Tuesday 30 June 2015


பசுமை நடை 


 தொடர்ச்சியான அலுப்பூட்டும் ஆய்விற்கு நடுவே கொஞ்சம் இளைப்பாறலாம் என இன்று மதியம் எங்கள் தோக்கியோ அறிவியல் பல்கலைக் கழகத்திற்கு பின்புறம் உள்ள வாய்க்கால் ஓரம்  ஒரு நடை போய் வரலாம் எனச் சென்றேன். 

வாய்க்கால் கரையில் போகும் வழியில் இடது புறம் ஒரு காடு வரும், பெரும்பாலும் புதர் இருக்கும் எதற்கு வம்பு என அதற்குள் செல்வதை தவிர்த்து வந்தேன். 








சரி இன்று போய்த்தான் பார்ப்போம் என ஒற்றையடி தடத்தில் நடந்தால் 50 அடிக்குள் பெரிய காட்டு பாதை தெரிந்தது. சில பண்னை வீடுகளும் இருந்ததால் தைரியமாக அந்த சாலையின் நடந்து சென்றேன். ஏறத்தாழ மனித நடமாட்டமே இல்லாதது போல் இருந்த வனப் பகுதியில் இயற்கையான காற்றினை சுவாசித்து கொண்டு நடந்தது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. 

இந்த வனத்தில் மூட மனிதர்கள் விட்டுச் செல்லும் பிளாஸ்டிக், கண்ணாடி குப்பைகள் ஏதுமின்றி  பல்லுயிர் தாவரங்கள் பெருகி வளர்ந்திருந்தன. 

சென்ற இரண்டு வாரம் பெயத மழையில் முளைத்திருந்த காளான் குடைகள் ஆங்காங்கே வளர்ந்திருந்தன.  



கரிய நிறத்தில் மண்ணை குவித்து வைத்து சிறு சிறு தீவு திட்டுகளாக வனம் முழுதும் மண் குவியல் காணப்பட்டது. அதன் மேலே பறவை எச்சம் மற்றும் மரத்தில் இருந்து வீழ்ந்த பழங்கள் ஆகியவைகளில் விளைந்திருந்த சிறு செடிகள் ஆச்சரியம் அளிப்பவையாக இருந்தது. 

சரி இந்த மண் குவியல் எப்படி இங்கு வந்திருக்கும் என குச்சியில் சற்று கிளற் பார்த்தால் அந்த மண் குவியலுக்கு கீழ் பெரிய பொந்து  ஒன்று தெரிந்தது. அதில் இருந்து சற்றெ தடித்த புழு போன்ற புச்சிகள் நெழிந்து கொன்டு இருந்தன. இன்னும் சில இடங்களிம் பெரிதான மண்ணுளி வண்டுகள் ஆங்காங்கு திரிந்தன. 







வனத்தின் இடையில் பெரிய ஊரணி ஒன்று இருந்தது. சிறிய, பெரிய மீன்களிம், கொஞ்சம் நாரையும் நீரோடையில் மேய்ந்து திரிந்து கொண்டு இருந்தது. எனக்கு தெரிந்து இங்கே மனிதர்கள் வெகுவாக வருகிறார்களா என்று ஐயம் வந்து விட்டது. 


எந்த குப்பைகளும் இல்லாத மிகச் சிறந்த வனத்தினை எங்கள் பல்கலைக் கழகம் அழகாக பராமரிக்கிறது கண்டு மிகவும் ஆச்சரியம் அடைந்தேன். திரும்பி வரும் வழியில் வனத்தின் வெளிப்புறம் இருக்கும் காட்டுப் பகுதியில் நிறைய காய்கறிச் செடிகளை கூட்டுப் பண்ணை திட்டத்தில் வளர்க்கிறார்கள். முத்து சோளம், குடை மிளகாய், நீர்ப்பூசணி, சோயா மொச்சை, கத்தரி, தக்காளி ஆகிய செடிகள் எந்த உரமும் இன்றி அற்புதமாக வளர்ந்து நின்றதை சிறுது நேரம் வேடிக்கை பார்த்து விட்டு வந்தேன்.








ஆய்வகத்திற்குள் என்னதான் குளிர்சாதன வசதி இருந்தாலும் இயற்கையின் அதி அற்புதமான நிழலும், வனத்தின் குளிர்ச்சியும் ஒப்பிடவே முடியாததாய் தோன்றியது.

இனி தினமும் வனத்தின் சாலையில் 30 நிமிடம் கால்நடையாய் போய் வரலாம் என திட்டமிட்டுள்ளேன். 

No comments:

Post a Comment