Sunday 19 April 2015

நவீன பள்ளிக்கூடம் - ஜப்பான்

குழந்தைகள் ஏன் பள்ளிகளை வெறுக்கின்றார்கள் என்ற கேள்வியே இன்றைய சூழலில் நாம் எதிர் நோக்கியிருக்கும் பெரிய சவால். தொடர்ச்சியான அலுப்பூட்டும் பாட திட்டங்கள், வீட்டு பாடம், ஓயாத மனப்பாடங்கள் என பெற்றோர்களும், பள்ளிகளும் தொடர்ந்து திணிக்கும் சாகசங்கள் குழந்தைகளை பூதங்களாக பயமுறுத்துகின்றன. நமது ஊரில் ஒவ்வொரு பள்ளியும் குழந்தைகளை அடைத்து வைக்கும் மிகப் பெரிய சர்க்கஸ் கூண்டுகளாகவே காட்சியளிக்கிறது.

வழமையான இந்த பொது புத்தியிலிருந்து விலகி  ஜப்பானில் உள்ள தோக்கியோ நகரில் ப்பியூஜி மழலையர் பள்ளி (Fuji Kinder Garden) என்ற புது மாதிரி பள்ளியினைவடிவமைத்துள்ளார்கள். சப்பானில் பெரிதும் அறியப்பட்ட கட்டிட வடிவமைப்பாளர் தகாகாரு  தெசுகா  (Takaharu Tezuka ) அவர்களால் வடிவமைக்க்கப்பட்ட இப்பள்ளி குழுந்தைகளுக்கான நவீன உலகம் என்றே சொல்லலாம்

Mr Takaharu Tezuka  with his wife


Fuji Kinder Garden, Tokyo

தெசுகா, சப்பானின் புகழ் பெற்ற நவீன கட்டிடக்கலை நிபுணர். இவரது  புதிய  சிந்தைனையான வானத்தை தொடுதல் (catch the sky) என்ற வடிவத்தில் கட்டப்பட்ட நவீன வீடுகள், அலுவலகங்கள்  ஆகியவை சப்பானில் மிகப் பிரசித்தி பெற்றது. இவரது மனைவியும் ஒரு சிறந்த கட்டிட நிபுணர் ஆவார்


எந்த வரையறையும்  இல்லாமல் எல்லைகளற்ற வெளியில் குழந்தைகள் ஓடியாடும் வகையில், வட்ட வடிவமாக மரப்பலகைகள்  வேயப்பட்ட கூரை யாக இயற்கையோடு கூடிய முன் மாதிரி பள்ளியினை வடிவமைத்துள்ளார். இதன் சிறப்பம்சம் என்னவென்றால் ஒவ்வொரு வகுப்பறைக்குள்ளும் வானம் பார்த்த மரங்கள் மேற்கூரையின் வெளியே தெரியும் படி உள்ளது. மேலும் குழந்தைகள் இந்த மரத்தின் மேல் ஏறி விளையாடும் வகையில் மேல் தளத்தில் கயிற்று வலை அமைக்கப்பட்டுள்ளதுகுழந்தைகள் மேல் தளத்தில் இயற்கை வெளியில் ஓடி ஆடலாம். இந்த குதூகலமான சூழலக்காகவே குழந்தைகள் ஆர்வமாக பள்ளிக்கு வருகிறார்கள்




இந்த புதிய பள்ளியின் மேல் தளத்தில்  நாள் ஒன்றொக்கு சராசரியாக மாணவர்கள் மேல் தளத்தில் 6 கிமீ அவர்களையும் அறியாமல் ஓடி ஆடி விளையாடுகிறார்கள்.

வித்தியாசமாக அமைக்கப்பட்ட மரக்கூண்டுகள் மற்றும் சுழல் படிக்கட்டுகள் வழியே ஓடி பிடித்து விளையாடுவது, ஒளிந்து விளையாடுவது என குழந்தைகள் குதூகலிக்கிறார்கள்.  குழந்தைகளை அளவுக்கு அதிகமாக பாதுகாப்பு என்னும் பெயரில் விளையாட்டு கூட விடாமல் வகுப்பறையில் அடைக்காதீர்கள் என தெசுகா அறிவுறுத்துகிறார்.








இப்பள்ளியின் வடிவமைப்பினைப் பற்றி தெசுகா அவர்கள் TED க்கு அளித்த உரையினை கீழ்காணும் காணொளியில் கண்டு களிக்கலாம்

https://www.youtube.com/watch?v=QvSZ1MtaXME

இத்தயக சூழலை ஒப்பிடும் போது, நமது அரசு பள்ளிகளுக்கு நாம் என்ன மாதிரியான அக்கறையினை செலுத்துகிறோம் என எண்ணிப் பார்க்கையில் வேதனையாக உள்ளது.  கடந்த ஆண்டில் மத்திய அரசு பள்ளிகள் உட்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு  கொடுக்கப்பட்ட நிதியினை பயன்படுத்தாத நம் தமிழக அரசு இனியேனும் விழித்து கொண்டு இது போன்ற மாதிரி பள்ளிகளை அமைத்தால் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை கண்டிப்பாக அதிகரிக்குமே..


செய்வீர்களா, செய்வீர்களா?

Friday 3 April 2015

சப்பானின் வசந்த காலம் - கனாமி (花見)


தற்போது மார்ச் மாத இறுதியில் துவங்கி ஏப்ரல் மாதம் முழுவதும் சப்பானில் வசந்தகாலம். ஏறத்தாழ ஐந்து மாத பனிகாலத்திற்கு பிறகு சூரிய வெளிச்சமும் நீல நிற வானமும் மக்களை குளிரிலிருந்து அடுத்த பருவகால நிலைக்கு தயார் செய்கிறது. 


வசந்தத்தினை வரவேற்கும் விதமாக சப்பானியர்கள் ஹனாமி (花見) என்னும் விழாவினை கொண்டாடுகிறார்கள். ஹனா என்றால் பூக்கள் என்று பொருள். ஹனாமி என்றால் பூக்களை பார்த்தல் அல்லது அவைகளோடு உறவாடுதல் எனப் பொருள்.  பனிகாலம் முடிந்த உடன் வெற்று உடம்பாய நிற்கும் செர்ரி மரங்களின் கிளைகளில் மார்ச் மாத துவக்கத்தில் அரும்புகள் துளிர்க்கின்றன. மெதுவாய் காம்புகள் பிடித்து வெண்மையும், இளஞ்சிவப்பு நிறத்திலும் பூக்கள் இதழ் விரிக்கின்றன. பெரும்பாலும் மார்ச் மாத இறுதியில் பூக்கும் செர்ரி பூக்கள் சகுரா என்றழைக்கப்படும் (桜  அல்லது  櫻; さくら)


 Cherry blossom, March 1-4, 2015

  Cherry blossom, March 1-4, 2015
 Cherry blossom, March 1-4, 2015
  Cherry blossom, March 1-4, 2015
  Cherry blossom, March 1-4, 2015, Tokyo University of Science
  Cherry blossom, March 1-4, 2015, Tokyo University of Science
  Cherry blossom, March 1-4, 2015, Unga village River
   Cherry blossom, March 1-4, 2015, Library, Tokyo University of Science
Cherry blossom, March 1-4, 2015, Library, Tokyo University of Science

வசந்த காலத்தில் எங்கு நோக்கினும் பஞ்சுமிட்டாய் வண்ணத்தில் சாலைகளின் இருமங்கிலும் சகுராக்கள் சிரிப்பதை பார்த்துக் கொண்டே இருக்கலாம். சப்பானியர்கள் சகுரா மலர்களை வசந்தத்தின் குறியீடாகவே பார்க்கிறார்கள்.  குடும்பமாகவோ அல்லது நண்பர்கள் புடைசூழ சகுரா மரத்தின் அடியில் அமர்ந்து உணவருந்துவது ஹனாமி விழாவின் சிறப்பம்சம். கையடக்கமான மண் குடுவைகளில் சாக்கே எனப்படும் சப்பானியரின் உற்சாக பானத்தினை அருந்துவது இன்னும் கூடுதல் சிறப்பு. சகுரா மலர்கள் பூத்திருக்கும் இந்த செர்ரி மரங்கள் வயதான பெரியவர்களுக்கு சமம். தங்கள் இன்ப துன்பங்களை சகுரா மரங்களிடம் பகிர்ந்து கொள்கிறார்கள். நன்கு வயது முதிர்ந்த செர்ரி மரங்கள் ஒரு கைதேர்ந்த பூக்காரியைப்போல் இடைவெளியின்றி நெருக்கமாய் பூக்களை பூக்கும். இளம் வயதுடைய மரங்களோ இடைவெளிகளோடு பூக்களை நெய்யும். மே மாத வாக்கில் இந்த பூக்களே இலைகளாக மாறிவிடும். குறுகிய காலத்தில் மட்டுமே காணப் பெறும் இந்த சகுரா மலர்களை  இங்குள்ள மக்கள் தங்கள்  அபிலாசைகளை இயற்கையிடம் எடுத்துச்  செல்லும் இயற்கையின் தூதுவர்களாக பார்க்கிறார்கள்

பல நூற்றாண்டுகளாய் சகுரா மலர்கள் சப்பானிய ஹைக்கூ கவிதைகளில் பாடு பொருளாக உள்ளது. சகுரா வெறும் மலர் மட்டுமல்ல அது ஒவ்வொரு சப்பானியனின் வாழ்வியல் குறியீடு..


Ukiyo-e painting from Tale of Genji, ch. 20 - 花宴 Hana no En, "Under the Cherry Blossoms", by artist Kunisada(1852). Courtesy Wikipedia.

Ladies in the Edo palace enjoying cherry blossoms. Courtesy Wikipedia.


さすが花ちるにみれんはなかりけり
எந்த கவலையுமின்றி
சகுரா பூக்கள்
வீழ்கிறது...
- ஹைக்கூ (கோபாயாசி இசா)தோக்கியோ அறிவியல் பல்கலைக் கழகம்
நோதா வளாகம், சப்பான்