Monday 29 May 2017

புறக்கணிக்கப்படும் அசைவ பட்சினிகள்
----------------------------------------------------------

அமெரிக்காவின் ஒரெகான் மாகாணத்தில் 8900 சதுர கிமீ பரப்பளவில் விரிந்து கிடக்கிறது எல்லொஸ்டோன் (Yellowstone national park) தேசியப் பூங்கா. இதுவெ உலகின் முதல் தேசியப் பூங்காவாகும்.

திடீரென்று இந்த தேசியப் பூங்காவின் பல்லுயிர் பெருக்கம் சரியத் துவங்கியது. காரணம் இங்கிருக்கும் புல், சிறு செடி என அனைத்து தாவரங்களையும் தின்று காலி செய்த எல்க் (Elk) என்னும் ராட்சத மான்கள் கட்டுக்கடங்காமல் பெருகியதே.

ஏன் இவை கட்டுக்குள் இல்லாத அளவிற்கு பெருகியது?
எல்க் ராட்சத மான்களை தொடந்து கட்டுக்குள் வைத்திருந்த அசைவ பட்சினியான‌ ஓநாய்களை அப்பகுதியில் வாழ்ந்த கொயேட் என்னும் குள்ளநரிகள் கொல்லத் துவங்கியதால் ஏற்பட்ட தலைவலியே.

பிறகு, 1995 ஆம் ஆண்டு இந்த காட்டில் ஓநாய்களை மீண்டும் வனத்துறையினர் இப்பகுதியில் அறிமுகபப்டுத்தினர்.

ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்கு பிறகு 2014 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புள்ளி விபரத்தின்படி படி, எல்லோஸ்டோன் தேசிய பூங்காவில் மான்களின் இனப் பெருக்கம் கட்டுப்படுத்தப்பட்டது, அதனால் சிறு தாவரங்கள் தொடங்கி அதன் வாயிலாக வளரும் புழு, பூச்சிகளை அவற்றை உண்ணும் பறவைகள், நீர் நாய்கள் என எல்லோஸ்டோன் தேசிய பூங்காவின் பல்லுயிர் பெருக்கம் எல்லோரையும் ஆச்சரியப் படுத்தும் வகையில் மீட்டெடுக்கப்பட்டது.

இது சார்ந்து நியூசம், எல்லிட் என்ற இரு ஆராய்ச்சியாளர்கள் எல்லோஸ்டோன் தேசியப் பூங்காவில் நெடிய‌ ஆய்வினை மேற்கொண்டு அதன் முடிவுகளை ஜர்னல் ஆல் எகாலஜி என்னும் சர்வதேச ஆய்விதழில் வெளியிட்டார்கள் (Thomas M. Newsome, William J. Ripple. A continental scale trophic cascade from wolves through coyotes to foxes. Journal of Animal Ecology Volume 84, Issue 1, pages 49–59, January 2015). http://onlinelibrary.wiley.com/wol1/doi/10.1111/1365-2656.12258/abstract

மான்கள் பார்க்க சாது என நினைத்து காடு முழுவதும் மான்கள் இருந்தால் விரைவில் வனம் அழியும் என்பது நம்மில் எத்னி பேருக்கு தெரியும்.
.
அதைப் போலவே சைவ, அசைவ பட்சிகளின் தகவமைப்பு என்பது சூழலியலின் சங்கிலியில் ஒன்றோடொன்று பின்னி பிணைக்கப்பட்டவை. ஆகையால் மிகையாக‌ சைவ‌ சித்தாந்தம் பேசி சூழலியல் சங்கிலியின் ஒரு முனையின் அறுத்தெறிந்தால் விளைவு அதை அறுப்பவர்களுக்கே எதிராய் முடியும்.

நம் தனிப்பட்ட இறை நம்பிக்கைகளைத் தாண்டி எல்லா உயிரினங்களுக்கும் இயற்கையின் தகவமைப்பு சூழல் படியே வளர்கிறது. அசைவம், சைவ சிந்தாந்தங்களை தாண்டி சுற்று சூழலியலை உங்கள் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுங்கள்.

அசைவப் பிரியர்கள் விலங்குகள் வதை செய்கிறார்கள் என்று உங்கள் மனம் நம்பத் தொடங்குமானால், பசுவின் கன்று பாலை திருடி கெட்டி தயிர் போட்டு லஞ்ச சாப்பிடுவதை நிறுத்துங்கள்.










Sunday 28 May 2017

புஜி மலையும், யமனாகா ஏரியும் (ஜப்பானின் மிக உயரமான‌ மலை)

புஜி எரிமலை (Mount Fuji) ஜப்பானில் உள்ள மலைகளிலே உயரமானது. ஏறத்தாழ 3700 மீட்டர் உயரம் உடையது.  ஜப்பானியர்கள் புனிதமாக கருதும் மூன்று முக்கிய மலைகளுல் புஜி மலையும் ஒன்று. ஆகையால் ஜப்பானிய மொழியில் மரியாதையோடு புஜி சன் (Fujisan) என்றழைக்கப்படுகிறது. கடந்த 2013 ஆம் ஆண்டு யுனெஸ்கோ கலாச்சாரத் தளங்களுக்கான பட்டியலில் புஜி மலை சேர்க்கப்பட்டுள்ளது.

புஜி மலை அசப்பில் பார்க்க குழந்தைகள் சாப்பிடும் கோன் ஐஸ் போல் உச்சியில் பனிக்கட்டிகள் தூவி பார்க்கவே ஜில்லென்று ஒரு அனுபவத்தைக் உங்களுக்கு கொடுக்கும்.

ஜப்பானிற்கு விமானத்தில் வரும் போது நிச்சயம் நீங்கள் கழுகு பார்வையில் புஜி மலையினை ஆகாய மார்க்கம் வழியாக தரிசிக்கலாம்.

தோக்கியோ நகரில் இருந்து 100 கி.மீ தொலைவில் உள்ளது புஜி மலை. ஆகஸ்ட் மாதத்தில் இம்மலை உச்சிக்கு நடந்து செல்லலாம். உலகெங்குமிருந்து மலையேற்றத்தில் பிரியம் உள்ளவர்கள் புஜி மலையில் ஏறுவதற்காகவே  ஜப்பானுக்கு சுற்றுலாவிற்கு வருகிறார்கள்.. மற்ற காலங்களில் பனி உறைந்து இருப்பதால் புகைப்பட தரிசனம் மட்டுமே.

புஜி மலையின் பக்கவாட்டில் பள்ளத்தாக்கில் உள்ள பூங்காவிற்கு (Grinpa Mt. Fuji)  செல்லும் வாய்ப்பு கிடைத்தது. தூரத்தில் தெரியும் மலை அதன் அடிவாரத்தில் அழகிய பூக்கள் பூத்திருக்கும் தோட்டம் என பார்க்கவே வீட்டு வரவேற்பறையில் ஒட்டியிருக்கும் பெரிய போஸ்டரைப் பார்த்தது போல் புஜி மலையின் மீதான் ஈர்ப்பில் ஒரு நாள் முழுதும்  ஜென் நிலையில் கடந்து போனது.

 புஜி மலையின் பள்ளத்தாக்கில் இருந்து கிளம்பும் போது மாலை 5.30 மணி. அங்கிருந்து தோக்கியோ நகருக்கு திரும்பி போகும் வழியில் புஜி மலையின் பக்கவாட்டில் 40 கிமீ தூரம் பயணித்தால் அதன் அழகை இன்னும் கொஞ்சம் நெருங்கி ரசிக்கலாம் என காரில் சுற்றியபடி வந்தோம்.

புஜி மலையின் அடி வாரம் என்பது பல மைல்களுக்கு விரிந்து கிடக்கும் ஒரு பகுதி. அதன் காலடியில் கவாகுச்சிகோ, சைகோ, யமனாககோ, சொஜிகொகோ, மொடொசுகோ என்னும் அற்புதமான ஐந்து ஏரிகள் உள்ளது. அவை புஜிகொகோ (Fujigoko) என்றழைக்கப்படுகின்றன. ஜப்பானிய மொழியில் கொ என்றால் ஏரி என்று பொருள்.

இந்த ஐந்து ஏரிகளுள் மிகப்பெரிய ஏரியான யமனாகா (Lake Yamanaka) ஏரியில் சற்று காலாற அமர்ந்து விட்டு போகலாம் என முடிவெடுத்து இரவு ஏழு மணிக்கு வந்தடைந்தோம்.

யமனாகா ஏரியானது பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு புஜி எரிமலை குழம்பின் லார்வாக்களுக்கான வடிகாலாக இருந்த சகாமி ஆற்றின் வாயிலாக அமைந்து இருக்கலாம் என வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

ஜப்பானின் மிகப்பெரிய மூன்றாவது ஏரி என்னும் சிறப்போடு, புஜி மலையினை சுற்றியுள்ள ஏரிகளுள் ஆழமானதும் (44 அடி)  இதுவே.

யமனாகா ஏரியைச் சுற்றி ஏராளமான சுற்றுலா விடுதிகள் உள்ளது. மீன் பிடித்தல், படகு ஓட்டுதல், நீர் சறுக்கு விளையாட்டு, ஏரியின் கரையில் இரவு நேரத்தில் தீ முட்டி கறி வறுத்து சாப்பிடுவது, பந்து விளையாட்டு என ஏறத்தாழ 6.4 கிலோ மீட்டர் சதுர பரப்பளவில் விரிந்து கிடக்கும் இதன் கரையானது ஜப்பானியர்களின் ஓய்விற்கான தலங்களில் அதிக கவனத்தைப்  பெற்றுள்ளதால் வருடத்தின் பெரும்பாலான நாட்களும் சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்த வண்ணம் உள்ளனர்.

ஜப்பானுக்கு சுற்றுலாவிற்கு குடும்பத்தோடு வரும் வாய்ப்புள்ளவர்கள் இங்கு தங்கி இளைப்பாறி செல்லலாம். இந்தப்பகுதியில்தான் இயற்கையாகவே எரிமலையில் இருந்து வெளிவரும் சுடுநீர் ஊற்றில் குளிக்கும் இடங்கள் அதிகம் நிரம்பிய கக்குனே மலை உள்ளது.

ஜப்பானில் கோடை காலத்தில் இரவு எட்டு மணி வரை சூரிய வெளிச்சம் இருக்கும். நாங்கள் யமனாகா ஏரியை அடைந்த போது   நாள் முழுவதும் ஓடிக் களைத்த சுற்றுலாப் பயணிகளுக்கான படகுகள் நீரில் தள்ளாடியபடியே ஓய்வெடுத்துக் கொண்டிருந்தன.

படகு சவாரியில் ஏறுவதற்காக ஏரியின் கரைப்பகுதியில் அமைக்கப்பட்டு இருக்கும் நீண்ட பலகையில் மெல்ல நடந்து சென்று ஏரியின் ஆழமான பகுதி அருகே சென்று அதன் அழகை ரசித்தேன்.

அங்கேயே நின்று கொண்டு நண்பரின் இல்லத்தில் இருந்து கொண்டு வந்த தேநீரை ஒரு டம்ளரில் ஊற்றி மெதுவாக உறிஞ்சிக் குடித்தேன்.

ஏரியின் தளும்பும் நீர் அலைகளின் ஓசையில், அதன் பின்னனியில்  விருட்சமாய் எழுந்து நிற்கும் புஜி மலையைப் பார்த்தவாறே தேநீரைக் குடித்து விட்டு கொஞ்சம் புகைப்படங்களை எடுத்துக் கொண்டு மெல்ல விடை பெற்றேன்.
 யமனாகா ஒரு ரொமான்டிக் ஏரி..குடும்பத்தோடு சென்று மகிழ்ந்திருங்கள்.











Thursday 25 May 2017

யாதும் ஊரே யாவரும் கேளிர்
தமிழ் அல்லாது பிற மொழி பேசும் இந்தியாaவின் பல மாநில மக்களோடு தொடர்ந்து பழகி வருகிறேன். அவர்களுடனான‌ முதல் சந்திப்பில் நமக்கு இந்தி மொழி தெரியாது என்று எடுத்த எடுப்பில் ஒரு புகாரை என்னிடம் வைப்பார்கள்.
இத்தனைக்கும் அவர்களுக்கு இந்தி தாய் மொழி கூட‌ கிடையாது. இருந்தாலும் ஒரு பொது ஊடக மொழிக்காக மெனக்கெடுவார்கள்.
அவர்களிடம் சிரித்துக் கொண்டே இந்தி கற்றால்தான் நாம் இருவரும் பேச முடியுமா. ஏன் உங்கள் தாய் மொழியினை எனக்கு சொல்லித் தரக் கூடாது. வேண்டுமானால் என் தாய் மொழி தமிழையும் நான் சொல்லி தருகிறேன் என நான் சொல்லி விடுவேன். பிறகு, என்னிடம் ஒரு போதும் இந்தி பற்றிய புகாரை வாசிக்க மாட்டார்கள்.
இந்தியாவின் பிற பகுதி மக்களோடு நெருங்கி பழகிய வகையில் நாம் எந்த அளவிற்கு விட்டுக் கொடுத்தும், பெற்றுக் கொண்டும் உள்ளோம் என்று எளிதாக உணர முடிகிறது.
தெலுங்கு, மலையாளம், மராட்டி, பெங்காளி, என பல மொழி நண்பர்களுடன் அவர்களது ஊர், கலாச்சாரம், உணவு, உடை, சடங்குகள், நம்பிக்கை என குறிப்பாக பேசுவேன். ஒரு கட்டத்தில் அவர்கள் என்னை அண்ணா என்று மரியாதையோடு அழைக்கத் துவங்கி விடுவார்கள். அதே போலவே அவர்கள் மொழியிலும் அண்ணன், அல்லது தம்பி என்ற வார்த்தைகளை கேட்டு தெரிந்து கொண்டு அவற்றின் வாயிலாகவே அழைப்பேன்.
ஒப்பீட்டு அளவில் தமிழகத்திற்கு வெளியே இருப்பவர்கள் நம்மை பெரிதும் மதிக்க காரணம், இங்குள்ள கல்வியறிவு, தமிழகத்தில் அடுத்தவர்களை மதிக்கும் அடிப்படை மனித தன்மைதான்.
நாம் என்னதான் பேல் பூரி விற்பவர்களை இந்திக்காரர்கள் என தட்டையாக அடையாளம் காட்டினாலும், நம்மவர்களுக்கு இவர்கள் நமக்கு நிகரான எதிரிகள் அல்ல என்று நன்கு தெரியும். ஆனாலும் காலம் காலமாய் தில்லியில் இருந்து கிடைக்கும் ஒரு அவல மரியாதை நம்மை நம் ஊரில் பஞ்சம் பிழைக்க வந்தவரை கொடூரமாக தாக்க தோன்றுகிறது.
நிச்சயம் அவர்கள் ஊரில் வாழும் தமிழர்களுக்கு, நாம் இங்கு வாழும் பிற மாநிலத்தவருக்கு தரும் மரியாதை போல கிடைக்காது என்பது எவ்வளவு உண்மையோ அதே அளவு அந்த ஊர்களில் வாழும் இது போன்ற விழிம்பு நிலை மக்களுக்கும் துளி கூட மரியாதை கிடையாது. இங்குதான் நாம் ஐம்பது ஆண்டுகளாக கற்றுக் கொண்ட சுயமரியாதை அடிநாதமாக வேலை செய்கிறது.
இதுவே சாமானிய மனிதர்களுடான உரையாடலில் நம்மை மதிப்பு மிகுந்தவர்களாக நிற்க வைக்கிறது. குறிப்பாக‌, சாலையோரத்தில் பூக்கட்டி விற்கும் பெண்மணியை அக்கா ஒரு முழம் பூக்கொடுங்க என வாஞ்சையோடு கேட்டு அவர்களையே தலையில் வைத்து விடச்சொல்லவும், டீக்கடை மாஸ்டரிடம் அண்ணே நல்லா சூடா ஒரு டீக்கொடுங்க என்று மழையில் அன்பை நனைக்கவும், முன்பின் தெரியா மனிதர்களை கூட சொல்லுங்க தம்பி என தயக்கம் உடைக்கவுமான ஒரு அன்பின் மொழி நம்மோடு இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.
தமிழக வெளியில் மக்கள் பணியாற்ற எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. ஆனால் மக்களுக்கு என்ன செய்யப் போகிறீர்கள் என்ற அடிப்படையில்தான் அவர்களை அணுக வேண்டுமே தவிர பிறப்பால் ஒருவரை நிராகரிக்க எந்த உரிமையும் கிடையாது.
ஒருவன் என்னதான் மேன்மையான தலைமைப் பண்புகளை கொண்டிருந்தாலும் பிறப்பு அடிப்படையிலான தகுதியாக மட்டுமே நிர்ணயிக்கும் வர்ணாசிரமத் தன்மையோடுதான் எல்லோரையும் நான் பார்ப்பேன் என்கிற துர்குணம் தமிழனுக்கு அடிப்படையாக அமைந்தது அல்ல. அவன் விசாலமான அன்பால் மனத் தடைகளற்று இவ்வுலகையே வழிநடத்தும் மாமனிதன். அதனால்தான் கணியன் பூங்குன்றன் என்னும் எம் முப்பாட்டன் "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்று சொன்னான் ..
இதனை எந்த டிக்சனரியில் மொழி பெயர்த்தாலும் அன்புதான் அடிப்படை கருப்பொருளாக அர்த்தம் தரும்.
அது தமிழன் வெளியே சென்று பொருள் ஈட்டுவது தொடங்கி பிற இன மக்களுக்கு தலைவனாவது மட்டுமல்ல, நம்மவர்களோடு இரண்டறக் கலந்து பாலில் கலந்த சர்க்கரையென வாழும் பிற இனத்தவர்களுக்கும்தான்.
ஆகையால் கணியனும் அவனது வாக்கும் நமக்கு மட்டுமல்ல வையத்திற்கே பொதுவானது.
எல்லா நதிகளும் கடலை நோக்கி பயணிப்பது போல் நாங்கள் எங்கள் மக்களோடு வாழும் எல்லா இனக்குழுக்களையும் அரவணைத்தே மானுடத்தை நோக்கி செல்கிறோம், இதனையே நாங்கள் "திராவிடம்" என்றழைக்கிறோம். நீங்கள் இதனையே கைக்கொண்டு வேறு பெயரால அழைப்பீர்களாயின் மானுடமே உங்களை கைக்கூப்பி தொழும்.
மொழி எல்லோரையும் வாழ வைக்கும் கருவி, அந்த வகையில் தமிழ் உலக மொழிகளுக்கெல்லாம் தாயாக இருப்பதில் நமக்கு எப்படி பெருமிதமோ அந்த மகிழ்வை தமிழ் பேசும் எல்லோருக்கும் தங்கு தடையின்றி தருவோம்.

Wednesday 24 May 2017

நீட் யாருக்கான நுழைவுத் தேர்வு - 3

 சமச்சீர் கல்வி வினாத்தாளில் எப்படி சமூக நீதியினை நாம் கடைபிடிக்கிறோம்?

அ. தேர்ச்சி அளவீட்டு எல்லைக்கு நிகரான மதிப்பெண்களை நேரடி வினாவில் கேட்டல் (1 மதிப்பெண் வினா, 3 மதிப்பெண் வினா மற்றும் 10 மதிப்பெண் வினா). உதாரணத்திற்கு மொத்தம் 150 மதிப்பெண்ணில் 70 மதிப்பெண் தேர்ச்சி எல்லை எனில், 70 மதிப்பெண்ணிற்கு நிகரான நேரடி வினாக்கள் நிச்சயம் கேட்கப்பட வேண்டும்.
நேரடி வினாக்கள் (direct questions) என்றால் என்ன?
இயற்பியல் பாடத்தைப் பொறுத்த வரை தத்துவம், கருவி அல்லது தத்துவத்தின் பயன்பாடுகள், சமன்பாடுகள், மாறீலிகளின் மதிப்பு, நேரடியாக சமன்பாடுகளில் கணக்கீடு செய்வது.

ஆ. கடினமான திறனறி வினாக்களை (analytical questions) தனித்த பகுதியாக கேட்காமல் நேரடி வினாக்களோடு கலந்து கேட்டல். இப்பகுதியில் எல்லா கேள்விகளையும் கட்டாயமாக்காமல் அவர்கள் விருப்பத்தை தேர்வு செய்து கொள்ளும் (at least) வாய்ப்பை வழங்கல் (3 மதிப்பெண் வினா, 10 மதிப்பெண் வினா).

மேலே சொன்ன இரண்டு வினா வகைமையிலும் எப்படி மாணவர்களின் தேர்ச்சி சதவிகிதம் சமூக நீதி (social justice) அடிப்படையில் உறுதி செய்யப்படுகிறது?

அ. முதல் தலைமுறையாக கல்வி மறுக்கப்பட்ட‌, மற்றும் விளிம்பு நிலை குடும்பங்களில் இருந்து பயிலும் மாணவர்கள்
ஆ. திறனறியும் வினாக்களுக்கு நிகராக‌ நேரடி வினாக்களில் தங்கள் திறமையினை வெளிப்படுத்தும் மாணவர்களுக்கு சமமாக வாய்பளிப்பது

மேலே சொல்லப்பட்ட ச‌மூக நீதி முறைகளை கடைபிடிக்கும் தமிழகத்தின் சமச்சீர் வழிக் கல்வி போலவே, இந்தியை தாய்மொழி வழிக் கல்வியாகக் கொண்டு இயங்கும் மாநில பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கான தேர்வுகளும் இதனையே கடைபிடிக்கின்றன.

ஏனெனில் தமிழகத்தைப் போலவே இந்தி பேசும் மாநிலங்களிலும் பொருளாதார, சாதிய ஏற்ற தாழ்வு நிலவும் சூழல் இன்னும் உள்ளது.

இன்னும் சொல்லப் போனால் சமச்சீர் கல்வியில் கேட்கப்படும் வினாக்களின் தன்மையினை ஒப்பிடும் போது இந்தி வழிக் கல்வி இன்னும் எளிமையாகவே உள்ளது. காரணம் தமிழகத்தை விட இன்னும் மோசமான சூழலில் இருக்கும் ஆரம்ப அடிப்படைக் கல்வி. இதனை பின்னர் விளக்குகிறேன்.

மேலே சொல்லப்பட்ட தேர்வுக்கான சமூக நீதி காரணிகளில் சிபிஎஸ்சி பள்ளி வகுப்புகளின் கேள்வி கேட்கும் தன்மை பெரும்பாலும் சமச்சீர் கல்வியின் வரையறைகளோடு ஒத்துப் போனாலும் திறனறி கேள்விகள் முழுக்க கட்டாயமாக்கப்பட்டுள்ளது (compulsory).

ஏனெனில் சமூக நீதியைப் பொறுத்த வரை வரை நான் சொன்ன இரண்டு காரணிகளில், அவர்கள் முதல் காரணியான "முதல் தலைமுறையாக கல்வி மறுக்கபப்ட்ட விளிம்பு நிலை குடும்பங்களில் இருந்து பயிலும் மாணவர்கள்" பற்றிய எந்தக் கவலையும் கிடையாது. பெரும்பாலான சிபிஎஸ்சி வழி கல்வி நிலையங்களில் பயிலும் மாணவர்கள் மேட்டுக்குடி வர்கத்தினராகவும், அவர்களது பெற்றோர் பொருளாதார ரீதியிலும், கல்வியறிவிலும் தன்னிறைவு அடைந்தவர்களாகவே உள்ளனர். ஆகையால் சிபிஎஸ்சி வினாத்தாளின் கேள்வி கேட்கும் வரையறை நேரடி அல்லது திறனறி வினாக்கள் என்ற இரண்டு வகைமைக்குள்ளேயே அடங்கி விடுகிறது. ஆக சிபிஎஸ்சி சமூக நீதிக்கான கல்வி அல்ல என்பதை தெளிவாக உணருங்கள். அது முழுக்க பொருளாதார ரீதியில் தன்னிறைவு அடைந்தவர்களுக்கான கல்வி திட்டம்.

அப்படியானால் யார் சமூக நீதி கல்வியை தருகிறார்கள்?
 மாநிலவாரியான கல்வி திட்டத்தினை பயிற்றுவிக்கும் பள்ளிகள் அனைத்துமே சமூக நீதிக்கானவையே. இந்த சமூகநீதியினை காக்கும் பொருட்டே அடிப்படை உரிமையான “கல்வி” மாநில உரிமைப்பட்டியலில் பட்டியல் 7-2ல் சேர்க்கப்பட்டு இருந்தது.. தற்போது கல்வியும், விளையாட்டும் மத்திய, மாநில அரசின் பொதுவான பகிர்தலுக்குட்பட்ட பொதுப்பட்டியலுக்கு (7-3) நகர்த்தப்பட்டு விட்டது. இந்த இடத்தில் கல்வி ஏன் மாநில அரசின் உரிமைக்குள் இருக்க வேண்டும் என்ற எளிய உண்மை நிச்சயம் உங்களுக்கு புரியும்.

இப்போது நடைபெற்றுள்ள‌ நீட் நுழைவுத்தேர்வு வினாத்தாள்,  தேசம் முழுமைக்கும் பொதுவானதா, அல்லது மாநில வாரியான பாடத்திட்டத்தின் அடிப்படையில் அமைந்ததா?

நான் மேலே சொன்ன படி இந்தியா முழுவதுமான புவிசார் சூழலில் பொருளாதாரம், சாதிய அடுக்குகளில் பெரிய ஏற்ற தாழ்வு உள்ளது. இந்த இரண்டு நிலையிலும் வழங்கப்படும் கல்வி வாய்ப்புகள் சமமாக இருப்பதில்லை. அதன் விளைவே இட ஒதுக்கீடு சார்ந்த வாய்ப்பினை மாநில அரசுகள் தங்கள் குடிமைச் சமூகத்திற்கு ஏற்ப  வழங்குகிறது. இங்கே அமெரிக்காவின் கல்வி திட்டம், அங்கு கிடைக்கும் வேலை வாய்ப்பினை நேரடியாக ஒப்பிடுவது எவ்வளவு அபத்தம் என்று நீங்கள் எளிதாக உணர்ந்திருப்பீர்கள்.

மீண்டும் விசயத்திற்கு வருகிறேன். நீட் நுழைவுத் தேர்வு ஒரே மாதிரியான பாரபட்சமற்ற முறையில் வினாக்கள் உள்ளதா?

நிச்சயம் கிடையாது.

அ. சிபிஎஸ்சி பாடத்திட்டத்தின் வாயிலாக தேர்வு எழுதுபவர்களுக்கு (English Only ) மிக அதிக அளவிலான திறனறி கேள்விகள் கேட்கப்படுகின்றன.
ஆ. மாநிலப் பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு ஒப்பீட்டளவில் குறைவான திறனறி கேள்விகளே கேட்கப்படுகின்றன.

அப்படியானால் தமிழக மாணவர்கள் சமச்சீர் பாடத்திட்டம் வாயிலாக எழுதும் போது கேள்விகள் எளிமையாகதானே இருந்திருக்கும்.

ஆம், நடந்து முடிந்த தேர்வில் கூட சமச்சிர் வழி கல்வி மாணவர்கள் சிபிஎஸ்சி கேள்விகளை ஒப்பிடும் போது சற்றே எளிதாக இருந்ததாக கூறியுள்ளனர்.
ஆனால் எவரேனும் இந்தி வினாத்தாளை ஒப்பிட்டு பார்த்தீர்களா? அவை இன்னும் மிக எளிதாக கேட்கப்பட்டுள்ளது.

சுருக்கமாகச் சொல்லப் போனால் அவை நம் சமச்சீர் கல்வி திட்டத்தின் பொது தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளை விடவும் குறைவான திறனறி அளவே உள்ளது. அப்படியானால் தமிழ் வழி மூலம் தமிழகத்தில் எழுதியவர்களின் எண்ணிக்கையானது இந்தி வழி மூலம் எழுதியவர்களின் எண்ணிக்கையை விட பல மடங்கு குறைவு. அப்படியானால் இந்தியா முழுவதும் நீட் நுழைவுத் தேர்வில் உறுதியளித்த 10 சதவிகித கோட்டாவில் யார் அதிகம் நுழைய முடியும்.

அப்படியானால் இந்த நீட் நுழைவுத் தேர்வு உண்மையில் யாருக்கானது?

நம்மோடு போட்டியிடும் சக போட்டியாளர்களின் பாடத்திட்டத்தினை ஒப்பிடாமல் நாம் நீட் நுழைவுத்தேர்வில் கலந்து கொண்டது ஒரு அவசர முடிவு என்றே சொல்லலாம்.

 அதைவிட அவசரமாக தற்போது இருக்கும் தமிழகத்தின் பாடத்திட்டம் மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மதிப்பெண் கட்டமைப்பினையும் மாற்றி அமைக்கவும் திட்டமிட்டுள்ளார்கள். அதில் இது வரை வழமையாக நடைமுறையில் இருந்து வந்த‌ ஆய்வக சோதனைத் தேர்விற்கான‌ 50 மதிப்பெண்ணை 10 ஆக குறைத்துள்ளனர். இதனால் தேர்ச்சி மதிப்பெண் 70 என்ற எல்லையினை குறுக்குவதன் மூலம் நான் மேலே சொன்னபடி குறைந்த பட்ச தேர்ச்சி விகிதத்தை நிர்ணயிக்கும் சமூகநீதியையும் நாம் முற்றாக நீக்குகிறோம்.

மேலும் நீட் போன்ற பொதுத் தேர்வில் இந்தி வழி மாநில மாணவர்களின் பாடத்திட்டம் இன்னும் எளிமையாக‌ உள்ள சூழலில் அவர்களோடு பொதுத் தளத்தில் போட்டியிடும் போது நம் மாணவர்கள் நிச்சயம் இன்னும் அதிகமாகவே பாதிக்கப்டுவார்கள்.

மொத்தத்தில் நீட் என்னும் பொது நுழைவுத் தேர்வு பல அபத்தங்களுக்கு வழி கோலியுள்ளது.

இதில் கிடைத்த ஒரே நன்மை 11 ஆம் வகுப்பு பாடத்திட்டத்தினை நுழைவுத் தேர்விற்க்கு க‌ணக்கில் கொண்டிருப்பது. இந்த திட்டத்தினைக் கூட நாம் மாநில அளவிலேயே செயல் படுத்த முடியும். இதற்கு நீட் நுழைவுத் தேர்விற்குள் சென்றுதான் இதனை செயல்படுத்த வேண்டும் என்று அவசியமில்லை.

முதலில் இந்தியா முழுவதும் நடந்து முடிந்த நீட் பொது தேர்வு வினாக்களை நாம் தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மூலம் தீவிரமாக ஆராய்ச்சி செய்ய வேண்டும். அதிக எண்ணிக்கையிலான இந்தி வழி மாணவர்களின் நுழைவு தேர்வு வினாக்கள் எந்த அளவிற்கு எளிமையாக இருக்கிறது என்ற ஒரு கருத்தை இனி தீவிரமாக அலசுவது அவசியம். இந்த சிக்கலை நாம் ஏற்கனவே மத்திய அரசின் வேலைவாய்ப்பு தேர்வுகளில் அதிகமாக எதிர் கொண்டு தமிழக தரப்பில் பலத்த இழப்பை சந்தித்து வருகிறோம்.

மேலோட்டமாக படித்தால் இது தமிழ், இந்தி மொழி பேசுவோருக்கான போட்டியாக தெரியும். ஆனால், காலம் காலமாய் இந்தியாவின் தென் கோடி எல்லையில் உரிமைகள் மறுக்கப்பட்டு வரும் தமிழர்களின் எதிர்காலமாகிய எம் பிள்ளைகளின் கல்வியும் இதில் அடங்கியுள்ளது.

பறவை நோக்கில் பார்த்தால் இந்த நீட் நுழைவுத் தேர்வில் முதலில் காவு வாங்கப்படுவது சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் பயிலும் குழந்தைகள், இரண்டாவது வம்படியாக உள்ளே நுழைக்கப்பட்டு இருக்கும் தமிழக குழந்தைகள். இறுதியில் நோகாமல் நோம்பி கொண்டாடப்போவது இந்தி வழி குழந்தைகள். இனி அவர் அவருக்கான சமூகநீதிக்கு அவரவர்களே  போராடிக் கொள்ள வேண்டியதுதான்.

நாங்கள் எங்கள் தமிழ் வழி மூலம் பயின்ற குழந்தைகளின் பக்கம் நிற்கிறோம். தொடர்ந்து நிற்போம்.

சமீபத்தில்,  சமச்சீர் கல்வியில் கேள்விகள் எளிதாக கேட்பதை இன்னும் கடினமாக்க வேண்டும் என்று சொல்பவர்களையும், பாடத்திட்டத்தை இன்னும் சிபிஎஸ்சிக்கு நிகராக மாற்றியமைக்க வேண்டும் என்ற கோசத்தினை வெகுவாக கேட்க முடிகிறது. முதலில் இவர்கள் தமிழகத்தின் சமச்சீர் கல்வியில் நடத்தப்படும் பொதுத் தேர்வு வினாக்கள் நேரடி, திறனறி வினாக்களின் எண்ணிக்கையில் ஓரளவிற்கு சமன் செய்தே கேட்கப்படுகிறது என்ற உண்மையினை புரிந்து கொள்ள வேண்டும். மேலும், இந்த கேள்வியை எழுப்புபவர்கள் முதலில் நம் சமச்சீர் கல்வி முறையில் இருக்கும் சமூகநீதி அம்சங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு வேளை உங்கள் குழந்தை மிக அதிகமாக திறனறி திறமையோடு இருப்பதாக நீங்கள் கருதினால் நீங்கள் தாரளமாக சிபிஎஸ்சி பாடத்திட்டத்திற்கு செல்லலாம். ஏனெனில் தமிழக அரசின் அடிப்படைக்  கொள்கை கல்வியை பரவலாக்குவதுதானே தவிர கல்வியை ஒரு குறிப்பிட்ட திறன் உடைய குழந்தைகளுக்கு மட்டுமே கொண்டு செல்வதல்ல.

சிபிஎஸ்சி, சமச்சீர் கல்வி திட்ட பொதுத்தேர்வு வினாக்களில் எந்த அளவிற்கு திறனறி வினாக்கள் கேட்கப்படுகிறது. அடுத்த பதிவில் எழுதுகிறேன்.
































Sunday 21 May 2017

ஜப்பானிய புத்தகங்களும், எழுத்து முறைகளும்


சமீப நாட்களாய் நான் போட்டிருந்த மூக்கு கண்ணாடி என் காது மடல்கள் மீது அதிக அழுத்தம் தர ஆரம்பித்து விட்டது.  இனி மேலும் பொறுக்க முடியாது, கண்டிப்பாக மாற்றியே ஆக வேண்டும் என்ற கட்டத்திற்கு வந்திருந்தேன்.

உங்கா, அருகில் இருக்கும் நகரியமா ஒத்தகனமோரி ரயில் நிலையம் அருகில் வணிக வளாகத்தில் கொஞ்சம் கண்ணாடி கடைகள் இருக்கிறது.

நான் தற்போது இருக்கும் இடத்தில் இருந்து பதினைந்து நிமிட பயணம் என்பதால் பெரிய சிரமம் இருக்காது என கிளம்ப்பி விட்டேன். கண்ணாடி கடையில் பழைய லென்சின் அளவையே போட்டுத் தரச் சொன்னேன். புதிய பிரேமை எடுத்துக் கொடுத்ததும் ஒரு மணி நேரம் காத்திருக்க முடியுமா என்றார்கள்.

சரி போரடிக்காமல் இருக்க வணிக வளாகத்தை ஒரு சுற்று சுற்றி வந்து விடலாம் என சுற்றி வந்த போது பெரிய புத்தக கடை கண்ணில் பட்டது.

ஏறத்தாழ அந்த தளத்தின் பாதி பகுதியினை அந்த புத்தக கடை ஆக்கிரமித்து இருந்தது. சுற்றி வர ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகும் என தோன்றியது.

முக்கிய எழுத்தாளர்களின் புத்தகங்களை அவரது புகைப்படங்களை பெரிதாக போஸ்டர் போட்டு அதன் கீழ் அலமாரியின் தனியாக அடுக்கி வைத்திருந்தனர். முழுக்க முழுக்க ஜப்பானிய மொழியில் எழுதப்பட்டுள்ள புத்தகங்கள். சிறியவர், பெரியவர் என இரண்டாக பிரித்திருப்பதால் எளிதாக குழப்பமில்லாமல் மக்கள் விரும்பும் பகுதிக்கு செல்கிறார்கள்.



பெரும்பாலும் புத்தகங்களை நின்று கொண்டே புரட்டி படிக்கிறார்கள். இளைஞர்களுக்கான தனித்த பகுதியினை ஆளை சுண்டி இழுக்கும் வகையில் போஸ்டர்கள் போட்டு வைத்திருக்கின்றனர். பதின்ம வயது கூட்டம் முழுவதும் நேராக அந்த பகுதிக்கு போய் விடுகிறார்கள்.

நம் ஊர் புத்தக கடைகளைப் போலவே சமையல், ஜோக்குகள், அரசியல், ஆன்மிகம், நிர்வாகவியல் புத்தகங்கள் என பிரிவு வாரியாக‌ வைத்திருக்கின்றனர்.

அதே நேரம் பயணம், பேஷன் டிசைனிங், என மாடர்ன் ஏரியாக்களில் ஏராளமான‌ கலெக்சனை பார்க்க முடிந்தது. மீன் பிடித்தல், கார் ரேஸ், டென்னிஸ், கோல்ப், கால்பந்து என இந்த வரிசை நீண்டு கொண்டே போனது. இந்த ஏரியாவில் புத்தகங்களை மக்கள் அள்ளிச் செல்கின்றனர்.

அரசியல் ஏரியாவில் என்ன மாதிரியான புத்தகங்கள் வைத்திருக்கிறார்கள் என கொஞ்சம் புத்தகங்களை எடுத்து புரட்டி பார்த்த போதுதான்  ஒரு சில புத்தகங்கள் இடது பக்கம் திறப்பது போல் இருந்தது.
வலமிருந்து இடமாக திறக்கும் படி உள்ள புத்தகம்

ஒரு வேளை தவறாக பைண்ட் செய்து விட்டார்களா என யோசித்து அங்கிருந்த மற்ற புத்தகங்களோடு ஒப்பிட்டேன். எல்லாமே வலது பக்கம் திறப்பது போல் இருந்தது. நம் புத்தகங்கள் இடது புறம் திறப்பது போல் இருக்கும். இது என்ன கொஞ்சம் வித்தியாசமாக உள்ளதே என ஆச்சரியமடைந்தேன்.

வழமையாக நம் ஊர் புத்தகங்கள் இடத் புறம் திறந்து படிப்பது போல் இருக்கும். ஆனால் சில ஜப்பானிய புத்தகங்கள் வலது புறம் திறந்து படிப்பது போல் இருக்கிறது. புத்தகத்தினை புரட்டி பார்த்தால்  எழுத்துகள் மேலிருந்து கீழாக எழுதப்பட்டு இருந்தது. அதே நேரம் புத்தகத்தின் பக்கங்கள் வலம் இருந்து இடது புறம் நோக்கி அமைக்கப்பட்டு இருந்தது.

அதாவது பூக்களை மேலிருந்து கீழாக தொடுத்து அந்த மாலைகளை வலம் இருந்து இடமாக தொங்க விட்டுக் கொண்டே போனால் எப்படி இருக்கும். அது போன்ற அமைப்பில் இருந்தது.

இது போன்ற எழுத்து அமைப்பினை கொரியாவில் இருந்த போது பார்த்திருக்கிறேன். ஆனால் அன்றாட புத்தகங்களில் இது போன்ற எழுத்து அமைப்பு இன்னும் கொரியாவில் இருப்பதாக தெரியவில்லை.

ஆனால் ஜப்பானில் இன்றும் நடைமுறையில் சரி பாதி கிடைக்கையாக, நாம் எழுதுவது போல் “இடம் இருந்து வலம் எழுதும் முறையும்” (left to right side), செங்குத்தாக எழுதும் எழுத்துகளில் வலம் இருந்து இடமாகவும் (right to left side)  எழுதும் முறையினை கடைபிடிக்கிறார்கள்.

அதனால்தான் இந்த அமைப்பில் இருக்கும் புத்தகங்களை எளிதாக படிக்கும் வண்ணம் வலது பக்கம் (right side) திறப்பு வைத்துள்ளனர். நம் புத்தகங்களுக்கு நேர் எதிர்.

கொஞ்சம் இதன் அமைப்பினை தேடி அலசிப் பார்த்தால் கொஞ்சம் ஆச்சரியமாக இருக்கிறது.

ஜப்பானிய மொழியின்  “காஞ்சி” (Kanji) சித்திர எழுத்துகள் சீன மொழியில் இருந்து தருவிக்கப்பட்டவை. இந்த சித்திர எழுத்துகளை மேலிருந்து கீழாக, கிடைக்கையாக, கீழிருந்து மேலாக எழுதலாம். அதே நேரம் இந்த அமைப்பில் நிறுத்தக் குறியீடுகள், வார்த்தைகளுக்காக இடவெளி, எந்த திசையில் எப்படி எழுத வேண்டும் என்று பல விதிகள் இருக்கிறது. அதைப் பற்றி ஜப்பானிய மொழியில் நன்கு புலமை பெற்ற ஆசிரியர்களிடம் இருந்துதான் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆசியாவில் உள்ள மற்ற‌ நாடுகளை ஒப்பிடும் போது கிழக்கு ஆசிய நாடுகளில் (சீனா, கொரியா, ஜப்பான்) மட்டும்தான் இந்த எழுத்து முறை உள்ளது. முக்கியமாக ஜப்பானில் இன்றும் இந்த முறையினை பள்ளியில் இருந்து சொல்லித் தருகிறார்கள்.

நம் ஊரில் இரண்டு வரி நோட்டில் (ruled note) தமிழ் எழுதிப் பழகுவது போல், கெங்கொ யொசி (Genko Yoshi) என்னும் பிரத்யோக நோட்டில் இந்த முறையினை பயிற்சி எடுக்கிறார்கள். இந்த நோட்டில் ஒரு பக்கத்திற்கு 20 X 20 (மொத்தம் 400) சதுர கட்டங்கள் உள்ளது. இதில் மேலிருந்து கீழாக எழுதப் பழகுகிறார்கள். பி4 அளவு தாளில் இரண்டு பகுதிகளாக 10X10 கட்டங்களை பிரித்திருக்கிறார்கள். இது தாளை இரண்டாக மடித்துக் கொள்ள ஏதுவாக இருக்கிறது. இரண்டு வரிசைகளுக்கு இடையில் உள்ள பகுதியில் ஆசிரியர்கள் திருத்தி பிழைகளை சுட்டிக் காட்டி எழுதுகின்றனர்.




கெங்கொ யொசி எழுதும் வடிவம்

கெங்கொ யொசி முறையில் எழுதப்பட்டுள்ள பள்ளி மாணவர்களின் கையேடு

கெங்கொ யொசி எழுதும் வடிவம்


ஜப்பானியர்களுக்கு மேலிருந்து கீழாக எழுதும் பழக்கம் எப்படி வந்தது?

ஜப்பானியர்களின் எதோ (Edo Period) கால கட்டத்திற்கு முந்தைய பகுதியில் தகவல் பரிமாற்றங்களை துணி அல்லது காகிதத்தால் சுருட்டி எடுத்துக் கொள்ளும் வண்ணம் இருந்ததால் மேலிருந்து கீழாக எழுதும் முறையினை கடைபிடித்து இருக்கிறார்கள். பின்னர் 18 ஆம் நூற்றாண்டின் பின் பகுதியில் மெஜி (Meji) கால கட்டத்தில் கெங்கி யொசி எழுதும் முறை தனித்த‌ விதிமுறைகளோடு பரவலாக மக்களிடத்தில் புழங்க தொடங்கி உள்ளது.

ஒரு ஆச்சரியம் இன்றும் கணிணிகளில் “கெங்கி யொசி” எழுது முறைகளுக்கான எழுத்துரு செயலிகள் பயன்பாட்டில் உள்ளது. அதே நேரம் பொது இடங்களில் அறிவிப்பு பலகைகளில் இம்முறையினை பின்பற்றுவதால் நீண்ட செங்குத்து பலகைகள் அதிகமாக இடத்தை பிடிக்கிறது என இடமிருந்து வலமாக (இந்திய முறை போல்) எழுதும் முறையினை பரவலாக பயன்படுத்துகின்றனர். இன்றும் ஜப்பானிய வழிபாட்டு தலங்களில் உள்ள தூண்கள், விளக்கு கம்பங்களில் உள்ள தகவல் அனைத்தும் “கெங்கி யொசி” முறைப்படி மேலிருந்து கீழாக எழுதி இருப்பதை காண முடியும். ஏனெனில் இந்த செங்குத்து தூண்கள் இந்த எழுத்து முறைக்கு மிக ஏதுவாக இருப்பதும் ஒரு காரணம் எனச் சொல்லலாம்.

“கெங்கி யோசி” எழுதும் முறை பற்றி தனிப்பதிவாகத்தான் எழுத வேண்டும். இப்போதைக்கு இது போதும் என நினைக்கிறேன்.

கடைக்குள் அப்படியே வண்டியை அறிவியல் நுட்ப புத்தகங்கள் பகுதியில் திருப்பினேன்.

ஆகா, என் எதிர்பாப்பு பொய்க்கவில்லை. ஏறத்தாழ மூன்று  வரிசை முழுவதும் முழுக்க முழுக்க அறிவியல் நுட்ப புத்தகங்களை ஜப்பானியர்கள் தங்கள் தாய்மொழியில் எழுதி வைத்திருந்தனர்.

அ. பள்ளி மாணவர்களுக்கான வெகுசன அறிவியல் (Popular Science) புத்தகங்கள்
ஆ. மிகச்சிறந்த மேலைநாட்டு அறிவியல் புத்தகங்களின் மொழிபெயர்ப்பு புத்தகங்கள்.
இ. உயர் கல்வி பாடத்திட்ட புத்தகங்களை எளிதாக அணுக ஜப்பானிய‌ பேராசிரியர்களின் எளிமையான வழிகாட்டி புத்தகங்கள். நம் ஊரில் உள்ள கோனார் நோட்ஸ் போல் அல்ல. முழுக்க முழுக்க வெகுசன அறிவியல் புத்தக வடிவிலேயே எழுதி உள்ளார்கள்.

ஜப்பானிய மொழியில் எழுதப்பட்டுள்ள வெகுசன அறிவியல் (popular science) புத்தகங்கள்.

ஜப்பானிய மொழியில் எழுதப்பட்டுள்ள வெகுசன அறிவியல் (popular science) புத்தகங்கள்.

ஜப்பானிய மொழியில் எழுதப்பட்டுள்ள வெகுசன அறிவியல் (popular science) புத்தகங்கள்.

ஜப்பானிய மொழியில் எழுதப்பட்டுள்ள வெகுசன அறிவியல் (popular science) புத்தகங்கள்.

ஜப்பானிய மொழியில் எழுதப்பட்டுள்ள வெகுசன அறிவியல் (popular science) புத்தகங்கள்.

ஜப்பானிய மொழியில் எழுதப்பட்டுள்ள வெகுசன அறிவியல் (popular science) புத்தகங்கள்.

ஜப்பானிய மொழியில் எழுதப்பட்டுள்ள வெகுசன அறிவியல் (popular science) புத்தகங்கள்.

ஜப்பானிய மொழியில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்ட வேதியியல் உயர்கல்வி புத்தகம்

ஜப்பானிய மொழியில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்ட வேதியியல் உயர்கல்வி புத்தகம்

ஜப்பானிய மொழியில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்ட வேதியியல் உயர்கல்வி புத்தகம்

ஜப்பானிய மொழியில் எழுதப்பட்டுள்ள அறிவியல் விளக்க புத்தகம்.

ஜப்பானிய மொழியில் கிடைக்கும் வெகுசன அறிவியல் இதழ்கள்.

ஜப்பானிய மொழியில் எழுதப்பட்டுள்ள வெகுசன அறிவியல் (popular science) புத்தகங்கள்.

ஜப்பானிய மொழியில் கிடைக்கும் வெகுசன அறிவியல் இதழ்கள்.
வானவியல், பருப்பொருளியல், வடிவியல், நானோ நுட்பவியல், விலங்குகள், தாவரங்கள், அண்ட வெளி, கடல் வாழ் உயிரினம் என பல தலைப்புகளில் இன்றைய நவீன அறிவியலின் அனைத்து புத்தகங்களும் கிடைக்கிறது. இப்புத்தகங்கள் யாவும் எல்லா தரப்பு மக்களுக்கும் வாசிக்கும் வகையில் படங்களுடன் எழுதப்பட்டுள்ளது.

பொதுவாக‌ பாடப் புத்தகங்களுக்கு வெளியே மாணவர்களுக்கு எப்படி அறிவியலை, கணிதத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்று இந்த வெகுசன அறிவியல் புத்தகங்கள் தான் வழி நடத்தும். நியூட்டனின் விதிகளை, ஐன்ஸ்டீனின் சார்பியல் கொள்கைகளை, நுண் கணிதத்தில் உள்ள தேற்றங்களை பாடப்புத்தகங்கள் அணுகும் விதம் வேறு. அவை முழுக்க முழுக்க தியரிடிக்கல் பார்வையிலேயே இருக்கும். ஆனால் இந்த வெகுசன அறிவியல் புத்தகங்கள் படக்கதைகளோடு, அன்றாட வாழ்வியலில் உள்ள உதாரணங்களோடு இருப்பதால் மாணவர்களுக்கு மிக எளிதில் புரிகிறது. இந்த இடத்தில் நாம் தமிழ் மொழியில் நிறைய புத்தகங்கள் கொண்டு வர நாம் பெரிதும் உழைக்க வேண்டும். இதில் உள்ள சிக்கலே பொது மக்கள் ஒத்துழைப்பு தான்.

தமிழ் சூழலில் பெரும்பாலும் வெகுசன அறிவியல் செய்திகளை மக்கள் வார இதழ்கள்,தின சஞ்சரிகைகளில் ஒரு பத்தியாக வருவதையே வாசிக்க பெரிதும் ஆர்வம் காட்டுகின்றனர். பெரியவர்கள் வாசிக்கும் இந்த பகுதிகள் பள்ளி மாணவர்களுக்கு சென்றடடைவதில் பெரும் பின்னடைவு உள்ளது. ஆகவே மக்கள் தமிழில் வரும் வெகுசன அறிவியல் புத்தகங்களுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும். அப்பொழுதுதான் நிறைய பதிப்பகங்கள் இந்த பகுதியில் நிறைய முதலீடு செய்ய முன் வருவார்கள்.

இந்த இடத்தில் இன்னொன்றையும் சொல்லிக் கொள்கிறேன். தமிழில் தற்போது உள்ள வெகுசன பத்திரிக்கைகளில் தனித்த அறிவியல் எழுத்தாளர்கள் மிகக் குறைவாகவே உள்ளனர். இந்த பகுதிக்கென்று தனியாக எழுத்தாளர்களை நியமிக்க வேண்டும்.

முக்கியமாக அறிவியல் கண்டுபிடிப்புகளை பற்றி ஆழமாக கேள்வி பதில்களோடு வரும் கட்டுரைகள் மிகக் குறைவே. “சிவகாசி மாணவன் நீரில் ஓடும் மோட்டார் கண்டுபிடிப்பு” என்று மக்கள் கவனத்தை கவரும் தலைப்புகள் மட்டுமே வீங்கி பெருத்துக் கொண்டே போகின்றன.

சம கால கண்டுபிடிப்புகள் அதன் வரலாற்றோடு ஒப்பிட்டு எழுதுவது என்பதே துளியும் இந்த கட்டுரைகளில் காணமுடிவதில்லை. ஆகவே வெகுசன அறிவியல் புத்தகங்கள் வருவதோடு, தனித்த அறிவியல் எழுத்தாளர்களையும் நாம் தமிழுக்கு நிறைய கொண்டு வர வேண்டும்.

இந்த புத்தகங்களுடன் ஜப்பானிய மொழியில் வரும் நீயூட்டன் மாத அறிவியல் இதழ்களின் தொகுப்பையும் பார்க்க முடிந்தது (இது பற்றி தனி பதிவாக எழுதி உள்ளேன்).  ஜப்பானில் இருந்து வரும் நீயூட்டன் அறிவியல் இதழ்களோடு, நேசனல் ஜியோகிராபிக் இதழ்களின் ஜப்பானிய மொழிபெயர்ப்பு இதழ்களையும் காண முடிந்தது. உலகின் எந்த மூலையிலும் இருக்கும் அறிவியல் நுட்ப செய்திகளை உடனுக்குடன் ஜப்பானியர்கள் மொழி பெயர்த்து தருகிறார்கள்.

தாய்மொழியில் அறிவியல் நுட்ப தகவல்கள் வெகுசன மக்களிடம் செல்லும் போது மேம்படுத்தப்பட்ட நவீன சமூகத்தை எளிதாக வார்தெடுக்க முடியும் என்பதற்கு ஜப்பான் எப்போதும் ஒரு முன்னுதாரணமாக சொல்லலாம். காரணம் இங்கு கிடைக்கும் புத்தகங்கள்.

சம கால நுட்ப தகவல்களை புத்தகங்களாக தரும் பிரித்தானிய புத்தக சந்தையினைப் போலவே ஜப்பானியர்களும் சிறப்பான ஒரு பார்வையினை கொண்டிருக்கிறார்கள்.

உதாரணத்திற்கு பிரித்தானியாவில் உள்ள கிரேட் வெஸ்டன் ரயில்வே நிறுவனம் நூறு ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. பிரித்தானியா முழுவதும் அவர்கள் எவ்வாறு ரயில்வே இருப்பு பாதைகள் அமைத்தார்கள். சிக்கலான நதிகளை எவ்வாறு கடக்க பெரிய பாலங்களை கட்டினார்கள். குறிப்பாக ப்ருனெல் என்பாரின் சாதனைகளை தனித்த புத்தகங்களாக இன்றும் வெளியிடுகின்றனர். இதே போல் ஜப்பானின் ஜேஆர் ஜோபன் இருப்பு பாதைகள் எப்படி அமைக்கப்பட்டன, ஜப்பானில் உள்ள புகழ் பெற்ற பாலங்கள் எப்படி கட்டப்பட்டன என்று தாய்மொழியில் வரலாற்று புகைப்படங்களுடன் தந்துள்ளனர். இந்த புத்தகங்கள் எல்லாம் இளைய தலைமுறைக்கு வழிகாட்டுபவை. சாதனையாளர்களாக நாம் காட்டும் பிம்பங்கள் வரலாற்று தகவல்களோடு தரப்படவேண்டும்.

“நம் முன்னோர்கள் முட்டாள்கள் அல்ல” என்று தொடர்ந்து ஜல்லியடிக்கும் வாட்சப், முகநூல் பதிவுகளிலேயே தற்போது தமிழர்கள் திருப்தி அடைந்து விடுகிறார்களோ என்று அச்சமாக உள்ளது.

அறிவியல் நுட்ப புத்தகங்கள் பகுதியில் இருந்து ஜப்பானியர்களின் புகழ் பெற்ற “மாங்கா” கார்ட்டூன் பகுதிக்கு வந்தேன். குழந்தைகள் அப்படியே தரையில் உட்கார்ந்து உலகத்தை மறந்து படித்துக் கொண்டிருந்தார்கள். பெற்றொர்கள் ஒரு புறம் அவர்கள் புத்தக உலகிலும், குழந்தைகள் அவர்களுக்கான மாங்கா புத்கங்களிலும் மூழ்கி கிடந்தனர்.இப்படி ஒரு சூழலை பார்க்கவே ஆச்சரியாமாக இருந்தது. இப்படி புத்தக நிலையங்களில் பெற்றோர், குழந்தைகள் கூட்டத்தினை தமிழகத்தில் காண ஆர்வமாக உள்ளேன்.

ஒரு வழியாக புத்தக கடையினை சுற்றிப் பார்த்து விட்டு கண்ணாடிக் கடைக்கு வந்த போது என் புதிய மூக்கு கண்ணாடியை தயாராய் வைத்திருந்தார்கள்.