Saturday 12 September 2015

 மாரியும் அதன் மூன்று குட்டிகளும் - 

A Tale of Mari and Three Puppies (ஜப்பானிய சினிமா)

இன்று காலையில் இருந்து வீட்டின் மேலே ஹெலிகாப்டர்கள் தொடர்ந்து பறந்த வண்ணம் இருக்கின்றன. கடந்த ஒரு வாரம் பெய்த மழையில் என் பகுதியில் இருந்து 100 கி.மீ தொலைவில் உள்ள இபராகி (Ibaraki) மாவட்டத்தில் நிறைய இடங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஜொசோ (Joso) என்னும் நகரம் முற்றிலும் நிர்மூலமாகி வரலாறு காணாத அழிவினை சந்தித்துள்ளது உள்ளது. 

தற்போது ஒரு லட்சம் பேர் வீட்டை இழந்து அகதிகளாக வெளியேறி உள்ளனர். இவர்களுக்கு தேவையான உதவிகளை தோக்கியோ நகரில் இருந்து எங்கள் பகுதி வழியாக ஹெலிகாப்டர் மூலம் தொடர்ந்து அரசு செய்த வண்ணம் உள்ளது.


கினு நதி (Kinugawa) உடைந்து வெள்ளத்தில் அடித்து செல்லப்படும் ஜொசோ நகர வீடுகள்



கினு நதி (Kinugawa) உடைந்து வெள்ளத்தில் அடித்து செல்லப்படும் ஜொசோ நகர வீடுகள்

ஜப்பானில்  வடக்கில் இருந்து தெற்காக காந்தோ (Kanto) சமவெளி வழியாக ஓடும் மிகப் பெரிய காட்டாறு "கினு" (கினுகாவா Kinugawa river). தற்போதைய வெள்ளப் பெருக்கில் இதன் கரைகள் உடைந்து  ஜொசோ (Joso) நகரமே வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது. இதனோடு வடகிழக்கு மாவட்டமான ஒசாகியில் சிபு நதியின் கரைகள் உடைந்து மிசாகி நகரமும் சிதிலமடைந்து உள்ளது

வீடுகள், கடைகள், கார் என மக்களின் எல்லா உடைமைகளும் முற்றிலும் அடித்து செல்லப்பட்டு  அங்கு வசிக்கும் மக்கள் வீட்டின் கூரைகள் மேல் ஏறி தப்பி உள்ளனர். அவர்களை மீட்கத்தான் நிறைய ஹெலிகாப்டர்கள் தோக்கியோ நகரில் இருந்து பறந்த வண்ணம் உள்ளன. 

இனி இந்த மக்களின் இயல்பு வாழ்க்கை எப்போது திரும்பும் என யாருக்குமே தெரியாது. அவசர கால முகாம்களில் தங்க வைக்கப்படும் இவர்கள் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு தங்கள் பகுதிகளுக்கு திரும்பி விடலாம். ஆனால் காலம் காலமாய் தாங்கள் சேமிப்பில் கட்டி வைத்த வீடுகள், உடைமைகள் யாவும் அழிந்து போய் முதலில் இருந்து தங்கள் வாழ்வினை துவக்க வேண்டும். 


காயாத வடுவைப் போல் ஜப்பானை சதாகாலமும் பயமுறுத்தி கொண்டிருப்பது இங்கு வரும் நில நடுக்கங்கள். ஆகையால் 24 மணி நேரமும் இங்குள்ள பள்ளிகள் பேரிடர் காலங்களில் மக்களுக்கு தேவையான உதவிகளை செய்யும் முகாம்களாக செயல்படும் வகையில் வைக்கப்பட்டுள்ளது. 

இன்று மீட்பு பணிக்காக பறந்த ஹெலிகாப்டர்களும், ஜொசோ நகரின் வெள்ளம் சூழ்ந்த வீட்டின் கூரையில் மேல் ஏறி மீட்பு ஹெலிகாப்டருக்காக காத்திருக்கும் தாத்தா, பாட்டி மற்றும் அவர் கையில் வைத்திருந்த வளர்ப்பு நாயும் நான் சமீபத்தில் பார்த்த ஜப்பானிய படம் ஒன்றை நினைவு படுத்தியது. 


இக்கட்டான சூழலிலும் தங்கள் வளர்ப்பு பிராணிகளை பிரிய மனமில்லாத ஜப்பானிய தம்பதியினர்

கடந்த 2011 ஆம் ஆண்டு ஜப்பானின் நிகாதா (Nigata) மாவட்டத்தில் சோஇட்சு (Chūetsu)  பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது  ஏற்பட்ட‌ உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட படம்  "மாரி தோ கொயினு நோ மோனோ கதாரி" (マリと子犬の物語-  A Tale of Mari and Three Puppies ). 





இப்படம் படம் வெளிவந்து பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது. ஆனால் இப்போது பார்த்தாலும் நம் மனது கலங்கி விடும். உண்மைக்கு வெகு அருகாமையில் இருந்து எடுக்கப்படும் புனைவு சினிமாக்கள் காலத்தினை கடந்து நிற்கும் என்பதற்கு இப்படமே சான்று. என்னதான் பேன்டசி சினிமாக்கள் பிரம்மண்டாத்தின் மூலம் நம்மை வேறு தளத்திற்கு அழைத்து சென்றாலும், மக்களின் வாழ்வில் இருந்து சொல்லப்படும் கதைகள்தான் நம் அடி ஆழ் மனதில் இருக்கும் இரகசியங்களை உடைத்தெறியும் வல்லமை பெற்றது.  இந்த படம் நிச்சயம அந்த வகையினை சார்ந்தது என்றே சொல்லலாம்.

வீடு திரும்பிக் கொண்டிருந்த ரியோடாவும் (Ryoda) அவனது தங்கை ஆயாவும் (Aya Ishikawa) தங்களை பின் தொடர்ந்த நிர்கதியற்ற ஒரு நாய் குட்டி ஒன்றினை  கண்டெடுக்கின்றனர். அந்நாய்குட்டியும்  அவர்களை தொடர்ந்து பின் வந்ததால் அதன் பால் இருவரும் ஈர்க்கப்பட்டு அதனை வீட்டுக்கு எடுத்து வருகின்றனர். 




ரியோடாவும், ஆயாவும்  தாயை இழந்து தந்தையின் அரவணைப்பில் தங்கள் தாத்தாவோடு மலையில் உள்ள‌ கிராமத்தில் வசித்து வருகின்றனர். ஆயாவின் அப்பாவிற்கு நாய் என்றாலே சுத்தமாக பிடிக்காது. அதனால் அந்த நாய்க்குட்டியினை யாருக்கும் தெரியாமல் வளர்க்கின்றனர். பின்னர்  ஒரு வழியாய் தங்கள் தாத்தாவை அன்பின் மூலம் சம்மதிக்க வைத்து அப்படியே போராடி அப்பாவையும் சம்மதிக்க வைக்கின்றனர். 

தாங்கள் கண்டெடுத்த நாய்க் குட்டிக்கு மாரி என பெயர் சூட்டுகிறாள் ஆயா. ஒரு வருடத்தில் மாரி மூன்று குட்டிகளை ஈன்று அவைகள் ஆயாவின் குடும்பத்தின் உறுப்பினர்களாகவே மாறி விடுகிறது. திடீரென்று ஒரு மாலைப் பொழுதில் கடுமையான மழையோடு கூடிய‌ நிலநடுக்கத்தில் ஆயாவின் வீடு முற்றிலும் சிதிலமடைந்து விடுகிறது. 

இதில் ஆயாவும் அவளது தாத்தாவும் வீட்டினுள் சிக்கி கொள்கின்றனர். அதிர்ஸ்டவசமாக ஆயாவின் தந்தையும், அவளது அண்ணனும் இதில் தப்பி விடுகின்றனர். வீட்டிற்கு வெளியே வேறொரு இடத்தில்  இருந்த அவர்கள் மீட்பு படை மூலம் அம்மாவட்டத்தில் உள்ள நகர்மன்றத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட முகாம்களுக்கு ஹெலிகாப்டர்கள் மூலம்  அனுப்பி வைக்கப்படுகின்றனர். முகாமில் இருக்கும் ரியோடாவிற்கு அன்று முழுவது தன் தங்கையும் தாத்தாவும் தப்பித்தார்களா? என தவிப்போடு முகாமில் உள்ளவர்களிடம் கேட்டு கொண்டு இருப்பான். 

வீட்டிற்கு வெளியே கட்டப்பட்ட மாரி தனது குட்டிகளோடு கத்தி கொண்டே இருக்கிறது. எப்படியாவது ஆயாவை காப்பாற்ற அது துடிக்கிறது. ஒரு வழியாய் தான் கட்டியிருந்த சங்கிலியினை அற்று எறிந்து விட்டு இடிந்த வீட்டின் உள்ளே நுழைய எத்தனித்து தோல்வி உறுகிறது (ஆட்டுக்கார அலமேலு படம் மிகைப்படுத்தல் இல்லை என்பது ஆறுதல்). ஒரு வழியாக அருகில் உள்ள மீட்பு படை வருவதை அறிந்து அங்கு சென்று அவர்களை சமிக்ஞை மூலம் அழைத்து வருகிறது. 

ஒரு வழியாய் ஆயாவும், கால்கள் உடைந்த நிலையில் அவளது தாத்தாவும் மீட்பு குழுவால் காப்பற்றப்பட்டு ஹெலிகாப்டரில் அனுப்பப்படுகிறார்கள். தவிர்க்க இயலாத சூழலில் மாரியும் அதன் மூன்று குட்டிகளையும் மீட்பு குழுவினர் கைவிட்டு விடுகின்றனர். ஆயா அவைகளையும் உடன் அழைத்து செல்ல கதறுகிறாள். ஆனால் மீட்பு படை காவலர் இயலாது என சொல்லி ஹெலிகாப்டரின் கயிறுகள் மேலே இழுக்கப்படுகிறது. இந்த காட்சியின பார்ப்பவர்கள் நிச்சயம் உடைந்து அழாமல் இருக்க முடியாது. 


பின்னர் தன் சகோதரனோடு ஆயா மீட்பு முகாமில் சேர்கிறாள். அவள் நினைவெங்கும் மாரியும் அதன் குட்டிகளுமே சுற்றி வந்தன. அவள் சாப்பிட மறுக்கிறாள். மீட்பு முகாமில் இருக்கும் அவளது தந்தையின் தோழியான தாதி ஒருவர் ஆயாவினை சமாதானப் படுத்துகிறாள். 


"மாரி தற்போது ஒரு தாய், ஒரு தாய்க்கு தன் குழந்தைகளை நன்கு கவனித்து கொள்ள தெரியும். ஆகையால் மாரியினை பற்றி கவலை கொள்ளாதே' என சொல்லி தேற்றுகிறாள்.  யாரும் அற்ற தனிமையில் ஒரு மலை மீது மாரி அதன் மூன்று குட்டிகளுக்கும் எப்படி ஒரு வார காலத்திற்கு உணவளிக்கிறது என்ற காட்சிகள் படம் பார்ப்பவர்களை நிச்சயம் கலங்கச் செய்யும்.

எல்லோரும் கைவிடப் பட்ட மாரியும் அதன் மூன்று குட்டிகளும் மீண்டும் ஆயாவின் குடும்பத்தினரோடு இணைந்ததா என்பதே க்ளைமாக்ஸ். 

படத்தின் நெடுக வரும் காட்சி அமைப்பில் ஜப்பானின் வழமையான கலாச்சாரம் பற்றி அறிய முடிகிறது. மலைக் கிராமத்தில் உள்ள மாடு பிடி விளையாட்டு பற்றிய காட்சிகள் புதிய தகவலாய் உள்ளது. ஆயாவின் தாய் ரியோடாவிற்கு இறுதியாக எழுதிய கடிதத்தினை அவ்வப்போது அவன் ஆயாவிற்கு வாசித்து காட்டுவான். அதில்  தங்கையினை நீதான் பத்திரமாக பார்த்து கொள்ள வேண்டும் என அவள் தாய் எழுதிய வரிகளை அவன் படிக்கும் போது அவன் முகம் சலனமற்று இருக்கிறது. ஆயாவோ கண்களில் கண்ணீரோடு அண்ணனை பார்ப்பாள். இது போன்ற நெகிழ்வான காட்சிகள் படம் நெடுகும் வழிந்தோடுகிறது. கூர்மையான வசனங்கள் நம் மனதை நிச்சயம் பிழியும். 







இப்படத்தினை பார்ப்பவர்களுக்கு ஜப்பானின் மீட்பு முகாம்களை பற்றி ஒரு பார்வை கிடைக்கும். இனி எப்போது வீடு திரும்புவோம் என்ற அம்மக்களது தவிப்பும், இழந்த வாழ்வினை மீண்டும் துவக்குவதில் உள்ள சிரமங்கள் ஆகியவை கதை மாந்தர்கள் வழியே சொல்லாமல் சொல்லி உள்ளார் படத்தின் இயக்குநர் ரியோச்சி இனொமொதா. 2007 ஆம் ஆண்டு வெளி வந்த இப்படம் பெரும் வசூலை குவித்தது. 



இப்படத்தினை கீழ்காணும் சுட்டியில் பார்க்கலாம். 
ஆங்கிலத்தில் சப் டைட்டில் இருப்பதால் படத்தின் எல்லா காட்சிகளையும் நம்மால் உள்வாங்கி கொள்ள முடியும். 

நேரம் இருந்தால் நிச்சயம் இப்படத்தினை பாருங்கள்.


(விசுவாசத்திற்கும், காத்திருத்தல் பற்றிய நம்பிக்கைக்கும் பெயர் போன ஒரு வளர்ப்பு நாய்க்கு ஜப்பானில் இன்று மக்கள் சிலை வைத்துள்ளனர். அதன் கதையினை இங்குள்ள பள்ளி மாணவர்களுக்கு பாடமாகவும் வைத்துள்ளனர். சிபுயா இரயில் நிலையத்தில் வைக்கப்பட்டிருக்கும் இந்நாயின் சிலை அருகே இன்றும் எண்ணற்ற காதலர்கள் தங்களது துணைக்காக காத்திருக்கின்றனர். தோக்கியோ நகரில் நண்பர்கள் சந்திக்கும்  ஒரு காத்திருப்பு புள்ளியாகவும் இன்றும் இருக்கிறது. அந்நாயினை பற்றி அடுத்த பதிவில் எழுதுகிறேன்)


No comments:

Post a Comment