Wednesday 11 October 2017

கேள்வி 2: டெங்கு வைரஸ் மனிதர்களை கொல்லும் வல்லமை பெற்று இருந்தால் அதை சுமக்கும் கொசுவை ஏன் கொல்லவில்லை.

இந்த கேள்வியினை படித்தவுடன், அட விசத்தை அருந்திய கொசு எப்படி சாகாமல் இருக்கிறது என்பது போன்ற புரிதல் உங்களுக்கு வரும். இது எளிதாக மேலோட்டமாக சிந்திக்கும் எல்லோருக்குமே வருவதுதான். காரணம் மனித உடலமைப்பை வைத்தே கொசுவும் இருக்கும் என்று புரிந்து கொள்வதால் வரும் அடிப்படை சிக்கலே இதற்கு காரணம்.

முதலில் டெங்கு வைரஸ் பாதிக்கப்பட்ட மனிதரை ஏடிஎஸ் எஜிப்டி பெண் கொசு கடிக்கும் போது அது எவ்வாறு கொசுவின் உடலில் செல்கிறது என்பதை அறிவியல் பூர்வமாக எளிதாக தெரிந்து கொள்வோம்.

நிலை -1:  பெண் கொசுக்கள் டெங்கு வைரஸ் பாதிக்கப்பட்ட‌ மனித உடலில் இருந்து இரத்த உணவை (blood meal) உறிஞ்சும் பொழுது அவை கொசுவின் வயிற்றுப் பகுதிக்கு செல்கிறது. அங்கு டெங்கு வைரஸ் 3-5 நாட்களுக்குள் நன்கு வளர்ச்சி பெற்று கொசுவின் எச்சில் சுரப்பிக்கு செல்கிறது  (இணைப்பு படத்தில் பார்க்க).

நிலை -2:  இப்போது டெங்கு வைரஸ் பாதிப்படைந்த ஏடிஎஸ் பெண் கொசு மற்றொரு மனிதரிடம் இருந்து இரத்த உணவைப் பெறும் போது டெங்கு வைரஸ் அம்மனிதரின் இரத்ததில் கலக்கிறது.

இரண்டு நிலைகளும் இன்னும் எளிதாக புரிய‌ இப்போது இன்னும் இரண்டு சிறிய கேள்விகளை பார்த்து விடுவோம்.

குட்டிக் கேள்வி 1: கொசு முதலில் பாதிக்கப்பட்ட மனிதரிடம் இருந்து எடுத்த இரத்தத்தை இன்னொரு மனிதருக்கு கடிக்கும் போது செலுத்துகிறதா?
குட்டிக் கேள்வி 2: பெண் கொசு வாயிலாக மட்டுமே டெங்கு வைரஸ் பரவுகிறது, ஆண் கொசு வாயிலாக ஏன் பரவுவதில்லை.

இரண்டு குட்டிக் கேள்விகளுக்கான விளக்கத்தினை ஒரே பதிலின் மூலம் புரிந்து கொள்ளலாம். பொதுவாக கொசுக்கள் (ஆண், பெண்) செடிகள், பழங்கள் மற்றும் கரும்பு போன்ற குளுக்கோஸ் உள்ள தாவரங்களில் இருந்து தங்களுக்கான ஆற்றலைப் பெறுகின்றன. ஆனால் இனப்பெருக்கத்திற்கான முட்டைகளை இடுவதற்கு பெண் கொசுக்களுக்கு மட்டும் மனித இரத்தம் தேவைப்படுகிறது. அவ்வாறு இரத்த உணவை மனிதர்களிடம் பெறும் போது மனிதர்களின் இரத்தம் உறையாமல் தங்கு தடையின்றி இரத்ததினை உறிஞ்சும் பொருட்டு கொசுக்கள் தங்கள் எச்சிலை கடிக்கும் இடத்தில் பரவச் செய்கிறது. இது மனிதர்களின் இரத்தம் உறையாமல் இருக்கச் செய்கிறது.  

நான் மேலே சொன்னது போல் பெண் கொசுவின் வயிற்றுப் பகுதியில் நன்கு வளர்ந்த டெங்கு வைரஸ் அதன் எச்சில் சுரப்பிகளைச் (Salivary glands) சென்றடையும் போது மனிதர்களின் இரத்ததினை உறையாமல் இருக்கச் செய்ய எச்சிலை பரவ விடும்போது இந்த டெங்கு வைரஸ் கிருமிகள், பாதிக்கப்படாதவரின் இரத்தத்தில் கலக்க ஆரம்பித்து விடும். பிறகு இது அம்மனிதரின் இரத்தத்தில் நன்கு பரவி, வளர்ந்து ஆளையே கொன்று விடும்.
ஆக, பாதிக்கப்பட்டவரை கொசு கடிக்கும் போது உடனே அது இறக்க வாய்ப்பில்லை, மாறாக அந்த இரத்தம் கொசுவின் வயிற்றிற்குள் சென்று நன்கு வளர்ந்து எச்சில் சுரப்பிகள் வழியாக தன் வேலையினை காட்டும்.

குட்டிக் கேள்வி 3: அப்படியானால், கொசுவின் சராசரி வாழ்நாள் எவ்வளவு?

கொசுவின் முட்டையில் இருந்து இரண்டு நாட்களில் நன்கு வளர்ந்த கொசுக்கள் தயாராகி விடும். இவை மூன்றில் இருந்து நான்கு வாரம் வரை வாழும் தன்மை உடையது. ஏடிஎஸ் பெண் கொசு ஒன்றரையில் இருந்து மூன்று வாரம் வரை வாழும். இந்த இடைவெளியில் நான்கு முறை முட்டை இடும். ஒவ்வொரு முறை முட்டை இடும் பொழுது குறைந்தது 50 ல் இருந்து 100 வரை முட்டைகள் இடும். டெங்கு வைரஸ் ஏடிஎஸ் கொசுவின் உள்ளே சென்று விட்டால் அதன் வாழ் நாளான 20 நாட்களுக்குள் இரத்த உணவினைப் பெறும் எல்லா மனிதர்களுக்கும் பரப்பும். ஏனெனில் நான்கு முறை முட்டை இட அவை மீண்டும் மீண்டும் மனிதர்களை கடிக்கும்.

உண்மை இவ்வாறு இருக்க, மனிதர்களைப் போல் ஏடிஎஸ் பெண் கொசுக்கள் பல வருடம் வாழ்ந்து, வைரஸ் கிருமியால் பாதிக்கப்பட்டவுடன், விசம் என்று பாட்டிலில் எழுதப்பட்ட திரவத்தை குடித்து உடனே உயிரை விடும் என்றெல்லாம் ரீலர்கள் கற்பனை செய்து கொண்டு கட்டுக் கதைகளை பரப்புகிறார்கள்.

கொசுவின் வாழ்நாள் 3 வாரம் மட்டுமே. முக்கியமாக, டெங்கு வைரஸ் பாதிக்கப்பட்ட கொசுவின் உடலில் டெங்கு வைரஸ் 5 நாள் வரை நன்கு வளர்ந்த பிறகே அதன் எச்சில் சுரப்பிகளை அடையும். பிறகு அது பாதிப்படையாத மனிதரை கடிக்கும் போது டெங்கு வைரஸ் பரவும். 
இப்போது ஏடிஎஸ் பெண் கொசு ஏன் மனிதரை கடிக்கிறது, கொசுவின் வாயிலாக வைரஸ் எப்படி பரவுகிறது என்று புரிந்திருக்கும். இதே முறையில்தான் கொசுவின் வாயிலாக மலேரியா, சிக்கன் குனியா, ஜிகா வைரஸ்கள் மனித உடலுக்கு பரவுகிறது.


 ஆகவே “டெங்குவால் பாதிக்கப்பட்ட கொசுவே சாகவில்லை என்னும் போது மனிதர்கள் எப்படி இறப்பார்கள்” என்று சொல்லி ரீலர்கள் உங்களை மருத்துவமனைக்கு போகாமல் மூளைச் சலவை செய்தால் “அப்பாலே போ, மரண வியாபாரியே” என முகத்தில் அறைந்தது போல் சொல்லுங்கள்.



No comments:

Post a Comment