Monday 31 August 2015

சூரிய மின் ஆற்றலில் செயல்படும் மருந்தகங்கள்
- Solar powered pharmaceutical shops 

அவசர காலங்களில் மருந்தகங்களின் (pharmacy) பங்கு மிகவும் இன்றியமையாதது. சொல்லப்போனால் மருத்துவமனைகளுக்கு நிகரான பொறுப்புணர்வுடனும், அறத்தின் அடிப்படையிலும் இயங்கும் பகுதி என்பதால் மருந்தகங்களை நாம் நன்றி உணர்வுடனேயே பார்க்க வேண்டி இருக்கிறது. 

என் நினைவிற்கு தெரிந்த வரையில் பல இடங்களில் மருந்தகங்களை அடைக்கச் செல்லும் நேரத்திலும் யாரேனும் ஒருவர் அத்யாவசிய மருந்துகள் கேட்கும் போது சங்கடமே படாமல் கடையினை திறந்து மருந்து எடுத்துக் கொடுக்கும் நல்ல மனிதர்கள் பலரை பார்த்திருக்கின்றேன். 

சில மருந்துகள் குறிப்பிட்ட தட்பவெப்ப நிலையில் (குளிர் நிலையில்) பாதுகாக்கப் பட வேண்டி இருக்கும். ஆனால் மின் வெட்டு பிரச்சினையினால் குளிர் சாதன பெட்டிகளை நீண்ட நேரம் இயக்க முடியாமல் போனால் அம்மருந்துகள் வீணாகி விடும். இதன் காரணமாகவே எல்லா மருந்தகங்களிலும் அத்யாவசிய மருந்துகள் கிடைக்கும் எனச் சொல்ல முடியாது. 

நம் ஊரில் மருந்துசீட்டுகளை காண்பித்து எல்லா மருந்தகங்களிலும் அம்மருந்தினை பெறலாம். அதிலும் அக்குறிப்பிட்ட மருந்தினை அப்படியே தயாரிப்பு நிறுவனத்தின் அட்டைகளிலேயே வழங்குவார்கள். மருந்து எப்படி சாப்பிட வேண்டும் என்பதனை மருந்தாளுநர்கள் (pharmacist) அல்லது மருந்தகங்களின் உரிமையாளர்கள் வாய் மொழியாக சொல்வார்கள். அதன் பின் விளைவு (side effect) அல்லது காலாவதி (expiry) ஆகியவற்றினை பெரும்பாலும் மருந்துவாங்குபவர்தான் அம்மருந்து அட்டையின் பின்புறம் அச்சிடப்பட்டுள்ள தகவலில் இருந்து படித்து தெரிந்து கொள்ள வேண்டும். 

ஜப்பானில் கூடுதலாக இன்னும் ஒரு பிரச்சினை உள்ளது. முறையான மருத்துவரின் பரிந்துரைக்கப்பட்ட ஆய்வு சீட்டு இல்லாமல் இங்கு மருந்து வாங்க முடியாது. அவ்வாறு வாங்கச் செல்லும் போது வாங்கும் நபருக்கு ஒரு மருந்து புத்தகம் என்று பிரத்யோகமாக வழங்கப்படும். அதில் நீங்கள் வாங்கிய மருந்து பற்றிய தகவலையும், அம்மருந்தினால் ஏற்படும் பக்க விளைவுகளையும் அச்சிட்டு ஒட்டி விடுவார்கள். நீங்கள் அப்புத்தகத்தினை தொடர்ந்து பயன்படுத்திக் கொள்ளலாம். 

 Pharmacy information book.
 Pharmacy information book.

Pharmacy information book.

முக்கியமான ஒன்று, ஒரு முறை மருந்து வாங்கியவுடன் அம்மருந்து சீட்டு காலாவதி ஆகிவிடும். அதனை கொண்டு மறு முறை மருத்துவரிடம் செல்லாமலேயே வாங்கலாம் என நினைத்தால் நடக்காது. இதனால் தேவையற்ற முறையில் தன்னிச்சையாக நோயாளிகள் மருந்து சாப்பிடப் படுவது தடுக்கப்படுகிறது. 


மேலும் மாத்திரை தயாரிக்கும் நிறுவனங்களது அட்டைகளில் நேரடியாக கொடுக்க மாட்டார்கள். உங்களுக்கு தேவைப்படும் மாத்திரகளை பிரத்யோக சிறு பைகளில் இட்டு மாத்திரை பெயர் மற்றும் நோயாளியின் பெயர் ஆகியவற்றினை ஒவ்வொரு வேளைக்குமாக பிரித்து அச்சிட்டு தருவார்கள். பார்ப்பதற்கு பாக்கு அட்டை சரம் போல இருக்கும். 



Pills packing role printed with patient/user name

சரி விசயத்திற்கு வருகிறேன். இப்படி மாத்திரைகளை பிரத்யோகமாக அச்சிட்டு சீல் செய்து தருவதற்கும், மருந்து சீட்டுகளை அச்சிடுவதற்கும், மருந்தகங்களில் எரியும் விளக்குகள் என எல்லா அடிப்படை மின் தேவைகளையும் தற்போது சூரிய மின் சக்தியின் மூலம் சமாளிக்க ஆரம்பித்து விட்டார்கள். 

என்னதான் ஜப்பானில் மின் வெட்டு பிரச்சினை என்பது அறவே இல்லை என்றாலும், நில நடுக்கம் (earthquake) போன்ற பேரிடர் காலங்களில் ஏற்படும் மின் வெட்டின் போது சமாளிக்கும் வகையில் தற்போது சூரிய மின் சக்தியின் மூலம் இயங்கும் மருந்தகங்களை ஒரு சில இடங்களில் ஆரம்பித்து விட்டார்கள். 

நான் வசிக்கும் நோடா (Nodhshi) நகர் மன்ற பகுதியில் இருக்கும் கோபாரி (Kobari Hospital) பொதுமருத்துவமனை அருகே உள்ள சகுரா மருந்தகத்தின் (Sakura Pharmacy) கூரைப் பகுதியில் சோலார் பேனல்களை பெரிய அளவில் நிறுவி மணிக்கு சராசரியாக 35 கிலோவாட் மின்சாரத்தினை பெறுகிறார்கள். இதன் மூலம் மருந்துகள் பாதுகாக்கப்படும் குளிர்சாதனப் பெட்டிகள், மற்றும் இதர தேவைகளை சூரிய மின் சக்தியின் மூலம் சமாளிக்கிறார்கள். 

ஒரு மணி நேரத்திற்கு எவ்வளவு சூரிய மின் சக்தி பெறப்படுகிறது. அதற்கு இனையாக எவ்வளவு கார்பன் டை ஆக்சைடு வாயு வழமையான மின் உற்பத்தி முறையின் (power generation from fossil sources) போது வெளியேறும் என்ற தகவல்களை மருந்தகத்தில் வைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் திரையில் காணலாம். இத்தகவலானது, சூரிய மின் சக்தி உற்பத்தியினை நேரடியாக கண்காணிக்கும் மென்பொருளின் மூலம்  கிடைக்கப்பெறுகிறது.    மேலும் ஒரு மாதத்திற்கு எவ்வளவு மின் உற்பத்தி செய்யப்படுகிறது போன்ற ஒப்பீட்டு வரைபடங்களும் இந்த மென்பொருளில் காண்பிக்கப்படுகிறது. 


Solar online power monitoring chart.




Solar online power monitoring display


மருந்தகங்களுக்கு வரும் குழந்தைகள், பெரியவர்கள், பெண்கள் என பொது மக்கள் நேரடியாக இந்த சூரிய மின் சக்தியின்  உற்பத்தியினை தெரிந்து கொள்வதன் மூலம் சூரிய மின் சக்தியினைப் பற்றிய விழிப்புணர்ச்சி பெரும் அளவில் முன்னெடுக்கப்படுகிறது. 


நம் ஊரிலும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், மருந்தகங்களில் இது போன்று கூரைகளில் சோலார் பேனல்களை நிறுவி அவசர காலத்திற்கான மருந்து சேமிப்பிலும், அறுவை சிகிச்சை அரங்கில் தேவைப்படும் மின் ஒளிக்கும், அவசர சிகிச்சை பிரிவில் இயங்கும் மானிட்டர் கருவிகளின் செயல்பாட்டிற்கும் சூரிய மின்சக்தியினை தாராளமாக பயன்படுத்தலாம்.

1 comment: