Wednesday 8 February 2017

நுண் புற்றுநோய் கட்டிகளை எளிதாக இனம் காணும் ஒளிர்மூலக்கூறுகள் - முனைவர் மகாலிங்கம்  

 (உலகை திரும்பி பார்க்க வைக்கும் தமிழர் களின் ஆராய்ச்சி -1)


தற்போது அமெரிக்காவின் பர்டியூ பல்கலைக் கழகத்தில் (Purdue university USA) உயிரி வேதியியல் ஆராய்ச்சியாளராக பணிபுரியும் இந்தியாவின் தமிழகத்தை சேர்ந்த்த முனைவர் சக்கரைப்பாளையம் எம். மகாலிங்கம் அவர்கள் புற்று நோய் கட்டிகளை அறுவை சிகிச்சையின் போது மருத்துவர்கள் எளிதாக கண்டறியும் ஒளிரும் மூலக்கூறுகள் பற்றிய ஆய்வில் வெற்றி பெற்று அதற்கான காப்புரிமையும் பெற்றுள்ளார். தற்போது இவரது ஆய்வினை புற்று நோய் பாதித்த நோயாளிகளின் உடலில் பரிசோதித்து பார்க்க அமெரிக்க அரசு அமைப்பு அனுமதி தந்துள்ளது.

அவரது ஆய்வினை பற்றி “ஒரு சொல் கேளீர்” முகநூல் பக்கத்திற்கு அவர் வழங்கிய நேர்காணல்.

புற்றுநோய் கட்டிகளின் இருப்பிடத்தை மிகச்சரியாக அவதானித்து அவ்விடத்தில் உள்ள போலேட் ஏற்பிகளுடன் இணைந்து எளிதில் காட்டித் தரும் ஒளிரும் சாய மூலக்கூறுகளை வெற்றிகரமாக வடிவமைத்துள்ளார் (optimal folate receptor targeted fluorescent dye conjugate) முனைவர் மகாலிங்கம். 



முனைவர் மகாலிங்கம், புருடே பல்கலைக் கழகம், அமெரிக்கா

இந்த ஒளிரும் சாய மூலக்கூறுகளுக்கு OTL38 எனப் பெயரிட்டுள்ளார். இதன் சிறப்பம்சம் ஒளிரும் மூலக்கூறுகளை புற்றுநோய் நோயாளிகளின் உடலில் செலுத்தும் போது இவை ஆரோக்கியமான திசுக்களில் இருந்து புற்றுநோய் பாதிக்கப்பட்டிருகும் திசுக்களை சரியாக இனம் கண்டு பிரித்து காட்டிக் கொடுத்து விடும். தற்போது இவற்றை புற்று நோய் கட்டிகள் அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தும் போது எளிதாக கண்களாலாலேயே நோய் பாதிக்கப்பட்ட திசுக்களை பிரித்தரிய இயலும்.

இவரது கண்டுபிடிப்பில் உள்ள சிறப்பினை உணர்ந்த அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (US Food and Drug Administration (FDA)) தற்போது மருந்து பரிசோதனைகளுக்காக உடலை அர்ப்பணிப்போர்களிடம் மூன்று பேரை தெரிவு செய்து பரிசோதனை செய்து கொள்ள அனுமதித்து உள்ளது. மருத்துவ துறை ஆராய்ச்சியில் வடிவமைக்கப்படும் மருந்து உள்ளிட்ட ஆய்வு பொருட்களை உடலில் பரிசோதித்து பார்க்க பலகட்ட நிரூபணங்களுக்கு பின்பே அனுமதிக்கப்படுவர். அந்த வகையில் தற்போது கிடைத்திருக்கும் அனுமதி முனைவர் மகாலிங்கம் அவர்களின் கண்டுபிடிப்பின் மேன்மையினை நமக்கு எளிதாக விளக்குகிறது.

தற்போது புற்று நோய் அறுவை சிகிச்சை செய்யும் நிபுணர்கள் புற்று நோய் பாதித்து இருக்கும் பகுதிகளை திசுக்களின் அமைப்பியல், அவற்றின் நிறம் மற்றும் உறுதித் தன்மையினை வைத்து ஆரோக்யமான திசுக்களில் இருந்து பிரித்து அறிகிறார்கள். வழமையான இந்த முறைகள் மூலம் பெரிய கட்டிகளை மட்டுமே எளிதாக இனம் காண இயலும். ஆனால் அளவில் மிகச்சிறிய புற்றுநோய் கட்டிகள் உதாரணத்திற்கு ஆரோக்கியமான திசுக்களின் பரப்பு எல்லையில் ஒட்டியிருப்பவை (boundaries), மறைவான நிணநீர் கணுக்களில் (lymph nodes) புதைந்து இருப்பவை ஆகியவற்றை கண்டறிவது மிக கடினம். இத்தையக தருணங்களில் மூலக்கூறு அளவில் உள்ள OTL 38 ஒளிரும் மூலக்கூறுகள் சிக்கலான பகுதிகளில் இருக்கும் புற்றுநோய் தொற்று உள்ள பகுதிகளை கூட‌ எளிதாக இணம் கண்டு அவற்றுடன் ஒட்டிக் கொள்ளும். பின்னர் தகுந்த ஒளியினை இந்த கட்டிகள் மேல் பாய்ச்சும் போது மிக நுண்ணிய பகுதிகளில் பாதிக்கப்பட்டு இருக்கும் புற்று நோய் பகுதிகளை இந்த மூலக்கூறுகள் காட்டிக் கொடுத்து விடும்.

இவரது கண்டுபிடிப்பின் நம்பகத்தன்மை மற்றும் வீரியத்தினை முதல் (phase 1) மற்றும் இரண்டு கட்டமாக (phase 2) மருத்துவர்கள் பரிசோதனை செய்து உறுதி செய்துள்ளனர். புற்று நோய் பாதிக்கப்பட்ட நோயாளியின் உடலில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட கட்டிகளில் 96 சதவிகிதம் நோய் பாதிக்கப்பட்ட திசுக்களை ஒளிரும் மூலக்கூறுகள் எளிதாக அடையாளம் கண்டு கொள்ள உதவியுள்ளது.முக்கியமாக சிக்கலான நிணநீர் கட்டிகளில் புதைந்திருந்த புற்றுநோய் திசுக்களை 98 சதவிகிதம் கண்டுபிடித்து சொல்லியுள்ளது.

பெரும்பாலும் 40 சதவிகித புற்றுநோய் பிரச்சினைகள் அறுவை சிகிச்சை நடந்த இடத்தில் இருந்து மீண்டும் பரவுவதற்கு காரணம் புற்றுநோய் பாதித்த நுண்ணிய கொத்துகள் அறுவை சிகிச்சை நிபுணர்களின் கண்களுக்கு புலப்படாமல் அரிதாக ஒளிந்து கொள்வதே காரணம் ஆகும். இந்த சிக்கலை உணர்ந்த FDA அமைப்பு இவரது கண்டுபிடிப்பினை விரைவு நிலையாக கருதி (fast-track status) மூன்றாம்/இறுதி கட்டமாக (phase 3) இதனை நோயாளிகளின் உடலில் பரிசோதித்து பார்க்க தற்போது அனுமதி வழங்கியுள்ளது.

2010 ஆம் ஆண்டு முதல் 2013 வரையிலான ஒளிரும் மூலக்கூறுகள் பற்றிய ஆய்வின் போது OTL38 மூலக்கூறுகளை “ஒளிரும் மூலக்கூறு முகவர்களாக” (optical fluorescence agents) மருத்துவ துறை பயன்பாடுகளில் பயன்படுத்தும் படி முனைவர் மகாலிங்கம் வடிவமைத்தார். தற்போது இதன் பயன்பாடு “கருப்பை புற்றுநோய்” அறுவை சிகிச்சைகளில் கண்டுபிடிப்பானாக இந்த வருடத்திய பரிசோதனைகளில் பயன்படுத்தப்பட உள்ளது. ஏறத்தாழ ஐந்து ஆண்டுகளாக பல கட்டமாக விலங்குகளில் உள்ள புற்றுநோய் கட்டிகளில் இதனை பரிசோதித்து வெற்றி கண்ட பின்பே இந்த வெற்றியினை தன்னால் அடைய முடிந்தது என கூறுகிறார் மகாலிங்கம்.

மேலும் OTL38 மூலக்கூறுகள் அடிப்படையில் அகச்சிவப்பு ஒளியில் இயங்கும் வண்ணநிறமியால் (near IR dye) ஆனவை, ஆகையால் ஆரோக்கியமான திசுக்களில் இருந்து புற்று நோய் கட்டிகளை எளிதில் அடையாளம் கண்டுகொள்ள உதவியாக இருக்கின்றன. மேலும் வழமையான அகச்சிவப்பு சாயங்களுடன் ஒப்பிடும் போது விலை குறைந்தவை. மிகத்துல்லியமாக புற்றுநோய் பாதித்த பகுதிகளை கண்டறிந்து தருவதால் அறுவை சிகிச்சை பின்னதான அச்சமும் நோயாளிகளுக்கு தேவையில்லை என்கிறார் மகாலிங்கம்.

முனைவர் மகாலிங்கத்தின் கனவு தனது ஆராய்ச்சி தனது நாட்டு மக்களுக்கு சென்றடைய வேண்டும். அதற்காக விரைவில் இந்தியாவின் முன்னோடி கல்வி நிறுவனத்தில் பேராசிரியராக இணைந்து தன் ஆராய்ச்சியினை தொடர்ந்து முன்னெடுக்க உள்ளதாக தனது விருப்பத்தினை தெரிவித்தார். மேலும் தனது OTL38 ஒளிரும் மூலக்கூறுகள் எல்லா தரப்பு மக்களுக்கும் சென்றடையும் வகையில்  இந்தியாவில் ஒரு நிறுவனத்தையும் தொடங்க  உள்ளதாக தெரிவித்தார்.

நம் சாதனை தமிழரின் ஆராய்ச்சி கனவு நிறைவேற வாழ்த்துவோம்.

முனைவர் மகாலிங்கம் அவர்களின் OTL38 கண்டுபிடிப்பின் காப்புரிமை தகவல்

புற்றுநோய் தினத்தன்று முனைவர் மகாலிங்கம் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழுக்கு வழங்கிய நேர்காணல்





Monday 6 February 2017



அறிவியல் தமிழ் உலகிற்கு அளப்பரிய பணியாற்றிய முது பெரும் தமிழ் அறிஞர் மணவை முஸ்தபா ஐயா இன்று (பிப்ரவர் 6, 2017) காலமாகி விட்டார் என்ற செய்தி அதிர்ச்சியினை தருகிறது.

மணவை முஸ்தபா ஐயா அவர்கள், அறிவியல் தமிழ் வளர்ச்சி தொடர்பான பணிகளில் தன்னை ஈடுபடுத்தி வந்தவர். இதுவரை அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம், கணினி துறைச் சார்ந்த 8 கலைச் சொல் அகராதிகளை வெளியிட்டுள்ளார். தொடர்ந்து பல துறைகளில் கலைச் சொல் அகராதிகளை வெளியிட திட்டமிட்டு பணியாற்றியவர். யுனெஸ்கோ கூரியரின் தமிழ்ப் பதிப்பின் ஆசிரியராக அது நிறுத்தப்படும் வரை பணியாற்றினார். அறிவியல் தமிழ் அறக்கட்டளை என்னும் நிறுவனத்தையும் இவர் நிறுவி உள்ளார்.


தமிழ் அறிஞர் மணவை முஸ்தபா
40 க்கும் மேற்பட்ட தமிழ் நூல்கள், அறிவியல் கலைக் களஞ்சிய தொகுப்புகள், மொழி பெயர்ப்பு நூல்கள் என பல தளங்களில் தமிழுக்கு தொண்டாற்றியவர். குறிப்பாக, தமிழ் மொழி செம்மொழியாவதற்கு அரும்பாடு பட்டவர்.

எண்ணற்ற அரசு விருதுகளையும், சர்வதேச அளவிலான அங்கீகாரங்களையும் பெற்ற தமிழ்ச் சுடர் ஒளி மணவை முஸ்தபா ஐயா அவர்களின் மறைவு தமிழ் உலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு.

ஐயாவின் மறைவினால் துயர் கொள்ளும் உலகெங்கும் வாழ்கின்ற தமிழர்களுக்கும், எங்கள் அன்பிற்கினிய நண்பர் மருத்துவர் செம்மல் Semmal Manavai Mustafa அவர்களின் குடும்பத்தினருக்கும் எமது இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ் அறிவியல் உலகில் என்றும் அவர் புகழ் நிலைத்திருக்கும்.

மணவை முஸ்தபா ஐயா அவர்களை பற்றி விரிவாக அறிய கீழ்கண்ட விக்கிபீடியா சுட்டியில் பார்க்கவும்.

Sunday 5 February 2017

அவந்தியின் முதல் நாடகம்

ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை மாலை அவந்தியை நாடக பயிற்சி வகுப்பில் கொண்டு  விட வேண்டும். 
பத்து நிமிடம் முன் கூட்டியே நாடக பயிற்சி மன்றத்திற்கு சென்று விடுவதால் கொஞ்ச நேரம் அங்கிருக்கும் குழந்தைகளின் குறும்புகளை அப்படியே கொஞ்ச நேரம் ரசித்த பிறகே வருவேன்.  எனக்கு அது பெரிய ரிலாக்ஸ் பாயிண்ட் என்பதோடு  என் பால்ய வயதினை ஞாபகப் படுத்துபவை.
ஏனெனில் என் கிராமத்து பள்ளியில் பள்ளி ஆண்டு விழாவில் நாடகங்களை பார்த்ததோடு சரி. பின்னாளில் என் கிராமத்தில் இருந்து வெளியேறி உயர்நிலைப் பள்ளி படிப்பிற்கு நகரைப் பார்க்க தொடங்கிய காலம் தொட்டு, கல்லூரி சென்ற காலத்தில் நண்பர்களோடு கல்லூரி மேடைகளில் ஓரங்க நாடகங்கள், கேலி கிண்டல் கலந்த காலாய்ப்புகள் என முடிந்த வரை எல்லாம் சுயம்புவாக செய்யப் பழகி கொண்டோம். 

இப்படியான முறையான பயிற்சி பள்ளிகள் எல்லாம் எங்களுக்கு கிடைக்கவில்லை. இருந்திருந்தாலும் அப்போது இருந்த பொருளாதார வசதி இதற்கெல்லாம் கனவிலும் இடம் கொடுத்திருக்காது.

ஆனால் அவந்திக்கு நிச்சயம் இந்த வசதியினை செய்து கொடுக்க வேண்டும் என்று ஒரு ஆசை இருந்தது. இங்கே சுவான்சியில் யுகேவின் பிரசித்த பெற்ற The Sir Harry Secombe Trust என்ற நாடக குழு உள்ளது. நான்கு வயதில் இருந்து நாடகப் பயிற்சி தருகிறார்கள். முறையாக பாடுதல், நடனம், உடல் மொழி, என படிப்படியாக (musical theatre and performing arts) பயிற்சி தருகிறார்கள். ஒவ்வொரு வருடமும் தேர்வு உண்டு. இதில் தனியாக நாடகப் பயிற்சிக்காக‌ ஸ்காலர்சிப்பும் தருகிறார்கள். பதினெட்டு வயது வரை உள்ள அனைவருக்கும் இங்கே பயிற்சி தருகிறார்கள்.
மூன்று மாதங்களாக அவந்தி நாடக பயிற்சி பள்ளிக்கு போகிறாள். அவந்தியை நாடக வகுப்பில் இருந்து அழைத்து வரும் போது இன்றைக்கு என்ன சொல்லிக் கொடுத்தார்கள் எனக் கேட்டால் ரோட்டில் குதித்து கொண்டே பாடுவாள். சத்தியமாக அவள் பாடும் ஆங்கிலப் பாடல்கள் எனக்கு புரியாது. ஆனால் புரிந்த மாதிரி. தலையாட்டி விடுவேன்.
மூன்று மாத பயிற்சிக்கு பின் வியாழன் அன்று அவந்தி முதன் முறையாக விசார்ட் ஆப் ஓஸ் (Wizard of Oz) என்னும் மேடை நாடகத்தில் நடித்தாள். இந்த நாடகம் சுவான்சிநகரில் உள்ள 120 வருடங்கள் பழமையான கிராண்ட் தியேட்டரில் நடைபெற்றது. நேற்றோடு இவளது குழு இந்த நாடகத்தை நான்கு காட்சிகளாக‌ அரங்கேற்றியுள்ளார்கள். எல்லாமே அரங்கு நிறைந்த காட்சிகள்.
முதலில் இந்த குட்டீசுகள் என்ன செய்யப் போகிறார்கள்  என நினைத்துக் கொண்டுதான் வியாழக்கிழமை காட்சிக்கு டிக்கட் எடுத்துக் கொண்டு நானும் எனது மனைவியும் சென்றோம். ஆனால் நாடகம் தொடங்கியவுடன் அப்படியே மெய் மறக்க வைத்து விட்டார்கள்.
விசார்டு ஆப் ஓஸ்  பாடலும், நகைச்சுவையும் நிரம்பிய உலகப் புகழ் பெற்ற அமெரிக்க திரைப்படம். இதனை 1939 ஆம் ஆண்டு மெட்ரோ கோல்ட்வின் மேயர் என்பவர் இயக்கினார். இதன் மூலக் கதையானது 1900 ஆம் ஆண்டு பிராங் பாம் என்பவர் எழுதிய The Wonderful of Oz என்ற நாவலைத் தழுவியது. இந்த திரைப்படத்திற்கு பிறகு உலகெங்கும் இந்த கதை மேடை நாடகங்களாக அரங்கேற்றப்பட்டு வருகிறது.
இந்நாடகத்தில் டோரதி (Dorathy) என்னும் பதின்ம வயது சிறுமி தனது நாய்க்குட்டியுடன் (Toto) குள்ளர்கள் நிறைந்த மின்ஞ்கின் தீவில் மாட்டிக் கொள்கிறாள். இந்த தீவில் வசிக்கும் நற்செயல்கள் புரியும் தேவதை, சோளக் கொல்லை மனிதன், சிங்கம், டின் மனிதன் (டப்பாவினால் ஆன மனிதன்). இவர்கள் ஐவரும் டோரதியோடு சேர்த்து முக்கிய கதாபாத்திரங்கள். இவர்களோடு கெடுதல் புரியும் சூனியக்காரி, அவளது குரூப், நல்லது செய்யும் குள்ளர்கள் என மற்றொரு டீம் என மொத்தம் இந்த நாடகத்தில் 50க்கும் மேற்பட்ட துணை கதாபாத்திரங்கள் உள்ளன. டோரதி  இந்த தீவில் எதிர் கொள்ளும் சவால்கள், பின்னர் எப்படி அவள் வீடு திரும்புகிறான் என்பதே இக்கதை.

இந்த நாடகம் முழுவதும் நேரடியான பின்னனி இசையிலேயே (arkestra) நடக்கிறது. மொத்தம் 15 பாடல்கள் இடம் பெற்றுள்ளது. ஒவ்வொரு பாடலும் 5 நிமிடத்திற்கு நீடிப்பவை. ஏறத்தாழ இரண்டரை மணி நேர நாடகத்தில் 30 நிமிடம் இடைவேளை மற்றபடி தொடர்ச்சியாக, அநாயசமாக நடிக்கிறார்கள். நாடகத்தில் கலந்து கொண்டவர்கள் அனைவருமே 4 -16 வயது வரைதான் இருப்பார்கள். ஒரு சின்ன பிழை  கூட இல்லை. நேரடி ஆர்கெஸ்ட்ராவில் அற்புதமான பிராப்பர்டி செட், காஸ்டியூம், என பின்னி எடுக்கிறார்கள். கிட்டத்தட்ட ஒரு ஹாலிவுட் படம் போல் இருந்தது. மேடைக்கும், பார்வையாளருக்கும் இடையே பத்தடிக்கு ஒரு பள்ளம் உள்ளது (கீழ் தளம்). அந்த இடத்தில் ஆர்கெஸ்ட்ரா குழுவினர் இசைக்கிறார்கள். மேடையில் நடிப்பவர்களுக்கும், இந்த இசைக் குழுவினருக்கும் இடையே நல்ல புரிதல் இருந்தது.

நான் அவந்தியை பயிற்சி பள்ளியில் விடச் செல்லும் பொழுது அவளின் நாடக‌ ஆசிரியருக்கு ஒரு ஹலோ சொல்வதோடு சரி. ஆனால் இன்றைக்கு நாடகம் முடிந்து மேடையின் பின் புறம் உள்ள ஹாலில் இருந்து அவந்தியை கூட்டி வர செல்லும் போது அவர் ஒரு சினிமா இயக்குநர் போல் தெரிந்தார். 
நாடகம் அற்புதமாக இருந்தது என அவரிடம் வாழ்த்து சொன்னேன். நான் பார்த்த வரையில் வயது வாரியாக துணை ஆசிரியர்க‌ள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஒவ்வொரு சிறு குழுவாக பிரித்து வேலை செய்வதால் நன்கு ஒருங்கிணைக்க முடிகிறது. ஸ்டேஜ் மேனேஜர் என்று ஒருவர் தனியாக எல்லா காட்சிகளையும் மேடையில் ஒருக்கிணைக்கிறார்.
நாடக காட்சி முடிந்ததும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த பதின்ம வயது உடைய சிறுவர், சிறுமியர்கள் நாடக மன்றத்திற்கு வெளியே காத்திருந்த அவரது வகுப்பு தோழர்களை கட்டி பிடித்து வாழ்த்துகளை பெற்றுக் கொண்டனர். அவர்களின் பெற்றோரிடம் சென்று என் வாழ்த்துகளை சொன்னேன். மிக்க மகிழ்ச்சி என்று பூரித்தனர்.
கோடிக்கணக்கான பட்ஜெட்டில் சீரியல், திரைப்படம் என பிரித்தானிய திரை உலகம் ஒரு புறம் இருந்தாலும் தங்கள் பாரம்பரிய நாடகக் கலையினை அவர்கள் இன்னும் விட்டு விடவில்லை. பல நகரங்களில் உள்ள புராதன நாடக மன்றங்கள் இன்றும் வழமையாக இயங்குகின்றன. உண்மையில் நான் ஆச்சரியப்படும் இடம் இதுதான்.
 நாடக காட்சி முடியும் வரை ஆம்புலன்சு நர்சு இருவர் நாடக மன்றத்திலேயே இருந்தனர். நாடக காட்சியினை புகைப்படம், காணொளி எடுக்க அனுமதி இல்லை. ஆகவே அவந்தி வரும் காட்சியினை புகைப்படம் எடுக்க முடியவில்லை. அவந்தியோடு சேர்த்து இருபது குட்டீசுகள் நாடகத்தில் வரும் போது தியேட்டர் முழுவதும் சிரிப்பலை.
ஒவ்வொரு சீனுக்கும் ரெஸ்பான்சாக கைதட்டுகிறார்கள். நாடகம் முடிந்ததும் எல்லோரும் எழுந்து நின்று 3 நிமிடங்களுக்கு கைதட்டிக் கொண்டே இருந்தார்கள்.
“Ding Dong! The Witch is dead. Which old Witch? The Wicked Witch! Ding Dong! The Wicked Witch is dead.” இந்த பாடல் வரும் இடங்களில் தியேட்டர் கரவொலியில் அதிர்கிறது. காட்சிகளுக்கு இடையே யாரும் எழுந்து குறுக்கே நடப்பதில்லை. விசிலடிப்பதில்லை. அருகில் இருப்பவரிடம் பேசுவதில்லை.
இந்த நாடகத்தை பார்த்தபின்  இந்த ஊரில் சினிமா எடுப்பதெல்லாம் பெரிய சிரமமே இல்லை  என நினைத்துக் கொண்டேன்.  நம் ஊரில்  நடிப்பு பின்புலமோ, முறையான பயிற்சியோ இல்லாத‌ ஆட்களை எல்லாம் வைத்து எப்படித்தான் கட்டி மேய்க்கிறார்களோ..
ஷோ முடிந்தவுடன் அவந்தியிடம் நீ அருமையாக நடித்தாய் என்று சொன்னவுடன், இன்று “நீ நாடகம் பார்க்க வந்ததற்கு தேங்ஸ் டாடி” என்று சொல்லி விட்டு வெட்கப்படாள்.
குழந்தைகளின் அக உலகம் மிகப் பெரியது அவர்களை மேடையில் பார்க்கும் போது அவர்கள் நம்மை விஞ்சியவர்களாக  தெரிகிறார்கள்.. என்னால் ஒரு சீனுக்கான வசனங்களை மனப்பாடமாக சொல் என்றால் சத்தியமாக முடியாது. ஆனால் பாடிக் கொண்டே, ஆடிக் கொண்டே பக்கம் பக்கமான வசனங்களை மிக நேர்த்தியான உடல் மொழியோடு வெளிப்படுத்துகிறார்கள்.
 நம்மிடம் எஞ்சி இருக்கும் நிகழ்த்து கலைகள், மற்றும் தமிழ் இலக்கியங்களில் உள்ள பாடல்களை நாடகங்களாக மாற்றி தியேட்டர் ஆர்ட் மூலம் பள்ளிக் குழந்தைகளுக்கு தரலாம். குறைந்த பட்சம் நம் தமிழ்ச் சூழலை பீடித்திருக்கும் கொலைகார‌ சீரியல் அக்கப் போர்களை எதிர் வரும் காலத்தில் மாற்ற முடியும் எனத் தோன்றுகிறது.

Photocredit: Andrew Morris Photography, Swansea, UK






















(வாய்ப்பு கிடைத்தால் ஹாலிவுட் படமாக வந்துள்ள The Wizard of Oz நாடகத்தை இணையத்தில் பார்க்கவும்)


Saturday 4 February 2017

தேங்காய் நாரும் ஆயில் கழிவுகளும்





இப்படி ஒரு பதிவு முகநூலில் ஆயிரக் கணக்கில் ஏன், எப்படி? என புரிந்துக் கொள்ளப்படாமலே பகிரப்பட்டுள்ளது. 

உண்மையில் இதனை கொண்டு சென்னையில் ஏற்பட்டு இருக்கு ஆயில் கழிவு விபத்தில் எப்படி பயன்படுத்த முடியாது என கீழ் கண்ட பதிவில் விளக்கியுள்ளேன். 

//நார்கழிவுகளை ஹெலிகாப்டர்கள் மூலம் கடல்மேல்பரப்பில் தூவுவதன்மூலம் எண்ணைப்படலங்கள் தேங்காய்நார்கழிவுடன் சேர்ந்து அலைகளால் கடற்கரைக்கு அடித்துவரப்படும் சுத்திகரிப்பது எளிதானது//. 
நீங்கள் எதுவுமே செய்யாவிட்டாலும் ஆயில் கழிவுகள் காற்றின் திசைக்கு ஏற்ப அலைகளால் அடித்து வரப்பட்டு கரையில் ஒதுங்கும். அப்படித்தான் இப்போது கரையில் இந்த ஆயில் கழிவுகள் ஒதுங்கி உள்ளது.

இப்பொழுது பிரச்சினையே கரையில் ஒதுங்கியுள்ள ஆயில் கழிவினை எப்படி கடல் நீரில் இருந்து நீக்குவது என்பதுதான் பிரச்சினையே.


வீடுகள், தொழிற்சாலைகளில் தரையில் சிந்தும் ஆயிலை தேங்காய் நாரை கொண்டு துடைக்கிறார்களே, அப்படியானால் ஏன் கடலில் இருக்கும் ஆயிலை தேங்காய் நாரைக் கொண்டு நீக்க முடியாதா?. இந்த பார்வையில்தான் மேற்கண்ட பதிவு பத்தாயிரம் பேருக்கு மேல் பகிரப்படுகிறது என நினைக்கிறேன்.

உண்மையிலேயே தேங்காய் நாரைக் கொண்டு நீரில் மிதக்கும் ஆயிலை பிரித்து எடுக்க முடியுமா? எளிய சோதனை மூலம் நீங்களே இதன் பின் உள்ள லாஜிக்கை புரிந்து கொள்ள முடியும்.

ஒரு கண்ணாடி தொட்டியில் நிரப்பப்பட்ட நீரில் எண்ணெயினை ஊற்றுங்கள். அது நீரின் மீது மென் ஏடாக மிதக்கும். இப்போது இதன் மீது  தேங்காய் நார் பவுடரை தூவவும். தேங்காய் நார் பவுடரின் பரப்பளவுக்கு தக்கவாறு எண்ணெயினை உறிஞ்சி கொள்ளும். பிறகு ஒரு சல்லடையினை கொண்டு அந்த எண்ணெய் படலம் ஒட்டியுள்ள தேங்காய் நார் பவுடர் அல்லது கட்டிகளை வடிகட்டி மூலம் வெளியே எடுத்துக்  ஆயிலை பிழிந்து பிரித்தெடுக்கலாம்.

ஆனால் இதே முறையினை தடிமனான குருடாயிலை நீரில் இருந்து நீக்க உதவுமா?

இப்பொழுது  அதே நீர் தொட்டியில் தார் போன்ற தடிமன் நிறைந்த‌ குருடாயிலை கொட்டி நீரை கலக்குங்கள். மேலே சொன்னதை போல் மீண்டும் தேங்காய் நார் பவுடரை ஆயிலின் மேற்பரப்பில் தூவுங்கள். தேங்கய் நார் முன்பை போல் அதிகமான குருடாயிலை இழுத்து வைத்துக் கொள்ள முடியாது. ஏனெனில் குறுக்கு வெட்டு தோற்றத்தில் நீரில் விரவியுள்ள‌ குருடாயிலின் தடிமன் தேங்காய் நாரின் தடிமனை விட‌ அதிகம். இன்னும் எளிமையாகச் சொல்லப் போனால் குருடாயிலின் தடிமன் மெல்லிய எண்ணெயின் தடிமனை விட ஆயிரத்தில் இருந்து ஒரு லட்சம் மடங்கு அதிகம். ஆகையால் தூவப்பட்ட தேங்காய் நார் பவுடர்  ஐஸ்கிரீமில் தூவப்பட்ட பாதாம் (topping) போல் குருடாயிலின் மேல் வெறுமன கிடக்கும். தேங்காய் நார் துவுவதால் ஒரு விளைவும் ஏற்படாது.



ஆகவே எப்படி ஐஸ்கிரீம் கூழ்மத்தின் மேற்பரப்பில் தூவப்பட்ட பாதாம் துண்டுகள் எப்படி ஒட்டு மொத்த ஐஸ்கிரீமையும் உறிஞ்சாதோ அதே போல் தேங்காய் நார் மிகத் தடிமனாக கடல் நீரில் மிதக்கும் ஆயில் கழிவுகளை வடிகட்டி எடுக்க பயன்படாது.

இந்த தேங்காய் நார் முறையினை ஒப்பிடும் போது ஜெலெட்டர் (gelator) நுட்பம் மூலம் கூழ்ம நிலையில் இருக்கும் ஆயில் கழிவுகளை கட்டியாக்கி எளிதாக கடல் நீரில் இருந்து எப்படி நீக்கலாம் என்பதை அடுத்த பதிவில் பகிர்கிறேன்.


Friday 3 February 2017

கடற் சூழலியல் விபத்துகள் -கவனக் குறைவின் விபரீதங்கள்

சென்னை எண்ணூரில் உள்ள காமராஜர் துறைமுகத்தின் அருகில் கடந்த 28 ஆம் தேதி டான் காஞ்சிபுரம் என்ற சரக்கு கப்பலின் மீது குவைத் நாட்டை சேர்ந்த எண்ணெய் கச்சாப் பொருள் கப்பல் ஏற்படுத்திய விபத்தில் 70 டன்னுக்கும் மேற்பட்ட தார் போன்ற ஆயில் கெமிக்கல் (Petrochemical lubricant) கடலில் கலந்தது. இந்த ஆயில் கழிவுகளை  முறையான கருவிகளை கொண்டு உடனடியாக 24 மணி நேரத்தில் நீக்கி இருந்தால் சென்னையின் கடற்கரை பகுதி முழுவதும் காப்பாற்றப் பட்டு இருக்கும்.

அப்படியே ஆயிலை விட்டு விட்டால் அதுவே கடலின் கரையில் ஒதுங்கிய பின் வாளியை வைத்து அள்ளி கொள்ளலாம் என எந்த புண்ணியவான் ஐடியா தந்தாரோ தெரியவில்லை. முதல் இரண்டு நாட்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் விட்டு விட்டார்கள். இதென்ன பூசணிக்காயா சோற்றில் வைத்து மறைப்பதற்கு. ஆயில் கழிவுகள் அடுத்த நாள் காலை சென்னை திருவொற்றியூர் பகுதியில் ஆர் கே நகர் குப்பத்தையொட்டிய கடற்கரை முழுவதும் தார் போல ஒதுங்கி இருந்தது. யாரும் கடலுக்குள் செல்ல முடியாத படி கெட்டியாக கரையில் தேங்கி நின்றது. அதன் பிறகே நிலமையின் விபரீதத்தை புரிந்து கொண்ட கடலோர காவல் படை களத்தில் இறங்கியது.  அடுத்து அவர்கள் செய்த பணிதான் இப்போது பல சூழலியல் ஆர்வலர்களால் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது

முக்கியமாக‌ இந்த கழிவுகளை அகற்ற மத்திய கடலோர காவல் படை சென்னையில் இருக்கும் மீனவ மக்களை உரிய பாதுகாப்புகள் இன்றி களத்தில் இறக்கி உள்ளார்கள்.  அத்தோடு நில்லாமல் தன்னார்வலர்கள் மூலம் அகற்றுகிறோம் எனச் சொல்லி 750 க்கு மேற்பட்ட பொது மக்களை களத்தில் இறக்கியுள்ளார்கள். தயவு செய்து மனிதர்கள் மூலம் இந்த ஆயில் கழிவுகளை அகற்றுவதை நிறுத்துங்கள்.


சென்னை கடலோரத்தில் ஒதுங்கியுள்ள ஆயில் கழிவுகளை மீனவர்கள் அகற்றும் போது எடுத்த புகைப்படம்

சென்னை கடலோரத்தில் ஒதுங்கியுள்ள ஆயில் கழிவுகளை மீனவர்கள் அகற்றும் போது எடுத்த புகைப்படம்

சென்னை கடலோரத்தில் ஒதுங்கியுள்ள ஆயில் கழிவுகளை மீனவர்கள் அகற்றும் போது எடுத்த புகைப்படம்

சென்னை கடலோரத்தில் ஒதுங்கியுள்ள ஆயில் கழிவுகளை தன்னார்வலர்கள் அகற்றும் காட்சி

அகற்றப்பட்ட ஆயில் கழிவுகள்

அகற்றப்பட்ட ஆயில் கழிவுகள்

இது சாதாரண பெயின்டு போல் தன்னார்வலர்கள், மீனவர்கள் வெறும் கைகளால் அள்ளும் புகைப்படங்களை பார்க்கும் போது மனது பகீர் என்கிறது‌.

ஆயில் கழிவுகளில் பெட்ரோலிய கரிம பொருளான ஹைட்ரோகார்பன் அதிகமாக இருக்கும். குறிப்பாக இவற்றில் உள்ள‌ "கார்சினோசன்" என்னும் கரிம பொருள் சுவாசிக்கும் போது நூரையீரலை பதம் பார்ப்பவை, கேன்சரை தூண்டுபவை. மேலும் முறையான ஆடைகள், மூச்சு கருவிகள் துணையின்றி இந்த கழிவுகளை கையாளும் போது கொடுமையான தோல் வியாதி, கண் எரிச்சல் உள்ளிட்ட சிக்கலை உண்டாக்கும். அது கேன்சர் போன்ற வியாதிகளுக்கு வழி வகுக்கும். தயவு செய்து உரிய முறையில் கழிவினை அரசு அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

1. இது போன்ற ஆயில் விபத்துகள் உலகில் வேறு எங்காவது நிகழ்ந்துள்ளதா?
மெக்சிகோ வளைகுடா பகுதியில் ஏப்ரல் மாதம் 2010 ஆம் ஆண்டு ஆழ்துளை பெட்ரோலிய கிணற்றில் நிகழ்ந்த கசிவு விபத்துதான் உலகிலேயே மிக பெரியது. பி,பி (BP) ஆயில் நிறுவனத்தினரின் ஆழ்துளை கிணற்றில் இருந்து வெளிப்பட்ட குருடாயில் கசிவு பல மனித உயிர்களையும், கடல் வாழ் உயிரினங்களையும் காவு வாங்கியது. இது தவிர குவைத், பிரித்தானியா, ஆப்ரிக்கா, ஈரான் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் நிகழ்ந்த எண்ணெய் கிணறு விபத்துக்கள் 250-600 ஆயிரம் டன் குருடாயிலை கடலில் கலக்கி மாசுபடுத்தியுள்ளது. இவை தவிர நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் சிறிய விபத்துகளும் நடந்துள்ளன.

தற்போது சென்னையில் ஏற்பட்டு இருக்கும் ஆயில் கசிவு விபத்தின் கள நிலவரம் வெளியே தெரிய வரும் போதுதான் உண்மையான  விபரீதத்தை சொல்ல முடியும்.

2. உலகின் மற்ற நாடுகளில் எவ்வாறு கருப்பு நிற, பெட்ரோலிய ஆயில் கசிவுகளை (Oil slick) கடலில் இருந்து நீக்குகிறாரகள்?
பெட்ரோலிய ஆயில் பொருட்கள் நீரூடன் ஒட்டாது, ஆகவே நீரின் புறப்பரப்பில் தான் மிதந்து கொண்டிருக்கும். எனவே விபத்து நடந்த உடன் காலம் தாழ்த்தாது இந்த ஆயில் கசிவு உள்ள பகுதியினை மிதவை பாதுகாப்பு வளையங்கள் (Boom) மூலம் மேலும் பரவாமல் தடுக்க வேண்டும். கிட்டத்தட்ட இது முதலுதவி போல, பிறகு நீரையும், ஆயிலையும் பிரித்து பம்பிங் செய்யும் ஸ்கிம்மர் (Skimmer) இயந்திரங்களை பயன்படுத்தலாம். இந்த ஸ்கிம்மர்கள் ஆயிலின் நீர் கலக்குமை தன்மையினை பொறுத்து வேறுபடும்.

3. வேறு எந்த வழிகளில் இந்த ஆயில் கழிவுகளை அகற்றலாம்?
இயற்கையில் கடல் இது போன்று கழிவுகளை பாக்டீரியாக்களை உற்பத்தி செய்து மட்க வைத்து சுத்திகரிக்கும் (Bio degradable) திறன் கொண்டது. ஆனால் அதற்கும் ஒரு எல்லை உண்டு. இந்த நுட்பம் மூலம் எதிர்பாராத ஆயில் கழிவு விபத்துகளில் பாக்டீரியாக்களை செயற்கையாக தூண்டும் பையோ டீகரடபிள் பவுடரை தூவிவிட்டால் அவை இந்த ஆயில் கழிவுகளை சிறிது காலம் எடுத்து மட்க வைக்கும். இது நடுக்கடலில் நிகழும் விபத்துக்களுக்கு நன்கு பொருந்தும். தற்போது இந்த உத்தியைத்தான் மத்திய அரசு செய்துள்ளது. ஆனால்  உரிய நேரத்தில் கண்டுகொள்ளாமல் விட்டதால் அவற்றின் ஒரு பகுதி கரைப் பகுதிகளுக்கு பரவி தற்போது பாதிக்கப்பட்ட கழிவுகளை கைகளால் அள்ளும் நிலைக்கு தள்ளி உள்ளார்கள்.

மேலே சொன்ன நுட்பத்தை தவிர, நீர்-எண்ணெய் பரப்பு விலக்குமை தத்துவத்தினை அடிப்படையாக கொண்டு நானோ பருப்பொருள் (Nanomaterials) மூலம் பிரித்தெடுக்கும் ஆராய்ச்சி (oil and water separation) உலகமெங்கும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. அணுக்களின் அளவில் மிகச்சிறிய நானோ பருப்பொருள் பூசப்பட்ட பரப்பு (Nanomaterial coated surface) அதி தீவிர எண்ணேய் அல்லது நீர் ஒட்டா பரப்பு பொருளாக (Oleo phobic surface or superhydrophobic surface) செயல்பட்டு இதன் மீது ஆயில் கலந்த கடல் நீரை செலுத்தும் போது எதாவது ஒரு பொருளை உறிஞ்சிக் கொண்டோ (adsorption) அல்லது விலக்கி (repelling) கொண்டோ நீரையும் ஆயிலையும் பிரித்து வடிகட்டி  (filtering) தனித்தனியே தந்து விடும். 

இது குறித்த ஆய்வுகள் இந்தியாவில் சென்று கொண்டுள்ளது என நினைக்கிறேன். ஆனால் அதன் முடிவுகள் சந்தைப்படுத்தப்பட்டு விட்டனவா என தெரியவில்லை. ஜெலேசன் எனப்படும் நுட்பத்தின் மூலம் நீரில் மிதக்கும் ஆயில் கசிவுகளை தனியே கட்டிகளாக உருட்டி எளிதாக நீக்கும் முறை பற்றியும் ஆராய்ச்சிகள் சென்று கொண்டுள்ளது

4. அப்படியானால் நம்மிடம் ஸ்கிம்மர் (skimmer) போன்ற நவீன உபகரணங்கள் இல்லையா.
சரியாக தெரியவில்லை. இது வரை களத்தில் இந்த கருவியை மத்திய அரசு செயல்படுத்தியதாக பத்திரிக்கை செய்தியோ அரசு செய்தியோ வந்ததாக‌ தெரியவில்லை. இது வரை சாதாரண பம்பிங் மோட்டார்களை பயன்படுத்தி வருவதாகவே செய்திகள் கூறுகிறது. கடினமான தார் போன்ற ஆயிலை சரியாக பம்பிங் செய்ய இயலாமல் சாதாரண மோட்டார்கள் அடைத்துக் கொண்டு திணறுகிறது. 

என் கவலை எல்லாம் இன்னும் நாம் சாக்கடைகளில் மலக் கழிவுகளை அள்ள மனிதர்களையே வைத்து கொண்டு ஒரு பிற்போக்கு தனம் நிரம்பிய‌ குடிமை சமூகத்தை வைத்திருக்கிறோம். இதில் கடலில் ஏற்படும் ஆயில் கழிவுகளை முறையாக அள்ள இயந்திரம் உள்ளதா என தெரியவில்லை. இந்நேரம் மலம் அள்ளும் இயந்திரங்களை வடிவமைக்க பெரிய ஆய்வு நிதி ஒதுக்கி இருந்தால் இந்நேரம் இந்த சிக்கலை எளிதில் தீர்த்திருக்கலாம். இப்படியே போனால் நாளை அணு உலை விபத்து ஏற்படும் போது தன்னார்வலர்களுக்கு வாளியை கையில் கொடுத்து களத்தில் இறக்கி விட்டாலும் விடுவார்கள். எனவே, நாம் இது குறித்து தீவிரமாக செயல்பட வேண்டிய அவசியத்தையே இந்த விபத்துகள் நமக்கு உணர்த்துகின்றன. 


working principle of skimmer in removing oil slick from sea 

Drum type Skimmer removing oil slick from sea 

Skimmer removing oil slick from sea 

Skimmer removing oil slick from sea 


5. மத்திய அரசு இதில் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?
இந்த விபத்து 28 ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு நிகழ்ந்தது. ஆனால் மத்திய அரசு 30 ஆம் தேதிக்கு பிறகு விழித்துக் கொள்கிறது. இடையில் ராஜ்யசபாவில் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி இந்த பிரச்சினையில் உடனடியாக மத்திய அரசு தலையிட வேண்டும் என்ற கோரிக்கையினை வைத்தார். அதன் பிறகே இங்கே கடலோர காவல் படை தன்னார்வலர்களை வைத்துக்கொண்டு களம் இறங்கியது. இவ்வளவு பெரிய சூழலியல் விபத்து நிகழ்ந்தும் போக்குவரத்து மற்றும் துறைமுகங்களுக்கான பொறுப்பு அமைச்சரும், எண்ணூர் துறைமுகமும் இந்த விபத்தால் சுற்றுப் புற சூழலுக்கு எந்த விபத்து நிகழவில்லை என்ற பொறுப்பற்ற அறிக்கையினை அளித்துள்ளது.

6. ஆயில் கழிவுகள் என்ன மாதிரியான சுற்றுப்புற சீர்கேடுகளை ஏற்படுத்தும்?
ஆயில் கசிவுகள் கடல் வாழ் உயிரினங்களான ஆமைகள், மீன்கள், கடலை நம்பியிருக்கும் பறவையினங்கள் ஆகியவற்றின் தோல் பகுதியில் ஊடுரும். தோல் பகுதி முழுவதும் ஆயில் பூச்சு ஏற்படுவதால் இவற்றால் கடல் நீரின் தட்பவெப்ப நிலைக்கு தக்கவாறு தங்களை தகவமைத்து கொள்ள இயலாது, முக்கியமாக கொஞ்சம் கொஞ்சமாக தங்களது நீரில் மிதக்கும் திறனை இழக்கும். அப்புறம் என்ன, செத்து மிதக்க வேண்டியதுதான். 

கடல் பறவைகளின் நிலை இன்னும் ஒரு படி மோசம், பெட்ரோலிய கழிவு பொருட்களில் இருந்து வரும் நெடியானது பறவைகளின் மூச்சு குழாயை பாதித்து அவற்றின் பறக்கும் திறனை இழக்கும், மேலும் தங்கள் கூடுகளை கண்டறிந்து திரும்பும் ஞாபக சக்தியையும் அவை இழக்க நேரிடலாம். இப்படி எண்ணற்ற சூழலியல் சீர்கேடுகளை விளைவிக்கும்


7. உடனடியாக செய்ய வேண்டியது என்ன‌?

a)     ஆயில் கழிவுகளை நீக்குவதற்கு எந்த பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி தன்னார்வலர்களை களத்தில் இறக்குவதை நிறுத்தி விட்டு வேறு உபகரணங்களை கையாள வேண்டும். கவனக் குறைவு பெரிய ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும்
b)     இந்த சூழலியல் விபத்தால் பாதிப்படைந்த மீனவர்களுக்கும், தமிழக அரசிற்கும் மத்திய அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். மேலும் எதிர் வரும் காலத்தில் துறைமுக பகுதியில் நிகழும் விபத்துகளை காலம் தாழ்த்தாது விரைந்து தடுத்திட ஏதுவான கருவிகளை உடனே மத்திய அரசு வழங்க வேண்டும்.
c)      இந்த விபத்தில் பொறுப்பற்ற முறையில் கையாண்ட எண்ணூர் துறைமுக பொறுப்பு அதிகாரிகள், அமைச்சரகத்தின் மீது நீதி மன்றம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
d)     இந்த ஆயில் விபத்தினை சுற்று சூழல் அறிவியல் ஆய்வாளர்கள், ஆர்வலர்கள் துணையுடன் முழுமையாக கள ஆய்வு செய்து உண்மைத் தகவலை வெளியிட வேண்டும் அத்தோடு எதிர்காலத்தில் இது போன்ற விபத்து நிகழ்ந்தால் சுற்றியுள்ள பொது மக்களுக்கு எப்படி செயலாற்ற வேண்டும் என்று அரசு அறிவுரைகள் வழங்கிட வேண்டும்

e)      சும்மா வெட்டித்தனமாக நம் பாரம்பரிய பெருமைகளை மட்டுமே பேசிக் கொண்டு இருக்காமல் அறிவியல் நுட்பங்களின் துணையுடன் புதிய கருவிகளை வடிவமைக்கும் ஆய்வுகளை பல்கலைக் கழக அளவில் முன்னெடுக்க வேண்டும். இதற்கான நிதியினை மத்திய, மாநில அரசுகள் ஒதுக்கி அவற்றை முறையாக சந்தைப்படுத்தலில் உதவிட வேண்டும்.

Thursday 2 February 2017


"தடுப்பூசிகள் மூலம் குழந்தைகளை காப்போம்" என்ற எனது முகநூல் பதிவினை திருச்சியில் இருந்து வெளி வரும் angusam.com இணைய இதழ் அவர்கள் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

"அங்குசம்" ஆசிரியர் குழுவினருக்கு நன்றி.