Sunday 3 May 2015

சுஜாதா - வாசிப்பு உலகின் மந்திர திறவு கோல்

என் நினைவில் எட்டிய வரை, 90 களில் தூர்தர்சனில் ஒளிபரப்பாகிய "என் இனிய இயந்திரா ' தொடர் நாடகம் மூலம்தான்  எழுத்தாளர் சுஜாதா எனக்கு அறிமுகம் ஆனார். அப்போது எனக்கு பத்து வயது இருக்கும் என எண்ணுகிறேன். அந்த பேசும் நாய் 'ஜீனோ' கதாபாத்திரம் மட்டும் அப்படியே அவரின் ஆளுமையாக என் மனதில் தேங்கி நின்று விட்டது. ஆனால் திடீரென தோன்றும் ஒரு பிம்பம் எப்படி மறைந்தது மீண்டும் எப்படி தோன்றியது என அதற்கு மேல் ஒன்றும் புரியவில்லை.

அதன் பிறகு கல்லூரியில் (1997-2000) இளம் நிலை இயற்பியல் படிக்கும் போது என் இனிய இயந்திராவை வாசிக்கும் அனுபவம் கிட்டியது. சற்றே அதில் பேசப்பட்ட அறிவியலும், அரசியலும் கொஞ்சம் புரிந்தது. ஆனாலும் அந்த advanced science content கொஞ்சம் மிரட்டலாகவே இருந்தது.இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கொரியாவில் வசித்த போது மீண்டும் அந்த நாவலை படித்தேன். அப்போதுதான் அவர் பேசுகிற 'ஹாலோகிராம்' மேட்டரும், பாலினாமியல் கணக்கீடுகளும் நன்கு புரிய ஆரம்பித்தன.. வேறு வேறு காலங்களில் என்னை மீண்டும் மீண்டும் என்னை வாசிக்க வைத்த சுஜாதாவின் இரகசியம் அவரின் எளிமையான எழுத்துகளில் ஒளிந்திருந்தது. சுஜாதா சொல்லிய அறிவியல் புனைவு யாவும் அப்போது தமிழ் சமூக சூழலில் பெரும்பாலும் அறிந்திறாத ஒன்று. மேற்கத்திய அறிவியலின் மீதான அவரது தீராத வேட்கைகள் தமிழின் புதிய எழுத்துச் சிந்தனைகளாக மிளிர்ந்தன.

இடையில் என் வளரிளம் பருவத்தில் உயர் நிலைப் பள்ளி படிக்கும் போது ஆனந்த விகடனை விடாமல் வாசிக்கும் பழக்கம் இருந்தது.  அப்போது ஆனந்த விகடனில் வந்து கொண்டிருந்த சுஜாதாவின் "கற்றதும் பெற்றதும்", பிறகு "மதனின் கேள்வி பதில்கள்", பின்னர் அந்த வயதிற்கே உரிய ஆர்வம் தேங்கிய காதல் தொடர்கதையும் (ஒற்றையடி காதல் பாதை - மலரோன்) எனது விருப்பத்திற்குரிய வாசிப்பாய் இருந்தது. நான் லீனியர் வடிவத்தில் வந்த சுஜாதாவின் கற்றதும் பெற்றதும்  என்னை அவரிடம் வெகு நெருக்கத்தில் கொண்டு சென்றது.

எனது வாசிப்பு உலகில் அதி தீவிர தேடலை துவக்கிய புள்ளி சுஜாதா என்றுதான்  சொல்வேன். ஆண்டாள் பாசுரம் தொடங்கி, ஆழ்வார்கள் அருளிச் செய்த நாலாயிரம் பாடல்களை review abstract வடிவத்தில் கதை போல் சொல்லி தருவார். சங்க இலக்கியங்களின் மீதான பயம் மெதுவாய் போகியது. அவருக்கு பிறகு எளிய நடையில் சங்க இலக்கியக்களை எழுதுவதை தற்போது பார்க்க இயலவில்லை. அதே தொடரில்தான் பிற்பாடு யூடியூப்பினை எனக்கு அறிமுகம் செய்தார். அவர் எழுதியது எல்லாமே சமகால இலக்கியவாதிகளால் ஏற்றுக் கொள்ள முடியாத இலக்கியங்களை அவர் தொடர்ந்து படைத்துக் கொண்டிருந்தார். ஏனெனில் அவரது எழுத்துகள் எளிமையின் வடிவமாக, ஒரு பேருந்து பயணத்திலோ அல்லது காத்திருக்கும் நேரவெளியிலோ வாசித்து முடித்துவிட கூடியதாக இருந்தது.. ஆனால் அந்த வாசிப்பிற்கு பிறகு அவர் எழுப்பும் கேள்விகள் மிகப் பலமானவை. சுஜாதாவின் எழுத்து வசீகரிக்கும் ஆனால் எவரையும் அவரிடத்திலேயே தேங்கி விட அனுமதிக்காது அதுதான் அவரது பலமும் கூட.

தற்போதைய சூழலில் இலக்கியவாதிகள் என அறியப்படுபவர்கள் அவர்கள் எழுத்துகளை மட்டுமே வாசிக்கவும் அதனையே தொழவும் செய்ய பெரும் கைதட்டும் சர்க்கஸ் கூட்டத்தினை உருவாக்கி கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு நிச்சயம் சுஜாதாவின் எழுத்துகள் சவாலானவை. அவர் செய்ததை இவர்களால் ஒரு போதும் செய்ய இயலாது.



Writer Sujatha

சுஜாதா மிக அழுத்தமாக சொன்னார் "எளிமையாக எழுதுவதுதான்  மிகக் கடினமான ஒன்று'. அந்த ஒன்றுதான் எனது ஆராய்ச்சி வாழ்வில் நான் எழுத நினைக்கும் கட்டுரைகளுக்கு பெரும் ஆதர்சனமாக இருக்கிறது.

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் சுஜாதா சார்.

(இதை எழுதி முடிந்தவுடன் சிறிய நிலநடுக்கம் (ரிக்டர்-4) ஒன்று என் அறையினை கவ்விப் போனது ஏனோ தற்செயலானதாய் நினைக்கவில்லை)

No comments:

Post a Comment