Sunday 23 April 2017


ஆர்வ மிகுதியும் அபத்த புரிதல்களும்  - பாலிஸ்டைரீன் மிதவை அட்டைகள்- வைகை அணை

கடும் கோடை வறட்சியினால் மழை பொய்வின்றி நீர் தட்டுப்பாடு ஏற்படும் என பருவநிலை ஆராய்ச்சியாளர்கள் பல மாதங்களுக்கு முன்பே எச்சரித்து இருந்தார்கள்.

வழமையினை மீறிய சூரிய வெப்பத்தால் நீர் நிலைகளில் இருந்து அதிகமாகவே நீர் ஆவியாகும் அடிப்படை அபாய சிக்கல் நீர் மேலாண்மை பணியில் ஈடுபட்டு இருக்கும் பொறியாளர்கள், அதிகாரிகளுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். ஆனால் முன் கூட்டியே என்ன மாதிரியான நடவடிக்கையினை இந்த ஆண்டு எடுத்துள்ளார்கள் என்பதுதான் இப்போதைய நம் கவலை.

ஆகையால் ஏரி, குளம், அணையில் உள்ள நீர் பிடிப்பு பகுதிகளில் உள்ள நீரை ஆவியாகாமல் இருக்க நவீன நுட்ப வழிமுறைகளை பற்றி தற்போது சிந்தித்தே ஆக வேண்டும். இந்த சூழலில்தான் வைகை அணையில் கையிருப்பில் இருக்கும் அணை நீரை கோடை வெப்பத்தில் ஆவியாகமல் இருக்க அதன் மேல் பரப்பில் பாலி ஸ்டைரீன் (Polystyrene) என்னும் பாலிமர் வேதிப் பொருளால் செய்யப்பட்ட நுரைப் பொருளாகிய தெர்மோகோல்  நிறுவனத்தின் அட்டைகளை, வெப்ப தடுப்பு மிதவை களாக‌   நீரின் மேல் மிதக்க விடும் திட்டத்தை  சோதனைக்கு முன்பாகவே பத்திரிக்கையாளர்களுக்கு  காட்டுகிறேன் பேர்வழி என‌   சங்கடப்பட்டு நிற்கிறார். 

வைகை அணையில் நீர் ஆவியாகமல் இருக்க தெர்மோகோல் அட்டைகளை மிதக்க விடும் திட்டத்தைனை அமைச்சர் செல்லூர் ராஜீ துவங்கி வைத்த போது எடுத்தபடம். 
திட்டம் துவக்கிய சில மணி நேரத்தில் தெர்மோகோல் அட்டைகள் கரை ஒதுங்கிய போது எடுத்த படம்


தெர்மோகோல் அட்டைகள் மூலம் நீர் ஆவியாகாமல் தடுக்கும் திட்டத்தினை நீர்த் தேக்கங்களில் சோதித்து வெற்றி கண்டுள்ளனர் ஆராய்ச்சியாளர்கள். 

நீரின் மேல் பரப்பில் மிதக்கும்  பாலிஸ்டைரீன் மென் அட்டைகளை பயன்படுத்தும் போது திட்டத்திற்கான செலவு, காற்றில் அடித்துச் செல்லாமல் இருக்குமா, நீரில் கடுமையாக அலைகள் ஏற்படும் போது அவை தாக்குப் பிடித்து நிற்குமா, மீன் போன்ற உயிரினங்கள் இதனை தின்னுமா,
நீர் நிலைகளின் அருகில் வாழும் வன விலங்குகள் நீர் அருந்த இந்த திட்டம் இடையூறாக இருக்குமா  என பல காரணிகளை சோதனை ஆய்வின் மூலம் முதல் செய்து பார்க்க வேண்டும். 

சூரிய‌ வெப்பத்தினால் நீர் ஆவியாதலை தடுப்பதன் மூலம் ஏரி, அணை, குளம் போன்ற நீர் நிலைகளில் உள்ள சேமிப்பை அதிகரிக்க முடியும் என்ற ஆராய்ச்சி 1960 களின் பின்பகுதியில் உலகம் முழுவதும் மிகப் பரவலான கவனத்தை பெற்றுள்ளது. பல்வேறு முறைகளில் முயன்று சாதக, பாதக அம்சங்களை ஆராய்ச்சி கட்டுரைகளாக பலரும் பிரசுரித்துள்ளார்கள். 

அவற்றில் நீரின் மேற்பரப்பில் மிதவைகளை ஏற்படுத்தி நிழல் தருதல் (Shading the Water Surface), சூரிய ஒளியினை எதிரொளிப்பு மூலம் நீருக்கு உள்ளே செல்லாமல் தடுத்தல் (Floating Reflective Covers), நீரின் மேற்பரப்பை தற்காலிக பாலிமர் போன்ற பொருட்களைக் கொண்டு மூடுதல் (Floating Vapor Barriers) என சூழலுக்கு ஏற்றவாறு பயன்படுத்தலாம். ஆனால் ஒவ்வொரு முறையிலும் சாதகமும், பாதகமும் கலந்தே உள்ளது. 

நம் தேவைக்கேற்ப சாதகங்கள் அதிகமுள்ள முறையினை நாம் பயன்படுத்தலாம். 

சமீபத்தில் 2015 ஆம் ஆண்டு நாசிக் நகரில் உள்ள இரண்டு பொறியியல் கல்லூரியில் இருந்து ஆராய்ச்சி கட்டுரை ஒன்றை ஐ.ஐ.டி யில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் சமர்பித்துள்ளார்கள் (https://www.researchgate.net/publication/288003519_Use_of_thermocol_sheet_as_floating_cover_to_reduce_evaporation_loss_in_farm_pond). நீர் நிலைகளில் தெர்மோகோல் அட்டைகளை மிதக்க விடுவதன் மூலம் எவ்வாறு சூரிய வெப்பத்தில் இருந்து ஆவியாவதை தடுக்கலாம் என்பதே அவ்வாராய்ச்சியின் நோக்கம் ஆகும்.

 
இரண்டு ஒரே மாதிரியான நீர் குட்டையினை ஆராய்ச்சிக்காக எடுத்துக் கொண்டதில் தெர்மோகோல் அட்டைகள் மிதக்கவிடப்பட்ட நீர்க் குட்டையானது திறந்த வெளியில் உள்ள நீர் குட்டையினை விட 64 மி.மீ நீரை ஆவியாகாமல் சேமித்து வைத்துள்ளது. இந்த ஆய்வினை 3 மாதத்திற்கு மார்ச் ‍முதல் ஜீன் 2015 ஆம் ஆண்டில் பரிசோதித்து பார்த்துள்ளார்கள். எளிமையாக  சொல்வதென்றால் 93 நாட்களில் 32% நீரை ஆவியாகாமல் தடுத்துள்ளார்கள். இந்த ஆய்வுக் காலத்தில் எதிர்பாரா விதமாக இடி இடித்தல் போன்ற இயற்கை நிகழ்வினால் தெர்மோகோல் அட்டைகள் சுக்கு நூறாக உடைந்து சிதறியுள்ளது. அந்த சூழலிலும் தெர்மோகோல் அட்டைகள் சிறப்பாக செயலாற்றி உள்ளது.

இப்படி ஒரு திட்டத்தினைத்தான் அமைச்சர் செல்லூர் ராஜீ நேரடியாக களத்தில் இறங்கி தொடங்கி வைத்துள்ளார். நான் மேலே சொன்னது போல் ஒவ்வொரு முறையில் சாதக, பாதகம் உள்ளது. அதே போல் மேற் சொன்ன ஆய்வானது சிறிய நீர் குட்டையில் அலைகள் அதிகம் இல்லாத சூழலில் செய்து பார்க்கப்பட்டது. ஆனால் மிகப்பெரிய ஏரி, அணை நீர்ப் பிடிப்பு பகுதியில் குறைந்தது 3ல் இருந்து 6 மாத காலம் 1 சதுர கி,மீ பகுதியில் பரிசோதித்து அதில் உள்ள சிக்கல்களை ஆராய்ச்சி செய்திருக்க வேண்டும். அது வெற்றியடையும் முன்பே பத்திரிக்கையாளர்களை கூட்டி பெரிய அளவில் விளம்பரம் செய்ய போய் இப்படி சங்கடப்பட்டு நின்று இருக்க வேண்டிய சூழல் அமைச்சருக்கும அவரது குழுவிற்கும் வந்திருக்காது.

இந்த ஒட்டு மொத்த திட்டத்தில் அமைச்சருக்குத்தான் நுட்பவியல் தெரியாது  ஆனால் இந்த குழுவில் இருந்த‌ மாவட்ட ஆட்சியர், மூத்த நீர் மேலாண்மை அதிகாரிகளுக்குக் கூடவா தெரியாது.

இதுதான் சாக்கு என ஒரு கூட்டம் பார்த்தாயா திராவிடர்களின் அறிவற்ற செயலை என்று மீம்ஸ் போட்டுக் கொண்டு திரிகிறது. உண்மையில் இந்த தேசத்தில் பரவி இருக்கும் மூடநம்பிக்கைகளை ஒப்பிடும் போது அமைச்சரின்  ஆர்வ மிகுதி செயல்  ஒன்றுமே இல்லை. 

ஏனெனில் சமூக வலைதளங்களில் நீங்கள் எப்படி சிரிக்கிறீர்களோ அப்படித்தான் ஒவ்வொரு நாளும் வாட்சப், முகநூலில் உள்ள எனது நட்பு வட்டத்தில் உள்ளவர்கள் "நம் முன்னோர்கள் முட்டாள்கள் அல்ல" என்று அனுப்பும் உட்டாலக்கடி பார்வேர்டுகளை வயிறு வலிக்க சிரித்துக் கொண்டே கடக்கிறேன். ஆகையால் அமைச்சரின் செயலை நக்கலடிக்கும் அளவிற்கு இந்த சமூகம் ஆகச் சிறந்த அறிவியல் நுட்பங்களை தரம் பிரித்து கொண்டாடும் தகுதியே இல்லை என்றுதான் சொல்வேன். 

இன்னொரு விசயத்தையும் சொல்லி விடுகிறேன். இது போன்று சிறிய அளவில் கள ஆய்வு செய்ய மத்தியில் இருந்து தமிழகத்தில் உள்ள பல்கலைக் கழகம், கல்லூரிகளுக்கு எவ்வளவு ஆய்வு நிதி கிடைத்துள்ளது, அதே நேரம் வட இந்திய கல்வி நிறுவனங்களுக்கு எவ்வளவு ஆய்வு நிதி கிடைக்கிறது என்ற பட்டியலை ஒப்பிட்டு பாருங்கள். உண்மையில் தமிழகத்தை இந்த நிலையில் வைத்திருக்கும் வட இந்திய அறிவியல் அரசியலுக்கென்று தனி மீம்ஸ் போட்டு நாம் தனியே சிரிக்க வேண்டி இருக்கும்.

தமிழகத்தில் உள்ள முது நிலை மாணவர்கள் தங்கள் பயிலும் காலத்தில் சிறிய அளவில் தங்கள் ஆய்வு திட்டத்தினை செய்து பார்க்க 10,000 ரூபாயை தமிழ்நாடு அறிவியல் மற்றும் நுட்ப மன்றம் உதவித் தொகையாக தருகிறது. இதனை கண்காட்சியாக தமிழக அளவில் நடத்தி சிறந்த திட்டத்திற்கு பரிசளிக்கிறார்கள். இந்த கண்காட்சியில் சிறந்த திட்டத்திற்கு பரிசும் அளிக்கிறார்கள்.  இக்கண்காட்சியில் கலந்து கொள்ள மாணவர்களுக்கு பயண உதவித் தொகை, தங்கும் வசதி, உணவு என்று எல்லா வசதியையும் தமிழக அரசு செய்து தருகிறது. முது நிலை பயிலும் மாணவர்கள் இரண்டாம் ஆண்டில் துவக்கத்தில் இந்த வாய்ப்பினை தவற விடாதீர்கள்.http://www.tanscst.nic.in/student.html

முகநூலில், வாட்சப்பில் நக்கல் அடிக்கும் கூட்டம் இது போன்ற கண்காட்சிக்கு உங்கள் குழந்தைகளை அழைத்துச் சென்று நேரில் காட்டுங்கள். 

சிறந்த மாணவர் ஆய்வு திட்டத்திற்கு தனியார் நிறுவங்கள் சிறிய அளவில் முதலீடு செய்து ஊக்குவிக்கலாம். தெர்மோகோல் மிதக்க விடும் திட்டங்கள் எல்லாம் இது போன்ற மாணவர்களின் எண்ணத்தில் உதித்தவைதான். இவர்களின் புதிய சிந்தனைகளை அலட்சியப்படுத்தாமல் ஊக்குவியுங்கள்.

வாட்சப் பார்வேர்டுகளை நம்பி ஒரு பெரும் கூட்டமே குட்டையில் விழுந்து கொண்டு இருக்கிறது. முதலில் இந்த குப்பையில் இருந்து வெளியே வாருங்கள். அமைச்சர் செல்லூர் ராஜீ வேண்டுமானால் ஆர்வ மிகுதியால் பிழை செய்திருக்கலாம். தமிழகத்தில் அடிப்படை ஆராய்ச்சிக்கென்று நேர்த்தியான திட்டம் பல உள்ளது. பெரும்பாலும் அவை மாநில நிதியில் இருந்தே செயல்படுத்த வேண்டிய அவல நிலையில் உள்ளோம் என்பதையும் இந்த நேரத்தில் சிந்திக்க வேண்டுகிறேன்.

கோடை காலத்தில் தாமதமாக செயல்பட்டு இருந்தாலும் நீர்பிடிப்புபகுதிகளில் உள்ள நீரை ஆவியாகாமல் தடுக்க வேண்டும் என்ற செயலாற்றிய தமிழக அரசுக்கு நன்றி. 

இனியாவது காலாம் தாழ்த்தாமல் முன் கூட்டியே விரைந்து செயல்பட்டு மக்களை காத்தருளுங்கள்.






No comments:

Post a Comment