Sunday 22 May 2016

நீரிழிவு நோய் எச்சரிக்கை ‍ -1
போலி சிகிச்சை கும்பலை நம்பாதீர்கள்

//அக்குபஞ்சர் என்ற மாற்று மருத்துவத்தை நம்பி ஒரு வார காலம் இன்சுலில் எடுக்க தவறிய பள்ளி மாணவன் மரணம்.//


காலை எழுந்தவுடன் இந்த செய்தியினை முகநூலில் பார்த்தவுடன் மனம் மிகுந்த துக்கம் கொண்டு விட்டது.

உப்புமா சினிமா கம்பெனிகள் போல் மருத்துவத்தில் மாற்று மருத்துவம் என்ற பெயரில் கண்ட சுள்ளான்களும் காளான் போல பெருகியதன் விளைவுதான் இது போன்ற மரணங்கள். இதற்கு காரணமாக இருப்பவர்கள தயவு தாட்சயண்யம் பார்க்காமல் சட்டப்படி தண்டிக்க வேண்டும்.

டயபடீஸ் அல்லது நீரிழிவு நோய் என்பது இன்றைய கால கட்டத்தில் பெருகி வரும் பிரச்சினை. காரணம், நம் வாழ்க்கை முறை, உணவு பழக்கம், மற்றும் போதிய அளவு மருத்துவ பரிசோதனை விழிப்புணர்வு  இல்லாமையே. நோயின் அறிகுறியினை கொண்டு முன் கூட்டியே கணிக்கப்படும்  (early detection )நோயினை முற்றிலும் குணப்படுத்த முடியும். ஆனால் நம்மில் பலருக்கும் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு மிகக் குறைவாக உள்ளது.

டயாபடிக் பிரச்சினை உள்ளவர்கள் அருகில் இருக்கும் அரசு மருத்துவமனை அல்லது தனியார் மருத்துவமனையில் உள்ள நீரிழவு நோய் சிறப்பு சிகிச்சை மருத்துவரிடம் தொடர் சிகிச்சை எடுத்து கொள்ளுங்கள். வருடத்திற்கு இரண்டு முறை கட்டாயம் இரத்த பரிசோதனை செய்து கொள்ளுங்கள். அதன் அடிப்படையில் மருத்துவரின் ஆலோசனைபடி நீங்கள் உட்கொள்ளும் மருந்தினை மாற்றி கொள்ளுங்கள். நீங்களாகவே முன் முடிவு செய்து கொண்டு மருந்தினை நிறுத்துவது அல்லது மாற்று வழியில் முயற்சிப்பது என்பது எல்லாமே விபரீதத்தில் முடியும்.

டயாபடிக் பிரச்சினையில் டைப் 1, டைப் 2 என இரண்டு விதம் உள்ளது.

டைப் 2 பிரச்சினைக்கு மாத்திரைகள் உட் கொள்வதன் மூலம் இரத்தத்தில் சேரும் குளுக்கோசின் அளவை கட்டுக்குள் கொண்டுவரலாம். டைப் 1 பிரச்சினைக்கு அவசியம் இன்சுலின் எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு வேளை உணவு மேலாண்மை மூலம் தகுந்த மருத்துவ பரிசோதனை மூலம் டயாபடிக் பிரச்சினைக்கு தீர்வு காண பேலியோ (Paleo diet) டயட்டினை தகுந்த மூத்தோர் ஆலோசனையுடன் முயற்சித்து பாருங்கள். ஆனால் தகுந்த மருத்துவர் ஆலோசனை இல்லாமல் நீங்களாவே எந்த முடிவையும் எடுக்காதீர்கள்.

நீங்கள் தனிப்பட்ட முறையில் ஒரு சிகிச்சையினை முயற்சித்து பார்த்து இருந்த்தாலும் ஒவ்வொருவரின் உடலமைப்பு, வாழ்க்கை முறை, குடும்ப ரிதீயிலான மரபு நோய் என பல கூறுகள் சம்பந்தபட்டு இருப்பதால் மருத்துவத்தை பற்றிய எந்த ஆலோசனைகளையும் பிறருக்கு சொல்லாதீர்கள் அது ஒருவரின் உயிரையே பறிக்கும். “எனக்கு தெரிந்த நபர் ஒருவர் அவரிடம் கசாயம் வாங்கி சாப்பிட்டார்,” “கேரளாவில் ஒரே நாளில் குணப்படுத்துகின்றனர்” “அக்குபஞ்சர் 48 நாள் ஊசியில் குத்தினால் நோய் பறந்து விடும்”, “வெண்டைக்காயை ஊற வைத்து ஒரு மண்டலம் குடித்தால் அண்டவே அண்டாது”, இது போன்ற உட்டாலக்கடி மேட்டரை பொது வெளியில் பரப்புபவர்களை எச்சரியுங்கள். இவர்கள்தான் நம் மண்ணின் சாபக்கேடே.

கொரியாவில் அக்குபஞ்சருக்கு தெருக்கள் தோறும் மையங்கள் உள்ளது. இவர்கள் இதனை உடல் வலிக்கு மட்டுமே சிகிச்சையாக எடுத்து கொள்கிறார்கள். கேன்சருக்கு, நீரிழவு நோய்க்கு, என தீவிர மருத்துவ சிகிச்சை பிரச்சினைகளுக்கு இதனை பயன்படுத்துவதில்லை. நம் ஊரில் ஒரு மண்டலம் இதனை பயிற்சியாக படித்துவிட்டு அடுத்தவரின் உயிரோடு விளையாடுவோரே கொஞ்சம் சிந்தியுங்கள்.

டயாபடிக் டைப் 2 பிரச்சினைக்கு சரியான மருந்துகள் உட்கொள்ளவில்லை என்றால் கீழ்கண்ட பிரச்சினைகள் ஏற்படும். இதனை நீங்கள் உணரும் போது பிரச்சினை கை மீறி போயிருக்கும்

·       சிறுநீரக பழுது (Kidney failure)
·       கரு விழியின் ரெக்டினா- பார்வை பறி போதல்(diabetic retinopathy)
·       இதய நோய் (cardiovascular disease)

டயபாடிக் 1 பிரச்சினைக்கு இன்சுலின் எடுக்கவில்லை என்றால் அது உயிருக்கே உலை வைத்து விடும்.

சிறு வயதில் இருந்து இன்சுலின் எடுத்து கொள்ளும் இரண்டு நண்பர்களை எனக்கு  தெரியும்.ஒருவர் பிஎச்டி முடித்து விட்டு கல்லூரியில் பேராசிரியராக உள்ளார். இன்னொருவர் பிஎச்டி படித்து கொண்டே தற்போது கல்லூரியில் பேராசிரியராக உள்ளார். இருவருமே தங்கள் மணவாழ்வில் குடும்பம், குழந்தை என்று இறைவன் அருளால் மகிழ்ச்சியுடன் உள்ளனர். தொடர்ச்சியான, முறையான சிகிச்சை, உடற்பயிற்சி, உணவு மேலாண்மை, சீரான வாழ்வியல் முறை இவை மூலம் நீரிழிவு நோயை கட்டுக்குள் கொண்டு வந்து விடலாம்.

இது போன்று இந்த இறந்து போன குழந்தையும் கூட வாழ்வில் ஒரு சாதனையாளராக வந்து இருக்கலாம். ஒரு முட்டாளின் வார்த்தை அந்த குடும்பத்தின் செல்வத்தையே பறித்து விட்டதே.

நோய் என்பது முற்றிலும் குணமாவது மட்டுமல்ல, அதன் தீவிர தன்மையினை மட்டுபடுத்தி நம் கட்டுக்குள் வைத்திருப்பதும் கூடத்தான்.

போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்.








Sunday 15 May 2016

சுவான்சி (Swansea) கடற்கரையில் ஒரு நாள்

இன்று காலையில் சுவான்சி கடற்கரையில் இருந்து அருகில் நான்கு கி.மீ தொலைவில் இருக்கும் மம்பிள்ஸ் (Mumbles) மீன் பிடி கிராமம் வரை போய் வரலாம் என சென்று வந்தேன்.

செல்லும் வழியெங்கும் உற்சாகமாக "ஹலோ கண்மணி எப்படி உள்ளாய்", "இனிய நாளாகுக" என கொஞ்சி வாழ்த்து சொல்லும் உள்ளூர் பெரியவர்கள், குழந்தைகளோடு கடலில் சுற்றும் தகப்பன்கள்,நாய்குட்டிகளோடு இளைப்பாறும் முதியவர்கள் என இன்றைய கடல் நடை சுவாரசியமாக‌ இருந்தது. 

கடற்கரையில் நடந்து கொண்டு சுவான்சி நகரை பார்க்க தனி அழகாக இருந்தது. கடற்கரையினை ஒட்டியவாறே மிதிவண்டி ஓட்டவும், மெது நடைபயிற்சி செய்யவும் தனித்த பாதை உள்ளது. இந்த சிறிய சாலையில் சுவான்சி நகருக்கும், மம்பிள்ஸ் மீன் பிடி கிராமத்திற்கும் இடையே பயணிகள் இரயில் 56 வருடங்களுக்கு முன்பு வரை ஓடியுள்ளது என்பதை நம்பவே முடியவில்லை. இந்த இரண்டு ஊர்களுக்கும் இடையே இருக்கும் தொலைவு 4 கி.மீ.  1807 ஆம் ஆண்டு நீராவியில் இயங்கும் தொடர் வண்டி தொடங்கபட்டு பின்னர் டீசல், மின்சாரத்தில் இயங்கும் வண்டியாக மாற்றியுள்ளனர். பின்னாளில் இரண்டு நகருக்கும் பேருந்து வந்த பிறகு 1960 ஆம் ஆண்டு இந்த ரயில் சேவை நிறுத்தப்பட்டு விட்டது. இந்த கடைசி பயணத்தில் சென்றவர்கள் கதறி அழுதுள்ளனர்.
இப்போது காலத்தின் சாட்சியாய் எஞ்சி இருப்பது அறிவிப்பு பலகை மட்டுமே.
நான் இந்த சாலையில் நடந்து கொண்டிருந்த போது, சைக்கிள் ஓட்டும் பாதையில் ஒரு வயது குழந்தையினை தனி பெட்டியில் வைத்து தனது மிதிவண்டி பின்னால் இணைத்து கொண்டு ஒரு தகப்பன் ஓட்டி கொண்டு சென்றார். அவர் பின்னால் அவரது இன்னொரு குழந்தையும், மனைவியும் தனி மிதி வண்டியில் வந்து கொண்டிருந்தனர்.

வார இறுதியில் பிரித்தானியர்கள் வீட்டை விட்டு வெளியே தான் தங்கள் நாளை உற்சாகமாக கழிக்கின்றனர். நம்ம ஊர் வெயிலுக்கு இது போன்று வாய்ப்பே இல்லை. ஆனால் தொலைக்காட்சி பெட்டிகளின் தாக்கத்தில் இருந்து நம் மக்களை மீட்பது என்பது தற்போதைய சவால்களில் மிகப் பெரியது என நினைக்கிறேன்.

கடற்கரையில் இருந்து வீட்டுக்கு திரும்பும் வழியில் சுவான்சி பல்கலைக்கழக மைதானத்தில் வேல்சு தேச அளவிலான பள்ளிகளுக்கிடையேயான விளையாட்டு போட்டிகள் நடந்து கொண்டிருந்தது. சரி அப்படியே குட்டீஸ்கள் எப்படி போட்டியில் கலந்து கொள்கிறார்கள் என்ற ஆர்வ மிகுதியில் உள்ளே சென்று பார்த்தேன்.
எல்லா மாணவர்களின் பெற்றோர்கள் உடன் வந்திருந்தனர். அவர்கள் தங்கள் பிள்ளைகளை உற்சாகப் படுத்திய வண்ணம் இருந்தனர்.
நீளம் தாண்டுதலில் நினைத்த படி தாண்ட முடியாத வருத்தத்தில் வந்த மாணவியை தந்தை ஆறுதலாய் அணைத்து கொண்டு நெற்றியில் முத்தமிட்டு என்னை விட அதிகம் தாண்டியுள்ளாய் என செல்பி எடுத்து ஆறுதல் படுத்தி கொண்டிருந்தார்.
100 மீட்டர் ஓட்டத்திற்கு தனது மகனுக்கு அவனது கை தசைகளை மசாஜ் செய்த வண்ணம் ஒரு தாய் இப்படி ஓடாதே, அப்படி ஓடு என டிப்ஸ் கொடுத்து கொண்டிருந்தார்.

இந்த போட்டிகளை புகைப்படம் எடுக்க அனுமதி உண்டா என அங்கிருந்த போட்டியாளர்களிடம் அனுமதி கேட்டேன். அவர்கள் சிரித்துக் கொண்டே நிச்சயம் எடுத்துக் கொள்ளுங்கள் என சொன்னவுடன் கொஞ்சம் புகைப்படங்களை கிளிக்கினேன்.

பார்ப்பதற்கு இந்த மாணவர்கள் நடுநிலை, உயர் நிலை பள்ளியில் பயில்வது போல் போல் தெரிகிறது. நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், தட களப் போட்டி, குண்டு மற்றும் ஈட்டி எறிதல், கோலூன்றி தாண்டுதல் என பல போட்டிகள் நடைபெற்று கொண்டிருந்தது.

விளையாட்டு போட்டிகளுக்கான ஏற்பாடு உதவிகளை கோச்சுகளுடன் உள்ளூர் பெரியவர்கள் கூட நின்று உதவி செய்து கொண்டிருந்தனர். தட கள போட்டியில் கடைசியாக வந்த சிறுமியிடம் கோச் தாத்தா அவள் செய்த தவறுகளை சுட்டிக் காட்டி ஒரு தடகள பலகையினை கொண்டு வந்து எப்படி தாண்ட வேண்டும், காலை எப்படி வளைக்க வெண்டும் என அறிவுரை சொல்லிக் கொண்டிருந்தார். பெரியவர்கள் தங்கள் அனுபவங்களை இப்படி நம் ஊரில் சொன்னால் நம் ஊர் குழந்தைகள் இவ்வளவு மரியாதையாக கேட்பார்களா எனத் தெரியாது. ஆனால் அந்த சிறுமி சமத்தாக கேட்டுக் கொண்டிருந்தாள்.

போட்டி முடிந்தவுடன் பெற்றோரிடம் ஓடுகிறார்கள். அவர்கள் சிரித்துக் கொண்டே தட்டி கொடுக்கிறார்கள்.குழந்தைகள் வளர்ப்பில் பெரும் கவனம் எடுத்துக் கொள்கிறார்கள் என தெரிகிறது.

பக்கத்து மைதானத்தில் 50 வயதை கடந்த மூத்த மகளிருக்கான ஆக்கி போட்டி நடைபெற்று கொண்டிருந்தது. உண்மையில் அவர்களின் உடல் திறன் என்னை மலைக்க வைத்தது. மரண ஓட்டம், அடி என இடியாக செயல்படுகிறார்கள். வயது இங்கே பொருட்டு இல்லை. உடற்பயிற்சி, உற்சாகமான வாழ்க்கை சூழல் என இளமைத் துடிப்புடன் உள்ளனர்.

வார இறுதிகளில் தொலைகாட்சி பெட்டிகளில் மூழ்கி இருந்து விட்டு எல்லா உடல் ரிதியிலான தொந்தரவும் வந்த பிறகு யோகா வகுப்பு போகிறேன் என ஒரு க்ரூப் நம்ம ஊரில் கிளம்புவதை பார்க்க சங்கடமாக இருக்கிறது.

இங்கே பொது மக்கள், குழந்தைகள் விளையாட மிகப் பெரிய பொது விளையாட்டு மைதானங்கள் உள்ளது. நம் ஊரில் பெரும்பாலன நகரங்களில் விளையாடும் மைதானங்களை ஆக்கிரமிப்பு செய்து கொள்கின்றனர். இப்படி செய்வோரை மிக கடுமையாக தண்டிக்க வேண்டும். மேலும் பெரியவர்கள் விளையாட நல்ல ஆரோக்கியமான சூழலை ஏற்படுத்தி தரலாம். வயதாகி விட்டது என குத்தி காட்டி அவர்களை ஒதுக்குவது நல்ல சமூகத்திற்கான அடையாளம் அல்ல. நாளை நமக்கும் வயதாகும் என்பதை நினைவில் கொள்வோம்.
Blackbill station, Swansea Beach, Wales, UK


Old  Train route Swansea- Mumbbles Village,Swansea Beach, Wales, UK


Old  Train route Swansea- Mumbbles Village,Swansea Beach, Wales, UK


Old  Train route Swansea- Mumbbles Village,Swansea Beach, Wales, UK



Cafe, Mumbbles Village,Swansea Beach, Wales, UK




Swansea beach,Oystourmouth Road

Swansea beach,Oystourmouth Road

Old train route, Swansea beach,Oystourmouth Road

Swansea beach,Oystourmouth Road

Uphills view, Swansea city from Beach

Uphills view, Swansea city from Beach


Swansea Beach

Swansea Squash Club, Swansea

Swansea Squash Club, Swansea

Swansea University Stadium

Swansea University Stadium

Swansea University Stadium

Saturday 14 May 2016

அதிமுக தேர்தல் அறிக்கையும் ஆடித் தள்ளுபடியும் ‍-2
மின்சாரக் கனவுகள்

 தற்போதைய மின் உற்பத்தி மற்றும் நம் எதிரகால தேவைகளின் அடிப்படையில் நம் தமிழகம் கடுமையான தட்டுப்பாட்டினை எதிர் நோக்கி இருக்கும் சூழலில் கடந்த ஆறு மாதங்களாக கூடுதல் விலை தந்து வெளி மாநிலத்தில் இருந்து தருவித்து தமிழக அரசு தருகிறது. இந்த கானல் நீர் விரைவில் மறையும். மக்கள் பெரும் துயரில் தள்ளப்படுவார்கள்.
இந்த சூழலில் அதிமுக மீண்டும் ஒரு அபத்த தேர்தல் அறிக்கையினை இலவசங்களாய் அள்ளி தெறித்துள்ளது.

அதிமுக அரசின் தேர்தல் அறிக்கை
11. மின்சாரத்தில் தன்னிறைவு
* தடையில்லா மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும்.
* அடுத்த 5 ஆண்டுகளில் புதிய அனல் மின் நிலையங்கள் மூலம்  13,000 மெகாவாட் கூடுதல் மின்சாரம் பெறப்படும்.
* புனல் மின் திட்டங்கள் மூலம் 2,500 மெகாவாட் மின்சாரம் பெறப்படும்.
* 3,000 மெகாவாட் மின்சாரம் சூரிய சக்தி மூலம் பெறப்படும்.
* சீரான மின்சாரம் விநியோகிக்கும் வகையில் மின் கட்டமைப்புகள் வலுப்படுத்தப்படும்.   
12. கட்டணமில்லா மின்சாரம் வழங்கும் திட்டம்
* மின்சாரம் அனைவருக்கும் மிகவும் அத்தியாவசியமான ஒன்று  என்பதால் தற்போதைய கணக்கீட்டு முறைப்படி 100 யூனிட் மின்சாரம் கட்டணம் ஏதுமில்லாமல் வீடுகளுக்கு வழங்கப்படும். இதன் மூலம் அனைவரும் பயனடைவதுடன் தற்போது 100 யூனிட் வரை பயன்படுத்தும்  78 லட்சம் மின் உபயோகிப்பாளர்கள் மின் கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியது இல்லை.

அதிமுகவின் இந்த தேர்தல் அறிக்கை எந்த அளவிற்கு உருப்படியானது என எடை போட முதலில் நம்மிடம் உள்ள மின் உற்பத்தி எப்படி உள்ளது என தெரிந்து கொள்வோம்.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் (TANGEDCO) சமீபத்திய ஆண்ட‌றிக்கை படி (29/2/2016) தமிழகத்திற்கு தற்போது கிடைக்கும் மின்சாரத்தின் அளவு 13883.5 மெகாவாட். இந்த அளவானது கீழ்கண்ட வழிகளில் பெறப்படுகிறது

1.      அரசுக்கு நேரிடையாக கிடைப்பது

·       அனல் மின் சக்தி  4660 மெகாவாட்
·       வாயு விசையாழி 516 மெகாவாட்
·       புனல் மின் சக்தி   2288 மெகாவாட்
·       தனியார் அரசு கூட்டு ஒப்பந்தம் 852.5 மெகாவாட்
·       பயோ மாஸ் 68 மெகாவாட்
·       மத்திய அரசு மின் பகிர்மானம் 5464 மெகாவாட்

 2.      தனியார் நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் மூலம் பெறப்படுவது

·       தனியார் காற்றாலை 7512 மெகாவாட்
·       சூரிய மின் சக்தி581.26 மெகாவாட்
·       பயோ மாஸ் 230 மெகாவாட்
·       தனியார் அரசு கூட்டு ஒப்பந்தம்  659 மெகாவாட்

மேலே சொன்ன புள்ளி விபரங்களில் இருந்து மின் உற்பத்தி திறனில் நம் கையிருப்பு எவ்வளவு உள்ளது என புரிந்து இருக்கும்,

இனி அதிமுக ஆட்சியில் நடந்த மோசமான மின் உற்பத்தி மற்றும் பகிர்வு மேலாண்மை, ஊழல் ஆகியவற்றால் என்ன மாதிரியான பிரச்சினைகள் உள்ளது என பார்ப்போம்.

Ø ஒவ்வொரு ஆண்டும் நமது மின் தேவை  பற்றக்குறை 8 சதவிகிதம் அதிகரித்து கொண்டே செல்கிறது. தோரயமாக இந்த ஆண்டு நமக்கு 14200 ல் இருந்து 14800 மெகாவாட் மின் சக்தி பற்றாக் குறையாக உள்ளது.  அதாவது நம்மிடம் இருக்கும் மின் சக்தி கையிருப்பை விட அதே மடங்கு நமக்கு இன்னும் தேவை உள்ளது. அதாவது இதே ஆட்சி நீடித்தால் அடுத்த ஐந்தாண்டில் 40 சதவிகிதம் மின் சக்தி பற்றாக்குறை ஏற்படும். அதவாது கையில் இருப்பதில் இன்னும் பாதி அளவு மின் உற்பத்தி. இதை கண்டிப்பாக சமாளிக்கவே முடியாது

Ø தற்போது தமிழக மின்வாரியத் துறைக்கு வெளியில் இருந்து மின்சாரம் வாங்கிய வகையில் 80,000 கோடி கடன் உள்ளது. இது ஒரு சாம்பிள்தான்.

Ø தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களிடம் மதிப்பு கூட்டி கூடுதல் விலைக்கு மின் சக்தியினை கொள் முதல் செய்த வகையில் பல ஆயிரம் கோடி ஊழல் புரிந்துள்ளது. உதாரணத்திற்கு சூரிய மின் சக்தி கடந்த வருடம் கொள்முதல் விலை யூனிட் ஒன்றிற்கு 7 ரூபாய். ஆனால் இவ்வருடம் சூரிய மின் சக்தி உற்பத்தி இந்தியாவில்  கணிசமாக அதிகரித்துள்ள சூழலில் கொள்முதல் விலை யூனிட் 3 ரூபாய்க்கு கீழே கிடைக்கும் சூழல் உள்ளது. ஆனால் அதே பழைய விலைக்கு வாங்குவதற்கான ஒப்பந்தம் போடப்பட்டதன் மூலம் பல ஆயிரம் கோடிகளை லஞ்சமாக தனியார் நிறுவனங்களிடம் இருந்து பெற்றுள்ளனர்.

Ø மின் உற்பத்தி கையிருப்பே மோசமாக இருக்கும் லட்சணத்தில் தற்போது வீட்டிற்கு 100 யூனிட் மின்சாரம் இலவசம் என அறிவித்துள்ளனர். எப்படி பார்த்தாலும் இது பொது மக்கள்தானே பலனடைகிறார்கள் என யோசிப்பவர்கள் பின் வரும் எளிய கணக்கினை ஒரு முறை சரி பாருங்கள்.

Ø தமிழ்நாடு மின்வாரியத்தின் மின் சக்தி விற்பனை கணக்கீட்டின் படி வீட்டு பயன்பாட்டிற்கு 100 யூனிட் கரண்ட்டின் விலை (300+20) 320 ரூபாய். இதில் அரசின் மானியம் 200 ரூபாய் ஏற்கனவே நடை முறையில் உள்ளது. ஆக பொது மக்கள் செலுத்த வேண்டிய‌ தொகை 120 ரூபாய். உத்தேசமாக‌, 75 லட்சம் குடும்பத்திற்கு மாதம் ஒன்றிற்கு அரசுக்கு இதன் மூலம் இழப்பு 90 கோடி. ஒரு வருடத்திற்கு 1080 கோடி, அடுத்த ஐந்து வருடத்திற்கு 5400 கோடி.  மானியத்தோடு சேர்த்து தோராயமாக‌ 15000 கோடிக்கு மேல் இழப்பு நேரிடும். தமிழக அரசின் மின்வாரியத்தின் பழைய கடன் 80,000 கோடியுடன் இந்த புதிய சுமை 5400 கோடியும் கூடுதலாக சேரும்.

இப்பொழுது நம்மிடம் இருக்கும் கேள்வி

1.இந்த கடனை எப்படி தமிழக அரசு அடைக்கப் போகிறது?
2.நமக்கு இன்னும் தேவைப்படும் 14000 மெகாவாட் மின் உற்பத்திக்கான புதிய திட்டங்கள் எதுவும் இல்லாத சூழலில் எப்படி மின் தட்டுப்பாட்டினை சமாளிக்க போகிறோம்?

·       தற்போது மின்வாரிய கணக்கீட்டு படி (On line Tariff Calculator For LT Services- Bi-monthly)  முதல் 100 யூனிட் வரை 120 ரூபாய், 1 யூனிட் கூடுதலாக போனால் (100+1 ) 50 ரூபாய் தேவையில்லாமல் கூடுதலாக சேர்த்து 170 ரூபாய் கட்ட வேண்டும். இதே போல்  200 யூனிட் வரை 320 ரூபாய். 1 யூனிட் கூடுதலாக போனால் (200+1 ) 433 ரூபாய் கட்ட வேண்டும். ஆக மக்கள் பயன்படுத்தாத மின் உற்பத்திக்கும் சேர்த்து பணம் வசூலிக்கிறார்கள். இந்த முறையால் மக்களுக்கு பெரும் தண்ட செலவே ஏற்படுகிறது. இம்முறையினை மாற்றி மக்களுக்கு ப்ரீ பெய்ட் முறையினையோ அல்லது பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு மட்டும் பணம் செலுத்தும் முறையினையோ அறிமுகப்படுத்தலாம். இப்படி மோசமான மின் பகிர்வு மேலாண்மையினால் லட்சக் கணக்கான நடுத்தர குடும்பங்கள் அல்லோலப் படுகிறது.

·       பிரித்தானியாவில் ப்ரீ பெய்ட் அட்டைகள் மூலம் உள்ளூர் மளிகை கடை, அங்காடிகளில் பணம் செலுத்தி விட்டால் அவர்கள் தரும் ரகசிய எண்ணை வீட்டில் உள்ள மின் பகிர்வு கருவியில் உள்ளீடு செய்து விட்டால் செலுத்திய பணத்திற்கு இணையான மின் சக்தியினை எடுத்து கொள்ளலாம். ஒவ்வொரு நாளும் மீதம் எவ்வளவு பணம் இருக்கிறது தொடர்ந்து கண்காணிக்க முடிவதால் மின் விரயம் மற்றும் மின் சேமிப்பு ஆகியவற்றை பற்றி கணக்கிட முடிகிறது.

·       கடந்த ஐந்து வருடங்களில் சூரிய ஆற்றல் மின் திட்டம் தவிர்த்து உருப்படியான எந்த ஒரு திட்டமும் தமிழகத்தில் முன்னெடுக்கப்படவில்லை. இந்த திட்டத்திலும் பல ஆயிரம் கோடி ஊழல்.

·       வரலாறு காணாத மின் வெட்டினால் தமிழகத்தில் லட்சக் கணக்கான குடிசை தொழில் செய்வோர் தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் தங்கள் வேலை வாய்ப்பினை இழந்து தவித்துள்ளனர்.

·       மிகப் பலவீனமான மின் உற்பத்தி மேலாண்மை மற்றும் மோசமான மின் தட உட்கட்டமைப்பினால் தமிழகம் தற்போது மின் உற்பத்தி மற்றும் பகிர்மானத்தில் மிகப் பெரும் சவாலை இன்னும் ஆறு மாத காலத்தில் சந்திக்க உள்ளது. உதாரணத்திற்கு, தமிழகத்தின் மின் வழி தடத்திற்கான மேம்பாட்டிற்கு ஜப்பான் நாடு தந்த ஆயிரக்கணக்கான கோடி நிதியினை கூட உருப்படியாய் பயன்படுத்தாத செயலற்ற அரசால் எப்படி வரப்போகும் ஐந்தாண்டில் மட்டும் புதிய மின் உற்பத்தி திட்டங்களை தர முடியும். இது குறித்து பலமான கண்டனத்தை சமீபத்தில் ஜப்பான் அரசு இந்தியாவிற்கு தெரிவித்துள்ளது.

எங்கும் கொள்ளை எதிலும் கொள்ளை என்ற இந்த அதிமுக அரசை தயவு செய்து தூக்கி எறியுங்கள். இலவசங்கள் மூலம் மீண்டும் ஒரு முறை உங்கள் வாழ்வை சூறையாட போகிறார்கள்.

இவர்கள் போட்ட ஆட்டத்தால், தேர்தலுக்கு பிறகு மிகப் பெரிய ஒரு மின் வெட்டு வரப் போகிறது அதற்காகவும் தயாராக இருக்கவும் மக்களே.

தயவு செய்து இந்த ஊழல் அரசை தூக்கி எறியுங்கள்.

சிந்தித்து வாக்களியுங்கள்! உங்கள் வாக்குகள் விற்பனைகல்ல.

உங்கள் வாக்கு மாற்றத்தை நோக்கி இருக்கட்டும்.




Friday 6 May 2016

கோடம்பாக்கத்துக்கு போ

கல்லூரி நாட்களில் படிக்கும் போது எதிர்காலத்தை பற்றிய கனவுகளை விட என்ன மாதிரியான வேலை கிடைக்குமோ என்ற‌ பெரிய பயமே அதிமாக இருந்தது. அதுவும் நடுத்தர வர்க்க குடும்பத்தில் இருந்து கல்லூரி போகிற ஒவ்வொருத்தனுக்கும் அவன் லட்சியங்களை விட குடும்பங்கள் தரும் பொறுப்புகளே அதிகம். அதுதான் நிதர்சனம்.

இந்த பரம பத விளையாட்டுல பாம்புகள் கொத்தாம ஒவ்வொரு ஏணியா கவனமா அடி எடுத்து வைக்கனும். நமக்கு பிடிச்சத விட வாழ்க்கை யோட‌ செட்டில்மென்டுக்காக தேடி பிடிச்சு ஒவ்வொரு அடியா எடுத்து வைக்கனும்

அந்த கல்லூரி நாட்களில், படிப்பை விடவும் ஏதோ ஒரு பொறி வெளியில் இருந்து அப்ப நம்ம வாழ்க்கையில் விழும். அதப் பிடிச்சிகிட்டு ஏறி வருவதற்குள் கூட வந்த பாதி பேர் காணாமல் போயிருப்பார்கள். இன்னும் சில பேர் நாம் எதிர்பார்த்ததை விட வேறு மாதிரியான தளத்தில் செட்டில் ஆகி இருப்பார்கள்.

காலம் எப்பவுமே ஒரு விசித்திரமான வாத்தியார்.

திருச்சி, பிசப் ஹீபர் கல்லூரியில் இளம் நிலை இயற்பியல் படிச்சிகிட்டு இருந்த போது இரண்டு பசங்க அவங்கள பத்திதான் இப்ப சொல்லப் போறேன்.

செம்ம சாது டைப். கல்லூரி, யுனிவர்சிட்டி கிரிக்கெட் டீமில் இருவரும் இருந்ததால் முதல், இரண்டு வருடங்களில் காலேஜ் கிரவுண்டை தாண்டும் போது அவர்கள் விளையாடுவதை நான் பல முறை பார்த்திருக்கிறேன். பெரிதாய் பேசி எல்லாம் பழக்கம் இல்லை.

பின்னாளில் இறுதி ஆண்டில் இவர்கள் இருவரும் பக்கத்து வகுப்பு. நல்ல நண்பர்களாக அறிமுகம் அப்புறம் நான் அங்கேயே முது நிலை இயற்பியல் படிப்பை தொடர ஆரம்பித்து இருந்தேன். இந்த ரெண்டு பாய்ஸும் எம்.சி.ஏ வில் ஒரே வகுப்பில் சேர்ந்துட்டாங்க.

எப்ப பார்த்தாலும் இந்த ரெண்டு பசங்களும் எதாவது வண்டி பார்க்கிங் ஏரியாவில் நின்னு பேசிக்கிட்டு இருப்பாங்க. அப்ப பிஜியில் இரு பாலர் வகுப்புகள். நம்ம பசங்க காலேஜ் பார்க்ல, கேண்டீன்ல தவம் இருக்கும் போது ஒரு பொண்ணும் ஏறெடுத்து பார்க்க மாட்டாங்க.

ஆனா, இவர்களை கடந்து போற பொண்ணுங்க, லைட்டா சைட் அடிச்சிட்டு போவாங்க. இத பார்க்கும் போதெல்லாம், தூர நின்னு நம்ம பசங்க செம்ம லந்த கொடுப்பாங்க.  ஆனா கடைசி வர இந்த ரெண்டு பேரும் அப்படி என்னதான் பேசிக்குவாங்கன்னு கடவுளுக்குத்தான் வெளிச்சம்.

அப்புறம் இந்த இர‌ண்டு பாய்சும், வழக்கமா சினிமாவில் வருவது போல் சாப்ட்வேர் கம்பெனியில் வேலை வாங்கி குடும்பத்துடன் செட்டில் ஆகி விட்டார்கள்.
அப்புறம் எதுக்கு பாஸ் இவ்வளவு பெரிய பீடிகைன்னு கேட்கிறீங்கள. கதையில் இப்பதான் டிவிஸ்ட்டே.

ஒரு நாளான திருநாளில் இந்த இரண்டு நண்பர்களில் ஒருவர் சாப்ட்வேர் வேலைய தூக்கி எறிஞ்சிட்டு டைரக்டர் ஆகனும்னு கிளம்பிட்டார். இத்தனைக்கும் அப்ப நண்பன் ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் இலட்சக் கணக்கில் சம்பளம் வாங்கிட்டு இருந்தான். நம்ம வீட்டில் எல்லாம் இலட்சக் கணக்கில் சம்பளம் வரும் ஒரு பெரிய வேலைய விட்டுட்டு நாளைக்கே சினிமா கத்துக்க போறேன்னு சொன்னா விசம் வச்சு கொன்னுடுவாங்க.

ஆனா இப்படி துணிச்சலா முடிவெடுக்கிற‌ தைரியமும், மன உறுதியும், இருக்கிற ஆம்பிளைய விட, அவன அன்பா தட்டி கொடுத்து உன்னால முடியும்னு சொல்லற ஒரு தேவதை எல்லா ஆண்கள் வாழ்க்கையிலும் இருப்பாங்கன்னு சொல்ல முடியாது. அது என் நண்பனுக்கு அமைஞ்சது ஒரு வரம்னுதான் சொல்லனும்.

ஆமாங்க அந்த நண்பன் “கைலு” என்கிற “கைலாஸ் க‌ரித்” இப்ப குறும்பட இயக்குநரா தன்னோட இரண்டாவது படத்தை ரிலீஸ் பண்ண போறார்.  

முதல் குறும்படமான “எனக்கே எனக்கா” வில் கதாநாயகனாக அறிமுகம் https://www.youtube.com/watch?v=OhKgdldvU7g. இப்ப வெள்ளித் திரை என்ட்ரிக்காக ஒரு பெரிய ஸ்கெட்ச் போட்டு பளீச்சுன்னு ரெண்டாவது குறும்படம் வந்திருக்கு. படத்தோட டைட்டில் “11:11”.

11:11 படத்தோட டிரைலர் இன்றைக்கு ரிலீஸ் ஆகி இருக்கு. நடிகர் மாதவன் இந்த படத்தோட டிரைலர் துவக்கி வச்சு வாழ்த்து சொல்லி இருக்காரு.

டிரைலர் மிக நேர்த்தியா வந்திருக்கு. இசை, காட்சி அமைப்புகள், கதாபாத்திர தேர்வு, எடிட்டிங் என கன கச்சிதமாக சிக்சர் அடித்துள்ளார் இயக்குநர் கைலாஸ். இந்த படத்தின் ஒட்டு மொத்த குழுவுக்கும் பாராட்டுகளும், வாழ்த்துகளும்.

இந்த படம் ஆங்கிலத்தில் சப் டைட்டிலோட இன்னும் ஒரு மாதத்தில் வெளி வர இருக்கு. நிச்சயம் என் முகநூல் நட்பு வட்டத்தில் இருக்கும் நண்பர்கள் இந்த குறும்படத்தின் டிரைலரை பார்த்து விட்டு உங்கள் வாழ்த்துகளையும், கருத்துகளையும் சொல்லவும்.


மேல சொன்ன கதையில் சொல்ல மறந்த இன்னொரு கேரக்டர் “அருண்” என்கிற எங்களோட இன்னொரு நண்பன் தான் இந்த படத்தின் ஹீரோ. இந்த சாக்லெட் பாய் ஏற்கனவே மாடலிங் துறையில் விளம்பரத்துக்கு நடிக்கவும் ஆரம்பிச்சிட்டார். சோ, இன்னும் கொஞ்ச நாளில் வெள்ளிதிரைக்கு எங்க ஏரியாவில் இருந்து ஒரு கதாநாயகனை ஏற்றுமதி செய்ய இருக்கிறோம்.

அப்புறம் இந்த ஒட்டு மொத்த கதையின் பெரிய சஸ்பென்சே இப்படத்தில் இன்வெஸ்டிகேசன் ஆபிசராக வரும் டெரர் கேரக்டர் “ராதா மணாளன்”, என்கிற எங்களது கல்லூரி தோழன். இவர் வேறு யாருமல்ல, சின்ன திரைகளில் (ஜெயா டிவி, தந்தி டிவி) நையாண்டி தர்பார் என்ற நிகழ்ச்சியில் உங்களை புரட்டி எடுத்தவர். சமீபத்தில் தந்தி தொலைக்காட்சியில் இவரது “ழ” என்னும் தமிழத்தின் கலை, இலக்கிய‌ பண்பாட்டு விழுமியங்ளின் தொகுப்பு பரவலான கவனக் குவிப்பை பெற்றது.

ஆக மொத்தம், பிசப் ஹீபரின் ஒரே வகுப்பில் இருந்து இரண்டு நடிகர்களையும், ஒரு இயக்குநரையும் கோடம்பாக்கத்துக்கு பார்சல் செய்கிறோம்.

வாழ்த்துகள் நண்பர்களே.

11:11 படக்குழுவினர்
Director: Kailash Harith
Cinematography : Udaya Venkat Punnia Moorthi
Editing : Vijay Andrews
Sound Design & Mixing : Sachin Sudhakaran and Team (Sync Cinema)
DI Colorist : Sreejith Sarang
VFX : Balaji Rajaram

PRO : Nikil Murugan