Thursday 12 October 2017


வாட்சப் குப்பைகள் -1

ஒவ்வொரு நாளும் வாட்சப்பை திறந்தால் குறைந்தது ஒரு முன்னோர் புராணமாவது இருக்கும். அந்த காலத்தில் "ஆட்டுக்கல்லில் மாவு அரைத்தோம்", "சாம்பலில் பல் விளக்கினோம்", "கோமணம் கட்டினோம்", "மாட்டு வண்டியில் போனோம்", "விவசாயிகள் பணக்காரர்களாக இருந்தார்கள்" என இந்த பிளாஸ் பேக் நீளும்.
இது போன்ற செய்திகளை படிக்கும் இன்றைய இளைஞர்கள் கொஞ்சம் கிலேசமடைவது உறுதி.
உண்மையில் 1981-85 ஆம் ஆண்டுகளை ஒப்பிடும் போது மனிதர்களின் எதிர்பார்ப்பு ஆயுளானது (life expediency) இன்றைய நவீன அறிவியல் மருத்துவத்தின் உதவியால் எவ்வாறு 2006- 2010 ஆம் ஆண்டுகளில் அதிகரித்து தந்துள்ளது என்ற உண்மையினை கொஞ்சம் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.
குறிப்பாக உலக இறப்பு விகிதத்தில் (global mortality rate) ஒரு லட்சம் பேரில் இதய வியாதிகளால் இறப்பவர்களின் எண்ணிக்கையினை 53% ஆக குறைத்திருக்கிறோம். புற்று நோய்களின் தாக்கத்தால் இறப்பவர்களை 17% ஆக குறைத்திருக்கிறோம். இதர வியாதிகளை 23% குறைத்திருக்கிறோம்.
30 வருடங்களுக்கு முன்பு இருந்த சூழலை விட கடந்த பத்து வருடத்தில் நவீன மருத்துவம், அறுவை சிகிச்சை நுட்பங்கள், இதய நோயினால் இறப்பவர்களை பெருமளவு கட்டுப்படுத்தி உள்ளது.
இவை எப்படி சாத்தியமானது என்பதை உங்கள் அம்மா, அப்பா குடும்பத்தில் எத்தனை பேர் பிறந்தனர், எத்தனை பேர் தப்பி பிழைத்தனர் என்று கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். நவீன அறிவியல் மருத்துவத்தில் ஏற்பட்ட வியத்தகு முன்னேற்றமே நம் ஆயுளை கூட்டித் தந்துள்ளது.
அதே நேரம் இன்னும் நமக்கு பெரிய சவாலாக‌ இருப்பது புற்று நோய் தான். இதனையும் எளிதாக கட்டுக் கொண்டுக்குள் கொண்டு வர வேண்டுமானால் முன் கூட்டியே கேன்சர் கிருமிகளின் தாக்குதலை கண்டறியும் (prostate cancer) நுணர்விகள் (sensors) கண்டறியப்பட வேண்டும்.
குறிப்பாக‌, நுரையிரல் புற்று நோய், இரத்தப் புற்று நோய், மார்பக புற்று நோய் இவற்றின் தாக்குதலை முதல் நிலையிலே கண்டறிவதன் மூலம் முறையான சிகிச்சை தருவதன் முலம் கேன்சர் தாக்குதலில் இருந்து அவர்களை காப்பாற்ற இயலும்.
முறையான உடல் மற்றும் இரத்தப் பரிசோதனையின் ஒவ்வொரு குறிப்பிட்ட கால இடைவெளியிலும் கண்டறிவதன் மூலம் உலகிற்கு சவாலாக இருக்கும் கேன்சர் நோயை முன் கூட்டியே கண்டறிந்து குணப்படுத்த இயலும்.
பெரும்பாலானவர்கள் போலி மருத்துவ கும்பல்களிடம் சென்று கேன்சர் முற்றிய பிறகே மருத்துவர்களை நாடுகிறார்கள். இந்த சிக்கலைத்தான் வாட்சப்பில் முன்னோர் பெருமை பாடும் முட்டாள்கள் ஏற்படுத்துகிறார்கள்.
நவீன மருத்துவத்தில் எல்லா நோய்களுக்கும் தீர்வு உண்டு என்று வாதிடுவது என் நோக்கமல்ல, குறைந்த பட்சம் நோயை முன் கூட்டியே கண்டுணர்ந்து அதனைக் கட்டுக்குள் வைத்திருப்பதன் மூலம் மனிதர்களின் ஆயுட் காலத்தை நிச்சயம் அதிகரிக்க முடியும்.
ஆகவே வாட்சப்பில் வரும் மருத்துவம் சார்ந்த புரளிகளை அடுத்தவருக்கு பார்த்த மாத்திரத்தில் பகிராதீர்கள்.
- முனைவர் சுதாகர் பிச்சைமுத்து
சுவான்சி பல்கலைக் கழகம்
12-10-2017







Reference: Cao et al, BMJ 2017;357:j2765




Wednesday 11 October 2017


பிபிசி (BBC Tamil) தமிழ் இணைய இதழில் வெளி வந்துள்ள எனது முகநூல் பதிவு





http://www.bbc.com/tamil/india-41583199
தடுப்பூசி போடுவதால் ஏற்படும் நன்மை யாவை? முக்கியமாக மந்தை எதிர்ப்பு சக்தி எனப்படும் ஹெர்டு இமினியூட்டி என்பதை எளிமையாக விளக்க முடியுமா?

ஒரு ஊரில் கோவில் திருவிழா நடைபெற்றது. அந்த கோவிலில் உள்ள கடவுளுக்கு பால் அபிசேகம் செய்ய அந்த கோவிலின் முன்பு பெரிய தொட்டி வைக்கப்பட்டது. அந்த தொட்டியில் ஊரில் உள்ள எல்லா வீடுகளிலும் இருந்து கண்டிப்பாக ஒரு குடம் பால் ஊற்ற வேண்டும் என்று ஊர்ப் பெரியவர்கள் கட்டளையிட்டனர்.
அத்தொட்டியினை வாய் பகுதி மட்டும் திறந்து இருக்கும்படி செய்து ஊர்க் கோவிலின் முன்பு வைத்தனர்.
அனைவரும் ஒற்றுமையாக கூடி எடுத்த முடிவு என்பதால் ஊர் மக்கள் அனைவரும் அடுத்த நாள் பய பக்தியோடு கடவுளை வேண்டி அத்தொட்டியில் தங்கள் பங்கிற்கான‌ பாலை ஊற்றி வந்தனர்.
அடுத்த நாள் காலையில் அத்தொட்டியில் இருந்த பாலை எடுத்து கடவுளுக்கு மகிழ்ச்சியாக‌ அபிசேகம் செய்தனர்.
இதற்கு இடையில் அவ்வூரில் இருந்த முரட்டு குசும்பன் ஒருவன், அந்த தொட்டியில் பாலுக்கு பதில் நீரை ஊற்றி விட்டேன். எதற்கு நான் செலவு செய்ய வேண்டும்? ஊரே பால் ஊற்றும் போது நான் ஒருவன் தண்ணீர் ஊற்றினால் தெரியவா போகிறது என்று தன் வீர தீர பெருமையினை அண்டை வீட்டாரிடம் சொன்னான்.
இது அப்படியே பரவலாக ஒவ்வொருவரின் வீட்டுக்கும் போனது.
அடுத்த வருடம் கோவில் திருவிழா வந்தது. ஊர் கோவிலின் முன்பு வழக்கம் போல் பால் தொட்டி வைக்கப்பட்டது.
மக்கள் அனைவரும் தங்கள் காணிக்கையினை அத்தொட்டியில் ஊற்றினர்.
அடுத்த நாள் தொட்டியினை திறந்து பார்த்தால் பாலுக்கு பதில் தொட்டி நிறைய தண்ணீர் இருந்தது. எல்லோருக்கும் அதிர்ச்சி. எப்படி தொட்டி முழுவதும் உள்ள பால் தன்ணீராக மாறும் என ஆச்சரியப்படுவதற்கு பதில் ஒவ்வொருவரும் நெளிய ஆரம்பித்தார்கள்.
ஏனெனில் கடந்த வருடம் முரட்டு குசும்பன் கொடுத்த கெட்ட அறிவுரையால் இவ்வருடம் எல்லா மக்களுக்கும் பாலுக்கு பதில் தண்ணீரை ஒவ்வொருவரும் தங்கள் பங்காக ஊற்றி ஏமாற்ற நினைத்து அசிங்கப்பட்டு நின்றனர்.
நண்பர்களே இக்கதை தடுப்பூசி போடாமல் என் குழந்தைக்கு ஒன்றும் ஆகவில்லை என்று கதை கட்டி விடுபவர்களுக்கு நன்கு பொருந்தும்.
இதற்கு "ஹெர்டு இமினியுட்டி" (herd immunity ) என்று பெயர். அதாவது ஊரே பால் ஊற்றும் போது ஒருவர் தண்ணீர் ஊற்றினால் கண்டறிய முடியாது. அதே போல் ஊரில் உள்ள 100 குழந்தைகளில் 1 குழந்தை தடுப்பூசி போடாவிட்டால் நோய் தொற்று ஏற்படும் ஆபத்தில் இருந்து பாதுகாப்பை 99 குழந்தைகளும் நன்கு பெற்று இருப்பதால் அந்த 1 குழந்தைக்கு நோய் வரும் வாய்ப்பினை தடுத்து நிறுத்தி விடும்.
ஆனால் அந்த 1 குழந்தை தடுப்பூசி போடாமல் நன்றாக இருக்கிறதே என எண்ணி 99 குழந்தைகளும் போடாவிட்டால் ஊர் முழுக்க பாலுக்கு பதில் தண்ணீரை தொட்டியில் ஊற்றியது போல் உயிர்க் கொல்லி தொற்று நோய் 100 குழந்தைகளையும் பாதித்து கொடிய விளைவுகளை ஏற்படுத்தும்.
ஆகவே தடுப்பூசி என்பது ஒவ்வொரு குழந்தைக்கும் தவறாமல் போடப் பட வேண்டும். விசமிகளின் பேச்சை புறந்தள்ளுங்கள்.
நம் தேசத்தின் குழந்தைகளே எதிர்கால தூண்கள். இதனை உங்கள் நண்பர்களுக்கு பகிர்ந்து நம் எதிர்கால சந்ததியினரை நோயின் கோரப் பிடியில் காப்பாற்ற உதவுங்கள்.
***விசமிகளின் வதந்திகளை ஒரு போதும் நம்பாதீர்கள்




கேள்வி 2: டெங்கு வைரஸ் மனிதர்களை கொல்லும் வல்லமை பெற்று இருந்தால் அதை சுமக்கும் கொசுவை ஏன் கொல்லவில்லை.

இந்த கேள்வியினை படித்தவுடன், அட விசத்தை அருந்திய கொசு எப்படி சாகாமல் இருக்கிறது என்பது போன்ற புரிதல் உங்களுக்கு வரும். இது எளிதாக மேலோட்டமாக சிந்திக்கும் எல்லோருக்குமே வருவதுதான். காரணம் மனித உடலமைப்பை வைத்தே கொசுவும் இருக்கும் என்று புரிந்து கொள்வதால் வரும் அடிப்படை சிக்கலே இதற்கு காரணம்.

முதலில் டெங்கு வைரஸ் பாதிக்கப்பட்ட மனிதரை ஏடிஎஸ் எஜிப்டி பெண் கொசு கடிக்கும் போது அது எவ்வாறு கொசுவின் உடலில் செல்கிறது என்பதை அறிவியல் பூர்வமாக எளிதாக தெரிந்து கொள்வோம்.

நிலை -1:  பெண் கொசுக்கள் டெங்கு வைரஸ் பாதிக்கப்பட்ட‌ மனித உடலில் இருந்து இரத்த உணவை (blood meal) உறிஞ்சும் பொழுது அவை கொசுவின் வயிற்றுப் பகுதிக்கு செல்கிறது. அங்கு டெங்கு வைரஸ் 3-5 நாட்களுக்குள் நன்கு வளர்ச்சி பெற்று கொசுவின் எச்சில் சுரப்பிக்கு செல்கிறது  (இணைப்பு படத்தில் பார்க்க).

நிலை -2:  இப்போது டெங்கு வைரஸ் பாதிப்படைந்த ஏடிஎஸ் பெண் கொசு மற்றொரு மனிதரிடம் இருந்து இரத்த உணவைப் பெறும் போது டெங்கு வைரஸ் அம்மனிதரின் இரத்ததில் கலக்கிறது.

இரண்டு நிலைகளும் இன்னும் எளிதாக புரிய‌ இப்போது இன்னும் இரண்டு சிறிய கேள்விகளை பார்த்து விடுவோம்.

குட்டிக் கேள்வி 1: கொசு முதலில் பாதிக்கப்பட்ட மனிதரிடம் இருந்து எடுத்த இரத்தத்தை இன்னொரு மனிதருக்கு கடிக்கும் போது செலுத்துகிறதா?
குட்டிக் கேள்வி 2: பெண் கொசு வாயிலாக மட்டுமே டெங்கு வைரஸ் பரவுகிறது, ஆண் கொசு வாயிலாக ஏன் பரவுவதில்லை.

இரண்டு குட்டிக் கேள்விகளுக்கான விளக்கத்தினை ஒரே பதிலின் மூலம் புரிந்து கொள்ளலாம். பொதுவாக கொசுக்கள் (ஆண், பெண்) செடிகள், பழங்கள் மற்றும் கரும்பு போன்ற குளுக்கோஸ் உள்ள தாவரங்களில் இருந்து தங்களுக்கான ஆற்றலைப் பெறுகின்றன. ஆனால் இனப்பெருக்கத்திற்கான முட்டைகளை இடுவதற்கு பெண் கொசுக்களுக்கு மட்டும் மனித இரத்தம் தேவைப்படுகிறது. அவ்வாறு இரத்த உணவை மனிதர்களிடம் பெறும் போது மனிதர்களின் இரத்தம் உறையாமல் தங்கு தடையின்றி இரத்ததினை உறிஞ்சும் பொருட்டு கொசுக்கள் தங்கள் எச்சிலை கடிக்கும் இடத்தில் பரவச் செய்கிறது. இது மனிதர்களின் இரத்தம் உறையாமல் இருக்கச் செய்கிறது.  

நான் மேலே சொன்னது போல் பெண் கொசுவின் வயிற்றுப் பகுதியில் நன்கு வளர்ந்த டெங்கு வைரஸ் அதன் எச்சில் சுரப்பிகளைச் (Salivary glands) சென்றடையும் போது மனிதர்களின் இரத்ததினை உறையாமல் இருக்கச் செய்ய எச்சிலை பரவ விடும்போது இந்த டெங்கு வைரஸ் கிருமிகள், பாதிக்கப்படாதவரின் இரத்தத்தில் கலக்க ஆரம்பித்து விடும். பிறகு இது அம்மனிதரின் இரத்தத்தில் நன்கு பரவி, வளர்ந்து ஆளையே கொன்று விடும்.
ஆக, பாதிக்கப்பட்டவரை கொசு கடிக்கும் போது உடனே அது இறக்க வாய்ப்பில்லை, மாறாக அந்த இரத்தம் கொசுவின் வயிற்றிற்குள் சென்று நன்கு வளர்ந்து எச்சில் சுரப்பிகள் வழியாக தன் வேலையினை காட்டும்.

குட்டிக் கேள்வி 3: அப்படியானால், கொசுவின் சராசரி வாழ்நாள் எவ்வளவு?

கொசுவின் முட்டையில் இருந்து இரண்டு நாட்களில் நன்கு வளர்ந்த கொசுக்கள் தயாராகி விடும். இவை மூன்றில் இருந்து நான்கு வாரம் வரை வாழும் தன்மை உடையது. ஏடிஎஸ் பெண் கொசு ஒன்றரையில் இருந்து மூன்று வாரம் வரை வாழும். இந்த இடைவெளியில் நான்கு முறை முட்டை இடும். ஒவ்வொரு முறை முட்டை இடும் பொழுது குறைந்தது 50 ல் இருந்து 100 வரை முட்டைகள் இடும். டெங்கு வைரஸ் ஏடிஎஸ் கொசுவின் உள்ளே சென்று விட்டால் அதன் வாழ் நாளான 20 நாட்களுக்குள் இரத்த உணவினைப் பெறும் எல்லா மனிதர்களுக்கும் பரப்பும். ஏனெனில் நான்கு முறை முட்டை இட அவை மீண்டும் மீண்டும் மனிதர்களை கடிக்கும்.

உண்மை இவ்வாறு இருக்க, மனிதர்களைப் போல் ஏடிஎஸ் பெண் கொசுக்கள் பல வருடம் வாழ்ந்து, வைரஸ் கிருமியால் பாதிக்கப்பட்டவுடன், விசம் என்று பாட்டிலில் எழுதப்பட்ட திரவத்தை குடித்து உடனே உயிரை விடும் என்றெல்லாம் ரீலர்கள் கற்பனை செய்து கொண்டு கட்டுக் கதைகளை பரப்புகிறார்கள்.

கொசுவின் வாழ்நாள் 3 வாரம் மட்டுமே. முக்கியமாக, டெங்கு வைரஸ் பாதிக்கப்பட்ட கொசுவின் உடலில் டெங்கு வைரஸ் 5 நாள் வரை நன்கு வளர்ந்த பிறகே அதன் எச்சில் சுரப்பிகளை அடையும். பிறகு அது பாதிப்படையாத மனிதரை கடிக்கும் போது டெங்கு வைரஸ் பரவும். 
இப்போது ஏடிஎஸ் பெண் கொசு ஏன் மனிதரை கடிக்கிறது, கொசுவின் வாயிலாக வைரஸ் எப்படி பரவுகிறது என்று புரிந்திருக்கும். இதே முறையில்தான் கொசுவின் வாயிலாக மலேரியா, சிக்கன் குனியா, ஜிகா வைரஸ்கள் மனித உடலுக்கு பரவுகிறது.


 ஆகவே “டெங்குவால் பாதிக்கப்பட்ட கொசுவே சாகவில்லை என்னும் போது மனிதர்கள் எப்படி இறப்பார்கள்” என்று சொல்லி ரீலர்கள் உங்களை மருத்துவமனைக்கு போகாமல் மூளைச் சலவை செய்தால் “அப்பாலே போ, மரண வியாபாரியே” என முகத்தில் அறைந்தது போல் சொல்லுங்கள்.



கேள்வி 1: கொசுவின் மூலம் டெங்கு வைரஸ் மனிதருக்கு பரவுகிறது. அப்படி எனில் பாதிக்கப்பட்ட நபருக்கு முதன் முதலில் இந்த வைரஸ் எங்கிருந்து வருகிறது?

பதில்: வைரஸ் காய்ச்சல் என்பது பல நூறு வருடங்களாக மனிதர்களை தாக்கி வருகிறது. இது எதோ சில வருடங்களுக்கு முன்பு வந்ததைப் போல பலரும் புரிந்து வைத்திருக்கிறார்கள். இந்த அறியாமையைத்தான் ரீலர் கும்பல் பன்னாட்டு சதி, இலுமினாட்டி சதி என்ற மாயையினை மக்களிடம் அள்ளித் தெளிக்கிறார்கள்.
இன்றை நவீன விஞ்ஞான மருத்துவத் துறையில் இருக்கும் நவீன வசதிகள் (நுண்ணோக்கிகள், பகுப்பாய்வு வேதி முறைகள், நுணர்விகள்) அன்றைய கால கட்டத்தில் இல்லாததால் அதனை ஏறத்தாழ ‘மர்மக் காய்ச்சல்’ என்றே புழங்கி வந்துள்ளனர். இதற்கு நல்ல உதாரணமாக பல நூறு வருடங்களுக்கு முன்பே பல லட்சம் மக்களின் உயிரைப் பறித்த ‘பிளேக்’ நோயினைச் சொல்லலாம்.
மனித குல வரலாற்றில் வைரசின் தாக்குதலை வேறு வேறு கால கட்டத்தில் வேறு பெயர்களில் பதிவு செய்து வைத்திருக்கிறார்கள். உதாரணத்திற்கு, மனிதர்களிடையே பூச்சிகளால் ஏற்படும் விசக் காய்ச்சலை சீன மருத்துவ என்சைக்ளோ பீடியாவில் (ஜின் பேரரசு 265 -420 கி.பி) விச நீர் (water poison) என்று குறிப்பிட்டுள்ளார்கள். பின்னர், 1780 களில் ஒரே கால கட்டத்தில் ஆசியா, ஆப்ரிக்கா, தென் அமெரிக்காவில் டெங்குவின் தீவிர தாக்குதல் பரவியுள்ளது. இதனை 1789 ஆம் ஆண்டு பெஞ்சமின் ரஸ் (Benjamin Rush) என்பார் கண்டறிந்து இதற்கு ப்ரேக்போன் பீவர் (breakbone fever) என்று பெயரிட்டார்.
ஒவ்வொரு கால கட்டத்திலும் கிருமியியல் துறையில் பல ஆயிரம் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள், மருத்துவர்களின் அயராத உழைப்பினால் டெங்கு காய்ச்சல் பற்றிய ஆராய்ச்சி வெகுவாக முன்னெடுக்கப்பட்டு அதனை கட்டுப்படுத்தும் வழி முறைகள் கண்டறியப்பட்டன.
ஆக, டெங்கு காய்ச்சல் என்பது முன்னோர்கள் முட்டாள்கள் அல்ல என்று சொல்லப்படும் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே இருந்து வந்துள்ளது. ஆகவே இது சூழலியலில் இருந்து மனிதருக்கு பரவும் தொற்று நோயே.

Wednesday 4 October 2017


நோபல் பரிசு 2017 வேதியியல் பிரிவு

2017 ஆம் ஆண்டு வேதியில் பிரிவிற்கான‌ நோபல் விருது "கிரையோ எலக்ட்ரான் மைக்ரோஸ்கோபி மூலம் திரவத்தில்  (solution) இருக்கும் உயிரி மூலக்கூறுகளின் கட்டமைப்பினை தெளிவாக படம் பிடித்து விளக்கியமைக்கு  தரப்படுகிறது. நுண்ணோக்கியில் பெறப்பட்ட மூலக்கூறுகளின் அதிதெளிவான வடிவமைப்பு  படமானது புரோட்டீன்களின் கட்டமைப்பு எவ்வாறு உள்ளது என்பதை எளிதாக தெளிந்து கொள்ள உதவுகிறது.

இத்தகவல் உயிரி மூலக்கூறு நுட்பத்தில் பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக மூலக்கூறுகளின் (molecule) மீநுண் அளவிற்கும் (nano) கீழே, அணுக்களின் (atom) ஆம்ஸ்ட்ராங் (angstrom) அளவில் உள்ள‌ உயிரி மூலக்கூறுகளின் வடிவமைப்பினை முப்பரிமாண‌ (3-D) முறையில் தெளிவாக‌ அறிந்து கொள்வதன் மூலம் நோய்களை குணப்படுத்த புதிய மருந்துகளை வடிவமைக்கும் பணி எளிதாகிறது. உயிரிமருத்துவ துறையில் மிகப்பெரும் பங்கு வகிக்கும் இந்த ஆய்வினை கெளரவிக்கும் பொருட்டு இவ்விருது வழங்கப்படுகிறது.

பேராசிரியர். ஜேக்கஸ் டியுபொசெட் (லாசேன் பல்கலைக் கழகம், சுவிட்சர்லாந்து), பேராசிரியர் ஜோசிம் பிராங் (கொலம்பியா பல்கலைக் கழகம், அமெரிக்கா), பேராசிரியர் ரிச்சர்ட் ஹென்டர்சன் (கேம்ப்பிரிட்ஜ் பல்கலைக் கழகம், பிரித்தானியா) ஆகிய மூவரும் கூட்டாக இவ்வருட நோபல் விருதைப் பெறுகின்றனர்.

எலக்ரான் நுண்ணோக்கி 1931 ஆம் ஆண்டு முதன் முதலாக வடிவமைக்கப்பட்டது. இதனை ஒப்பிடும் போது ஏன் இந்த கிரையோ எலக்ரான் அதிநுண்ணோக்கி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது?

சாதாரண‌ எலக்ரான் நுண்ணோக்கியின் மூலம் உயிரி மூலக்கூறுகளை படம் பிடிப்பதில் பெரிய சவாலே அதில் உள்ள நீர் மூலக்கூறுகள்தான். ஆனால் திரவத்தில் இருக்கும் உயிரிகளின் கட்டமைப்பினை கிரையோ எலக்ரான் நுண்ணோக்கி (Cryo-electron microscopy)  மூலம் தெளிவாக‌ முப்பரிமாண‌ முறையில்  அறிய முடிவதால்   மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. மேலும் எதிர் வரும் காலத்தில் மூலக்கூறுகளின் அளவினையும் தாண்டி அதற்கும் கீழே உள்ள உயிரிகளை இனம் கண்டு கொள்ள இந்த நுண்னோக்கிகள் நவீனத்துடன் வடிவமைக்கப்படலாம். 

அப்படி நடக்குமானால் இதற்கு வானமே எல்லையாக அமையும்.

முனைவர் சுதாகர் பிச்சைமுத்து
சுவான்சி பல்கலைக் கழகம்

04/10/2017


Monday 2 October 2017

நோபல் பரிசு 2017 ஆம் ஆண்டு உடலியல் மற்றும் மருத்துவப் பிரிவு

 2017 ஆம் ஆண்டிற்கான உடலியல் மற்றும் மருத்துவ பிரிவிற்கான (Physiology and Medicine) நோபல் பரிசினை ஜெப்ரி ஹால் (மைன் பல்கலைக் கழகம், அமெரிக்கா), மைக்கேல் ரோபஸ் (பிரன்டைஸ் பல்கலைக் கழகம் மற்றும் ஹாவர்டு கியூக்ஸ் மருத்துவ நிறுவனம், அமெரிக்கா), மைக்கேல் யங் (ராக் பெல்லர் பல்கலைக் கழகம், அமெரிக்கா) ஆகிய மூவரும் கூட்டாக பெருகின்றனர்.

மனிதர்கள், தாவரம், விலங்குகள்,  பூஞ்சைகள் இவற்றில் நடைபெறும் உடல் கடிகாரம்  (body clock) அல்லது சர்கேடியன் ரிதம் (circadian rhythm) என்ற நிகழ்வினை  மூலக்கூறு இயங்கியல் எவ்வாறு கட்டுப்படுத்துகிறது என்ற நிரூபணத்திற்க்காக இவ்விருது இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.





இவர்களது சோதனை முடிவுகள்  நம் உடல் கடிகாரம் எவ்வாறு புவியின் சுழற்சிக்கு தக்கவாறு ஒத்திசைவாக ஒன்றிப் போகிறது என்ற விடையினை தந்துள்ளது. எளிய வார்த்தைகளில் சொல்வதென்றால், நாம் எந்த நேரத்தில் இரவில் உறங்கினாலும் காலையில் குறிப்பிட்ட நேரத்திற்கு தன்னிச்சையாகவே எழுந்து கொள்கிறோம். இவை நம் உடலுக்குள் உயிரணுக்களில் நடைபெறும் வேதி வினைகளின் விளைவே. மேலும் உடல் கடிகாரமானது நம் சுற்றுப்புற சூழலில் இருக்கும் வெளிச்சம், தட்பவெப்பநிலை இவற்றிற்கு தகுந்தவாறு நம் உடலின் இரத்த அழுத்தத்தினை மாற்றுவதோடு, நாம் உறங்க தேவையான மெலனைன் என்னும் ஹார்மோன்களை சரியான முறையில் சுரக்கவும் உதவுகிறது.  இது சொல்வதற்கு எளிதாக இருந்தாலும், இந்த விடையினை சோதனைகள் மூலம் கண்டுபிடித்து நிரூபணம் செய்வது என்பது அவ்வளவு எளிதல்ல.

இந்த உடல் கடிகாரம் என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல தாவரங்களுக்கும் இன்ன பிற உயிரினங்களிலும் நடைபெறுகிறது என்ற உண்மையினை  18 ஆம்  நூற்றாண்டில் ஜீன் ஜேக்கஸ் டி ஆர்தஸ் தெ மெய்ரன் (Jean Jacques d’Ortous de Mairan) என்ற வானவியல் அறிஞர் முதன்முதலில் கண்டறிந்தார். இவர் தொட்டாச் சிணுங்கி செடியின் (mimosa plant) இலைகளானது பகலில் சூரிய ஒளியில் விரிவடைந்தும், இரவில் சுருங்கியும் கொள்கிறது. இந்த தொடர் நிகழ்ச்சியினை ஒரு இருட்டு அறையில் வைத்து சோதனை நடத்திய போது குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு வெளிச்சம் இல்லாத போதும் அதன் இலைகள் விரிவடைந்து கொள்கின்றன. இவ்வாறு புவி சூழலுக்கு தகுந்தவாறு தாவரம் எவ்வாறு ஒரு நிகழ்வை தொடர்ச்சியாக நடத்துகிறது என்ற கேள்வி அறிவியலாளர்களுக்கு பெரிய சவலாக இருந்தது. இவற்றிற்கான விடையினை இவ்வருட நோபல் பரிசாளர்கள்  கண்டுபிடித்து தந்துள்ளனர்.



ஏன் இந்த சோதனை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது?
நம் உடலில் இயங்கும் உடல் கடிகாரமானது மனிதர்களின் உறக்கம், உணவு உண்ணுதல், ஹார்மோன்கள் சுரப்பு, சீரான இரத்த அழுத்தம் போன்றவற்றினை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.   உயிரணு, செல், மற்றும் திசுக்களில் நடைபெறும் மிக நுண்ணிய சர்கேடியன் ஒத்திசைவு விளைவானது எவ்வாறு மனித உடலில் சிதைவு நோய்கள், வளர்சிதை மாற்றத்தின் மூலம் ஏற்படும் நோய்கள், வீக்கம் போன்றவறில் பங்காற்றுகிறது என்பதனை நோபல் பரிசாளர்களின் சோதனைகள்  விளக்குகிறது. இந்த கண்டுபிடிப்பின் மூலம் குரோனோ உயிரியல் மற்றும் மருந்தியல் துறைகளில் சர்கேடியன் ஒத்திசைவின் கால இடைவெளி, முடுக்கம், இவற்றினை மாற்றி அமைத்து மனித உடல் நலத்தை  முன்னேற்றுவதற்கான புதிய தடங்கள்   இனி வரும் நாட்களில் அமைக்கப்படும்.  



சர்கேடியன் கடிகாரம் நம் உடலின் இயக்கத்தில் ஏற்படுத்தும் தாக்கங்கள் (Courtesy: Nobelprize.org)


குறிப்பு:
உடல் கடிகாரம் என்றவுடன் பெரிதாக குழப்பிக் கொள்ள வேண்டாம். ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு பல மணி நேரம் விமானப் பயணம் சென்று  இறங்கிய பின்   நம் உடலானது  புதிய சூழலுக்கு உடனே மாறாமல், புறப்பட்ட நாட்டின்  நேரப்படியே இயங்கிக் கொண்டிருக்கும். இதனால் சரியாக உறங்க முடியாது, இந்த சிக்கலை ஜெட் லாக் என்று அழைப்பர். இந்த சிக்கல் யாவும் நம் உடல் கடிகாரத்தில் ஏற்படும் மாற்றமே.