Monday 27 July 2015

சூரிய  மின்சக்தியின் மூலம் இயங்கும் குப்பைத் தொட்டிகள் - Solar powered trash bin


தற்போது மக்கள் கூடும் இடங்கள், தெருக்கள் என எல்லா இடங்களிலும் ஒழுங்கின்றி வெளியில் வீசப்படும் குப்பைகள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இது  மக்களுக்கு அருவருக்கத்தக்க சூழலை ஏற்படுவதோடு   மோசமான‌ தொற்று நோய்களின் பிறப்பிடமாக குப்பைத் தொட்டிகள் விளங்குகிறது.

நம் மக்கள் குப்பைகளை தெருக்களில் வீச முக்கியமான காரணங்கள். அ) சுகாதாரம் பற்றிய அக்கறையின்மை அல்லது அலட்சியம்   ஆ) போதிய குப்பைத் தொட்டிகள் இல்லாமை இ) குப்பைத் தொட்டிகளில் கொட்டப்படும் கழிவுகளை சரியான நேரத்தில் சேகரித்து செல்ல இயலாதது.

இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகம் உள்ள நாடுகளில் குப்பை மேலாண்மை மேற்கண்ட காரணிகளால் மிகவும் பலவீனமான நிலையிலேயே உள்ளது. இக்காரணங்களை தவிர்த்து, இன்னும் நம் நாட்டில் சரி வர மேம்படுத்தப்படாத‌  குப்பை கழிவு மேலாண்மை திட்டம்மும் ஒரு முக்கிய காரணாமாக உள்ளது.

இதில் அரசினை குறை சொல்வதை விட பொதுசனமாகிய நாம்தான் நிறைய மாற வேண்டும். சொல்லப் போனால் இனி வரும் காலங்களில் அரசு, பொதுசனம் இருவருமே சேர்ந்து கூட்டாக இயங்கினால் மட்டுமே சுத்தமான தேசத்தினை உருவாக்க முடியும்

சுற்றுலா பயணிகள் அதிகம் வருகை தரும் நகரங்களில் குப்பைத் தொட்டிகள் இயல்பான நகரங்களை ஒப்பிடும் போது மிக வேகமாக நிரம்பி விடும். அவ்வாறு குப்பைகள் நிரம்பிய பின் சரியான நேரத்திற்கு அக்குப்பைகள் அகற்றப்படாமல் விட்டால் பெரும் சுகாதார கேட்டினை உருவாக்கும்.

இது போன்ற பிரச்சினைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க‌, அமெரிக்காவில் உள்ள பிக் பெல்லி (BigBelly Solar) நிறுவனம் நியூயார்க், பிலிடெல்பியா உள்ளிட்ட சில நகரங்களில் வொய்பை (Wifi) நுட்பத்தினை அடிப்படையாக கொண்டு சூரிய மின் சக்தியில் இயங்கும் குப்பைத் தொட்டிகளை மக்கள் கூடும் பொது இடங்களில் அறிமுகப் படுத்தி உள்ளனர்.

இந்த குப்பைத் தொட்டிகளில் அப்படி என்ன விசேசம் என்கிறீர்களா.


வழக்காமான குப்பைத் தொட்டிகளைப் போல் அல்லாமல், இந்த குப்பை தொட்டியில் மக்கள் போடும் குப்பை நிரம்பியவுடனோ அல்லது தாங்க முடியாத துர்நாற்றம் வீசும் போது இதனுடன் இணைக்கப்பட்டுள்ள வொய்பை நுட்பத்தின் மூலம் துப்புரவு பணியாளர்களுக்கு தகவல் சென்று விடும். அவர்கள் உடனடியாக அந்த குப்பைத் தொட்டியினை காலி செய்து விடுவார்கள். இதன் மூலம் குப்பைகள் பெருகி தெருக்களில் துர்நாற்றம் வீசப்படுவடு தடுக்கப்படுகிறது.  இதன் விலை 3000 அமெரிக்க டாலர். இதனை இந்திய தொழில் நுட்பத்தில் வடிவமைத்தால் பல மடங்கு விலை குறைய வாய்ப்புள்ளது.

சோலார் பேனல்கள் குப்பைத் தொட்டியின் மீது உள்ள மூடிப் பகுதியில் சூரிய ஒளி படும் படி இணைக்கப்பட்டுள்ளது (சிலிக்கான் சோலார் பேனல்களுக்கு பதில் மென் ஏடுகள் பூசப்பட்ட சோலார் பேனல்களை பயன்படுத்துவது பல வகைகளில் சிறப்பு). மேலும் குப்பையிலிருந்து மிக மோசமான வாயு வெளிப்படும் பொழுது மூடியின் அடிப்பகுதியில் இணைக்கப்பட்டுள்ள வொய்பை பலகையில் வாயுவினை அறியும் நுணர்விகளும் (gas sensors) பொருத்தப்பட்டிருக்கும். எளிமையான இந்த வடிவமைப்பு நிச்சயம் நமது நாட்டில் மக்கள் தொகை பெருக்கம் நிறைந்த பெரு நகரங்கள், சுற்றுலா பயணிகள் அதிகம் வருகை தரும் இடங்களில் இதனை சோதனை முயற்சியாக பரிசோதித்து பார்க்கலாம்.

இந்த நுட்பத்தினை வெளிநாடுகளில் இருந்துதான் பெற வேண்டும் என்பதில்லை. தற்போது நம் பொறியியல் மாணவர்களைக் கொண்டே இந்த திட்டத்தினை வடிவமைக்கலாம்.




இன்னும் சில நிறுவனங்கள் சோலார் பேனல்கள் மூலம் இயங்கும் வண்ணத் திரைகளை (LED) கொண்டு விளம்பர பலகைகளை குப்பைத் தொட்டிகள் மீது வைத்து புதிய வகையில் வாடிக்கையாளர்களை கவந்து வருகிறார்கள்.


Advertisement flash board on solar powered garbage cans


விளம்பர பலகை வைக்கும் அளவிற்கு கூட வேண்டாம், குறைந்த பட்சம் நம்மால்   சூரிய மின் சக்தியினை கொண்டு குப்பைத் தொட்டியினை சரியான நேரத்திற்கு காலி செய்ய முடியுமா என்று முயற்சிக்கலாம். இதனால் நகராட்சி வண்டி தேவையில்லாமல் ஊரைச் சுற்றத் தேவை இருக்காது. பொதுசனமும் குப்பை நிரம்பிய தொட்டியினால் அவதியுறவும் தேவை இருக்காது.


(குப்பைதானே என்று அலட்சியப் படுத்தி வெளியே வீசாதீர்கள். இந்த கேவலமான குப்பைகளை மறுசுழற்சி செய்வதன் மூலம் ஒரு கிராமத்திற்கு தேவையான‌ மின் சக்தி, எரிவாயு போன்ற ஆற்றலை பெற முடியும். ஆனால அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது, குப்பைகளை குப்பை, மட்காத குப்பை என பிரித்து போட வேண்டும் அதனைப் பற்றி விரிவாக அடுத்த பதிவில் எழுதுகிறேன்)


No comments:

Post a Comment