Sunday 2 August 2015


சங்கொலி இதழில் எனது கட்டுரை


இனிய நண்பர்கள் தின வாழ்த்துகள்!

புதிய உலகிற்கான கதவுகள் நண்பர்கள் வழியே திறந்து கொண்டே இருக்கிறது. 

எப்போதும் பரபரப்பாகவே நண்பர்களோடு இருந்து விட்டு ஜப்பான் வந்த பிறகு ஏனோ ஒரு ஏகாந்த தனிமையினை அனுபவிக்க நேர்ந்து விட்டது. ஆள் அரவமற்ற ஒரு சிறிய கிராமத்தில் (Unga, Nodashi, Japan) தற்போது வசிக்கின்றேன்.  நான் பணி புரியும் தோக்கியோ அறிவியல் பல்கலைக் கழகத்தினை நூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்த கிராமத்தின் ஒரு சிறிய கால்வாயின் கரையோரம் கட்டி வைத்த தீர்க்கதரிசியினை பாராட்ட வேண்டும். இளைஞர்களை எப்போதாவது அரிதாய்தான் இந்த கிராமத்தில் பார்க்க முடியும். அப்படியென்றால் எனது சூழலை நீங்கள் கற்பனை செய்து கொள்ளலாம். எப்போதாவது, பணி நிமித்தம் தோக்கியோ நகருக்குள் பயணம் என்று தற்போதைய‌ பொழுது ஒருவாறாய் கழிகிறது. 

முக நூல் பல நேரங்களில் என் பொழுதுகளை தீன்று தீர்த்தாலும், உலகில் நான் பார்த்திராத பல நண்பர்களை எனக்கு அறிமுகப் படுத்தியது. அந்த வகையில் மார்க்கிற்கு பெரும் நன்றிகள். 

அன்றாடம் பார்க்கும் விசயங்களை அதன் பின் புலத்தினை தேடிப் படித்து எழுதி முக நூலில் பகிர்ந்து கொண்டு இருந்தேன். என் ஆய்வின் ஒரு பகுதி நேரம் இதில் செலவாகி கொண்டு இருந்தது. ஆனால், தொடர்ச்சியாக தாய்மொழியில் எழுதிக் கொண்டே இருந்ததால், கட்டுரைகளை எழுதும் விதத்தில் கொஞ்சம் நீக்கு போக்கு பிடிபட ஆரம்பித்தது.   சிறிய செய்தியாக இருந்தாலும் சுவாரசியம் கூட்டி சொல்லுதல், வாசிப்பவரை உள்ளே இழுத்துச் செல்ல தேவையான பொறியினை எழுத்தின் வழியே வலை விரித்தல், குறைந்த பட்சம் வாசிப்பவர்களுக்கு புதிய செய்தியினை பதிய வைத்தல், அவர்களின் நுட்ப அறிவினை தூண்டுதல் என எழுத்தின் பல இரகசியங்கள் பிடிபட ஆரம்பித்தது. ஆனால் இன்னும் இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து எழுதினால்தான் இலக்கண பிழைகளை முற்றாய் தவிர்க்க முடியும் என எண்ணுகிறேன். 

இப்போது என் ஆய்வுக் கட்டுரைகளை ஆங்கிலத்தில் வேறு கோணங்களில் எழுத ஒரு புதிய பிடி கிடைத்துள்ளது. தாய் மொழியில் நாம் எவ்வளவு பலமாக இருக்கிறோமே அந்த அளவிற்கு எல்லா மொழியின் லாகவமும் பிடிபடும் என நான் உணர்கிறேன். 

என் முகநூல் பக்கத்தினை படித்துப் பார்த்து விட்டு நான் அதிகம் நேசிக்கும் மிகச் சிறந்த பண்பாளர் திரு.வைகோ அவர்களின் உதவியாளர், அன்பிற்குரிய அருணகிரி அண்ணன் அவர்கள் முகநூல் வழியே தொடர்பு கொண்டு ஜப்பானில் உங்களது அனுபவத்தினை ஒரு கட்டுரையாக எழுதி கொடுங்கள் என்று கேட்டார். 

அதுவரை எந்த ஒரு எல்லையும் இல்லாமல் மனதில் தோன்றியவைகளை முகநூலில் எழுதிக் கொண்டு இருந்த எனக்கு அவர் சொன்னவுடன் எப்படி ஒரு தலைப்பிற்குள் எழுதி தருவது என யோசித்துக் கொண்டு இருந்த போது சரியாக இரண்டு ஆய்வுக் கட்டுரைகள் சமர்பிக்க வேண்டிய சூழலில் வேறு மாட்டிக் கொண்டு  இருந்தேன். ஒரு வழியாக‌,  இரண்டு மாதம் கால தாமதத்திற்கு பிறகுதான் அண்ணனிடம் எனது கட்டுரைகளை நான் அனுப்ப நேர்ந்தது. இடையில் உரிமையோடு ஞாபகமூட்டிக் கொண்டே இருந்தார். எப்படி எழுதி தர வேண்டும் என கேட்டபோது அவர் எழுதிய ஜப்பானில் அருணகிரி புத்தகத்தின் மின் நூல் பதிப்பினை எனக்கு அனுப்பி வைத்து மேலும் உற்சாகமூட்டினார். மேலும் தொடந்து எழுதுங்கள் அவற்றினை தொகுத்து ஒரு புத்தகமாக பதித்து விடலாம் என்று வழிகாட்டினார். 

நான் மட்டுமல்ல பல நண்பர்களை எழுத வைத்து தமிழுக்கு பல பயணக் கட்டுரைகளை கொண்டு வந்து கொண்டு இருக்கிறார் அருணகிரி அண்ணன். அந்த வரிசையில் தற்போது எனது ஜப்பானிய அனுபவங்கள் மதிமுக வின் அதிகார ஏடான சங்கொலி இதழில் தொடர் கட்டுரைகளாக இரண்டு வாரம் வந்துள்ளது. 

அருணகிரி அண்ணனின் வழிகாட்டலுக்கு பிறகு புதிய வலைப்பூக்கள் பக்கதினை தொடங்கி எனது கட்டுரைகளை தொகுக்க ஆரம்பித்தேன். நான்கு மாதத்தில் 70 கட்டுரைகள் எழுதி விட்டேன். இன்னும் 15 கட்டுரைகள் பாதி முடிக்கப்பட்ட நிலையில் உள்ளது. வலைப்பூக்கள் தொடங்கிய நான்கு மாதத்தில் எனது பக்கங்கள் ஏறத்தாழ 8000 முறை பார்க்கப்பட்டுள்ளது. 41 நாடுகளில் இருந்து 3082 நண்பர்கள் தொடர்ந்து எனது பக்கங்களை படிக்கின்றனர். இந்த சிறியவனின் எழுத்துகளை படித்து விட்டு முகநூல் வழியே உற்சாகமூட்டிய எனது நண்பர்களை அனைவருக்கும் எனது உளமார்ந்த நன்றிகள்.  

நான் வலைப்பூக்களில் எழுதும் இக்கட்டுரைகளுக்கு அண்ணன் அருணகிரி கொடுத்த உற்சாகம்தான் முதற்படி என்று சொல்ல வேண்டும்.

முகநூல் வழியே தங்களது நேரத்தினை செலவு செய்து எனது கட்டுரைகளில் உள்ள பிழைகளை நேரம் ஒதுக்கி  திருத்தம் செய்யும் பேராசிரியர் செல்வகுமார் ஐயா, மணி வண்ணன் ஐயா உள்ளிட்ட சான்றோர் மக்கள் பலருக்கும்  எமது நன்றிகள்.

நண்பர்களுக்கு சங்கொலி இதழின் இணைய சுட்டிகளை இணைத்துள்ளேன். 

Part -1:


Part-2:










1 comment:

  1. மூன்றாம் பாகத்தின் இணைப்பு சுட்டி கிடைக்குமா ...?

    ReplyDelete