Monday 30 November 2015


கீழை வானில் உதித்த தமிழ் சுடர் - பேராசிரியர் நொபுரு கராசிமா (Great Tamil Scholar Prof. Noburu Karashima, Japan)

உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் மேனாள் தலைவரும் (1989-2010), தோக்கியோ பல்கலைக் கழக வரலாற்று துறையின் ஓய்வு பெற்ற பேராசிரியருமான நொபுரு கரசிமா கடந்த வாரம் நவம்பர் 26 ஆம் திகதி இம்மண்ணுலுக வாழ்வை நீத்தார்.
பேராசிரியர் கராசிமா அவர்கள் ()ப்பான்- இந்திய மொழி, வரலாறு குறித்த ஆராய்ச்சியின் முன்னோடி ஆவார். குறிப்பாக திராவிட மொழி வரலாறு குறித்த ஆழமான ஆராய்ச்சியினை மேற்கொண்டவர். தமிழ் மொழியின் மீது தீராத காதல் கொண்ட இப்பெருமகனார் தமிழில் சரளமாக பேசும் ஆற்றல் பெற்றவர்
இந்தியாவின் உயர்ந்த அங்கீகாரமான பத்ம சிறி விருதினை பேராசிரியர் கரசிமா அவர்களுக்கு நம் முன்னாள் பாரத பிரதமர் மன்மோகன் சிங் அவர்களே தோக்கியோவில் நேரில் சந்தித்து வழங்கினார் என்பதில் இருந்து அவரின் மேன்மையினை நாம் அறியலாம்.
 இத்தையக பெருமை வாய்ந்த மாமனிதரின் ஆன்மா தமிழ்த் தாயின் மடியில் உறங்க சென்று விட்டது. அன்னாரது இறுதி புகழ் அஞ்சலியில் உலக தமிழர்கள் சார்பாக நேற்றைய பொழுதில் ஜப்பான் வாழ் தமிழர்கள் கலந்து கொண்டனர்

இவர்களை ஒருங்கிணைக்கும் பொறுப்பினை ஜப்பானில் இருந்து இயங்கி வரும் முழுமதி அறக்கட்டளை ஏற்று அன்னாருக்கு கீர்த்தி அஞ்சலி செலுத்தியது. பேராசிரியரின் பூத உடலை ஜப்பானியர்களும், தமிழ் அன்பர் பெருமக்களும் சுமந்து வந்து அவருக்கு பிரியாவிடை வழங்கினார்கள்.
இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் உலகெங்கும் இருந்து பேராசிரியர் கராசிமா அவர்களுக்கு வந்திருந்த இரங்கல் செய்தி வைக்கப்பட்டு இருந்தது. குறிப்பாகபேராசிரியர் அவர்களோடு இணைந்து பணிபுரியும் டாக்டர்.சுப்பராயலு அவர்களின் இரங்கல் கடிதம் வாசிக்கப்பட்டது.

தமிழகத்தில் இருந்து இரங்கல் செய்தி அனுப்பியிருந்த மதிப்பிற்குரிய திரு வைகோ, திரு பழ நெடுமாறன் ஐயா ஆகியோரது இரங்கல் செய்தி பேராசிரியர் கராசிமா அவர்களின் குடும்பத்தினரிடம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து தமிழ் நண்பர்களுக்கும் எமது நன்றிகள். பேராசிரியர் கராசிம அவர்கள் விட்டு சென்ற ஜப்பானிய தமிழ் மொழி இடையிலான கலை, கலாச்சார ஒற்றுமைகள் குறித்த ஆய்வினை தொடர்ந்து முன்னெடுப்பதே நாம் அவருக்கு செய்யும் உண்மையான அஞ்சலியாக இருக்க முடியும்.
பேராசிரியர் கராசிமா அவர்களின் புகழ் தமிழ் நெஞ்சங்களின் என்றும் நிலைத்து இருக்கும்.


பேராசிரியர் நொபுரு கரசிமா அவர்களின் இறுதி அஞ்சலி நிகழ்வு

பேராசிரியர் நொபுரு கரசிமா அவர்களின் இறுதி அஞ்சலி நிகழ்வு

பேராசிரியர் நொபுரு கரசிமா அவர்களின் இறுதி அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்ட ஜப்பான் வாழ் தமிழ் நண்பர்கள்.

பேராசிரியர் நொபுரு கரசிமா அவர்களின் இறுதி அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்ட ஜப்பான் வாழ் தமிழ் நண்பர்கள்.

பேராசிரியர் நொபுரு கரசிமா அவர்களின் இறுதி அஞ்சலி நிகழ்வு





பேராசிரியர் நொபுரு கரசிமா அவர்களின் மனைவி திருமதி  தகாகோ கராசிமா அவர்கள்





--------------------------------------------------------

முழுமதி அறக் கட்டளையின் ஒருங்கிணைப்பாளர் திரு அருள் அவர்கள் பேராசிரியரின் இறுதி அஞ்சலி நிகழ்வினை பற்றி தந்திருக்கும் செய்தியினை கீழே பகிர்ந்துள்ளேன்.

கடந்த நவம்பர் 26 ஆம் தேதி உயிர்நீத்த ஜப்பானிய தமிழ் வரலாற்று ஆய்வாளர் பேராசிரியர் நொபொரு கரசிமா அவர்களின் இறுதிச்சடங்கு இன்று(நவம்பர் 29) மதியம் 1 மணி அளவில் ஜப்பான் காமகுரா நகரில் நடைபெற்றது.

புத்தமத முறைப்படி நடைபெற்ற இறுதிச் சடங்கில் பல ஜப்பான் வாழ் தமிழர்கள் பங்கேற்றனர். நொபொரு கராசிமா அவர்களின் மறைவிற்கு பலவேறு இடங்களில் இருந்து இரங்கல் கடிதம் வந்திருந்தது, அவர்களோடு இணைந்து பணிபுரியும் டாக்டர்.சுப்பராயலு அவர்களின் இரங்கல் கடிதம் வாசிக்கப்பட்டது, நொபொரு கரசிமா அவர்களின் முதல் மாணவரும் கடைசிவரை அவரின் ஆய்வுகளில் இணைந்து பணிபுரிந்த முனைவர் மிட்சுசிமா அவர்கள் ஐயா உடனான கடைசி நிமிடங்களை பகிர்ந்துகொண்டார், கடைசிவரை நம்பிக்கையோடு தான் செய்துபந்த பணியில் சிரத்தையுடன் ஈடுபட்டிருந்தத்தை விவரிக்கும் போது நெஞ்சம் கனத்தது.

இறுதியாக பேசிய கராசிமா நொபோரு அவர்களின் இணையர் திருமதி. தகாகோ கராசிமா அவர்கள் தன் கணவர் குறித்து, அவர் ஈடுபட்டிருந்த பணியில் எப்போதும் ஆர்வத்துடனும் உற்ச்சாகத்துடனும் செயல்பட்டார், பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டபோதும் எதற்கும் மனம் தளராமல் ஒவ்வொரு பிரச்சனையாக எதிர்கொண்டதன் மூலம் அவர் வெற்றி கண்டார் எனவும், காய்ச்சல் வந்து மருத்துவனையில் சேர்க்கும் போது இது வழக்கம்போல் வரும் இன்னுமொரு காய்ச்சல் எனவும் , இவ்வளவு சீக்கிரம் நம்மைவிட்டு பிரிவார் என நினைத்துபார்க்கவில்லை எனவும் தெரிவித்தார்.

திருமதி.தகாகோ கராசிமா அவர்களும் தமிழ்/தமிழர் குறித்து பல புத்தகங்கள் எழுதியவர். கராசிமா அவர்களுக்கு மூன்று மகன்கள் மற்றும் 3 பேரக் குழந்தைகள் உள்ளனர் .

திரு நொபொரு கராசிமா அவர்கள் குடும்பத்தாரிடம் அய்யா.திரு.பழ.நெடுமாறன் மற்றும் அண்ணன் .திரு.வைகோ அவர்களின் இரங்கல் கடிதங்கள் ஒப்படைக்கப் பட்டன .


மேலும் அய்யா .கரசிமா அவர்களின் சடலத்தை ஒரு புறம் ஜப்பானியரும் மறுபுறம் தமிழர்களும் சுமந்து சென்று ஊர்தியில் ஏற்றினர். திருமதி.தகாகோ கராசிமா இறுதி சடங்கில் கலந்து கொண்ட தமிழர்கள் அனைவருக்கும் தமிழில் நன்றி கூறினார். இன்றைய இறுதி சடங்கில் கலந்து கொண்ட தமிழர்கள் அனைவரையும் ஒருங்கிணைக்கும் பணியை முழுமதி அமைப்பு ஏற்றிருந்தது

------------------------------------------------
புகைப்படங்கள் : அருள், முழுமதி அறக் கட்டளை

No comments:

Post a Comment