Sunday 21 June 2015

சூரிய மின் ஆற்றலில் இயங்கும் இரயில் நிலையங்கள் (Solar Powered Railway Station)


ஜப்பானில் இரயில்கள் தாமதமாக வருவதென்பது ஒரு வருடத்திற்கு சராசரியாக 0.6 நிமிடங்கள் மட்டுமே. அப்படியே நீண்ட நேரம் தாமதமாக வந்தால் அதற்காக அந்த வண்டியின் ஓட்டுநர் எல்லா பெட்டிக்கும் வந்து தலையினை குனிந்து மன்னிப்பு கேட்பார். மேலும் அந்த இரயில் நிறுவனத்தில் இருந்து காலதாமதம் ஆகியதற்கான ஒப்புகை சீட்டும் *Train delay certificate) கொடுத்து விடுவார்கள். இதனை வேலை பார்க்கும் அலுவலகத்தில் காண்பித்தால் மேலதிகாரியின் கண்டிப்பில் இருந்து தப்பிக்கலாம். இவையெல்லாம் ஜப்பானின் இரயில் பயணங்களைப் பற்றிய சுவையான தகவகல்கள்.

(These photos were taken in other websites and the image courtesy is given in each photos).

ஜப்பானில் இருக்கும் இரயில் நிலையங்களை பற்றிய தற்போதைய சுவாரசியமூட்டும் தகவல்களை இங்கே பகிர்கிறேன்.

ஜப்பானில் தற்கொலை விகிதம் என்பது உலக நாடுகளை ஒப்பிடும் போது, 2005 ஆம் ஆண்டின் புள்ளி விபரப்படி  தென் கொரியாவிற்கு (24.7) அடுத்த படியாக இரண்டாவது இடத்தில் 19.4  ஆக உள்ளது (ஒரு லட்சம் மக்களுக்கு). பரபரப்பான வாழ்க்கை, வேலையின்மை, வெறுப்பூட்டும் தனிமை வாழ்க்கை சூழல், பணிச் சுமை என தற்கொலையின் விகிதம் அச்சமூட்டுபவையாக இருக்கிறது. அது சரி இந்த புள்ளி விபரம் இப்போது எதற்கு என கேட்கிறீர்களா. காரணம் இருக்கு, சொல்கிறேன்.

இந்த தற்கொலை முடிவுகள் பெரும்பாலும் இரயில் வரும்போது அதன் முன்பு குதித்துதான் ஏற்படுகிறது என்பதுதான் வேதனையான செய்தி.   அதுவும் பரபரப்பான காலை வேளையில் அலுவலகத்திற்கு சென்று கொண்டிருக்கும் போது திடீரென இரயில் முன்பே குதித்து விடுவார்கள். இது போன்ற துர்சம்பவங்களால் குறைந்த பட்சம் அரை மணி நேரத்தில் அந்த வழித் தடத்தில் இயங்கும் எல்லா இரயில் வண்டிகளும் தாமதமாகும். இவ்வாறான சூழலில் சம்பந்தப்பட்ட நபரின் குடும்பத்திடம் இருந்து பெரும் தொகை அபராதமாக இரயில் நிறுவனத்தால் நீதிமன்றத்தின் மூலம் வசூலிக்கப்படும். சரி அப்படியாவது இந்த பிரச்சினை முடிவுக்கு வந்ததா என்றால் அதுவும் இல்லை.

 என்னதான் ஜப்பான் இரயில் நிலையங்களில் பத்து அடிக்கு ஒரு கண்காணிப்பு கேமரா இருந்தாலும் தற்கொலை செய்பவர்களின் எண்ணிக்கையினை இரயில் நிலையங்களில் கட்டுப்படுத்த முடியவில்லை. ஆகையால் தற்போது பெரும்பாலான இரயில் நிலையங்களின் பிளாட்பாரங்களில் இரயிலுக்கும் பிளாட்பாரத்திற்கும் இடையில் தானியங்கி கதவுகளை (automated door) அமைத்து விட்டார்கள். தென் கொரியாவில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பே சியோல் சப்வே இரயில் (Seoul Subway stations) நிலையங்களில் தானியங்கி கதவுகளை அமைத்து விட்டார்கள்.

ஆனால் தலைவலி போய் திருகு வலி வந்த கதையாக நிலநடுக்க நேரத்தில் மின் வெட்டு ஏற்ப்பட்டல் இந்த தானியங்கி கதவுகள் இயங்காது. அப்படியானால் இரயிலில் இருந்து பிளாட்பாரத்திற்கு மக்கள் வெளியே வர முடியாது. என்ன செய்யலாம் என யோசித்து தற்போது பல இரயில் நிலையங்களின் மேற்கூரைகளில் சோலார் பேனல்களை நிறுவி அதிலிருந்து கிடைக்கப் பெறும் தடையற்ற மின் சக்தியினைக் கொண்டு பிளாட்பாரத்தில் உள்ள தானியங்கி கதவுகளை இயக்குகிறார்கள். மேலும்  இரயில் நிலையங்களுக்கு வருகை தரும்  வண்டிகளின் கால அட்டவணை குறித்த  தகவல்களை அறிவிக்கும் டிஜிட்டல் திரைகளையும்   இந்த சூரிய மின் சக்தியினை கொண்டு இயக்குகிறார்கள். 

 Solar power generation from roof top solar panels. This photo taken at Nagareyama Otakanomori Railway station, Japan  


Train arrival information display board. This photo taken at Nagareyama Otakanomori Railway station, Japan.

Automatic doors at platform. This photo taken at Nagareyama Otakanomori Railway station, Japan.
 Train arrived at at platform. This photo taken at Nagareyama Otakanomori Railway station, Japan.

 Automatic doors were opened after train reaching the station. This photo taken at Nagareyama Otakanomori Railway station, Japan.

Automatic doors were opened after train reaching the station. This photo taken at Nagareyama Otakanomori Railway station, Japan.

சமீபத்தில் தோக்கியோ நகரில் உள்ள அகிகாபாராவில் (Ahikabara) இருந்து சுகுபா (Tsukuba) வரை செல்லும் சுகுபா விரைவுதடத்தில் (Tsukuba Express) உள்ள நகரியமா ஒத்தகனமோரி (Nagariyama Otakanamori) இரயில் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த சூரிய மின்சக்தி உற்பத்தியினை காட்டும் டிஜிட்டல் திரையினை  கண்டு  ஆச்சர்யம் அடைந்தேன்.

இந்த இரயில் நிலையம் மிகப் பெரிய இரும்பு கூரைகளை கொண்டது. இந்த கூரை முழுவதும் தற்போது சோலார் பேனல்களை அமைத்துள்ளனர். இந்த சோலார் துணை மின் நிலையத்தின் மூலம் சராசரியாக மணிக்கு 33 கிலோவாட் மின்சாரத்தினை பெறுகிறார்கள். இயற்கையான சூரிய ஆற்றலில் இருந்து மின் உற்பத்தி  பெறப்படுவதன் மூலம் தோராயமாக 12 கிலோ கார்பன் டை ஆக்சைடு வெளியாவது தடுக்கப்படுகிறது.

இந்த சூரிய மின் சக்தியினை கொண்டு மேலே சொன்னதை போல இரயில் வரும்போது இயங்கும் தானியங்கி கதவுகளுக்கு பயன் படுத்துகிறார்கள். ஆகையால் பெரும் மின்சார செலவு சிக்கனப் படுத்தப்படுகிறது. முக்கியமாக  பேரிடர் காலங்களில் மின் வெட்டு ஏற்பட்டாலும் தானியங்கி கதவுகள் இயக்குவதில் ஒரு சிரமும் இருக்காது. 

இந்த கதவுகள் மூலம் இரயில் தண்டவாளத்தில் குதித்து தற்கொலை செய்பவர்கள், தவறி   விழுபவர்களின் எண்ணிக்கை நிச்சயமாக தடுக்கப்படும். அதில் சூரிய மின் சக்தியின் பங்கும் இருப்பது குறித்து மகிழ்ச்சியே.



No comments:

Post a Comment