Thursday 25 August 2016

ஹைக்கூ கவிதை  



ஹைக்கு என்பது ஜப்பானிய மொழியில் காணக் கிடைக்கும் கவிதை வடிவங்களுல் ஒன்று. பெரும்பாலும் இயற்கையையும், காதலையும் சொல்லும் இந்த கவிதை வடிவம் மிகச் சிறியது (17 வார்த்தைகள்; முதல் அடி 5, இரண்டாம் அடி 7, மூன்றாவது அடி 5). இந்த ஹைக்கூ வடிவம் பெரும்பாலும் ஜென் மன நிலையில் இருந்து எழுதப்படுபவை. ஒரு காட்சியலை  கொண்டு தத்துவியலை உணர்த்தும் படி அழகாக நறுக்கு தெறித்தாற் போல் சொல்பவை. 

ஜப்பானிய‌ ஹைக்கூ கவிதை வடிவம்  1600 ஆம் ஆண்டின் மத்திய கால கட்டத்தில் ஹொக்கு  (Hollu) எனப்படும் மரபு கவிதை வடிவில் இருந்து பிறந்தது. பாசோ  ( Matsuo Bashō 1644-1694), சிகி (Masaoka Shiki 1867-1902) ஆகியோர் ஹைக்கூ வடிவில் மிகப் பிரபலமாக அறியப்பட்டவர்கள். பின்னர் 20 ஆம் நூற்றாண்டில் துவக்கத்தில் ஹைக்கூ ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டது.

தமிழில் ஹைக்கு வடிவத்தை பின்பற்றி தமிழில் நிறைய கவிதைகள் தற்போது பரவலாக எழுதுகிறார்கள். இதனை இங்கே அறிமுகப்படுத்தி வைத்த பெருமை கவிக்கோ அப்துல் ரகுமான் ஐயா அவர்களையே சாரும்.

சமீபத்தில் இயக்குநர் லிங்கு சாமி அவர்கள் எழுதிய "செல்பி எடுத்துக் கொள்கிறது மரம் - லிங்கு 2" என்னும் கவிதை தொகுப்பினை வேடியப்பன் அவர்களின் டிஸ்கவரி புக் பேலஸ் வெளியிட்டுள்ளது.


இந்த புத்தக வெளியீட்டு விழா இயக்குநர் கெளதம் மேனன் அவர்கள் அலுவலகத்தில் முன்னனி இயக்குநர்கள், எழுத்தாளர்கள் சூழ மிகச் சிறப்பாக எளிய முறையில் நடந்துள்ளது.

வழமையான புத்தக வெளியீட்டு விழாவில் புத்தகத்தை பற்றி ஒரு வரி கூட படிக்காமல் வந்து கழுத்தறுக்கும் எரிச்சல்கள் இல்லாமல் எல்லாருமே மிக அருமையாக கவிதை புத்தகத்தை பற்றி திறனாய்வு செய்து பேசினார்கள்.

கவிக்கோ ஐயா, அண்ணன் அறிவு மதி, பேரா. கு. ஞானசம்பந்தன், எஸ்.ரா, நடிகர் பார்த்திபன், யுக பாரதி, விவேகா, நெல்லை ஜெயந்தா, வெண்ணிலா, இயக்குநர் மிஸ்கின், வசந்த பாலன்,நீயா நானா கோபிநாத், இயக்குநர் ராஜீ முருகன், நலன் குமாரசாமி என தமிழ் சூழலின் பெரிதும் அறியப்பட்ட‌ ஆளுமைகள் பலரும் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.



இந்த கவிதைப் புத்தகம் முழுவதும் ஹைக்கூ கவிதைகளால் ஆனது. ஒரு ஜென் மனோநிலையில் எழுதியதாக கவிஞர் குறிப்பிடுகிறார்



இதில் மகிழ்ச்சியான விசயம் என்னவென்றால் ஜப்பானிய ஹைக்கூ கவிதைகளை தமிழ் கவிதை உலகிற்கு அறிமுகப்படுத்தி வைத்ததோடு தொடர்ந்து தன் அற்புதமான ஹைக்கூ கவிதைகளால் அதனை நம்மிடம் விரிவுபடுத்திய கவிக்கோ ரகுமான் ஐயா தலைமை தாங்கியது இன்னும் மேன்மை.


இந்த விழாவில் ஒரே வருத்தம், இந்த கூட்டணியில் எப்போதும் இவர்கள் உடன் இருக்கும் நா.முத்துகுமார் இல்லை. ஒருவேளை அவர் அந்த சூழலில் வெளியூர் போய் விட்டாரா என தெரியவில்லை.ஆனால் அவரது மறைவிற்கு பிறகு அவர் இந்த விழாவில் கலந்து கொண்டு பேசியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்றே தோன்றுகிறது.



இந்த விழாவின் காணொளி யூடியூப்பில் கிடைக்கிறது. முக்கியமாக, கவிக்கோ ஐயா, அறிவுமதி, எஸ்.ரா மற்றும் யுக பாரதி அவர்களின் உரை அருமையாக இருந்தது.



அவசியம் காணுங்கள்



------------------------------------
விழாவின் கவிதை வாசிப்பில் இருந்து ஒரு சில கவிதை வரிகள்

பதித்த
எல்லா தடங்களும்
அடுத்த
அலை வரைதான்
************
ஒரு மரத்தை
சாய்த்துத்தான்
இந்த வீணை
செய்யப்பட்டிருக்கிறது
ஒரு முறை மீட்டு
ஒரு வனம் உருவாகட்டும்
**************
சட்டென எதையாவது
உணர்த்தி விட்டு போகிறது
பறவையின் நிழல்
***********************
குழந்தைகள்
விளையாடும் இடத்தில்
பழத்தை நழுவ விடுகிறது
அணில்
*****************
அடையாளத்துகாக‌
தழும்பை காட்டும் போதெல்லாம்
நினைவில் வருகிறார்கள்
கவிதாவும், கணக்கு வாத்தியாரும்
*********************
நிலவொளியில் மயானம்
அமைதியாய் வெட்டியான்
எங்கோ
உதிர்ந்து கொண்டிருக்கிறது
ஒரு பூ
*********************

நீங்கள்
ஒரு மரம்
வைக்கும் போது
ஒரு புத்தனையும்
வரவேற்கிறீர்கள்
***************


இயக்குநர் லிங்குவிற்கு அற்புதமாக ஹைக்கூ கவிதை கை வருகிறது. தொடர்ந்து எழுத வாழ்த்துகள். இதனை வெளியிட்ட வேடியப்பன் அவர்களுக்கும் எமது வாழ்த்துகள்.




No comments:

Post a Comment