Monday 21 November 2016

நாட்டுக் கோழி உப்பு கண்டம் கறி (Chicken Uppu Kandam)

கரூர் பகுதிகளில் உப்பு கண்டம் கறி என்பது படு பிரசித்தம். திருவிழாவில் மீந்த பச்சை மாமிச கறியை சேமித்து வைக்க‌ உப்பு போட்டு காய வைத்து கருவாடு போல செய்யும் உப்புக் கண்டம் அல்ல. இது நாட்டுக் கோழி கறியை குறைந்த செலவு சாமான்கள் கொண்டு எளிமையாக உலர்ந்த கறி போல் மணக்க மணக்க செய்வது.

இம்முறை இந்தியா விடுமுறைக்கு சென்று இருந்த போது எப்போதும் போல் நண்பர்கள் அழைப்பு. பசுமையான தென்னந்த் தோப்பில் விறகு அடுப்பில் மண் மணத்தோடு நாட்டுக் கோழி உப்புக் கண்டம் சுவைக்கும் வாய்ப்பு வாய்த்தது.

செய்முறையினை எனக்காக பொறுமையுடன் செய்து காண்பித்த நாவல் பாலு அண்ணன் அவர்களுக்கு பெரும் நன்றி.

நீங்களும் வீட்டில் முயற்சித்து பாருங்கள். உப்புக் கண்டம் சுவைப் பிரியர்களுக்கு ஒரு எளிய வரப் பிரசாதம் என்றால் மிகையில்லை.

செய்முறை ‍ ஒரு கிலோ கறிக்கு
தேவையான பொருட்கள்:
நல்லெண்ணெய் 50 மில்லி
சீரகம் 25 கிராம் (தூளாக பொடி செய்தும் போடலாம், அல்லது அப்படியே பயன்படுத்தலாம்)
வர மிளகாய் 15‍ 20 (காரத்தை பொறுத்தது)
மஞ்சள் தூள், உப்பு (தேவையான அளவு)
நாட்டுக் கோழி 1 கிலோ

செய்முறை
நல்லெண்ணெயில் கடுகு, சீரகம், வர மிள்காய் போன்றவற்றை போட்டு நன்கு வதக்கிய பின் ஒரு கிலோ கோழிக்கறியை போட்டு தேவையான அளவிற்கு தண்ணீரை ஊற்றிக் கொள்ளவும். இதில் திட்டமாக மஞ்சள் தூள், உப்பு போட்டுக் கொள்ளவும். நன்கு கலக்கி கொதிக்க விடவும்

ஊற்றிய நீர் நன்கு கொதித்து சுண்டும் வரை கறியை வேக விடவும். இடையில் அவ்வப்போது கறியை கரண்டியால் சீரான இடைவெளிகளில் கலக்கி விடவும்.
அனைத்து தண்ணீரும் நன்கு சுண்டிய பின், கறி வெந்துள்ளதா என பார்த்து சூட்டில் இருந்து இறக்கி விடவும்

சுவையான உப்புக் கண்டம் கறி தயார்.

உப்புக் கண்டம் கறி எவ்வாறு செய்வாது என்ற செயல் முறையினை இந்த காணொளியில் காணலாம். (https://youtu.be/uVNwHulOHZc)



நீர் நன்கு ஊற்றி கொதிக்கும் போது

நீர் நன்கு ஊற்றி கொதிக்கும் போது

பாலு அண்ணன் செயல் விளக்கம்

நீர் நன்கு சுண்டிய பிறகு

உப்புக் கண்டம் கறி





No comments:

Post a Comment