.

இந்நிகழ்வில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும்  ஆர்வமாக கலந்து கொண்டனர். தெருவில் ஒரு சிறு மர மேடை அமைத்து அதன் மீது வெள்ளை நிறத்தில் ஆய்வக கோட்டை மாட்டிக் கொண்டு பெண் ஆராய்ச்சியாளர்கள் தங்களது கண்டுபிடிப்புகளை அதன் அடிப்படையோடு, சிறிய மாடல், வரைபடம், பொம்மைகள் இவற்றைக் கொண்டு நேரிடையாக விளக்கினர்.

நம் மூளை  வயதாகும் போது என்ன ஆகும்? மூளையின் செயல்பாடுகள் என்ன? டிமன்சியா என்னும் மறதி நோய் எவ்வாறு ஏற்படுகிறது என்பதனை அருமையான வண்ணப்படங்களோடு விளக்கினர். இதற்காக மூளை படத்தினை வரைந்து நமக்கு ஏற்படும் உணர்வுகளை தனித் தனி அட்டைகளில் எழுதி பொது மக்களையே தேர்ந்தெடுக்க வைத்தனர். உதாரணத்திற்கு மகிழ்ச்சி, கவலை, சிந்தனை, பாடல் என ஒவ்வொரு நிகழ்வையும் நமது மூளை எந்த பகுதியில் செயலாற்றும் என விளையாட்டு மூலம் விளக்கினர்.

மின் திரைகளில் எப்படி வன்ணம் உருவாகுகிறது. இந்த கருவிகளில் உள்ள நெகிழ் தன்மை (Flexible surface) உடைய பரப்பில் எப்படி மெல்லிய ஏடுகளாக மின்சுற்றுகளை ( thin film electrical circuit) அச்சடித்தல் (printing) முறையில் தயாரிக்கிறார்கள் என்பதை SPECIFIC என்ற ஆய்வு மையத்தில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் நேரிடையாக சோதனை மூலம் விளக்கினர். ஸ்கீர்ன் பிரின்டிங் முறையில் மின் சுற்றுகளை தயாரிக்க அதற்கான இங்க், பெயின்ட்டுகள் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது என்பதையும் நேரடியாக விளக்கினர்.

தேனீக்களின் பெட்டிகளை நேரடியாக கொண்டு வந்து அவை எவ்வாறு தேனை வெளியில் இருந்து சேகரித்து வந்து பெட்டியில் கூட்டில் தேனை சேமிக்கிறது என அருமையாக விளக்கிச் சொன்னார்கள்.

கோடை காலத்தில் ஒரு கட்டிடத்தின் உள்ளே எப்படி  குளிர்ச்சியாகவும், அதே நேரம் குளிர் காலத்தில் அதே கட்டிடம் எப்படி உள்ளிருக்கும் சூட்டை வெளியே விடாமல் வெதுவெதுப்பாக வைத்திருக்கிறது (solar thermal systems) என்பதை மிக அருமையாக விளக்கி காட்டினார்கள்.

நவீன நுட்ப வளர்ச்சியில் கம்பியில்லா (Wireless) தொலைதொடர்பில் எப்படி இணையத்தில் தகவலை பெறமுடிகிறது என விளக்கி புரிய வைத்தார்கள்.  அங்கு வைக்கப்பட்டு இருந்த வாழைப்பழத்தினை கொண்டு செய்யப்பட்ட பியானோ போன்ற இசை எழுப்பும் கருவி குழந்தைகளை மிகவும் குதூகலப்படுத்தியது.

நம் உடலில் உள்ள மரபணு மூலக்கூறுகள் எப்படி இருக்கும் என்பதை எளிய மாடல் விளையாட்டு மூலம் குழந்தைகளுக்கும் பெரியவர்களும் தெளிவாக புரியும் படி விளக்கி காட்டினார்கள். இந்நிகழ்வில் வைக்கப்பட்டு இருந்த மிட்டாய்களை குச்சியால் இணைத்து குழந்தைகள் விளையாடினர். இந்த மிட்டாய் பொம்மை மூலம் மரபணு எப்படி இருக்கும் என்று விளக்கி சொன்னதும் குழந்தைகளுக்கு அப்படி ஒரு மகிழ்ச்சி. இந்த சோதனை மூலம் செயற்கை நுண்ணறிவு நுட்பத்தினை கொண்டு நம் மரபணு மூலக்கூறுகளில் ஏற்படும் முறிவை அல்லது சேதத்தினை சரி செய்வது என்று எளிதாக புரியும் சொன்னது எல்லோரையும் ஆச்சரியப்படுத்தியது.

இப்படி 12 விதமான‌ அறிவியல் நுட்ப சோதனைகளை தனித்தனியாக‌ 30 நிமிடத்திற்கு விளக்கினர். ஒருவர் மேடையில் பேசும் போது இரண்டு தன்னார்வலர்கள் அவருக்கு உதவியாக இருந்தனர். சில தன்னார்வலர்கள் பொது மக்களிடையே  படிவத்தை தந்து இந்த சோதனைகளில் இருந்து எத்தையக அறிவியலை நீங்கள் தெரிந்து கொண்டீர்கள் என்று கருத்துகளை கேட்டு தொகுத்து கொண்டிருந்தனர்.

ஒவ்வொரு நிகழ்விலும் சோப்பு நுரைக் குமிழிகளை ஊதியபடியே இருந்தனர். அவை வானில் சின்ன சின்னதாய் பறந்த படியே இருந்தது. பறந்து கொண்டிருந்த ஒவ்வொரு குமிழும் பெண் கல்வி, நிரூபணங்களை நோக்கிய அறிவியல், நுட்பத்தினால் சமூகத்திற்கு ஏற்படும் மேம்பாடு, குழந்தைகளின் கற்பனை என்று வேறு வேறு நம்பிக்கைகளை நமக்கு சொல்வதாய் இருந்தது.
பிரித்தானியாவில் துவங்கிய இந்த வெகுசன அறிவியல் முன்னெடுப்பு உலகமெங்கும் பரவி பெண் கல்வியில் நிச்சயம் மேம்பாட்டினை ஏற்படுத்தும் என திடமாக நம்புகிறேன்.


இது போன்ற திறந்த வெளி அறிவியல் நுட்ப உரையாடலை தமிழக சூழலில் நிச்சயம் முன்னெடுக்கலாம். 























Sunday 9 July 2017

மொழி என்னும் பெருவரம்-2 மொழி பரிமாற்றக் கருவிகள் (Language translators)

இன்று சந்தையில் கிடைக்கும் எலக்ரானிக் கருவிகளை ஒப்பிடுகையில், இந்தியாவில் அதிகம் விற்க வேண்டியது மொழி பரிமாற்று கருவிகள்தான் (Language translators).

ஏனெனில் இந்தியாவில் அரசு அலுவல் மொழியாகவே 22 மொழிகள் உள்ளது. ஏறத்தாழ 130 கோடி மக்கள் உள்ள இந்திய தேசத்தில் மொழி சார்ந்து மிகப்பெரிய வணிக சந்தையே உள்ளது.ஆனால் இந்த மொழிகளை ஒவ்வொரு மாநிலத்தவரும் எளிதாக அறிவதற்கான ஒரு கருவி ஏன் இது வரை செய்யப்படவே இல்லை என்பது மிகப்பெரிய ஆச்சரியத்தை தருகிறது.

இந்த மொழிபரிமாற்று வசதி இந்திய பாராளுமன்றத்தில் (simultaneous interpretation system) உள்ளது. மொழிவாரி மாநில உறுப்பினர்களுக்கு ஏதுவாக பிற மாநில உறுப்பினர்கள் பேசுவதை அவர்கள் விரும்பும் மொழிக்கு  மாற்றி தருவார்கள். பல் மொழி (multiple languages) பேசும் ஐ.நா சபை, ஐரோப்பிய மன்றம் இவற்றில் இது போன்ற வசதி உண்டு. இந்தியாவில் பாரளுமன்ற உறுப்பினர்கள் அவர்கள் காதில் போட்டுக் கொண்டிருக்கும் ஹெட் போனில் உறுப்பினர்கள் பேசுவதை துல்லியமாக கேட்பதோடு அவர்கள் விரும்பும் அலுவல் மொழியில் (selected list) ஒன்றை தேர்ந்தெடுக்கும் வசதியும் உள்ளது.

இவ்வாறான மொழி பரிமாற்று கருவிகளில் உள்ள நுட்பம் இருபது ஆண்டுகளுக்கு முன்பு சந்தையில் அதிக விலைக்கு மட்டுமே கிடைத்தது. ஆனால், இன்று எலக்ரானியல் துறையில் ஏற்பட்ட நவீன வளர்ச்சி மொழி பரிமாற்று துறையில் வியத்தகு வசதிகளை ஏற்படுத்தி உள்ளதோடு மிகக் குறைந்த விலைக்கும் இத்தையக கருவிகள் கிடைக்கிறது. இன்றைக்கு மக்கள் வெகுவாக பயன்படுத்தும் கையடக்க கூகுள், ஆன்ட்ராய்ட் மொபைல் பேசிகளில் கூட மொழி பரிமாற்று வசதி எளிதாக வந்துவிட்டது.

சீனா, கொரியா, ஜப்பான் நாடுகளில் கையடக்க அளவில் நாம் பயன்படுத்தும் கால்குலேட்டர் போல‌ மொழி பரிமாற்று கருவிகள் கிடைக்கிறது.  இவர்களது மொழியினை உடனுக்குடன் ஆங்கிலத்தில் மொழி பரிமாற்றம் செய்து கொடுப்பதால் வர்த்தக தளத்தில்   பிற மொழி பேசுபவர்களுடனான‌ உரையாடலை எளிதாக்கி உள்ளது.  மேலும் இந்நாடுகளில் உள்ள பள்ளி, பல்கலைக் கழக மாணவர்கள் சொல் அகராதியாகவும், ஆராய்ச்சி கட்டுரைகளை மொழி பெயர்க்க, ஆங்கிலத்தில் உள்ள உயர்கல்வி புத்தகங்களை புரிந்து கொள்ள அதிகமாக பயன்படுத்துகின்றனர்.


சந்தையில் கிடைக்கும் மொழி பரிமாற்று கருவிகள்.

ஆனால் இந்தியா போன்ற பல் மொழி பேசும் நாட்டில் இந்த கருவிகளை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யலாம். இந்த வசதி இந்தியாவில் வணிக நிமித்தம் ஒரு மாநிலத்தில் இருந்து மற்ற மாநிலத்திற்கு பயணம் செய்பவர்கள், ஓட்டுநர்கள், சுற்றுலா பயணிகள், விடுதி சிப்பந்திகள் என பல தரப்பட்ட மக்களுக்கு மிக்கபெரிய அளவில் கை கொடுக்கும்.

தமிழ் மொழியில் உள்ள ஒரு வார்த்தையினை குரலாக பேசி உள்ளீடாக தரும் போது அதனை ஆங்கிலம், மலையாளம், கன்னடம், தெலுகு, இந்தி, வங்காளம், குஜராத்தி என எல்லா மொழிகளையும் பரிமாற்றும் வசதியை எளிதாக கொண்டு வர முடியும்.

இன்றைக்கு மீநுண் நுட்பத்தில் (nanotechnology) தகவல் சேமிப்பில் ஏற்பட்டுள்ள புரட்சி இத்தையக பன்மொழி பரிமாற்றத்தினை மேலும் எளிதாக்க தர இயலும். அதாவது இன்று நீங்கள் பயன்படுத்தும் 8 ஜிகா பைட் (8 GB) உள்ள டிரைவில் ஒரு சொல் அகராதியை நிறுவி விட்டால், நீங்கள் தேடும் வார்த்தையினை தட்டச்சும் போது அதற்கு இணையான பிற மொழி வார்த்தையினை உடனே பெறலாம். இவ்வாறு நீங்கள் செய்யும் போது ஒரு வருடத்தில் குறைந்தது 100 வார்த்தைகளையாவது நீங்கள் திருப்பி திருப்பி மொழி பரிமாற்றம் செய்யும் போது அதற்கு இணையான வார்த்தைகளை உங்கள் மூளை பதிவு செய்து கொள்ளும்.மெனக் கெட்டு இந்தியினை திணித்து, உள்ளூர்காரர்களின் தாய்மொழியையும் சிதைத்துத்தான் ஒரு மொழியை வளர்க்க வேண்டியதில்லை.

ஐரோப்பிய ஒன்றியப்  பகுதிகளில் நான் அடிக்கடி பயணம் செய்யும் போது நான் ஆச்சரியப் படுவது உள்ளங்கை அளவே உள்ள மிகச்சிறிய சொல் அகராதிகள் (mini dictionary) புத்தக சந்தைகளில் குறைந்த விலைக்கு கிடைக்கிறது. இவற்றோடு ஆங்கிலத்தில் இருந்து எல்லா மொழிகளுக்குமான சொல் அகராதிகளும் சந்தையில் கிடைக்கிறது. ஒரு முறை பயணத்தில் சோதனை முயற்சியாக இந்த கையடக்க சொல் அகராதியை பயன்படுத்துங்களேன். அடுத்த முறை நீங்கள் பத்து புதிய வார்த்தைகளையாவது மற்றொரு மொழியில் தெரிந்து வைத்திருப்பீர்கள்.

ஆயிரக்கணக்கான பிற மொழி வார்த்தைகளை எலக்ரானியல் கருவிகளில் தரும் போது அதற்கான நினைவக (memory) வசதி உள்ளதா?

2000 ஆம் ஆண்டில் எலக்ரானிக் சந்தையில் USB (universal series bus) டிரைவ் அறிமுகப்படுத்தப்பட்ட போது அதன் டேட்டா கொள்ளளவு 8 MB (1 MB= 1048576 Byte). அன்றைய கால கட்டத்தில் வழமையாக பயன்படுத்தப்பட்டு வந்த 3.5 இஞ்ச் அளவுள்ள பிளாப்பி டிஸ்க்கின் நினைவக‌ கொள்ளளவை விட 11,380 மடங்கு USB டிரைவின்  கொள்ளளவு  அதிகம்.

பிறகு USB டிரைவில் உள்ள நினைவகங்களில் டேட்டாவை பதிந்து வைக்கும் வேகம் (மெகாபைட்/செகன்டு), அதில் பயன்படுத்தப்படும் குறைகடத்தி (semiconductor) பொருள் என பல்வேறு வளர்ச்சியினால் தற்போது வடிவத்தில், எடையில் அதே அளவுள்ள 8 MB USB டிரைவின் இடத்தில் 8ஜிபி, 256 ஜிபி, 512 ஜிபி வரை தற்போது கிடைக்கிறது.  தற்போது தற்போது நினைவகத்தின் கொள்ளளவு “டெரா பைட்” அளவில் இன்னும் விரிவடைந்து ஒரு நூலகத்தில் உள்ள அத்தனை புத்தகங்களையும் சுருக்கி சட்டைப்பைக்குள் வைக்கும் அளவிற்கு சென்று கொண்டுள்ளது.

சரி இப்போது விசயத்திற்கு வருகிறேன்.

மேலே சொன்னபடி, கடந்த காலத்தை ஒப்பிடும் போது மொழி பரிமாற்று கருவிகள் தமிழில் இருந்து பல மொழிகளையும் உடனுக்குடன் மொழி பெயர்க்கும் வண்ணம் செய்ய நினைவக கருவிகளின் நுட்ப வளர்ச்சி நிச்சயம் கை கொடுக்கும். குறைந்த பட்சம் ஆங்கிலம், இந்தி, தென்னிந்திய மொழிகள் உள்ளிட்ட ஆறு மொழிகளுக்கான சொல் அகராதியை உடனுக்குடன் வார்த்தைகளாக மொழி பெயர்க்கும் கருவிகளை மிகக் குறைந்த விலையில் சந்தைக்கு கொண்டு வரலாம். பின்னர் குரல் உள்ளீட்டு மொழி பரிமாற்று கருவிகளை (audio translator) வெகு எளிதாக கொண்டு வரலாம்.

சமீபத்தில் உடனுக்குடன் குரல் பரிமாற்றம் செய்யும் (instantaneous interpretation) கருவியினை சீனா உலக‌ சந்தையில் அறிமுகப்படுத்தி உள்ளது. சீன மொழியில் எவ்வளவு பெரிய வாக்கியத்தினை பேசினாலும் உடனடியாக ஆங்கிலத்திலும், அதே போல ஆங்கிலத்தில் இருந்து சீன மொழிக்கும் பரிமாற்றம் செய்து தருகிறது இக்கருவி. ஜப்பானியர்கள் ஒரு படி மேலே போய் உடையில் அணிந்து கொள்ளும் (ili wearable translator) மொழி பரிமாற்று கருவிகளை சந்தைக்கு கொண்டு வந்துள்ளனர். இத்தையக வசதி அந்நாட்டிற்கு வணிக ரீதியில் வருபவர்களுடன் உரையாடுவதற்கு எளிதில் கை கொடுக்கிறது.

World first wearable language translator (ili- Japan product)

Pilot: Language Translator (smart earpiece language translator)

இந்த குரல் பரிமாற்று கருவிகளில் மற்றொரு வசதியும் உள்ளது. ஒரு மொழியில் இருந்து மற்றொரு மொழிக்கு புத்தகங்களை மொழி பெயர்க்கும் போது அதனை அப்புத்தகம் எழுதப்பட்ட மொழியில் ஒருவர் பேசி குரல் உள்ளீடாக தந்து விட்டால் போதும். நாம் விரும்பும் மொழிக்கு எளிதாக பரிமாற்றம் செய்து கொள்ளலாம். இதன் மூலம் ஒரு மொழியில் கிடைக்கும் தகவல்கள் மற்றொரு மொழியினருக்கும் எளிதாக கொண்டு செல்லலாம். தற்போது சந்தையில் கிடைக்கும் ஆடியோ புத்தகங்களை இதற்கு நல்ல உதாரணமாக சொல்லலாம்.

விமானப் பயணங்களில் சிப்பந்திகள் பாதுகாப்பு அறிவிப்புகளை ஒரு மொழியில் தரும் போது அதனை தேவைப்படும் உள்ளூர் மொழிக்கும் மாற்றிக் கொள்வதற்கான‌ வசதிகளை எளிதாக இந்த நுட்பத்தின் மூலம் கொண்டு வர முடியும்.

தமிழ் மொழியினை நுகர்வு சந்தைகளில் பயன்படுத்தும் போது நம்மவர்களுக்கு பெரிய அளவில் வேலை வாய்ப்பினை ஏற்படுத்தும். மொழி பரிமாற்ற விசயத்தில் நாம் நகர வேண்டிய தளம் இதுவே. நவீன நுட்பங்கள் உதவியுடன் தமிழகத்தின் சுற்றுலா தலங்களில் ஆடியோ கைடு எனப்படும் குரல் உள்ளீட்டு மொழி பரிமாற்ற கருவிகளை அறிமுகப்படுத்தலாம். தமிழகத்திற்கு வரும் பல நாட்டவருக்கும் நம் கலாச்சார தகவல்களை எளிதில் பதிய வைக்க முடியும்.


சந்தையில் கிடைக்கும் குரல் வழி சுற்றுலா வழிகாட்டி கருவிகள் (audio tour guide devices)


At Alhambra palace, Spain. Wearing audio tour guide device.

அத்தோடு எலக்ரானியல் கருவிகளில் தமிழை ஒரு இயக்கு மொழியாக (operating language) மாற்ற இந்த வசதி பெரிதும் உதவும்.

இப்படி நாம் சொல்லிக் கொண்டே போகலாம். ஆகவே இதில் முதல்படியாக தமிழில் இருந்து ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளுக்கான எலக்ரானியல் சொல் அகராதியை தயார் செய்வோம்.

முனைவர் சுதாகர் பிச்சைமுத்து
E-mail: vedichi@gmail.com
சுவான்சி பல்கலைக் கழகம்
09-07-2017




Wednesday 5 July 2017

நான் வழக்காம சாப்பிடற உணவகத்தில் இன்றைக்கு சாப்பிட்டுக் கொண்டிருந்த போது காவல்துறை பெண்மணி இரண்டு பேர் நகர சோதனைக்கு குதிரையில் வந்து கொண்டு இருந்தார்கள். இதமான வெயில் வெளியே அடித்துக் கொண்டிருந்தது.

அவர்களுக்கு எதாவது சாப்பிடலாம் என்று இருந்திருக்கும் போல் தெரிகிறது. ஒரு வழியா பார்க்கிங் தேடி நான் சாப்பிட்டுக் கொண்டிருந்த உணவகத்தின் வாசலில் கொண்டு வந்து குதிரையை நிறுத்தி கொண்டு இருந்தார்கள்.நான் சாப்பிட்டுக் கொண்டிருந்த உணவகத்தின் சிப்பந்தி வெளியே சென்று உங்களுக்கு உணவருந்த ஏதேனும் வேண்டுமா? என கனிவோடு விசாரித்துக் கொண்டிருந்தார். அவர்கள் நன்றி என்று சொல்லி விட்டு ஒரு காவலர் மட்டும் அருகில் இருந்த ஐஸ் கிரீம் கடைக்கு சென்றார்.

நான் சாப்பிட்டு முடித்து விட்டு வெளியே வந்து அந்த காவலர்களுக்கு ஒரு ஹாய் சொல்லி விட்டு, எப்படி இவ்வளவு உயரமான குதிரைகளை சமாளிக்கிறீர்கள் என கேட்டேன். இந்தியாவில் பெரும்பாலும் குதிரைகள் இவ்வளவு உயரம் கிடையாது என சொன்னேன். ஓ அப்படியா என ஆச்சரியமாக கேட்டார்கள். நான் பேசிக் கொண்டிருந்த போது ஒரு சீன யுவதி குதிரையின் முகத்தில் வாஞ்சையாக தடவிக் கொடுத்தாள்.

உண்மையில் இவ்வளவு உயரமான குதிரைகளை கடுமையான உடற் பயிற்சியோடு கூடிய உடற் கட்டு இருந்தால்தான் சமாளிக்க முடியும். இதன் மீது ஏறுவதற்கே தனியாக ஏணி தேவைப்படும் போல. இயல்பாகவே ஐரோப்பிய பெண்மணிகள் தங்கள் உடல் நலத்தை பேணுவதில் அதிகம் அக்கறை செலுத்துகின்றனர்.

குறிப்பாக‌ தினமும் மெது ஓட்டம், மாரத்தான், நீச்சல், கடலில் பாய் மரம் ஓட்டுதல், குழு விளையாட்டு என எல்லா வயதிலும் தங்கள் உடற்பயிற்சியினை நிறுத்துவதே இல்லை.

இந்த இரும்பு பெண்களோடு ஒப்பிடுகையில் என் பள்ளி காலத்தில் நான் பார்த்த பெண்கள் இருந்தார்கள். கட்டு நிறைய கரும்பு தோகையை, பச்சை கோரை, 20 அடி நீளமுள்ள விட்டக் குச்சி கட்டை இவற்றை எல்லாம் அலாக்காக தூக்கிக் கொண்டு போவதை எங்கள் கிராமத்தில் இயல்பாக‌ கடந்து இருக்கேன். அந்த அளவுக்கு அவர்களது உழைப்பும், சாப்பாடும் இருந்துச்சு. ஆனாலும் அவர்களுடைய உடல் நலன் மீது அவர்களுக்கு எந்த அக்கறையும் இருக்காது, அல்லது கவனிக்க கூட அனுமதிக்காத‌ சூழலில்தான் இருந்தார்கள். தங்கள் உடல் நலத்தை விட தங்கள் குடும்பத்திற்காகவே ஓடி ஓடி தேய்ந்தார்கள்.

காலம் நிறைய மாறி இருக்கிறது. உடல் உழைப்பு வழியாக‌ பெண்கள் மீதான‌ அடக்குமுறைக்கு நவீன நுட்பங்கள் விடுதலை தந்துள்ளது. அதே வேளை அவர்கள் உடல் நலத்தில் போதிய அக்கறை செலுத்துகிறார்களா எனத் தெரியவில்லை.

சிறிது நேரம் அந்த காவலர்களுடன் பேசி விட்டு நான் கிளம்பி விட்டேன்.

இங்கே உள்ள காவலர்களோடு மட்டும் எப்படி இவ்வளவு இயல்பாக உரையாட முடிகிறது. வேற்றுக் கிரக வாசிகள் போல் அவர்களை பார்த்து ஒதுங்காமல் எல்லோரும் புன்னகையோடு எதிர் கொள்கிறார்கள். காரணம் இங்கே ஆரம்ப பள்ளியில் காவலர்கள் நேரடியாக பள்ளிக்கு வந்து குழந்தைகளுடன் உரையாடுகிறார்கள். காவலரின் பணி என்ன, அவர்களை எப்படி தொடர்பு கொள்ள வேண்டும் என விளக்குகிறார்கள். இதுதான் ஒரு இயல்பான இறுக்கமற்ற சூழலை இங்கே வைத்துள்ளது.

காவலர்கள் நம்மிடம் எதிர்பார்ப்பது நட்பு கலந்த புன்னகையும், அக்கறையான விசாரிப்புகளுமே. நம் பள்ளி பாடத்திட்டத்தில் இந்த முறையினை கொண்டு வரலாம்.

கடும் கோடையில், மழையில் நம் ஊரில் இது போல் சாலை பாதுகாப்பிலும், உள்ளூர் பந்தோபஸ்து பணியிலும் இருப்பவர்களிடம் ஹலோ என்று ஒரு புன்னைகை செய்யுங்கள். எல்லா காக்கி சட்டைக்குள்ளும் இருப்பவர் மனிதர்கள்தானே!



Tuesday 4 July 2017

 ஜப்பானின் மிக நீண்ட சூரிய மின் உற்பத்தி நிலையம்

உலகின் முக்கியமான சர்வதேச பறப்பகங்களில் ஒன்று ஜப்பானில் உள்ள‌ நரிதா (Narita) சர்வதேச பறப்பகம். இப்பறப்பம் ஜப்பானின் சிபா (Chiba) மாவட்டத்தில் எல்லையில் உள்ளது. தோக்கியோ நகரில் இருந்து ஏறத்தாழ 40 கிமீ தொலைவில் உள்ளது. இப்பறப்பகத்திற்கு தோக்கியோ நகரில் இருந்து செல்லும்  ஸ்கை ஆக்சஸ், கொக்குசோ (Hokuso Railways) ரயில் தடத்தில் பத்து கி.மீ நீளத்திற்கு சூரிய மின் நிலையத்தினை அமைத்துள்ளனர். இரயில் தடத்தின் பக்கவாட்டில் மீதமுள்ள காலியிடத்தில் இந்த மின்நிலையத்தினை அமைத்துள்ளனர்.

நரிதா ஸ்கை ஆக்சஸ் ரயில் வழித் தடத்தினை காட்டும் படம். இதில் முதல் படத்தில் மஞ்சள் கோடிட்டு காட்டிய 10 கிமீ தொலைவிற்கு சோலார் பேனல்கள் நிறுவப்பட்டுள்ளது. இரண்டாவது படம் (கீழே) இம்பா நிகோன் இதாய் ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள சோலார் பேனலகள். (நன்றி கூகுள் சேட்டிலைட் படம்)

சிபா மாவட்டத்தில் உள்ள முசாய், சிரோய், வகாகி, இன்சாய் நகரங்களை உள்ளடக்கிய இப்பகுதியில் நிறுவப்பட்டுள்ள ஜப்பானின் மிக நீளமான இந்த சூரிய ஆற்றல் உற்பத்தி நிலையத்தினை சிபா மாவட்ட அரசே நிர்வ‌கிக்கிறது. இத்திட்டத்தின் மூலம் 12.8 மெகாவாட் (12,81,000,00 வாட்) மின்சாரம் பெறப்படுகிறது.

"SGET Chiba New Town Mega Solar Power Plant" bird eye view (source: SGET)
தோக்கியோ நகரில் இருந்து நரிதா சர்வதேச பறப்பகத்திற்கு செல்பவர்கள் சிபா நியூ டவுன் சுவோ ரயில் நிலையம் தொடங்கி, இம்பாநிகோன் இதாய், இன்சாய் மசினோகரா இரயில் நிலையம் வரை தொடர்ச்சியாக நிறுவப்பட்டுள்ள சூரிய மின் நிலையத்தினை காணலாம்.  உலகின் கவனத்தை ஈர்த்த இத்திட்டத்தினை  Sget Kamisu Mega Solar Limited Liability Corporation  என்ற நிறுவனத்தினர் வடிவமைத்து செயல்படுத்தியுள்ளனர். இத்திட்டத்தில் உலகின் முன்னோடி ஜப்பானிய நிறுவனங்களான புஜி, தோசிபா போன்ற நிறுவனங்கள் சோலார் பேனல்கள், இன்வெர்ட்டர் போன்ற எலக்ரானியல் பொருட்களை இத்திட்டத்திற்கு (SGET Chiba New Town Mega Solar Power Plant) தந்துள்ளனர். 

எப்படி ரயில் பாதையில் அருகில் இத்திட்டத்தினை அமைக்கும் எண்ணம் இவர்களுக்கு உதித்தது?

தோக்கியோ நகரில் இருந்து நரிதா சர்வதேச பறப்பகத்திற்கு செல்லும் இரயில் தடத்தில் ஸ்கை ஆக்சஸ் (Sky Access) புல்லட் இரயில் திட்டத்திற்கு இப்பகுதியில் உள்ள மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்க இத்திட்டம் கைவிடப்பட்டது. அந்த இடத்தினை வீணாக்காமல் ஜப்பானியர்கள் தற்போது சூரிய மின் உற்பத்தி நிலையத்தினை தொடக்கி வைத்து விட்டனர். இத்திட்டம் குறித்து ஆலோசனைகள் 2010 ஆம் ஆண்டு பெறப்பட்டு தற்போது இத்திட்டம் நிறைவடைந்து மின் உற்பத்தி பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

ஏற்கனவே பத்து ஆண்டுகளுக்கு முன்பாகவே ஜப்பானில் உள்ள இரயில் நிலையங்களில் உள்ள ஸ்மார்ட் கார்டுகள் மூலம் இயங்கும் டிக்கட் கதவுகள், இரயில்வே நடைமேடைகளில் நிறுவப்பட்டுள்ள பாதுகாப்பு கதவுகள் ஆகியவற்றை முழுவதும் சூரிய ஆற்றலைக் கொண்டே இயங்கும் நுட்பம் வந்து விட்டது. தற்போது அந்த வரிசையில் இரயில் பாதையின் ஓரத்தில் ஜப்பானின் மிக நீண்ட சூரிய மின் உற்பத்தி நிலையத்தை அமைத்து உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.
மக்கள் தொகை அடிப்படையிலான மின் உற்பத்தி திறனில் (Energy Consumption per Capita) மிகச்சிறிய நாடான ஜப்பானை (~7000 கிலோவாட்/மணி) விட ஏறத்தாழ 7 மடங்கு நாம் பின்னால் உள்ளோம் (~1100 கிலோவாட்/மணி). இத்தனைக்கும் ஜப்பானில் நான்கு மாதம் கடும் குளிர் காலம். குறைவான சூரிய ஒளியே கிடைக்கும். இச்சூழலிலும் அவர்கள் இது போன்ற திட்டங்களில் தொடர்ந்து ஜப்பானியர்கள்  ஆர்வம் செலுத்தி வருவதற்கு காரணம் அங்கு இயங்கும் மிக அதிகமான தொழிற்சாலைகள்.

இந்தியாவில் ஆண்டு முழுவதும் செறிவான சூரிய ஒளி கிடைக்கிறது. நிச்சயம் சூரிய மின் திட்டத்தினை வெகுவாக ஊக்குவிப்பதன் முலம் தனிநபருக்கான மின் உற்பத்தி திறனை இன்னும் பல மடங்கு நம்மால் உயர்த்த முடியும். மேலும் சூரிய மின் திட்டமானது சுற்றுப் புற சூழலுக்கு உடனடி மாசை ஏற்படுத்தாது. ஆகையால் இந்தியா முழுவதும் பயன்பாட்டில் இல்லாத காலி நிலங்களில் சூரிய மின் உற்பத்தி திட்டத்தினை செயல்படுத்தலாம்.

நரிதா ஸ்கை ஆக்சஸ் ரயில் தடத்தில் நான் பயணித்த போது எடுத்த காணொளியினை இங்கு இணைத்துள்ளேன்.



**பள்ளி மாணவர்களுக்கு இத்தகவலை பகிருங்கள்.

Monday 3 July 2017

வெகுசன அறிவியல் விளையாட்டு சோதனைகள் (Solar Cells)

சூரிய மின் கலம் (solar cells) என்பது சூரிய ஒளியினை குறைகடைத்தி (semiconductor) மூலம் மின்சார ஆற்றலாக மாற்றும் ஒரு கருவி ஆகும். இதனை குழந்தைகளுக்கு எப்படி எளிய சோதனை மூலம் விளையாட்டின் மூலம் புரிய வைப்பது? 

பிரித்தானியாவில் உள்ள பிரிஸ்டல் (Bristol) நகரில் அறிவியல் கண்காட்சி மையம் அமைந்துள்ள பகுதியில் தெருவில் ஒரு எளிய சோதனை அமைப்பினை வைத்துள்ளார்கள். அதன் மீது சூரிய மின் கலம் எப்படி செயலாற்றுகிறது என கார்ட்டூன் படம் மூலம் விளக்கி உள்ளார்கள். பெரிய பலகையில் நிறைய சூரிய மின் கலங்களை வரிசையாக இணைத்து பேனலாக வைத்திருந்தார்கள். இதனோடு இணைக்கப்பட்ட ஒலி பெருக்கி ஒன்றில் பாட்டு ஒன்று பாடிக் கொண்டுள்ளது. 

பாட்டின் சத்தத்தின் அளவானது சூரிய மின்கலத்தில் தயார் ஆகும் மின்னோட்டத்தின் (current) அளவைப் பொறுத்து அமையும். உதாரணத்திற்கு சுற்றில் (circuit) மின்னோட்டம் குறையும் போது பாடும் ஒலியின் அளவும் (sound) குறையும். இதே தத்துவத்தை அடிப்படையாக கொண்டுதான் ரேடியோ, அல்லது இதர ஒலிபெருக்கி கருவிகளில் ஒலி அளவினை கட்டுப்படுத்த பயன்படுத்துகிறோம். சுருக்கமாக ஒரு மின்சுற்றில் தடையினை (resistance) எந்த அளவுக்கு ஏற்படுத்துகிறோமோ அதற்கு இணையாக அதனுடன் இணைக்கப்பட்டுள்ள ஒலி பெருக்கியில் ஒலியின் அளவு குறையும். 

இதே தத்துவத்தை அவர்கள் சோலார் பேனல்களில் ஒரு தடையினை ஏற்படுத்துவதன் மூலம் எளிதாக உணரலாம். உதாரணத்திற்கு சூரிய மின் கலம் மீது ஒளி விழுவதை குழந்தைகள் தங்கள் கைகளால் மறைத்தோ அல்லது இரண்டு மூன்று பேர் சூழ்ந்து நின்று அதன் மீது நிழலை ஏற்படுத்தும் போதே பேனலில் உருவாகும் மொத்த மின்னோட்டத்தின் அளவு குறையும் போது ஒலியின் அளவு குறையும்.

இவ்வாறு எளிய விளையாட்டு சோதனைகளை நாம் அன்றாடம் குழந்தைகள் புழங்கும் இடத்தில் தெருக்களில் அமைக்க வேண்டும். அதனை சீராக பராமரிக்கும் தனி மனித ஒழுக்கத்தையும் நாம் கற்றுக் கொள்ளவும், கற்றுக் கொடுக்கவுமான சமூகத்தை முன்னெடுக்க வேண்டும்.

இனி வரும் காலம் அறிவியல் நுட்பத்தின் காலம், அவற்றில் நம் குழந்தைகள் சிறந்து விளங்குவதற்கான எளிய முன்னெடுப்புகளை செய்வோம்.

 
Solar cells experiment- Bristol Science Museum, UK

Solar cells experiment- Bristol Science Museum, UK

Solar cells experiment- Bristol Science Museum, UK