Friday 21 July 2017

கனவு மெய்ப்படும்

பெரிய போக்குவரத்து வசதி இல்லாத குக்கிராமத்தில் இருந்து நெடிய போராட்டத்திற்கு பிறகே இந்த இடத்திற்கு நான் வந்துள்ளேன்.
தற்போது, பிரித்தானியாவில் உள்ள சுவான்சி பல்கலைக் கழகத்தில் பொறியியல் கல்லூரி புலத்தில் (College of Engineering) "பல் செயல்பாட்டு மீநுண் அளவிலான‌ வினையூக்கிகள் மற்றும் அதன் பூச்சுகள்" (Multifunctional Nanoscale Catalyst & Coatings) என்ற ஆய்வுக் குழுவைத் தொடங்கியுள்ளேன் என்பதை நண்பர்களுடன் மகிழ்ச்சியாக‌ பகிர்ந்து கொள்கிறேன்.
இந்த வருடத்திற்குள் பிஎச்டி மாணவர்கள், வருகை தரு ஆராய்ச்சியாளர்கள் மற்றும் முது முனைவர்களை எனது ஆய்வுக் குழுவிற்கு தெரிவு செய்ய உள்ளேன். வாய்ப்புகள் குறித்த செய்திகளை எனது முகநூல் பக்கத்தில் தொடர்ந்து பகிர்கிறேன்.
நான் கிளம்பி வந்த இடத்தை திரும்பிப் பார்க்கும் போது இன்னும் அங்கேயே தங்கி விட்டவர்களையும்,என் பால் அன்பு காட்டி என் முன்னேற்றத்தினை ஆசிர்வாதித்த அத்தனை உறவுகளையும் நட்பு வட்டத்தையும் நன்றியோடு நினைவு கூறுகிறேன். என் பலமே நண்பர்களும், ஆசிரியர்களும்தான். அவர்களின் வெற்றியாகவே நான் இங்கே நிற்கிறேன்.
எங்கள் கிராமத்திற்கு விவசாயம் தான் ஆதாரப்புள்ளியே. காவிரி நதியில் இருந்து 4 கிமீ தொலைவில் இருந்தாலும் நீர் பாய்வதற்கு ஏதுவாக இல்லாத வாய்க்காலை உடைய கடைமடை பாசானம் பெறும் சூழலில் தான் எங்கள் ஊர் இருந்தது. இருபது ஆண்டுகளில் பயிர்களை காப்பாற்ற இயலாமல் பல குடும்பங்கள் விவசாயத்தில் இருந்து படிப்படியாக எங்கள் கிராமத்தில் இருந்து வெளியேறியது.
அப்படி விவசாயத்தில் இருந்து வெளியேறிய நடுத்தர வர்க்க குடும்பங்களுக்கு அக்குடும்பத்தில் இருந்த பிள்ளைகளின் கல்விதான் கை கொடுத்தது. அப்படி ஒரு சூழலில் இருந்து வெளியே கிடைத்த வாய்ப்பை பிடித்து மேலே ஏறி வந்தவர்களில் நானும் ஒருவன்.
பிற்படுத்தபட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியல் இனத்தவர் வசிக்கும் எங்கள் கிராமத்தில் திராவிட அரசுகள் கொண்டு வந்த இட ஒதுக்கீடுதான் எங்களை கரையேற்றியது. இந்த தருணத்தில் சமூக நீதிக்காக உழைத்த தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா என்ற இரண்டு பேரரக்கர்களுக்கும் இன்ன பிற ஆளுமைகளுக்கும் என் வெற்றியை சமர்பிக்கிறேன்.
எங்கள் கிராமத்தைப் பொறுத்த வரை நாப்பது ஆண்டுகளுக்கு முன்பு கடந்த தலைமுறையினர் பெற்ற கல்வி, வேலை வாய்ப்பை விட அவர்களின் பிள்ளைகளுக்கு வலுவான கல்வியியும், வேலை வாய்ப்பும் தற்போது கிடைக்க துவங்கியுள்ளது. இந்த வாய்ப்பு இல்லாவிட்டால் எங்கள் கிராமத்தின் கதி என்னவாக ஆகி இருக்கும் என தெரியவில்லை.
சொல்ல முடியாத துயரங்களிலும் அவர்களின் பிள்ளைகளுக்கு நம்பி கல்வியை கொடுத்ததால்தான் இன்று நாங்கள் வெளியே வந்துள்ளோம். சிலர் பிச்சை புகினும் கற்கை நன்றே என்று கல்வியை கடினப்பட்டுதான் அடைந்தார்கள்.
எந்த தங்கத் தட்டிலும் எங்களுக்கான வெற்றிக் கனி வைத்து தரப்படவில்லை. ஆனால், இன்றைக்கு எங்கள் கிராமத்தில் பொறியாளர்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், மருத்துவர், வழக்கறிஞர், ஆராய்ச்சியாளர், வெளிநாட்டில் பணி புரிவோர் என முதல் தலைமுறையாக கல்வியைப் பெற்ற கூட்டம் வெளி உலகின் வெளிச்சத்தை பார்த்திருக்கிறது. இவர்களின் உயரத்தையும், வளர்ச்சியையும் கூட எங்கள் கிராமத்தில் உள்ள பெற்றோர்களால் புரிந்து கொள்ள முடியாது. அந்த அளவிற்குத்தான் அவர்களின் கல்வி இருந்தது. ஆனால் அவர்களைப் பொறுத்த வரை அவர்கள் பட்ட துன்பம் இந்த தலைமுறை பிள்ளைகளுக்கு இருக்காது என்ற மகிழ்ச்சியே.
பாட்டனார் ‍ விவசாயி (கைநாட்டு)
தந்தையார் விவசாயி (பியூசி)
மகன் ஆராய்ச்சியாளர் (பி.எச்.டி)
வாழ்க திராவிடம்

எனக்கு பிறகும் எங்கள் கிராமத்தில் இன்னும் பல நூறு ஆராய்ச்சியாளர்கள் இட ஒதுக்கீட்டு வாய்ப்பின் மூலம் மேலே ஏறி வருவார்கள். அவர்களின் நம்பிக்கையாக என் பயணத்தை இங்கே தொடர்கிறேன். இட ஒதுக்கீட்டு வசதி மூலம் கல்வி பெற்று சாதிப்பவர்களுக்கு அறிவு இல்லை என்னும் கூட்டத்தை எங்கள் அறிவாலும், சாதனைகளாலும் திருப்பி அடிப்போம்.
உங்களின் அன்பும், ஆசிர்வாதமும் எப்போதும் எம்மை வழிநடத்தும் என நம்புகிறேன்.
முனைவர் சுதாகர் பிச்சைமுத்து
சுவான்சி பல்கலைக் கழகம்
வேல்ஸ், பிரித்தானியா.

இச்செய்தி குறித்து வணக்கம் இந்தியா மின் இதழில் வெளி வந்த கட்டுரை.


Standing in front of Great Hall, Swansea University (Bay Campus)


1 comment:

  1. It shows your hard work and your parents support. Congratulations sir.

    ReplyDelete