Monday 10 July 2017

வெகுசன அறிவியல் -2 

(‍மக்கள் கூடும் சந்தையில் அறிவியல் சோதனைகள்) – Soapbox Science

கடந்த 25 ஆண்டுகளில் பொது மக்களின் அன்றாட வாழ்வில் மருத்துவம், வீட்டு பொருட்கள் உபயோகம், பயணம், சமையல், உணவுப் பொருட்களை பதப்படுத்துதல், விவசாயம், தகவல் தொடர்பு, கற்றல், பருவ நிலை கணிப்பு என ஒவ்வொரு துறையிலும் உள்ள‌ சிரமங்களை அறிவியல் நுட்ப வளர்ச்சியானது பெருமளவு எளிதாக்கியுள்ளது.

ஆனால் இத்தையக நுட்பங்கள் எப்படி கண்டுபிடிக்கப்படுகிறது, குறிப்பாக‌ ஆராய்ச்சி நிறுவனங்களில் இது சார்ந்த ஆய்வுப் பணிகளை எப்படி செய்கிறார்கள்? இவற்றில் உள்ள அடிப்படை அறிவியல் என்ன என்றெல்லாம் பொது மக்களுக்கு தெரிய வாய்ப்பில்லை.

பெரும்பாலும் பொதுமக்களுக்கும் நுட்பங்களுக்கும் உள்ள தொடர்பு என்பது சந்தையில் கிடைக்கும் பொருட்களை பயன்படுத்துதலோடு மட்டுமே உள்ளது. அப்படியானால் வளரும் இளம் தலை முறைக்கு எப்படி இந்த அறிவியல் நுட்ப அறிவை கொண்டு செல்வது? இனி எதிர்காலத்தில் நம்க்கு வரப்போகும் தலைமுறைகள் எதிர் நோக்கும் சவால்கள் என்ன என்றெல்லாம் விவாதிப்பதற்கு பொது மக்களுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்குமான ஒரு தொடர்பு புள்ளி என்பது ஒரு முக்கியமான தேவையாகவே உள்ளது. ஆகவே அது சார்ந்த ஒரு தளத்தினை ஏற்படுத்துவது குறித்து நம் இந்திய சூழலில் நாம் யோசிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

இந்த சிக்கலைத் தீர்க்க பிரித்தானியாவில் ஒவ்வொரு நகரிலும் மக்கள் அதிகமாக‌ கூடும் சந்தைகளில், அந்தந்த நகரில் உள்ள‌ பல்கலைக் கழகத்தில் பணியாற்றும் அறிவியலாளர்களைக் கொண்டு  திறந்த வெளியில் எளிமையாக, செய்முறை விளக்கத்தோடு அறிவியல் நுட்பத்தை விளக்குகிறார்கள். இந்நிகழ்வின் பெயர் சோப்பாக்ஸ் சயின்ஸ் (Soapbox Sceicne). சோப்பு நுரைக் குமிழிகளை காற்றில் ஊதும் போது எப்படி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் அது ஈர்க்கிறதோ அது போல எளிய அறிவியல் சோதனைகள் மூலம் மக்களை ஈர்க்க முயற்ச்சிக்கிறார்கள்.

குறிப்பாக இந்நிகழ்வை முழுக்க முழுக்க‌ பெண் ஆராய்ச்சியாளர்கள் முன்நின்று நடத்துவதுதான் இந்நிகழ்வின் தனிச்சிறப்பே. இதன் மூலம் பாலின பாகுபாட்டில் (Gender inequality) பெண்களுக்கான தடையினை உடைத்து அறிவியல் துறையின் தூதராக‌ ஒரு பெண் ஆற்றல் பெருக்கோடு வருவதை இளம் தலைமுறையினர் ஒரு முன்னுதாரணமாக கொள்வதற்கான வாய்ப்பை இந்நிகழ்வு ஏற்படுத்தி தருகிறது.

இந்நிகழ்வு எப்போது, யாரால், எப்படி துவங்கபப்ட்டது?
இங்கிலாந்தில் உள்ள லண்டன் நகரில் ஹைடு பூங்கா (Hyde park) உள்ளது. இப்பூங்காவில் பொது மக்கள் தங்களுக்கு விருப்பப்படும் துறைகளில் மற்றவர்களோடு திறந்த வெளியில் உரையாட முடியும். இதற்காக அப்பூங்காவில் “ஸ்பீக்கர் கார்னர்” என்னும் பகுதியினை ஏற்படுத்தி வைத்துள்ளனர். வழமையாக கல்வி நிறுவனங்களில் மாணவர்களோடு உரையாடுவதற்கு ஆசிரியர்கள் பயன்படுத்தும் போர்டு, பவர் பாயின்ட், திரை, என எந்த வசதியும் இல்லாமல் செறிவு மிக்க தங்கள் உரையின் மூலம் நேரடியாக மக்களோடு இப்பூங்காவில் உரையாடுகிறார்கள்.

இந்த “ஸ்பீக்கர் கார்னர்” முறையினை கையாண்டு ஏன் அறிவியல் நுட்பத்தை பொது மக்களுக்கு எளிய முறையில் ஏன் விளக்கி சொல்ல முடியாது என்று யோசித்ததன் விளைவே “சோப்பாக்ஸ் சயின்ஸ்” நிகழ்வு.

யுனிவர்சிட்டி காலேஜ் ஆப் லண்டனின் பணிபுரியும் முனைவர் செய்ரியன் சம்மர் (Dr Seirian Sumner) மற்றும் விலங்கியல் நிறுவனத்தில் பணிபுரியும் முனைவர் நாதெல்லி பெட்ரொல்லி (Dr Nathalie Pettorelli) என்ற இரண்டு பெண் அறிவியலாளர்களும் கூட்டாக இணைந்து தங்கள் கண்டுபிடிப்புகளை மக்கள் முன்பு வைத்து திறந்த வெளியில்  உரையாடுவதற்கான தளத்தை “சோப்பாக்ஸ் சயின்ஸ்” என்னும் பெயரில் ஏற்படுத்தினார்கள்.  

இந்நிகழ்ச்சியின் மூலம் STEM என்றழைக்கப்படும் அறிவியல், நுட்பம், பொறியியல் மற்றும் கணிதத் துறைகளில் பணியாற்றும் பெண் ஆராய்ச்சியாளர்கள் தங்களது அறிவியல் கண்டுபிடிப்புகளை பொது மக்கள் முன்பு விளக்குவார்கள். இந்த இருவரது முயற்சியால் இன்று பிரித்தானியாவின் பல முக்கிய நகரங்களில் இந்நிகழ்ச்சியினை ஆராய்ச்சி நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் முன்னின்று நடத்தி வருகின்றனர். இவர்களது பணியை மேனாள் பிரித்தானியாவின் பிரதமர் கேமரூன் இவர்களுக்கு “பாயின்ட் ஆப் லைட்” (Points of Light) என்னும் விருதினை தந்து கெளரவித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமையன்று வேல்சு தேசத்தில் உள்ள சுவான்சி நகரில் உள்ள நகர் மன்ற பகுதியில் சோப்பாக்ஸ் சயின்ஸ் நிகழ்வை சுவான்சி பல்கலைக் கழகத்தில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் நடத்தினார்கள்.

இந்நிகழ்வில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும்  ஆர்வமாக கலந்து கொண்டனர். தெருவில் ஒரு சிறு மர மேடை அமைத்து அதன் மீது வெள்ளை நிறத்தில் ஆய்வக கோட்டை மாட்டிக் கொண்டு பெண் ஆராய்ச்சியாளர்கள் தங்களது கண்டுபிடிப்புகளை அதன் அடிப்படையோடு, சிறிய மாடல், வரைபடம், பொம்மைகள் இவற்றைக் கொண்டு நேரிடையாக விளக்கினர்.

நம் மூளை  வயதாகும் போது என்ன ஆகும்? மூளையின் செயல்பாடுகள் என்ன? டிமன்சியா என்னும் மறதி நோய் எவ்வாறு ஏற்படுகிறது என்பதனை அருமையான வண்ணப்படங்களோடு விளக்கினர். இதற்காக மூளை படத்தினை வரைந்து நமக்கு ஏற்படும் உணர்வுகளை தனித் தனி அட்டைகளில் எழுதி பொது மக்களையே தேர்ந்தெடுக்க வைத்தனர். உதாரணத்திற்கு மகிழ்ச்சி, கவலை, சிந்தனை, பாடல் என ஒவ்வொரு நிகழ்வையும் நமது மூளை எந்த பகுதியில் செயலாற்றும் என விளையாட்டு மூலம் விளக்கினர்.

மின் திரைகளில் எப்படி வன்ணம் உருவாகுகிறது. இந்த கருவிகளில் உள்ள நெகிழ் தன்மை (Flexible surface) உடைய பரப்பில் எப்படி மெல்லிய ஏடுகளாக மின்சுற்றுகளை ( thin film electrical circuit) அச்சடித்தல் (printing) முறையில் தயாரிக்கிறார்கள் என்பதை SPECIFIC என்ற ஆய்வு மையத்தில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் நேரிடையாக சோதனை மூலம் விளக்கினர். ஸ்கீர்ன் பிரின்டிங் முறையில் மின் சுற்றுகளை தயாரிக்க அதற்கான இங்க், பெயின்ட்டுகள் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது என்பதையும் நேரடியாக விளக்கினர்.

தேனீக்களின் பெட்டிகளை நேரடியாக கொண்டு வந்து அவை எவ்வாறு தேனை வெளியில் இருந்து சேகரித்து வந்து பெட்டியில் கூட்டில் தேனை சேமிக்கிறது என அருமையாக விளக்கிச் சொன்னார்கள்.

கோடை காலத்தில் ஒரு கட்டிடத்தின் உள்ளே எப்படி  குளிர்ச்சியாகவும், அதே நேரம் குளிர் காலத்தில் அதே கட்டிடம் எப்படி உள்ளிருக்கும் சூட்டை வெளியே விடாமல் வெதுவெதுப்பாக வைத்திருக்கிறது (solar thermal systems) என்பதை மிக அருமையாக விளக்கி காட்டினார்கள்.

நவீன நுட்ப வளர்ச்சியில் கம்பியில்லா (Wireless) தொலைதொடர்பில் எப்படி இணையத்தில் தகவலை பெறமுடிகிறது என விளக்கி புரிய வைத்தார்கள்.  அங்கு வைக்கப்பட்டு இருந்த வாழைப்பழத்தினை கொண்டு செய்யப்பட்ட பியானோ போன்ற இசை எழுப்பும் கருவி குழந்தைகளை மிகவும் குதூகலப்படுத்தியது.

நம் உடலில் உள்ள மரபணு மூலக்கூறுகள் எப்படி இருக்கும் என்பதை எளிய மாடல் விளையாட்டு மூலம் குழந்தைகளுக்கும் பெரியவர்களும் தெளிவாக புரியும் படி விளக்கி காட்டினார்கள். இந்நிகழ்வில் வைக்கப்பட்டு இருந்த மிட்டாய்களை குச்சியால் இணைத்து குழந்தைகள் விளையாடினர். இந்த மிட்டாய் பொம்மை மூலம் மரபணு எப்படி இருக்கும் என்று விளக்கி சொன்னதும் குழந்தைகளுக்கு அப்படி ஒரு மகிழ்ச்சி. இந்த சோதனை மூலம் செயற்கை நுண்ணறிவு நுட்பத்தினை கொண்டு நம் மரபணு மூலக்கூறுகளில் ஏற்படும் முறிவை அல்லது சேதத்தினை சரி செய்வது என்று எளிதாக புரியும் சொன்னது எல்லோரையும் ஆச்சரியப்படுத்தியது.

இப்படி 12 விதமான‌ அறிவியல் நுட்ப சோதனைகளை தனித்தனியாக‌ 30 நிமிடத்திற்கு விளக்கினர். ஒருவர் மேடையில் பேசும் போது இரண்டு தன்னார்வலர்கள் அவருக்கு உதவியாக இருந்தனர். சில தன்னார்வலர்கள் பொது மக்களிடையே  படிவத்தை தந்து இந்த சோதனைகளில் இருந்து எத்தையக அறிவியலை நீங்கள் தெரிந்து கொண்டீர்கள் என்று கருத்துகளை கேட்டு தொகுத்து கொண்டிருந்தனர்.

ஒவ்வொரு நிகழ்விலும் சோப்பு நுரைக் குமிழிகளை ஊதியபடியே இருந்தனர். அவை வானில் சின்ன சின்னதாய் பறந்த படியே இருந்தது. பறந்து கொண்டிருந்த ஒவ்வொரு குமிழும் பெண் கல்வி, நிரூபணங்களை நோக்கிய அறிவியல், நுட்பத்தினால் சமூகத்திற்கு ஏற்படும் மேம்பாடு, குழந்தைகளின் கற்பனை என்று வேறு வேறு நம்பிக்கைகளை நமக்கு சொல்வதாய் இருந்தது.
பிரித்தானியாவில் துவங்கிய இந்த வெகுசன அறிவியல் முன்னெடுப்பு உலகமெங்கும் பரவி பெண் கல்வியில் நிச்சயம் மேம்பாட்டினை ஏற்படுத்தும் என திடமாக நம்புகிறேன்.


இது போன்ற திறந்த வெளி அறிவியல் நுட்ப உரையாடலை தமிழக சூழலில் நிச்சயம் முன்னெடுக்கலாம். 























No comments:

Post a Comment