Monday 2 October 2023

மருந்து அல்லது உடற்கூறியல் துறைக்கான 2023 ஆம் ஆண்டு நோபல் பரிசை வென்ற இருவரில் ஒருவர் பேராசிரியர் கரிகோ கத்தலின் (Katalin Kariko) அமெரிக்க நாட்டின் உயிரி வேதியியல் (Biochemistry) துறையினை சார்ந்த ஆய்வாளர் ஆவார். சமகாலத்தில் பெனின்சுலவேனிய பலகலைக் கழகத்தில் ( University of Pennsylvania) துணைப் பேராசிரியாராகவும் (Adjunct Professor) பணியாற்றுகிறார். இன்றைக்கு உலகமே திரும்பி பார்க்கும் உயரத்தில் உள்ள இவரது பூர்விகம் ஹங்கேரி (Hungary) நாடு. ஹங்கேரி மத்திய ஐரோப்பாவில் உள்ள நாடு. ஏறத்தாழ 1 கோடி மக்கள் தொகையினைக் கொண்டது. அதாவது தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் சராசரியாக ஏழில் ஒரு பங்கு. கரிகோ, தனது பள்ளிக் கல்வி முதல் முனைவர் ஆராய்ச்சி பட்டம் வரை ஹங்கேரி நாட்டிலேயே பயின்றவர். தனது முது முனைவர் (Post doctoral fellowship) பணி காலத்தில் அவர் பணி புரிந்த ஹங்கேரி நாட்டின் ஆய்வு மையத்தில் ஏற்பட்ட நிதி நெருக்கடியால் 1985 ஆம் ஆண்டு தனது 2 வயது குழந்தை மற்றும் கணவருடன் குடும்பத்துடன், அமெரிக்காவிற்கு குடி பெயர்ந்தார். கரிகோ சமீபத்தில் "Breaking Through: My Life in Science" என்னும் புத்தகத்தை எழுதி உள்ளார். இப்புத்தகத்தில், ஹங்கேரி நாட்டில் எளிய பின் புலத்தில் இருந்து தொடங்கிய தன் வாழ்க்கை முதல் கோவிட் பெருந்தொற்றுக்கு தடுப்பூசி வடிவமைத்தது வரை தனது வாழ்வின் பயணத்தை விவரித்துள்ளார். புரோட்டீன் சிகிச்சைக்கான In-vitro mRNA வை உருவாக்குவதே இவரது ஆய்வு. பின்னாளில் 2006-2013 ஆம் ஆண்டு RNARx, என்னும் நிறுவனத்தை அவர் தோற்றுவித்த பின் BioNTech என்ற நிறுவனத்துடன் இணைந்து செயலாற்றுகிறார். இந்நிறுவனத்தில் முதலில் துணைத் தலைவராகவும், 2019 இல் மூத்த துணைத் தலைவராகவும் பதவி உயர்வு பெற்றார். கரிகோவின் ஆய்வுப் பணியானது ஆர்என்ஏ வை மையமாகக் கொண்ட‌ நோயெதிர்ப்பு செயல்பாட்டின் அறிவியல் ஆராய்ச்சியை உள்ளடக்கியது, இதன் வாயிலாக‌ ஆர்என்ஏவின் நோயெதிர்ப்பு சக்தியை அடக்கும் நியூக்ளியோசைடு மாற்றங்களை அமெரிக்க நோயெதிர்ப்பு நிபுணர் ட்ரூ வெய்ஸ்மேனுடன் (Drew Weissman) இணைந்து கண்டுபிடித்தார். இது எம்ஆர்என்ஏவின் சிகிச்சை பயன்பாட்டிற்கு முக்கிய பங்களிப்பாகக் கருதப்படுகிறது. இந்த ஆய்வின் அடிப்படை முடிவுகளே கோவிட் 19 நோயெதிர்ப்பு தடுப்பூசியின் வடிவமைப்பில் பெரும் உதவியாக இருந்தது. உலகமெங்கும், மிகவும் எளிய குடும்பத்தில் பிறந்த பெண்கள், அறிவியல் துறையில் (STEM) பயில வேண்டும் என்று விரும்புகிறவர்களுக்கு பேராசிரியர் கரிகோவின் வாழ்க்கை தரும் செய்தி ஒன்றுதான். வறுமை, பாலின பாகுபாடு போன்ற சமூக சவால்களை கண்டு பெண்கள் அச்சப்படக் கூடாது. இவற்றை எதிர்கொண்டு வெல்ல கற்றுக் கொள்ள‌ வேண்டும். தற்போது, தமிழ்நாடு அரசின் உயர்கல்வி அமைச்சகம் "மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம்" மூலம் அரசு கலைக் கல்லூரிகளில் பயிலும் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாயினை வழங்குகிறது. மேலும், பெண்களுக்கு கட்டணமில்லாமல் பேருந்து வசதியும் கிடைத்துள்ளது. இத்தையக நல்வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு முது நிலை அறிவியல் அல்லது பொறியியல் படிப்பு வரை அடித்தளம் இட்டுக் கொள்ளுங்கள். உலகமெங்கும், பெண் ஆராய்ச்சியாளர்களுக்கு உயர்கல்வி ஆய்விற்கான நிதி உதவிகளில் முதன்மை அளிக்கப்படுகிறது. உங்களது முனைவர் ஆய்வுப் பட்ட படிப்பிற்கான வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளலாம். நீங்கள் பிறந்த மண்ணில் மட்டும் தான் சாதிக்க இயலும் என்றில்லை. உங்கள் அறிவைக் கொண்டு உலகை வலம் வரலாம். கண்டுபிடிப்பாளர்களுக்கு, அறிவியலாளர்களுக்கு எல்லை என்று எதுவும் இல்லை. சிறகடித்து பறந்து செல்லுங்கள். மானுட குலத்திற்கான கண்டுபிடிக்களை தந்து மனிதம் வெல்லுங்கள்.
முனைவர் சுதாகர் பிச்சைமுத்து இணைப் பேராசிரியர், கெரியட் வாட் பல்கலைக் கழகம் ஸ்காட்லாந்து, பிரிட்டன் 02/10/2023

Tuesday 10 August 2021

பிரித்தானியாவின் தெற்கு எல்லை

இந்தியாவைப் பொறுத்த வரை, வானுயர உயர்ந்து நிற்கும் அய்யன் வள்ளுவர் சிலை வீற்றிருக்கும் குமரி முனை நமக்கு எப்படி தெற்கு முனையின் எல்லையோ, அதே போல் பிரித்தானியாவின் தெற்கு பகுதியின் எல்லை Land's End என்கிற இடம். இந்த இடம் பிரித்தானியாவின் கார்ன்வெல் (Cornwall) பகுதியின் மேற்கு மூலையில் உள்ளது. இலண்டன் நகரில் இருந்து காரில் பயணித்தால் ஏறத்தாழ 294 மைல் தொலைவில் இவ்விடம் உள்ளது.
குறிப்பாக இலண்டன் நகரில் இருந்து 3 மணி நேரம் பயணத்தில் எக்சிடர் நகரை அடைந்து விடலாம். பிறகு எக்சிடர் நகரத்தின் எல்லையில் தொடங்கும் ஏ 30 நெடுஞ்சாலை கார்ன்வெல் பகுதியில் உள்ள‌ பென்சான்சு (Penzance) நகரின் வழியாக சென்று எல்லைப் பகுதியான செனன் (Sennen) என்னும் கிராமத்தின் அருகே இங்கு கடலோரத்தில் முடிவடையும். கார் பயணம் செய்பவர்களுக்கு இந்த சாலை ஏகாந்தமான அனுபவத்தை தரும் என்பதில் ஐயமில்லை. ஒவ்வொரு அரைமணி நேர பயணத்திலும் சாலை ஓரம் ஓங்கி உயர்ந்த மரங்கள் கொண்ட வெவ்வேறான சூழலைக் கொண்ட பகுதிகள் உங்கள் கண்களுக்கு விருந்தளிக்கும். ஏ 30 சாலையின் முடிவின் எல்லையில் உள்ள பெரிய ஊர் பென்சான்சு நகரம். இந்த நகரில் இரண்டு மணி நேரம் தங்கி இதன் கடற்கரை அழகை ரசிக்கலாம். முடிந்தால் ஒரு காபி அருந்தி விட்டு போனால் மனதுக்கு குதுகலமாக இருக்கும். பென்சான்சு நகரில் இருந்து செனன் சிற்றூருக்கு 15 அல்லது 20 நிமிடம் குறுகிய சாலையில் பயணிக்க வேண்டி இருக்கும். சுற்றுலாப் பயணிகளை கவர Land's End பகுதியில் பல சிறப்பு அம்சங்களை கார்ன்வெல் கவுன்சில் ஏற்படுத்தி உள்ளனர். குறிப்பாக குழந்தைகள், பள்ளி மாணவர்களை கவரும் வகையில் சிறிய விலங்கு பண்ணை மற்றும் 3டி அனிமேசன் தியேட்டர் உள்ளது. ஆங்கிலக் கால்வாய் மற்றும் கெல்டிக் கடல் இரண்டும் சந்திக்கும் இப்பகுதியில் நிறைய மலை முகடுகள் நிறைந்த பாதை உள்ளது. இந்த மிக நீண்ட கடற்கரையோரத்தில் கடல் அழகை தரிசித்தபடியே கால் நடையாக நடக்கும் வசதி ஏற்படுத்தி உள்ளனர்.
பிரித்தானியாவின் தெற்கு எல்லைப் பகுதி இது என்பதால் இங்கு நிறுவப்பட்டுள்ள கைகாட்டி பலகை (sign post) முன்பு புகைப்படம் எடுத்துக் கொள்ள வார இறுதிகள் பெரிய கூட்டமே நிற்கிறது. நான் சென்ற போது ஒரு மணி நேரம் நிற்கும் அளவுக்கு கூட்டம் இருந்தத்தால் தள்ளி நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டேன்.இந்த பலகையில் உங்கள் பெயர், பிறந்த தேதியுடன் நீங்கள் பிரித்தானியாவின் எந்த ஊரில் வசிக்கிறீர்கள் என சொன்னால் அங்குள்ள புகைப்படக் கலைஞர் அதற்கான எழுத்துகளை தகவல் பலகையில் கோர்த்து விடுவார். இந்த இடத்தில் நீங்கள் புகைப்படம் எடுத்துக் கொள்ள பத்து பவுண்ட் கட்டணமாக செலுத்த வேண்டும். இந்த திசைகாட்டும் பலகைக்கு சற்று அரை கி.மீ தொலைவில் உள்ள வீடுதான் பிரித்தானியாவின் முதலும், கடைசியுமான வீடு ஆகும். ஆகையால் இந்த வீட்டிற்கு சென்று பலரும் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்கள். கடல் எல்லையில் இருந்து பார்க்கும் போது முதல் வீடு இதுதான் என்பதால் இந்த வீட்டின் சன்னல் வழியாக கடலைப் பார்ப்பதற்கு பெரும் கூட்டமே கூடுகிறது. பிரித்தானியாவிற்கு சுற்றுலா வருபவர்கள் நிச்சயம் இந்தப் பகுதிக்கு கட்டாயம் போய் வாருங்கள்.

Sunday 14 March 2021

“தமிழகத்தில் மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயின்று கொண்டிருக்கும் மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் நான்காம் தலைமுறை/ஐந்தாம் தலைமுறை (4G/5G) மாதம் 10 GB பதிவிறக்கம் செய்யும் வசதியுடன் கூடிய இணைய தள இணைப்புடன் கைக்கணினி அரசு செலவில் வழங்கப்படும். அதோடு அனைத்து கல்வி நிலையங்களிலும் Wi-Fi வசதி செய்து கொடுக்கப்படும்.” - திமுக, 16 வது சட்டப்பேரவைத் தேர்தல் அறிக்கை வகுப்பறை கல்வி மற்றும் பயிற்றுவித்தலில் மல்டி மீடியா கருவிகள் வந்த பிறகு பல்வேறு புதிய உத்திகள் உலகெங்கும் கொண்டு வரப்பட்டது. குறிப்பாக தற்போது நமக்கு கிடைக்கும் கட்டற்ற இணைய சேவை பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பெரிய கொடை. கொரானா பெரும் தொற்று முடக்க காலத்தில் மெய்நிகர் வகுப்புகளுக்கு (virtual classroom) இந்த வசதிகள்தான் தற்போது பெரும் உதவியாக உள்ளது. இந்த வசதி இல்லாவிட்டால் நம் குழந்தைகள் பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே முற்றாக முடங்கி போயிருக்கும் அபாயம் ஏற்பட்டிருக்கும். ஆனால், வசதியான வீட்டுப் பிள்ளைகளுக்கு கிடைக்கும் மடிக்கணினி (Laptop) அல்லது கைக்கணினி (Tablet) வசதிகள் ஏழை நடுத்தர குடும்பங்களில் இருந்து வரும் மாணவர்களுக்கு கிடைப்பதில்லை. முந்தைய அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் தந்த‌ லேப்டாப்கள் நன்கு கைகொடுத்தன (Special Programme Implementation Department). இத்திட்டம் மூலம் தோராயமாக 40 லட்சம் மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர். இந்த திட்டம் மூலம் பலன் பெற்றவர்கள் கடைசிகட்டமாக 20-21 ஆம் ஆண்டு திட்டப்படி 5 லட்சம் மாணவர்களுக்கு 940 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் கணக்குப்படி 2011 ஆம் ஆண்டு முதல் 2020 ஆண்டு (பிப்ரவரி) வரை இத்திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகை 7258 கோடி. ஆனாலும் இணைய வசதி பெறுதல், மற்றும் மேம்படுத்தப்பட்ட நவீன கணினி வசதிகள் இன்னும் ஏழை நடுத்தர குடும்ப மாணவர்களுக்கு எட்டாக்கனியாகவே உள்ளது. தற்போது திமுகவின் அறிக்கைப்படி எதிர் வரும் கழக ஆட்சியில் மேல்நிலைப்பள்ளிகள் மட்டுமில்லாமல் கூடுதலாக கல்லூரி மாணவர்களுக்கு கைக்கணினிகள் இணைய தள (internet) வசதியோடு தரும் போது மெய்நிகர் வகுப்புகளில் (virual classroom) நடத்தப்படும் பாடங்கள், உலகளாவிய நூலகங்களில் இருந்து ஆய்வேடுகள், மற்றும் மின்நூல்களை தரவிறக்கம் செய்து படித்துக் கொள்ள இயலும். மேலும் கொரோனா முடக்கத்திற்கு பிறகு பெரும்பாலான தேசிய, பன்னாட்டு கருத்தரங்குகளில் இணையம் வாயிலாக இலவசமாகவே நடத்தப்படுகிறது. இவற்றிலும் நம் மாணவர்கள் கலந்து கொள்ள இயலும். திமுகவின் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டிருப்பது போல் நிச்சயம் 10 ஜிபி இணைய வசதி ஒரு மாதத்திற்கு போதுமானதாக இருக்கும். இத்திட்டம் மூலம் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 5 லட்சம் பேரும், கல்லூரி மாணவர்கள் (கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், மருத்துவ கல்லூரி மற்றும் இதர கல்லூரிகள்) தோராயமாக 10 லட்சம் பேர் என ஆண்டு ஒன்றிற்கு சுமார் 15 லட்சம் பேர் இத்திட்டம் மூலம் பயனடைய‌ வாய்ப்புண்டு. இத்திட்டத்திற்கு உத்தேச மதிப்பாக 15 லட்சம் மாணவர்களுக்கு கைக்கணினிக்கு 3000 கோடி ரூபாய் ஆண்டு ஒன்றுக்கு செலவு ஆகும். இவை தவிர வைபை வசதி கூடுதல் செலவை தரும். இத்திட்டம் தமிழகத்திற்கு சாத்தியமாகுமா? கல்வி நல திட்டத்திற்கு 3000 கோடி செலவு செய்வது என்பது தமிழகத்தின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியான‌ (Gross State Domestic Product-GSDP) 19.2 லட்சம் கோடியுடன் ஒப்பிடும் போது இதன் செலவு 0.16 சதவிகிதம்தான். ஆனால் மனித வள மேம்பாட்டு வளர்ச்சிக்கு நாம் போடும் இந்த சிறிய‌ முதலீடு 3000 கோடியை பன் மடங்காக்கி திருப்பி தமிழகத்திற்கே தரும். உதாரணத்திற்கு தற்போது உலகளாவிய மென்பொருள் நிறுவனங்களில் உயர் பொறுப்பில் பணிபுரியும் வல்லுநர்கள் பலரும் தமிழகத்தின் அரசுப் பள்ளிகளில் நலத்திட்டங்கள் மூலம் பயின்றவர்களே. அத்தோடு பொருளாதார‌ ஏற்ற தாழ்வின்றி சமநிலையான சமூக வளர்ச்சிக்கு இத்திட்டம் நிச்சயம் வழி வகுக்கும். ஏன் கைக்கணினி வசதி வேண்டும்? வளர்ந்த நாடுகளின் வரிசையில் முன்னனியில் இருக்கும் அமெரிக்கா தனது பள்ளி மாணவர்களுக்கு இலவச கைக்கணினிகளை ஏற்கனவே அறிமுகப்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஐரோப்பாவின் 18 நாடுகளில் (பிரித்தானியா உட்பட) பள்ளி மாணவர்களிடையே கைக்கணினி வசதிகளை தந்து அவர்கள் கற்றலில் என்ன என்ன மாதிரியான‌ முன்னேற்றம் ஏற்படுகிறது என்பதை ஒரு ஆய்வாக செய்து வெற்றி கண்டுள்ளனர். ஸ்காண்டிநேவியன் மற்றும் பால்டிக் நாடுகள் இந்த வரிசையில் மிகப்பெரிய புரட்சியை செய்துள்ளன. கொரொனா தொற்று காலத்தில் வீட்டில் இருந்து மெய்நிகர் வகுப்புகள் வாயிலாக கல்வி கற்க பொருளாதார ரீதியில் பின் தங்கிய பள்ளி மாணவர்களுக்கு பிரித்தானிய அரசு இலவச கையடக்க கணிணிகள் தருகிறது. கல்வியாளர்களின் பொதுவான ஆய்வில் ஒரு மாணவருக்கு ஒரு கைக்கணினி (One Tablet to One Student) என்ற திட்டமே மாணவர்களின் திறனை அதிகரிக்கிறது என்ற உண்மையினை கண்டறிந்துள்ளனர். உருகுவே நாடு தனது பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் இலவச கைக்கணினி தந்துள்ளது. இன்னும் பல நாடுகளில் இத்திட்டம் உள்ளது. ஆனால் ஆரம்ப பள்ளிகளைப் பொறுத்த வரையில் வகுப்பறையில் மட்டும் கணிணி தரும் திட்டம்தான் பெரும்பாலும் உள்ளது. கற்றலில் கைக்கணினிகள் எத்தையக மாற்றத்தை ஏற்படுத்தும்? • நுட்பவியல் (technology) சார்ந்த கல்வி கற்றலில் கைக்கணினிகள் பயன்படுத்தும் போது விளக்கப்படங்கள் அனிமேசன் முறையில் இருப்பதால் மாணவர்களுக்கு எளிதாக புரிந்து கொள்ள இயலும். இதனால் வழமையான‌ அச்சு புத்தகங்களில் ஆசிரியர் முன்னெடுக்கும் பயிற்றுவித்தல் (teacher led) மாணவர்களின் புரிதலுக்கு சவால் மிக்கவை. ஆனால் கைக்கணினிகள் மாணவர்களே நேரடியாக திறனை அதிகரிக்கிறது. இதனால் கற்றலின் நோக்கம் 30 முதல் 80% அதிகரிக்க வாய்ப்புள்ளது. • வகுப்பறைகளில் கேள்வி கேட்பதை கைக்கணினிகள் வாயிலாக இணைக்கும் போது மாணவர்கள் நேரடியாக விடையளித்து அது சரியா தவறா என உடனக்குடன் தெரிந்து கொள்ளலாம். • E-books விலை குறைவு. மின்னூல் வாயிலான ஆசிரியர் தரும் Assignment களை எளிதாக பலருக்கும் பரிமாற்றம் செய்ய இயலும். எடை அதிகம் மிக்க புத்தகங்களை தூக்கிக் கொண்டு போகத் தேவையில்லை. • ஆசிரியர்களும் வீட்டுப் பாடங்களை கோப்புகளாக சேமித்து மாணவர்களுக்கு எளிதாக தர இயலும். இப்படி கைக்கணினிகளின் நன்மைகளை சொல்லிக் கொண்டே போகலாம். மடிக்கணிணிகளை விட கைக்கணினிகள் சிறந்ததா? • மாணவர்களைப் பொறுத்த வரை, மடிக் கணினைகளை விடவும் கையடக்க கைக்கணிணிகள் எடை குறைவாக இருப்பதோடு எளிதில் வகுப்புகளுக்கு எடுத்துச் செல்ல இயலும். • நீண்ட நேரம் மின்கல சேமிப்பு திறன் (battery charge) மற்றும் தொடு திரை வசதிகள் மாணவர்களுக்கு கையாள எளிதாக இருக்கும். எதிர் வரும் திமுக ஆட்சியில் இன்னொன்றையும் செய்ய வேண்டுகிறேன். உலக நாடுகளின் பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் Eudoroam என்னும் நெட்வொர்க் மூலம் இணைத்துக் கொள்ளப்படுவதால் உலகின் எந்த மூலைக்கு போனாலும் இந்த நெட்வொர்க்கில் இணைக்கப்பட்டிருக்கும் மாணவர் அந்த கல்வி நிறுவனத்தின் இணைய சேவையினை இலவசமாகப் பெற முடியும். இது போல, தமிழகத்தின் ஒரு கல்லூரியில் பயிலும் மாணவர் இன்னொரு கல்லூரிக்கு போகும் போது அந்த கல்லூரியின் Wi-fi வசதியினை இலவசமாக பெற இயலும். இதற்கு ஒவ்வொரு மாணவருக்கும் மின்னஞ்சல் முகவரி தரப்பட்டு அவர்கள் பற்றிய தகவல்களை கோப்புகளாக வைக்கும் போது ஆசிரியர் மாணவர் கற்றலுக்கான பயிற்றுவிக்கும் தளம் (teaching platform) அமைக்கவும் ஏதுவாக இருக்கும். இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் உலகிலேயே உயர்கல்வி மாணவர்களுக்கு வீட்டுக்கு எடுத்து செல்லும் வகையில் இலவச கையடக்க கணிணி தரும் முதல் இடத்தை தமிழகம் பெறும். -டாக்டர் சுதாகர் பிச்சைமுத்து M.Sc., M.Phil., Ph.D, FRSC பிரித்தானியா

Saturday 13 March 2021

மகளிர் நலனில் திமுக தேர்தல் அறிக்கை

அரசுப் பணிகளுக்குச் செல்லும் பெண்களுக்குத் தற்போது வழங்கப்பட்டு வரும் 9 மாத பேறுகால விடுமுறையை 12 மாதங்களாக உயத்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். - திமுக, 16 வது சட்டப்பேரவைத் தேர்தல் அறிக்கை இத்திட்டம் எதிர்வரும் கழக ஆட்சியில் அமலுக்கு வந்தால் உலகிலேயே முழு ஊதியத்துடன் (100%) கூடிய‌ நீண்ட மகப்பேறு விடுமுறை (48 வாரங்கள்) தரும் நாடுகளுடன் ஒப்பிடத்தக்க பட்டியலில் தமிழகம் இடம் பிடிக்கும். ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (UNICEF)அறிக்கையின் படி தற்போது உலகின் அதிகமான மகப்பேறு கால விடுமுறை ஊதியத்துடன் வழங்கும் நாடுகளின் முதன்மையானது ஐரோப்பாவில் உள்ள எஸ்தோனியா (Estonia) நாடு. ஏறத்தாழ, 72 வாரங்கள் மகப்பேறு விடுமுறை அளிக்கிறது. ஆனால் முழு ஊதியத்தோடு விடுமுறை வழங்குவதில் பல வரையறைகள் உள்ளன. இதற்கு அடுத்ததாக ஹங்கேரி (Hungary) நாட்டை சொல்லலாம். ஆனால், ஹங்கேரி மகப்பேறு காலத்தின் முதல் ஆறு மாத காலம் முழு ஊதியமும் பிறகு வரும் மாதங்களுக்கு பகுதி ஊதியம் அல்லது குழந்தை பரமாரிப்பிற்கான உதவியை செய்கிறது. இந்த வரிசையில் பல்கேரியா (Bulgaria), ஸ்வீடன் (Swedan), நோர்வே (Norway), லித்துவேனியா (Lithuania) போன்ற ஐரோப்பிய நாடுகளை ஒப்பிடலாம். இவை அனைத்தும் ஒரு வருடம் அல்லது அதற்கு மேலாக பேறு கால விடுமுறை அளிக்கிறது. மேலே சொன்னது போல் மகப்பேறு காலத்தில் குறிப்பிட்ட காலத்திற்கு முழு ஊதியமும், எஞ்சிய கால கட்டத்திற்கு பகுதி ஊதியமும் வழங்கப்படுகிறது. தற்போதைய சூழலில் ஒரு வருட காலத்திற்கு முழு ஊதியத்தோடு கூடிய மகப்பேறு விடுமுறை அளிக்கும் நாடுகளோடு ஒப்பிடும் போது எதிர்வரும் கழக அரசு மூலம் தமிழகம், குரோசியா (Croatia), செரிபியா (Serbia) நாடுகளுக்கு இணையான‌ இடத்தைப் பிடிக்கும். ஏனெனில் ஒரு வருடம் முழு ஊதியத்தோடு கூடிய மகப்பேறு விடுமுறை அளிப்பதில் இவ்விரு நாடுகளும் தனித்த இடத்தை பிடித்துள்ளது. ஆனால் நிலப்பரப்பு மற்றும் மக்கள் தொகையினை ஒப்பிடும் போது, கொரொசியா நாட்டின் மக்கள் தொகை 40 லட்சம், செரிபியா நாட்டின் மக்கள் தொகை 70 லட்சம். தமிழகத்தின் மக்கள் தொகை தோராயமாக 6.8 கோடி அதாவது குரோசியாவை ஒப்பிடும் போது 17 மடங்கும், செரிபியாவை ஒப்பிடும் போது 10 மடங்கும் அதிக மக்கள் தொகை கொண்ட ஒரு மாநில அரசு இப்பணியை செய்வது என்பது மகத்தானது. குறிப்பாக ஒன்றிய அரசின் உதவியின்றி மாநில வருவாய் ஆதாரங்களைக் கொண்டு இத்திட்டம் நிறைவேற்றப்படுவது எளிதான காரியம் அல்ல. இந்த வகையில் பார்த்தால் குரோசியா, செரிபியா நாடுகளை விடவும் நாம் சமூகநீதிக்கான பணியில் முன்னோடியாகும் வாய்ப்பினைப் பெறப் போகிறோம். சுவாரசியாமன தகவல்கள்: - ஜப்பான், ஸ்வீடன் உள்ளிட்ட சில நாடுகளில் தந்தையரும் மகப்பேறு விடுமுறையில் பங்கு பெற முடியும். - உலகின் பலம் பொருந்திய நாடுகளில் முதன்மையான அமெரிக்காவில் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுமுறை இல்லை. - பிரித்தானியா மகப்பேறு விடுமுறை நலத்திட்டங்கள் தரும் நாடுகளில் 34 வது இடத்தில் உள்ளது. முழு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுமுறை என்பது பெண்களுக்கு 100% பணிப் பாதுகாப்பை வழங்குவதோடு, ஆரோக்கியமான சமூகத்தை (healthy community) கட்டமைக்கவும் உதவுகிறது. இந்த வகையில் திமுகவின் தேர்தல் அறிக்கை எதிர் வரும் தேர்தலில் கதாநாயகன் என சொல்லலாம். ஐக்கிய நாடுகளின் வளங்குன்றா வளர்ச்சிக் குறிக்கோள்கள் (UN’s Sustainable Development Goals- SDG) என வரையறுக்கப்பட்ட 17 நிலையான வளர்ச்சி குறிக்கோள்களில் திமுக அறிவித்துள்ள‌ இத்திட்டம் ஐந்து முக்கிய குறிக்கோள்களை பூர்த்தி செய்யவல்லது. - குறிக்கோள் எண் 1 (ஏழ்மை இன்மை), - குறிக்கோள் 3 (நல்ல ஆரோக்கியம்), - குறிக்கோள் 5 (பாலின சமத்துவம்), - குறிக்கோள் 8 (நல்ல பணிகள்), - குறிக்கோள் 10 (சமமின்மையை குறைத்தல்). திமுக தேர்தல் அறிக்கை வளர்ந்த நாடுகளுக்கும் முன்னோடியாக இருக்கப் போகிறது என்று சொன்னால் மிகையில்லை. டாக்டர் சுதாகர் பிச்சைமுத்து M.Sc., M.Phil., Ph.D, FRSC பிரித்தானியா

Sunday 21 February 2021

சர்வதேச தாய்மொழி தினம் (International Mother Language Day) 2021 - Welsh Language and Culture

 வேல்சு (Wales) தேசம் ஐக்கிய இராஜ்ஜியத்தின்  (United Kingdom) ஒரு அங்கமாக விளங்குகிறது. உலகின் மிகச் சிறிய நாடுகளில் ஒன்றாக வேல்சு தேசத்தை சொல்லலாம்.

இலண்டன் (London) நகரில் இருந்து இரண்டு மணி நேரம் மேற்கு திசையில் பயணித்தால், இங்கிலாந்தின் எல்லைப் பகுதியான பிரிஸ்டல் (Bristol) நகரை அடைந்து விடலாம். அங்கிருந்து பிரித்தானியாவின் மிக நீண்டநதியான செவரனை (River Severn)  கடந்தால் நியூபோர்ட் (Newport) நகர எல்லையில் வேல்சு தேசத்திற்கான வரவேற்பு பலகையைக் காணலாம்.

வேல்சின் பூர்விகம் கெல்டிக் (Celtic) மரபைச் சார்ந்தது. தற்போதைய‌ கெல்டிக் இனத்தின் மிக முக்கியமான நிலப்பரப்புகளாக‌  விளங்கும் ஸ்காட்லாந்து மற்றும் அயர்லாந்து தேசத்தை இவர்களது பங்காளிகளாகசொல்லலாம்.


வேல்சு தேசத்து எல்லையில் உள்ள வரவேற்பு பலகை. Picture courtsey - thegaurdian.com

வேல்சு தேசத்தை அதன் தாய்மொழியான வேல்ஸ் (Welsh) மொழியில் “கிம்ரே” (Cymru) என்றழைக்கிறார்கள்.  இதன் மக்கள் தொகை, தோராயமாக 35 லட்சம். தமிழ்நாட்டின் நிலப்பரப்போடு ஒப்பிடும்போது தோராயமாக 20 ல் ஒரு பங்கு அல்லது 6 மாவட்டத்தின் நிலப்பரப்பு அளவே உள்ளது. 100 ஆண்டுகளுக்கு முன்பு வரை சுரங்க தொழிலே இப்பகுதியில்பிரதானமாக இருந்திருக்கிறது. ஆகையால் இப்பகுதியில் தொழிலாளர் கட்சியின் (Labour Party) கை எப்போதும் சற்று ஓங்கியே இருக்கும். தற்போது கால்நடை வளர்ப்பு மற்றும் பல்வேறு தொழில்களுக்கு தேவையான இயந்திர பாகங்களை தயாரிப்பது உள்ளிட்ட பல தொழிற்சாலைகள் வேல்சு பகுதியில் உள்ளது. ஏர்பஸ் (AIRBUS) நிறுவனத்திற்கான விமான பாகங்களில் இறக்கை தயாரிப்பதற்கான தொழிற்சாலையும், ஐரோப்பாவின் மிகப்பெரிய இருப்பு உருக்கு தொழிற்சாலையான டாடா ஸ்டீல் (Tata Steels) இரண்டும் இங்கு இருப்பது குறிப்பிடத்தக்கது.

1980 களுக்கு முன்பு வரை இவர்களது பூர்விக மொழி மெல்ல மெல்ல அழிந்து வந்த சூழலில் வேல்சு (Welsh) மொழியினை மீட்டெடுக்க‌ பல திட்டங்களை வேல்சு அரசு (Wales Government) முன்னெடுத்தது. அதன் முதல் பகுதியாக ஆரம்பப் பள்ளி முதல் உயர்நிலைப்பள்ளி வரை, முழுக்க வேல்சு மொழியில் சொல்லித்தரப்படும் பள்ளிகளை ஆரம்பித்தார்கள். தற்போது இங்கு பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போகிறது. அன்றாட அலுவல் பயன்பாட்டில் வேல்சு, ஆங்கிலம் என்ற இரு மொழிக் கொள்கையினை கடைபிடித்ததால் வேல்சு மொழி தற்போது மெல்ல தளைக்கிறது.

எமது சுவான்சி பல்கலைக் கழகத்தினை (Swansea University) வேல்சு மொழியில்பிரிவசுகால் அபர்தவே” (Prifysgol Abertawe) என்று அழைக்கிறார்கள். இதன் பொருள்தவே” (Tawe) நதியின் முகத்துவாரத்தில் உள்ளதலைமைப் பள்ளி” அல்லதுபல்கலைக் கழகம்” என்று பொருள். ஆங்கிலத்தில் சொல்வதை விட வேல்சின் தாய்மொழியில் சொல்லும் போது, எங்கள் பல்கலைக் கழகம் எந்த இடத்தில் உள்ளது என்பதை துல்லியமாக சொல்லி விடுகிறது. இந்த ஆற்றல் தாய்மொழிக்கு மட்டுமே உண்டு.





தங்களது தாய்மொழியை வளர்க்கும் பொருட்டு வேல்சு அரசு தொலை நோக்கு திட்டம் ஒன்றை வரையறுத்துள்ளது.  எதிர்வரும்  2050 ஆம் ஆண்டில் குறைந்த பட்சம் பத்து லட்சம் (Cymraeg 2050 A million Welsh speakers) பேருக்காவது வேல்சு மொழி பேசத் தெரிந்திருக்க வேண்டும். அதாவது, இவர்களது மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு மக்களை தாய்மொழியில் பேச வைக்க வேண்டும் என்பதே குறிக்கோள். ஒரு மொழியை இனி புதிதாக உருவாக்க இயலாது, ஆகையால் தமது மொழி அடையாளங்களை மீட்டெடுக்கும் பணியையே தற்போது வேல்சு தேசம் செய்ய துவங்கியுள்ளது.



அன்றாட வாழ்வில் மக்களுக்கு வேல்சு மொழி வார்த்தைகள் பதிய வேண்டும் என்பதற்காக சாலைகளில் வேல்சு மொழியில் எழுதுத துவங்கினர். “மெதுவாக செல்” எனப் பொருள்படும் “ARAF” வார்த்தை  வேல்சு பகுதியில் உள்ள சாலையில் பயணிப்பவர்களுக்கு மிக பரிச்சயமானது. வேல்சு தேசம் முழுவதும் இது போன்ற பல‌  சாலை அறிவிப்பு குறியீடுகள், அறிவிப்பு பலகைகள் என எல்லா இடங்களிலும் இரு மொழியை காணலாம்.

தெற்கு வேல்சு (South Wales) பகுதியான கார்டிப் (Cardiff) நகரம் (வேல்சு தேசத்தின் தலைநகரம்), மற்றும் சுவான்சி (Swansea) நகர பகுதிகளில் ஆங்கிலம் முதன்மையாகவும், வேல்சு அறிவிப்பு இரண்டாவதாகவும் இருக்கும். சுவான்சி நகருக்கு வடக்கு பகுதியில் பயணிக்க துவங்கி விட்டால், வேல்சு அறிவிப்பு முதலாவதாகவும், ஆங்கிலம் மொழி இரண்டாவதாகவும் இருக்கும். வடக்கு வேல்சு பகுதிக்குள் நுழைந்து விட்டால் வேல்சு தேசத்தின் கொடியானசிவப்பு நிறடிராகன்” எல்லா வீடுகளில் பறக்கும். அந்த அளவிற்கு தாய்மொழியைக் நேசிப்பவர்கள் வேல்சு தேசத்து மக்கள்.




பிரித்தானியாவின் அங்கமாக வேல்சு இருந்தாலும் ஒலிம்பிங், காமன்வெல்த் உள்ளிட்ட போட்டிகளில் வேல்சு தேசத்திற்கென்றே பங்கேற்கும் தனி அணியை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். குறிப்பாக‌ ரக்பி, கால்பந்து, நீச்சல் போட்டியில்  உலகத் தரத்திற்கான இணையான அணியை உருவாக்கி வைத்துள்ளனர்.  

பிரித்தானியாவிற்கு வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு UK முழுவதும் ஆங்கிலம் பேசுவது போல் தோன்றினாலும் நிலப்பரப்பிற்கான இன அடையாளத்தை விட்டு தர வேல்சு மக்கள் ஒரு போதும் முன் வந்ததில்லை. சுவான்சி பல்கலைக் கழகத்தில் என்னுடன் பணிபுரியும் உள்ளூர்காரர்களின் வீடுகளில் வேல்சு மொழி பேசுவதை கட்டாயமாக கடைபிடிக்கிறார்கள். அந்த அளவிற்கு தாய் மொழி தாகம் உடையவர்கள். ஸ்காட்லாந்து மக்கள் இந்த விசயத்தில் இன்னும் ஒரு படி மேல்.


2008 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் பெண்களுக்கான மிதிவண்டி போட்டியில் வேல்சு தேசத்திற்காக கலந்து கொண்டு தங்க பரிசை வென்ற‌ நிகோலா. Picture courtsey - Walesonline.co.uk

உலகையே கோலோச்சும் ஆங்கில மொழிக்கு எதிராக ஒரே நிலப்பரப்பில் இருந்து கொண்டு தங்களது  மொழியை மீட்டெடுப்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. ஏனெனில் மொழி என்பது இனத்தின் அடையாளம் மட்டுமல்ல, அது அவர்களின் அதிகாரத்திற்கான திறவுகோலும் கூட. இந்த இடத்தில்இந்தி” என்னும் பெருந் தேசிய மொழியுடன் எந்த சமரசமும் செய்து கொள்ளாமல் தமிழ், ஆங்கிலம் என்ற இரு மொழிக் கொள்கை மூலம் ஒரு இனத்திற்கான அதிகாரத்தை 70களில் விதை போட்டு துவங்கி வைத்தபேரறிஞர் அண்ணாவை நன்றியோடு நாம் நினைத்துப் பார்க்க வேண்டியுள்ளது.

இன்னும் சற்று ஆழமாக யோசித்துப் பார்த்தால், இந்தி மொழி ஆதிக்கத்திற்கெதிராக தமிழ் மொழிக்கு கை கொடுத்ததுதிராவிடம்” என்னும் கேடயம். திராவிட மொழி குடும்பங்கள் என்னும் பெரிய அடையாளத்தை முன் வைத்தே  நமக்கான அதிகாரத்தினை மீட்டெடுக்க இயலும் என்பதை நன்கு உணர்ந்த தந்தை பெரியார்திராவிடர்” என்ற பதத்தை கையாளத் துவங்கினார். இதே போல, வேல்சு மொழி தனது கெல்டிக் இன பங்காளிகளோடு இன்றளவும் அரசியல் ரீதியிலான உறவை நன்கு பேணுகிறது. தமிழகத்தில் மொழி வழியான அரசியல் அதிகாரத்தில் ஒரே இனக் குடும்பங்களுக்கான உறவை, குறிப்பாக திராவிடத்தின் முக்கியத்துவத்தை இங்குள்ள சூழலைப் பார்க்கும் போது நன்கு உணர முடிகிறது.

வேல்சு தேசம் முழுவதும் உள்ள எல்லா ஆரம்ப பள்ளிகளிலும் வேல்சு மொழிப்பாடம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு, சுவான்சி நகரின் ஆரம்ப பள்ளியில் பயிலும் எனது மகள்  வேல்சு மொழிப்பாடத்தை படிக்கிறார்.  வேல்சு மொழியில் அடிப்படை வார்த்தைகள், உரையாடல், கதை சொல்வது, எண்கள், குறியீடுகள், வாழ்த்து செய்திகள் என பல தளங்களில் இங்குள்ள ஆரம்ப பள்ளியில் பாடத்திட்டம் உள்ளது. மேலும் அரசுப் பணி, பள்ளி, பல்கலைக் கழக பணிகளில் வேல்சு மொழித் திறன் உடையவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை தரப்படுகிறது. பள்ளி, பல்கலைக் கழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள், அரசு அலுவல்கள், பொதுமக்களுக்கான அறிவிப்பு சீட்டுகள் என அனைத்தும் வேல்சு, ஆங்கிலம் என இரண்டு மொழிகளில் தரப்படுகிறது. இதன் மூலம் வேல்சு மொழி பெயர்ப்பாளர்களுக்கு பல நிலைகளில் வேலை வாய்ப்பு கிடைக்கிறது.



Wales (Picture courtesy- the guardian)


உலகம் செல்கிற வேகத்தில் தாய்மொழிக்கான அடையாளங்களை தக்க வைப்பது, மீட்டெடுப்பது என்பது கடினமான காரியம். அந்த வகையில் இதற்காக மெனக்கெடும் வேல்சு தேசத்தை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

அறிவியல் நுட்பம் இவற்றில் வேல்சிடம் இருந்து தமிழகம் கற்க நிறைய இருக்கிறது. குறிப்பாக பல மொழி பேசும் இனக்கூட்டம் வாழும் நிலப்பரப்பில்   அவர்களுக்கிடையேயானஅதிகாரம் மற்றும் பொருளாதார நிதி பகிர்வில் ஒரு சமநிலையோடு கூடிய பரந்துபட்ட தன்மை (equality and diversity) இருக்க வேண்டும்.  ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து கிடைக்கும் பிராந்திய வளர்ச்சி நிதி (European Regional Development Fund) மற்றும் பிரித்தானியாவின் பாரளுமன்ற நிதி பகிர்வு இவற்றில் எவ்வாறு வேல்சு சாமர்த்தியமாக‌ செயல்படுகிறது என்பதை நாம் ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.  மேலும் தனக்கான தத்துவார்த்த கூட்டத்தை, கற்றறிந்த சான்றோர் குழுவை (Learned Society of Wales)  அமைப்பதன் மூலம் எவ்வாறு தனக்கான அதிகாரத்தை நிறுவ முடியும் என்பதையும் யோசிக்க வேண்டுகிறேன். மேலும் உள்ளூர் சிறு நடுத்தர வணிக நிறுவனங்களை கல்வி நிறுவனங்களுடன் இணைப்பதற்கான கட்டமைப்பு வேல்சு அரசிடம் உள்ளது. இதனை தமிழகத்திலும் அமல்படுத்தலாம்.

அதைப் போலவே, தமிழ்நாடு எவ்வாறுஒரு மொழி ஆதிக்க நிலப்பரப்பில்” பன்முகத்தன்மைக்கான எடுத்துக்காட்டாக‌, தனித்தன்மையோடு விளங்குகிறது என்பதை நம்மிடம் இருந்து வேல்சு கற்றுக் கொள்ளலாம். குறிப்பாக சுகாதாரத் துறைக்கான‌ கட்டமைப்பு, ஆரம்ப பள்ளிகள் வாயிலாக முன்னெடுக்கப்படும் தாய்மொழிக் கல்வி இவற்றில் தமிழகம் உலகிற்கு முன்னோடி என்றே சொல்வேன்.

 தமிழ், வேல்சு இரு மொழி பேசும் மக்களின் வாழ்வியல், மொழி அதிகாரம் குறித்து அரசியல், சமூகப் பார்வையில்  ஆய்வு செய்யலாம். இந்த ஆய்வின் முடிவுகள் இரு இனத்திற்கும் நன்மை பயக்கும்.

 இன்றைய சமகால வளர்ச்சியில், அறிவியல் நுட்ப கூறுகளை உள்வாங்கி புதுமையை புகுத்திக் கொள்ள ஏதுவானமொழியே தொடர்ந்து எதார்த்த உலகில் பிழைக்கும். வெறும் ஆண்ட பரம்பரை கதைகள் மட்டுமே மொழியை செழிப்பாக வைத்திருக்க உதவாது. இளைய தலைமுறை மொழியை கைக்கொள்ள அம்மொழியில் வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும், அதே மொழியில் நுட்பங்களை கைக்கொள்ளும் தளங்கள் விரிவாக்கப்பட வேண்டும். அந்த வகையில் வேல்சு மொழி புதிய முயற்சிகளுடன் நம்பிக்கையோடு பயணிக்கிறது.

தாய்மொழியை நேசிக்கிற எல்லோருக்கும் எனது சர்வதேச‌ தாய்மொழி தின வாழ்த்துகள்!

-முனைவர் சுதாகர் பிச்சைமுத்து

சுவான்சி பல்கலைக் கழகம், வேல்சு, பிரித்தானியா

குறிப்பு:கட்டுரையாளர் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் வேல்சு அரசின் கூட்டு இணைப்பில் வழங்கப்படும் சர் கிம்ரு ரைசிங் ஸ்டார் விருதை (Ser Cymru-II Rising Star Fellowship) பெற்றவர். வேல்சு தேசத்தில் உள்ளசுவான்சி பல்கலையில் நானோ டெக்னாலஜியை அடிப்படையாகக் கொண்டபோட்டோ கேட்டலிஸ்ட்கள் குறித்த ஆய்வுக் குழு ஒன்றிற்கு தலைவராகவும், மூத்த ஆராய்ச்சியாளராகவும்  பணியாற்றி வருபவர். தனது பள்ளிக் கல்வி முழுவதையும் தாய்மொழியாகிய தமிழ் மொழியிலேயே அரசுப் பள்ளியில் பயின்றவர். தொடர்ந்து தமிழில் அறிவியல், பயணம் சார்ந்த கட்டுரைகளை தாய்மொழியில் எழுதி வருபவர்.


Dr Sudhagar Pitchaimuthu


Sunday 6 October 2019

ஆடிசம் குறைபாடுள்ள குழந்தைகளை புரிந்து கொள்ளும் புத்தகங்கள்


அவந்தியின் வகுப்பில் காயா என்னும் சிறுமி படிக்கிறார்.

காயாவிற்கு 4 வயது இருக்கும் போதுதான் அவருக்கு ஆட்டிசம் குறைபாடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

குழந்தைகளின் புத்தக உலகம் கற்பனைகள் நிறைந்த கதாநாயக வழிபாட்டையே முன் வைக்கிறது. அதில் வரும் கதாநாயகர் அல்லது கதாநாயகி பாத்திரங்கள் புத்திக் கூர்மையுள்ளவர்களாகவும், சாகசக்காரர்களாக மட்டுமே காட்டப்படுகிறார்கள்.
பெரும்பாலும் குழந்தைகளுக்கான புத்தக உலகில் ஆடிசம் குறைபாடுள்ள கதாபாத்திரங்கள் கதாநாயகர்களாக காட்டப்படுவதில்லை. அவ்வாறு வெளி வந்த புத்தகங்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.

இதனை முன் வைத்து காயாவின் தந்தை ஜான் ராபர்ட் தன் மகளுடனான அனுபவத்தை ஒரு புத்தகமாக எழுதினார் (Through The Eyes of Me). ஜான் ராபர்ட் ஒரு வெப் டெவலப்பர்.  எழுத்தாளராக எந்த ஒரு அனுபவமும் இல்லாத ஒருவரை எழுத்தாளராகி இருக்கும் அதிசயத்தை காயா ஏற்படுத்தி இருக்கிறார்.




கடந்த ஆகஸ்ட் மாதம் ஆடிசம் குறைபாடு உள்ள தனது நண்பரின் மகளை முன் வைத்து ஒரு புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளார்.  இது அவரது இரண்டாவது புத்தகம்.

எதார்த்தத்தில், காயா போன்ற ஆடிசம் குறைபாடு உள்ள குழந்தைகளை அக்குறைபாட்டில் இருந்து மீட்க பள்ளியின் ஒத்துழைப்பு மிக அவசியம். குறிப்பாக இத்தையக குறைபாடுள்ள‌ குழந்தைகளுடன் உடன் பயிலும் குழந்தைகளுக்கு இது குறித்த புரிதல் வேண்டும். ஆனால், துரதிஸ்டவசமாக ஆடிசம் குறித்த புரிதலை   ஐயங்களை போக்கும் குழந்தைகளுக்கான புத்தகங்கள் எதுவும் இதுவரை வெளிவரவில்லை.

இந்தப் பார்வையில், தனது  Through The Eyes of Me புத்தகத்தை காயாவின்  பள்ளியில் வாசிக்கத் தந்தார். அக்கட்டுரையினை பள்ளி அசெம்ப்ளி நேரத்தில் அவரது ஆசிரியை ஒருவர் வாசித்தார். அப்புத்தகம் மிக எமோசனலாக இருப்பதோடு அனைவருக்கும் இது பிடித்து விட, இதனை வேல்ஸ் பள்ளிகளின் பாடத்திட்டத்தில் சேர்க்கலாம் என‌ உற்சாகப்படுத்தினர்.

காயாவின் தந்தை தற்போது ஆடிசம் குறைபாடு குறித்த குழந்தைகளின் கேள்விகளை முன்வைத்து தற்போது ஒரு புத்தகம் எழுதிக் கொண்டிருக்கிறார். விரைவில் அது புத்தகமாக வரும்.

நிச்சயம் இப்புத்தகம் காயா போன்ற பல குழந்தைகளுக்கு அவர்களை அரவணைத்துச் செல்லும் பள்ளித் தோழர், தோழிகளை உருவாக்கும் என நம்புகிறேன்.

வாழ்வியல் அனுபவங்கள் சில நேரங்களில் இலக்கியமாவது உண்டு. அது தரும் செய்தி, உலக இலக்கியம் என்று சொல்லப்படுபவைகளைக் காட்டிலும் மிகச் சிறந்த அனுபவத்தை தரக் கூடியது.

காயாவின் தந்தை ஜான் ராபர்ட் குறித்த பிபிசி இணையதளத்தில் வந்துள்ள செய்தி

https://www.bbc.co.uk/news/uk-wales-49908048

ஜான் ராபர்ட் எழுதிய முதல் புத்தகம் குறித்த யுடியூப் காணொளி
https://www.youtube.com/watch?v=8wNRIUr45f4