Wednesday 8 March 2017


மகளிர் தின வாழ்த்துகள்!

வரலாற்றில் மகத்தான பக்கங்கள் பெண்களால் எழுதப்பட்டு இருக்கிறது. ஆனால் பெரும்பாலும் ஆண்களின் சாதனைகளே வெளி உலகிற்கு தெரிகிறது அல்லது தெரிய வைக்கப் படுகிறது.

உலக மக்கள் தொகையில் பாதிப் பேர் பெண்களாக இருக்கிறார்கள். பெரும்பாலும் அவர்கள் குடும்பத்தை மட்டுமே பராமரிப்பவர்களாய் பார்க்கப்படுகின்றனர். ஆனால் சமூகப் படிநிலை வளர்ச்சியில் பெண்களின் பங்கு ஆண்களுக்கு நிகரானது.

அறிவியல் மற்றும் நுட்ப துறைகளில் சாதித்த பெண்களைப் பற்றி நாம் மீள் வாசிப்பு செய்ய வேண்டி உள்ளது. தன் உழைப்பாலும், அன்பாலும் இவ்வுலகை தாங்கும் எல்லா பெண்களுக்கும் இனிய பெண்கள் தின வாழ்த்துகள்.

இந்த தினத்தில் கு.வி கிருஷ்ண மூர்த்தி அவர்கள் எழுதிய "அறிவியலில் பெண்கள், ஒரு சமூக வரலாற்றுப் பார்வை" என்ற புத்தகத்தை வாசிக்க பரிந்துரைக்கிறேன். (அடையாளம் பதிப்பு, ரூபாய் 280, சென்னை, பனுவல் புத்தக நிலையத்தில் இந்த புத்தகம் கிடைக்கும்)

இந்த நூல் அறிவியலையும் தொழில் நுட்பத்தையும் பாதித்த காரணிகளை வரலாற்றினூடே விளக்கி அவை பாலினப் பாகுபாட்டில் எந்த அளவிற்கு முக்கிய விசையாக செயல்படுகிறது என்பதை விவரிக்கிறது. இதன் மூலம் அறிவியலில் முகம் தெரியாப் பெண்கள், நன்கறியப்பட்ட பெண்கள், அறிவியலைப் பிரபலப்படுத்திய பெண்கள், ஆண்களுக்கு துணையாக இருந்த பெண்கள் என முன்னூறுக்கும் மேற்பட்ட பெண் அறிவியல் அறிஞர்களை அறிமுகம் செய்து வைக்கிறது.

நிச்சயம் பள்ளி, கல்லூரி, ஆராய்ச்சி துறையில் பணி புரிய விரும்பும் பெண்கள் என எல்லோரும் இதனை வாசிக்க வேண்டுகிறேன்.

நோபல் பரிசு வரலாற்றில் இது வரை 44 விருதுகளை பெண்கள் பெற்றுள்ளனர். இது நோபல் பரிசு பெற்ற ஆண்களை ஒப்பிடும் போது 12 மடங்கு குறைவு. இன்னும் பல லட்சம் பெண் ஆராய்ச்சியாளர்கள், எழுத்தாளர்கள், அமைதிக்காக போராடும் போராளிகள் என பெரிய வெளி பெண்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறது.

தமிழ்ச் சமூகத்தில் இருந்து ஒரு பெண்மணி நோபல் பரிசு பெறும் நாள் வெகு தொலைவில் இல்லை. அதற்காக உங்களை தயார் படுத்திக் கொள்ளுங்கள். வாழ்த்துகள்.












No comments:

Post a Comment